Search This Blog

Followers

Powered By Blogger

Monday, September 22, 2025

பிம்பம் 8


 

அத்தியாயம் 8


இன்று


  அந்த பௌர்ணமி இரவு பொழுதில் விக்ரம் புளிய மரத்தின் அருகே கண்காணிக்க செல்ல, ஜனா சிவாவின் கொல்லை புறத்தையும், நாகலிங்கத்தையும் கண்காணிக்க சிவாவின் வீட்டிற்கு வந்திருந்தான். விக்ரம் நினைத்தது போலவே, சிவாவின் வீட்டை விட்டுவிட்டு ரேகாவின் வீட்டை நோக்கித்தான் முதலில் ஜனா சென்றான்.


ரேகா தனது அத்தை சாந்தியிடம், தான் இன்று கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டு அவளின் வீட்டிற்கு வந்து விட்டால். சிவாவின் மெடிக்கல் ஷாப்பில் இருந்து எடுத்து வந்த மாத்திரைகளை முதலில் முழுங்கியவள், பிறகு போனில் யாருக்கோ அழைத்து தீவிரமாக பேசத் தொடங்கினாள். அப்போதுதான் ஜனாவும் ரேகாவை நோட்டம் விடத் தொடங்கினான்.


"ஹலோ நான் தான்."


"      "


    "அதெல்லாம் மாத்திரை போட்டுட்டேன், இங்க பாருங்க இதுக்கு மேல மறுபடியும் இதே மாதிரி என்னை பண்ண வைக்காதீங்க சொல்லிட்டேன்."


  "      "


    "புரியுது இதுல எனக்கும் பங்கு இருக்குது தான், இருந்தாலும் இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் இருக்கிறது? எப்ப தான் என்னை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கீங்க?"


    " "


    "புரியுது, ஆனா இந்த மாதிரி மறுபடியும் என்னை கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட வைக்காதீங்க."


  "    "


  " சரி சரி நீங்க பாருங்க."


    கேட்டுக் கொண்டிருந்த ஜனாவிற்கு திக்கென்று ஆனது, அடிப்பாவி கரெக்ட் பண்ணலாம்னு வந்தா, இவ வயித்துல இருக்க குழந்தையை கலைக்க மாத்திரையை போட்டுட்டு உட்கார்ந்து இருக்கா? என்று அவன் மனதில் எண்ணிக்கொண்டான்.


    "இன்னும் எத்தனை நாளைக்கு தான் இப்படி ரகசியமாக வாழ்க்கை நடத்துறது?  வர்ற கோபத்துக்கு அவனை குத்தி கொன்னுடலாமான்னு கூட தோணுது."


நான் வேணும்னா அதுக்கு உதவி பண்ணட்டுமா? 


  திடீரென்று தனது தலைக்கு மேலே கேட்ட சத்தத்தில், ரேகா அண்ணார்ந்து பார்க்க, அங்கு தலைகீழாக சித்ரா இவளைப் பார்த்தபடியே, உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள்.


  சித்ராவை பார்த்த ரேகா பயந்து போய் அப்படியே தரையில் விழுந்தால்,


   " சி…  சி…. சித்ரா நீ..  நீயா? நீ எப்படி இங்க? அதுவும் உத்திரத்துல?"


  என்னை உத்திரத்துல தானே கட்டி தொங்க விட்டீங்க? அப்புறம் நான் வேற எங்கு தொங்கறது?


  "சித்ரா என்னை எதுவும் பண்ணிடாத, ப்ளீஸ் என்னை எதுவும் பண்ணிடாத நான் கர்ப்பமா இருக்கேன் எனக்குள்ள குழந்தை இருக்கு."


    ஏன் நீங்க எல்லாரும் என்னை கொலை செஞ்ச போது, என் வயித்துல குழந்தை இல்லையா? நான் எவ்வளவு கதறுனேன்? அதுல ஒரு வார்த்தையாவது கேட்டியா? ஆமா எப்ப இருந்து உன் வயித்துல வளர்ற குழந்தை மேல, இப்படி திடீர்னு பாசம் வந்தது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட  அந்த குழந்தையை கலைப்பதற்கு தானே மாத்திரை போட்டே?


  சித்ரா உத்திரத்தில் இருந்து படிப்படியாக தொங்கிக் கொண்டே கீழே வந்தாள். கண்களின் சிவப்பு நெருப்பாக கொழுந்து விட்டு எரிய, ரேகாவை நெருங்கினால்,


      " சித்ரா ப்ளீஸ் என்னை விட்டுடு, எனக்கு எதுவுமே தெரியாது, நான் வேண்டான்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்கல ப்ளீஸ் என்ன விட்டுடு."


    ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் சரியாக அந்த நேரம் வாசல் கதவை திறந்து கொண்டு, கீ கொடுத்த பொம்மை போல அவர்களின் வீட்டிற்குள் நுழைந்தான்.


  ரேகா அவனை அழைக்க அழைக்க, காது கேளாதவன் போல் சமையல் கூடத்திற்குள் நுழைந்தவன், ஒரு கத்தியை எடுத்துக்கொண்டு ரேகாவை நெருங்கினான். அவனது கண்கள் வழக்கத்துக்கு மாறாக நேர்குத்தி இருந்தது.


  " அண்ணே என்ன பண்ற? என்னை பாருண்ணே, நான் உன் தங்கச்சி."


    உங்க  அண்ணனால எப்படி ரேகா பார்க்க முடியும்? அவன்தான் அன்னைக்கு நான் நடைபிணமா தெரியணும்னு குத்துனானே, அதே ஊசியை தானே இப்போ அவனும் குத்தி இருக்கான். அதனால நான் சொல்றதை மட்டும் செய்யற பொம்மையா தான் இருப்பான். 


     உனக்கு தெரியாததா? இந்த மருந்து அவன் உடம்புல இருக்குற வரைக்கும் இப்படித்தான் இருப்பான்னு,  உங்க அண்ணே செஞ்ச பாவத்துக்கும், உனக்கு அண்ணனா பொறந்த பாவத்துக்கும் சேர்த்து, உன்னை இந்த கத்தியால குத்திட்டு ஜெயிலுக்கு போக போறான். அங்க  பைத்தியமாவே மாறி, தூக்கு போட்டுகிட்டு தன் உயிரை விடப் போறான். 


  நாகலிங்கம் தப்பித்த ஓட முயன்ற ரேகாவை பிடித்து அவளின் வயிற்றில் ஓங்கி ஓங்கி கத்தியால் குத்தினான். ரேகாவின் அலறல் அங்குள்ள நாய் மற்றும் கோட்டான்களின் ஒலியோடு சேர்ந்து, அந்த இடத்தையே மயான பூமியாக மாற்றியது.


    இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனா பயத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தான், ஜன்னலுக்கு வெளியே இருந்த இவனை திரும்பிப் பார்த்த சித்ரா,


  தேங்க்யூ ஃபார் யுவர் ஹெல்ப் பிரதர் 


  என்று கூறிவிட்டு மறைந்து போனாள், அடுத்த நிமிடமே ஜனாவும் அப்படியே மயங்கி சரிந்தான்.


  அடுத்த நாள் லாக்கப்பில் இருந்த அவனைப் பார்க்க வந்த விக்ரமிடம், நடந்த அனைத்தையும் கூறியவன்,


  "பாஸ் என்னை அநியாயமா இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து, இப்படி என்னை பேய்க்கு பிரதர் ஆக்கிட்டீங்களே பாஸ்? இது உங்களுக்கே நல்லா இருக்கா?"


  "சரிடா சரிடா அந்த பொண்ணு ஒன்னைய பிரதராதானே சொல்லுச்சு, என்ன உன்னையும் சேர்த்து பேயவா மாத்திடுச்சு?"


  "எதே? யோவ் பாஸு மரியாதையா என்னை ஊருக்கு கொண்டு போய் விடுயா, எங்க அப்பா அம்மாக்கு ஒரே புள்ளையா நானு."


   "எது மரியாதையாவா?"


  "பாஸ் பாஸ் பயத்துல கொஞ்சம் ரெஸ்பெக்ட் குறைஞ்சிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணி, என்னை முதல்ல எப்படியாவது வெளியே எடுங்க பாஸ்." 

    விக்ரம் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் தங்களது அடையாளங்களை காட்டி, சித்ராவின் கொலை சம்பந்தமான இன்வெஸ்டிகேஷன்காக வந்திருப்பதாக கூறவும் தான், ஜனாவை வெளியே விட்டனர்.


    பிறகு விக்ரமை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால், சித்ராவின் கேஸ் ஃபைலை அவனிடம் கொடுத்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.


அப்போதுதான் அந்த ஊரைச் சேர்ந்த, கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், அவர் உபயோகப்படுத்தும் மருத்துவ உபகரணங்களால், தன்னைத்தானே குத்திக் கொண்டு  தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வர, அனைவரும் அங்கே விரைந்தனர்.


அன்று


சித்ரா கத்த தொடங்கவும் அவளது வாயை பொத்திய சிவா,


  "ஐயோ சித்து ஏன் கத்துற? அம்மா வந்திட போறாங்க, நான் தான். அம்மா அங்க வெளிய பக்கத்து வீட்டில கதை பேசிட்டு இருந்தாங்க, என்னை பார்த்தா நான் ஊர்ல இல்லாதப்ப நடந்ததை எல்லாம் கதை கதையா சொல்வாங்க.


    அப்பறம் உன்னை இப்போதைக்கு பார்க்க விட முடியாதுன்னு தான்  மறைஞ்சு மறைஞ்சு வீட்டுக்குள்ள வந்தேன், உன்ன பாக்கலாம்னு ஆசையா ஓடி வந்தா நீ எங்க போன?"


  "நீங்களா? பக்கத்துல ரேகா வீடு வரைக்கும் போயிருந்தேன். ஆமா நீங்க வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னு சொன்னீங்க?"


"ஆமா, ஆனா எனக்கு உன்ன பாக்கணும் போல இருந்துச்சு. அதோட  என் குழந்தைக்கு ஒழுங்கா நீ சாப்பாடு கொடுக்கிறது இல்லையாமே? என் கனவுல வந்து கம்ப்ளைன்ட் பண்ணினான். அதனாலதான் நான் நேரா இங்கே ஓடி வந்துட்டேன், டேப்லெட் எல்லாம் இங்க அப்படியே இருக்கு, நீ என்னதான் சாப்பிடற? ஆமா ஏன் ஒரு மாதிரி இருக்க? முகமெல்லாம் வாடி போய் இருக்கு ?முதல்ல கிளம்பு டாக்டரை போய் பார்த்துட்டு வரலாம்."


  சித்ராவிற்கு ரேகாவின் வீட்டில் தான் கண்டதை சிவாவிடம் கூற மனம் வரவில்லை, ஒருவேளை தான் தெரியாமல் கூட இவ்வாறு நினைத்திருக்கலாம், எதற்காக வீணாக ஒரு கல்யாணமாகாத அப்பாவி பெண்ணின் மீது பழி விழ வேண்டும் என்று, அதைப் பற்றி அவள் யாரிடமும் கூற விரும்பவில்லை.


   "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க நான் நல்லா தான் இருக்கேன், இப்ப சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடுவதற்கு மறந்துட்டேன், அவ்வளவுதான், இதோ இப்பவே போட்டுடறேன்."


  "இதையெல்லாம் கூடவா மறப்பாங்க? சித்து...., உனக்கு உங்க அம்மாவை பாக்கணும்னு ஆசையா இருக்கா? இல்லே... இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க, தான் பொறந்த வீட்டுல இருக்கணும்னு ஆசைப்படுவாங்க, ஆனா  எனக்காக தானே நீ உன் வீட்டை விட்டு வந்துட்டே.....அதுதான்.."


  "ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க, நீங்க என் கூட இருந்தா அதுவே எனக்கு போதும்."


"சரி நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு."


"சர்ப்ரைஸா என்னதுங்க அது?"


"அதுதான் சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டேனே, நாளைக்கு நீ துள்ளி குதிக்க போற பாரு, நாளைக்கு காலைல சாப்பிட்டு ரெடியா இரு, நம்ம வெளிய போக போறோம்."


    அடுத்த நாள் காலையில் அவன் கொடுத்த இன்ப அதிர்ச்சியை பார்த்து சித்ரா அழுதே விட்டாள்.


Thursday, September 18, 2025

பிம்பம் 7


 

அத்தியாயம் 7


இன்று

 

  "ஐயோ பாஸ் மறுபடியும் அந்த புளிய மரத்துக்கா? என்னால முடியாது, ரொம்ப போர்ஸ் பண்ணீங்க அப்புறம் இத்தோட இந்த ஜனா, உங்களோட உறவை முறிச்சுக்க வேண்டியதா இருக்கும் பரவால்லையா?"


  "நல்லதாபோச்சு அப்படி ஒரு நல்ல நாள் வராதான்னு, நான் எவ்வளவு நாளா ஏங்கிட்டு இருக்கேன் தெரியுமா? சரி எப்போ ஊருக்கு கிளம்பற?"


      " எதே ? என்ன பாஸ் பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டீங்க? நான் புளிய மரத்துகிட்ட தானே கண்காணிக்க மாட்டேன்னு சொன்னேன், அதுதான் எப்படியும் சிவா வீட்டையும் அந்த நாகலிங்கத்தையும்  இன்னைக்கு கண்காணிக்கனும்னு சொல்லி இருக்கீங்களே! நான் அங்க போறேன் நீங்க புளியமரத்து கிட்ட போங்க, அவ்வளவுதான் மேட்டர் சால்வ்டு. என்ன பாஸ் சந்தேகமா பார்க்கறீங்க நீங்க புளிய மரத்தைமட்டும் பார்த்தாபோதும் ஆனா நான் உங்களுக்காக சிவா வீட்டு கொல்லைபுறத்தையும் அந்த நாகலிங்கத்தையும் போய் கண்காணிக்கறேன் பாஸ்."


    "நீ நாகலிங்கத்தை தான் கண்காணிக்க போறயா? இல்ல அவன் தங்கச்சி ரேகாவை  பார்க்கனுங்கறக்காக போறேங்கறையா?"


  " பாஸ், என்ன பாஸ் உங்க ஜனாவை சந்தேகப்படுறீங்களா?"


  " ச்சே ச்சே சந்தேகமெல்லாம் கிடையாது, கன்ஃபாமா சொல்றேன், நேத்து அந்த அம்மா பேயை பத்தி சொன்னதும் மயக்கம் போட்டு விழுந்துட்டு, அந்த புள்ளையோட குரல் கேட்டதும், அடுத்த நிமிஷமே எழுந்துகிட்ட பாரு? அப்பவே தெரிஞ்சது, எப்படியும் நீ அந்த புள்ள பின்னாடி சுத்தி ஊர்க்காரங்க கையால செருப்படி வாங்கப் போறேன்னு."


    "போன இடத்துல நம்ம வேலையை தவிர வேற ஏதாவது வேலையை பார்த்து, சிக்கல்ல மாட்டிக்கிட்டு நின்னேன்னா, நான் எல்லாம் வந்து சிபாரிசு பண்ண மாட்டேன். போலீஸ் ஸ்டேஷனே கதின்னு கெடே."


"பாஸ் இருந்தாலும் நீங்க என்னை இவ்வளவு தெளிவா.... புரிஞ்சு வச்சிருக்க கூடாது."


  "இதெல்லாம் வக்கனையா பேசு, பேய் பத்தி காதால கேட்டா கூட மயக்கம் போட்டு விழுந்திரு, ஏதோ  கண்ணாலேயே பேயை பார்த்த மாதிரி."


"கிண்டல் பண்ணாதீங்க பாஸ்."


  "கிண்டலா? டேய் நான் உண்மையை சொல்லிகிட்டு இருக்கேன்."


  " போங்க பாஸ் போற இடத்துல எல்லாம் அந்த புளியமரத்தை பத்தியே பேசறாங்க, நீங்க எந்த நேரத்துல வாயை வச்சீங்களோ நாம விசாரிக்க போற இடத்திலே எல்லாரும் அந்த புளிய மரத்துக்கிட்ட பேயை பார்த்ததாவே சொல்றாங்க, இதுக்கு மேலயும் நான் மயக்கம் போடாம இருந்தா, அப்புறம் அந்த பேய்க்கு என்ன மரியாதைன்னு கேட்கறேன்."

   

    அன்று இரவு இருவரும் தத்தமது வேலையை முடிக்க, விக்ரம் புளிய மரத்தை நோக்கியும், ஜனா சிவாவின் வீட்டில் உள்ள அவனது பெட்ரூம்மை ஒட்டிய, கொல்லை புறத்திற்கும் சென்றனர்.


விக்ரமின் வாய் முகூர்த்தமோ என்னவோ! அடுத்த நாள் காலையில் விக்ரமுக்கு ஜனா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாகத்தான் செய்தி வந்தது. ரேகா திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்ததால், அவளது அண்ணன் நாகலிங்கத்தால் கொலை செய்யப்பட்டதாகவும், அவர்கள் வீட்டிற்கு அருகில் ஜனா மயங்கி விழுந்திருந்ததால், ஒருவேளை அவன் ரேகாவின் ரகசிய காதலனாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவனை போலீஸ் ஸ்டேஷனில் அவர்களின் கஸ்டடியில் வைத்து விசாரித்து கொண்டு இருப்பதாகவும், செய்தி வந்தது.


அன்று


      சித்ராவின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ஆதாரமாக அவள் கருவுற்றாள். இதை அறிந்ததும் சிவா அவளை தன் கைகளில் வைத்து தாங்கினான். பக்கத்து ஊரில் உள்ள பிரபலமான மகப்பேறு மருத்துவமனைக்கு அவளை மாதாமாதம் கூட்டிக்கொண்டு செக்கப்பிற்கு சென்று வந்தான்.


    இந்நிலையில்தான் கவுன்சிலர் பதவிக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நாள் வந்தது. சிவாவின் கட்சியில் அந்தத் தொகுதியின் சார்பாக அவனை முன்னிறுத்துவதாக அறிவித்தனர். அவன் கட்சி வேலையில் மூழ்க தொடங்கியதால், சித்ரா ரேகாவுடன் மருத்துவமனைக்குச் சென்று வந்தாள்.


  சித்ராவின் குடும்பமும் அரசியல் பின்னனியை கொண்டது தான். அவளின் தாத்தா உள்துறை அமைச்சராக இருந்தவர். ஆனால் அவளின் அப்பா கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மட்டும் பெயரளவில் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வார். ஏனோ அவருக்கு கட்சி மற்றும் பதவியில் பெரிதாக விருப்பம் ஏதுவும் இல்லை. அவரின் மகனோ நாடு தான் பெரிது, ஜாதி கட்சிகள் கூட தேவையில்லை என்று, அவரை எதிர்த்து கொண்டு ராணுவத்தில் சேர்ந்து விட்டார்.


  சித்ராவிற்கு சிவா அரசியலில்  ஈடுபடுவது பிடிக்கத்தான் இல்லை, இருந்தாலும் இது அவனது கனவு, தனது மக்களுக்காக போராடி மேலே வந்தவன் அதனால் அவனது விருப்பங்களுக்கு மதிப்பளித்து வந்தாள்.


  ரேகாவின் வீட்டிற்கு சித்ரா அவ்வளவாக செல்வதில்லை, தற்போது சிவா அரசியல் விஷயமாக வெளியூர் சென்ற காரணத்தால், நாகலிங்கம் தான் மேற்பார்வையாளராக இருந்து மருந்து கடையை பார்த்துக் கொள்கிறான். அதனால் தற்போதெல்லாம் அவன் தான், கணக்குகளை சரி பார்த்து விட்டு, கடையை பூட்டிக் கொண்டு வருகிறான்.


    ஒரு மாலை வேளையில் ரேகா ஆபீஸ்ஸில் இருந்து வீட்டிற்கு வந்திருப்பாள் என்று நினைத்து, அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது வீட்டிற்கு சென்றாள் சித்ரா.


  சித்ரா ரேகாவின் வீட்டை நெருங்கிய போது உள்ளிருந்து ஏதோ பேச்சு குரல் வந்தது போல இருந்தது. இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே ரேகாவின் பெயரை கூறியபடியே வீட்டின் கதவை தட்டினாள்.


  சிறிது நேரத்திற்கு பிறகு தான் கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து வந்த ரேகா இவளை கண்டு பதட்டமானால், பிறகு சட்டென்று முகத்தை மாற்றிக்கொண்டு அவளை வாசலிலேயே நிற்க வைத்து,


" என்ன சித்ரா அதிசயமா இருக்கு நான் வீட்டுக்கு வா வான்னு கூப்பிட்டா கூட வர மாட்டேன்னு சொல்லுவ, இன்னிக்கு நீயாகவே என்னோட வீடு தேடி வந்திருக்க? ஏதாச்சும் பிரச்சனையா? அத்தை ஏதாச்சும் உன்னை திட்டினாங்களா? இல்ல...உனக்கு உடம்புக்கு எதுவும்  சரியில்லையே?"


  "முதல்ல மூச்சை விடு ரேகா, இத்தனை கேள்வியை ஒட்டுக்கா கேட்டா, நான் எந்த கேள்விக்கு தான் ஆன்சர் பண்ண? சரி என்னை இப்படி வாசல்ல நிக்க வைக்கத்தான், வீட்டுக்கு வா வான்னு அத்தனை தடவை  கூப்பிட்டியா?"


வீட்டின் பின்வாசலில் இருந்து டொம் என்ற சத்தம் கேட்க,


   "என்னடி இது? பின்பக்கம் ஏதோ சத்தம் கேக்குது?"


"அது ஒன்னுமில்ல சித்ரா, அந்த பக்கமா பூனை ஒன்னு சுத்திக்கிட்டு இருக்கு, அதோட வேலையா இருக்கும்.நீ உள்ள  வா "


  ரேகாவின் வீடு மொத்தமாக மூன்று அறைகளைக் கொண்டது. ஒரு சமையல் கூடம்,ஒரு பெட்ரூம் மற்றும் பின்பக்க வாசல் கதவோடு கூடிய வரவேற்பறை. அந்தப் பின்பக்க வாசல் கதவு திறந்திருப்பது போல தோன்றியது.


  சித்ராவை வரவேற்பறையில் உள்ள சோபாவின் மீது அமர வைத்துவிட்டு, ரேகா அவளுக்கு குடிக்க  ஏதாவது கொண்டு வருவதாக கூறி, சமையல் கூடத்திற்கு சென்றாள்.


  சித்ரா அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் திசையில் தான் பெட்ரூம் இருந்தது. கதவு திறந்திருந்ததால் உள்ளே இருப்பது அப்படியே தெரிந்தது. அந்த அறையில் துணிகள் அங்கங்கே சிதறி கிடந்தன, அத்தோடு மது பாட்டில்களும் அதனை ஊற்றிக் கொடுக்கும் கோப்பைகளும் இருந்தன.


        சித்ரா இது ரேகாவின் அண்ணாவுடைய வேலையாக இருக்கும் என்று நினைத்து கொண்டிருக்கையில், அதற்கு அருகில் பாதி எரிந்து கொண்டிருந்த சிகரெட் துண்டினை கண்டு நெற்றி சுருங்க யோசிக்க தொடங்கினாள்.


    ஏனோ அங்கு அமர்ந்திருப்பது முள்ளின் மீது அமர்ந்திருப்பது போன்று தோன்ற, ரேகாவை அழைத்து தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறிவிட்டு, தனது இல்லத்தின்  கொல்லைபுறத்தை நோக்கி நடந்தாள்.


  அவளது பெட்ரூமுக்குள் யோசனையினோடே நுழைந்து கொண்டிருக்கையில், யாரோ அவளின் மீது வந்து விழ, பதறிப் போய் உரத்த குரலில் கத்த தொடங்கினாள்.

Sunday, September 14, 2025

பிம்பம் 6


 

அத்தியாயம் 6


இன்று


  மயங்கி விழுந்த ஜனாவை பார்த்து விக்ரம், இவனுக்கு இதே வேலையா போச்சு என்று புலம்பிக் கொண்டே அவனை எழுப்ப முயன்றான். இவன் மயங்கி  விழுந்ததைக் கண்டு மிரண்டு போன சாந்தி, உதவிக்கு அக்கம்பக்கத்தினரை அழைப்பதை பார்த்து,


"ஒன்னும் இல்லம்மா இவனுக்கு பேய்ன்னா கொஞ்சம் பயம், நீங்க சொன்னதைக் கேட்டு பயந்து போய் மயங்கி  விழுந்துட்டான் அவ்வளவுதான்." 


  கீழே விழுந்த ஜனாவை எழுப்பி மேலே படுக்க வைக்க முயன்றான் விக்ரம், ஆனால் ஜனாவினுடைய கனமான சரீரத்தின் பாரத்தை அவனால் தூக்க முடியவில்லை. 


சாந்தியின் குரல் கேட்டு அவரின் வீட்டுக்கு பின்புறம் இருந்த, சாந்தியின் அண்ணன் மகன் நாகலிங்கம் கொல்லைப்புறம் வழியாக பதறியபடி ஓடி வந்தான்.


  விக்ரமுக்கு ஆச்சரியமாக இருந்தது இப்போது தானே, நான் பார்த்துவிட்டு வந்தேன், பின்பக்க கதவு தாழிடப்பட்டு இருந்ததே? இவன் எவ்வாறு பின்புறம் இருந்து வருகிறான்? என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தான்.


  "என்னத்தே? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்கே?"


    "ஏண்டா நாகு, நீ நேர் வழியாவே வீட்டுக்குள்ள வரமாட்டியா? எப்ப பாரு பொடக்காலி(கொள்ளைபுறம்) வழியாவே உள்ள வாரே?"


  "நான் வீட்டை சுத்திட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆயிடும் அத்தே, இதுதான் ஷார்ட் கட்டு. அதனால தான் இந்த வழியா வந்தேன். முதல்ல என்ன ஆச்சு? எதுக்கு இப்படி கத்துனேன்னு சொல்லு?"


  "இவங்க நமக்கு தெரிஞ்ச பசங்கடா, இந்த தம்பி திடீர்னு மயக்கம் போட்டுருச்சு. அந்த தம்பியால தனியா இவரை தூக்கி, மேல படுக்க வைக்க முடியல, நீ கொஞ்சம் உதவி செய்டா, நான் போய் மருத்துவச்சியை  கூட்டிட்டு வாரேன்."


  "ஐயோ அம்மா, அந்த அளவுக்கெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. ஏதோ பயந்து போய் மயக்கம் போட்டுட்டான், கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க, அது தெளிச்சா சரியா போயிடுவான்."


    இதோ கொண்டு வரேன் தம்பி என்று அவர் உள்ளே சென்று தண்ணீர் செம்போடு வெளியே வந்தார். அதை வாங்கி ஜனாவின் முகத்தில் தெளித்து அவனை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்த விக்ரம், அவனை அப்படியே எழுப்பி சோபாவில் சாய்த்து அமர வைத்தான்.


  " யார் அத்தை இவங்க? ஊருக்கு புதுசா இருக்காங்க?"


      "சொல்ல மறந்துட்டேன் பாரு, இவங்க கதை எழுதறவங்களாம், நம்ம பண்ணையார் தான், நம்ம ஊர் கோயிலை பத்தி எழுத வந்திருக்க இவங்களை, கீழ தெருவுல இருக்க மாறன் வீட்ல தங்கவச்சிருக்காரு. இன்னைக்கு கோயில்ல மயக்கம் போட்டு விழுக போன என்னை, இவங்கதான் பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்டாங்க."


    "ஓஹோ"


    "வணக்கம் சார், என் பேர் விக்ரம், இவன் என்னோட ஜூனியர் ஜனா."


    "வணக்கம் என் பேர் நாகலிங்கம் இவங்களோட அண்ணன் பையன்."


    "ரேகா வந்துட்டாளாடா? ஊர் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து கும்மி அடிக்க போறாங்க? என்ன இன்னும் அவளை காணோம்?"


  "வந்திடுவா அத்தே, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்துட்டு இருக்கறதா எனக்கு போன் பண்ணினா, இதோ பாரு அவளே வந்துட்டா."


  "என்னாச்சுத்தே யார் இவங்க எல்லாம்?"


  சாந்தி கோவிலில் நடந்ததை பற்றியும் இவர்களை பற்றியும் அவளிடம் கூறினார்.


  "ரொம்ப நன்றிங்க சார், சரியான நேரத்தில எங்க அத்தையை காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க."


    "பரவால்ல மேடம் எல்லாம் ஒரு மனிதாபிமான செயல் தானே."


    ஒரு பெண்ணின் குரல் கேட்டவுடன் ஜனா தானாக கண்களை திறந்து, ரேகாவை கண்டுவிட்டு முகத்தை துடைத்தும் தலையை சீவியும் தன்னை சரி செய்து கொண்டு,


  " ஆமாங்க எல்லாமே ஒரு  மனிதாபிமான செயல்  தானே." 


  என்று ரேகாவை பார்த்து வழிந்து கொண்டே கூறினான்.


அன்று


  வீட்டை விட்டு வெளியேறிய சித்ரா நேராக சென்று நின்றது சிவப்பிரகாஷின் இல்லத்தில் தான். சிவா அவளது நிலையை புரிந்து கொண்டு, தனது அன்னையிடம் பேசி, அவசர திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான்.


    அவர்கள் திருமணம் சிவாவின் ஊரில் உள்ள ஒரு கோயிலில் நடந்தது. இந்த திருமணத்தில் சிவாவின் அம்மா சாந்திக்கு விருப்பமில்லை, அவர் சிவாவிடம் எவ்வளவோ போராடி மறுத்துப் பார்த்தார், உயிரை விட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி கூட பார்த்தார், ஆனால் அவன் நீங்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என்றாலும் சித்ராவை தவிர வேறு யாரையும் என் மனைவியாக  ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நின்றதால், வேறு வழி இல்லாமல் சரி என்று ஒப்புக்கொண்டார்.


    அவர்களின் திருமணம் எளிமையாக கோயிலில் ஊர் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. விஷயம் அறிந்து வந்த சித்ராவின் பெற்றோர்கள் அவளை சரமாரியாக வசைப்பாடி விட்டு,  இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மண்ணைஅள்ளி அவள் மீது வீசி, சபித்துவிட்டு சென்றனர்.


        திருமணமான சில நாட்கள் சித்ராவிற்கு நன்றாகவே சென்றது. ஆனால் சிவா வீட்டில் இல்லாத நாட்களில் சாந்தி அவளிடம்  காட்டும் முகமானது வேறாக இருந்தது. அவள் எந்த செயலை செய்தாலும் குற்றம் கூறுவதும் திட்டுவதுமாகவே, அவளை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அத்தோடு ஒன்றுமாத்தி ஒன்றாக பல வேலைகளை அவளை செய்யுமாறு கூறிக் கொண்டே இருப்பார்.


  இது தெரிந்தது தான் என்றாலும் போகப்போக சித்ராவிற்கு மனதுக்கு சங்கடமாக இருந்தது. இதை பற்றி சிவாவிடம் கூறி பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என்று அவளும் அவர் கூறும் வேலைகளை செய்து கொண்டேயிருப்பாள்.


  திருமணத்திற்கு பிறகு சித்ரா வேலைக்கு செல்வதை விட்டுவிட்டாள். சிவாவின் மெடிக்கல் ஷாப் சம்பந்தப்பட்ட கணக்குகளை வீட்டிலேயே சரி பார்த்து கொடுக்க ஆரம்பித்தால்.


      அங்குள்ள வேலையாட்களின் விவரங்களையும், மருந்து கடையில் உள்ள மருந்துகளின் ஸ்டாக் விபரத்தையும் கணினியில் ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்து கணினியில் அவற்றை சேமித்து  வைத்தாள்.


    அப்படி வேலையாட்களின் விபரங்களை கணினியில் பதிந்து கொண்டிருந்த போதுதான், அன்றொரு நாள் சிறுமியிடம்  தவறாக நடந்து கொண்ட காரணத்தால், தன்னால் போலீஸில் பிடித்துக் கொடுக்கப்பட்டவன் அவர்களின் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து கொண்டிருப்பதை கண்டால்.


    அவள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ரேகா, இதுதான் தன் அண்ணன் என்று அவளுக்கு அறிமுகப்படுத்த, சித்ரா அதிர்ந்து தான் போனாள் .


  சித்ரா ரேகாவிடம் அவளது அண்ணனை பற்றி கூறலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பெரும் போராட்டமே  நடத்தினாள். ஏனென்றால் சித்ராவிற்கு தான் தெரியுமே ரேகாவிற்கு அவள் அண்ணன் என்றால் உயிர் என்று. அத்தோடு அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமும் அவன் தான். எனவே சிவாவிடம் மட்டும் அவனை பற்றி மேலோட்டமாக சொல்லி வைக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தாள், ஆனால் அடுத்த நாளே ரேகாவின் அண்ணன் நாகலிங்கம் அவளை காணவந்தான்.


    வந்தவன் அவள் கால்களில் விழுந்து  தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். தற்போது தான் மாறிவிட்டதாகவும் இப்போதெல்லாம் அவ்வாறான தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்றும் கெஞ்சினான். சிவாவிடமும் தன் தங்கையிடம் தன்னை பற்றி எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என்று அவளிடம் மன்றாடினான்.


      சித்ராவும் இனி ஒரு முறை இவ்வாறு நடந்து கொண்டால், அவர்களிடம் தெரிவித்து விடுவேன் என்று மிரட்டி, அவனை அனுப்பி வைத்தாள்.


Wednesday, September 10, 2025

பிம்பம் 5


 அத்தியாயம் 5


இன்று


    பிரகாஷின் அம்மா சாந்தி கோயிலுக்குள் பூஜைக் கூடையுடன் நுழைந்து கொண்டிருந்தார். மூலவர் சன்னிதியை நோக்கி சென்றவர், கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்தார்.


  கோயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை, அங்கிருந்த ஒரு சில பெரியவர்களும், அங்கொருவர் இங்கொருவராக வெளிப்பிரகாரத்தில் தான் அமர்ந்திருந்தனர்.


  விக்ரமின் திட்டப்படி சாந்தி அம்மாவுக்கு எதிரில் வந்த நின்று ஜனா, தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே, சாந்தி கண்களை மூடி இறைவனை வேண்டிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, தன் கையில் உள்ள மயக்க மருந்து ஸ்பிரேயை சாந்தியை நோக்கி சிறிது சிறிதாக தெளித்தான்.


    விக்ரம் முன்னமே கூறியிருந்தான் அதிகமாக ஸ்பிரே செய்யாமல், சிறிது சிறிதாக அவருக்கு தலைசுற்றல் வரும் அளவுக்கு மருந்தை தெளித்தால் போதும் என்று.

 

சாந்திக்கு அருகில் தான் விக்ரம் நின்று கொண்டிருந்தான். அந்த மருந்தின் விளைவால், அவர் கண்கள் இருட்டிக் கொண்டு வர, ஒரு பக்கமாக சாயப்போனவரை தன் கைகளில் தாங்கிக் கொண்டான்.



  "அய்யோ அம்மா, என்னாச்சு உங்களுக்கு? இந்தாங்க இந்த தண்ணியை குடிங்க."


  விக்ரம் தனது பையில் இருந்து நீர் பாட்டிலை எடுத்து, அவருக்கு சிறிது தண்ணீர் புகட்டினான்.


      அவருக்கு சுயநினைவு இருந்தது, ஆனால் கண்களை தெளிவாக திறக்க இயலவில்லை, எழுந்து நிற்கவும் முடியவில்லை.


    "தெரியலப்பா, நல்லா தான் இருந்தேன், ஏனோ படபடன்னு கண்ணை இருட்டிக்கிட்டு வந்துடுச்சு.."


    "கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா சரியா போயிடும். வாங்க நான் உங்களை கூட்டிட்டு போறேன், ஜனா அம்மா கையில இருக்க பூஜை கூடையை வாங்கிக்கோ. நீங்க அட்ரஸ் சொல்லுங்கம்மா, நான் உங்களை வீட்டில் கொண்டு போய் விட்டுடறேன்."


      "பயப்படாதீங்கம்மா, நாங்க பண்ணையாருக்கு தெரிஞ்சவங்கதான். அவர்தான் எங்களை இங்க ஒரு வீட்டில் தங்க வைச்சிருக்கிறார். நான் ஒரு எழுத்தாளர், இந்த கோயிலை பத்தி கட்டுரை எழுதுவதற்காக இந்த ஊருக்கு வந்திருக்கேன்."


    அதன் பிறகு சாந்தி அம்மா தனது விலாசத்தை கூற, விக்ரம் மற்றும் ஜனாவின் உதவியோடு அவரது வீட்டிற்கு வந்தார்.


     " ரொம்ப நன்றிங்க தம்பி, நீங்க ரெண்டு பேரும் இல்லனா, நான் எப்படி வீடு வந்து சேர்ந்திருப்பேனோ எனக்கே தெரியல."


" உங்களுக்கு இப்படி அடிக்கடி வரும்மாம்மா? எதுக்கும் நீங்க டாக்டர் கன்சல்ட் பண்றது நல்லதுன்னு நினைக்கிறேன்."


        "நான் நல்லாத்தான் தம்பி இருந்தேன், எப்ப என் மகன் அந்த விளங்காதவளை கட்டிட்டு வந்தானோ? அப்ப இருந்து எங்க குடும்பத்துக்கு புடிச்சது சனி. இப்போ செத்துப் போய் கூட என் பையனை விட்டுப் போக மாட்டேங்குறா, எந்நேரமும் அவ நினைப்புலயே என் மகனும் சுத்திகிட்டு இருக்கான்."


    "ஓ அப்படியாம்மா, உங்க முதல் மருமக தான் இறந்துட்டாங்களே, அப்புறம் என்ன பிரச்சனை? நீங்க உங்க பிள்ளை கிட்ட சொல்லி வேறொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லலாமே?"


    "அதெல்லாம் அவ போன ஆறு மாசத்தில இருந்தே, வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி, அவனை வற்புறுத்திட்டு தான் இருக்கேன். உங்க கிட்ட சொல்றதுக்கு என்ன தம்பி, என் அண்ணன் பொண்ணு கூட, இவனுக்காகவே காத்துகிட்டு இருக்கா. எங்க நாம சொல்றதெல்லாம் அவன் காதுல ஏறுனா தானே? ஆனா அந்த விஷயத்தை தவிர என் பையன் ரொம்ப நல்லவன் தம்பி. அவன் தலை எடுத்ததுக்கு அப்புறம் தான் எங்க வீட்டையே இடிச்சு மாற்றி கட்டினான். அதுக்கு முன்ன இது ஒரு ஓட்டு வீடா தான் இருந்தது. என் புள்ள தான் இது எல்லாத்தையும் தட்டி எடுத்துட்டு அப்படியே பில்லர் வைச்சு டார்ச் கட்டடம் போட்டான்."


  "வீடு ரொம்ப நல்லா இருக்கும்மா, நாங்க நகரத்துல வாழ்றவங்க, இந்த மாதிரி காத்தோட்டமா எல்லாம் வீடு பார்த்ததே இல்லை."


  " ஒரு நிமிஷம் இருங்க தம்பி. நான் உங்களுக்கு காபி தண்ணி கொண்டு வரேன்."


  "ஐயோ, உங்களுக்கு எதுக்கும்மா சிரமம்?"


  "அட நீங்க இருங்க தம்பி, இதுல என்ன சிரமம், என்னை இவ்வளவு பத்திரமா வீட்ல கொண்டுவந்து சேர்த்து இருக்கீங்க, உங்களுக்கு ஒரு டம்ளர் காபி கூட தராட்டி எப்படி? இருங்க வாரேன்."


  அவர் சமையல் அறையினுள் நுழைந்தவுடன் விக்ரம் அவசரமாக ஜனாவிற்கு கண்ணை காட்டி விட்டு, சித்ரா தற்கொலை செய்ததாக கூறப்படும் அந்த அறையை நோக்கி சென்றான். அந்த அறை அட்டாச் பாத்ரூமோடு இருந்தது. அவர்கள் அறையில் ஒரு பின்பக்க கதவும் இருந்தது. அதற்கு பின்புறம் கொல்லை புறமாகவும், அங்கே தனியாக பாத்ரூமும் இருந்தது. அந்த அறையை சுற்றி சுற்றி தேடியும் அவர்களின் திருமண புகைப்படம் ஒன்று கூட அங்கு இல்லை.


  ஜனா சிக்னல் கொடுக்க விக்ரம் உடனடியாக, அந்த அறையை விட்டு வெளியேறி, வரவேற்பறையில் ஜனாவிற்கு அருகில் வந்த அமர்ந்தான்.   


      சாந்தி அவர்களுக்கு குடிப்பதற்கு  காபியும், திருவிழாவிற்காக செய்த பலகாரங்களையும் கொண்டு வந்து அவர்களின் முன்பு அடுக்கினார்.


      "என்னம்மா உங்க பையனோட கல்யாண போட்டோ எங்கேயுமே இல்லை?"


    இதைக் கேட்டு சாந்தியின் முகம் தீவிரமானது


    "என்னாச்சும்மா? ஏன் உங்க முகம் பேய் அறஞ்ச மாதிரி இருக்கு? ஏதாச்சும் பிரச்சனையா?"


    "அதை ஏன் கேக்குறீங்க தம்பி அவ செத்துப் போய் ரெண்டு நாள் கழிச்சு, என் பையன் கிட்ட தேர்தல் சம்பந்தமா பேசணும்னு, கட்சி ஆபீஸ்ல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. இவனும் என்ன பண்றதுன்னு தெரியாம மனசே இல்லாம தான் அங்க போனான்."


  " அன்னைக்கு ராத்திரி அவ தற்கொலை பண்ணிகிட்ட, ரூமுக்கு பின்னாடி இருக்க கொல்லை புறத்திலயிருந்து, ஏதோ சத்தம் கேட்டுச்சு. நான் என்னவோ ஏதோன்னு போய் பார்த்தான்ப்பா. என் பையன் ரூம்ல இருக்க பின்பக்க கதவு திறந்திருந்துச்சு.


     அங்க இருக்க மரத்துக்கு கீழே ஒரு உருவம் தலையை விரிச்சு போட்டு நிக்கிற மாதிரி இருந்துச்சு, உத்து பார்த்தப்ப தான் தெரிஞ்சது, செத்துப்போனவ கையில அவங்க கல்யாண போட்டோவை வைச்சிட்டு அதையே வெறிச்சு பார்த்துகிட்டு  இருந்தா!. எனக்கு ஈரகொலையே நடுங்கி போச்சு. அடுத்த நாளே பூசாரியை  கூப்பிட்டு அந்த புளிய மரத்துல ஆணிய வச்சு அடிச்சு புட்டேன். அதுக்கப்புறம் அவளை ஊருக்குள்ள யாரும் பார்க்கல, ஆனா அடிக்கடி அந்த புளிய மரத்துக்கிட்டு அவளை பார்த்ததா சொல்லிக்கிறாங்க."


    இவற்றை கேட்டுக் கொண்டிருந்த ஜனா, அப்படியே மயங்கி சரிந்து விட்டான்.


அன்று


    சிவப்பிரகாஷ் ஹாஸ்பிட்டலில் இருந்தவரை ரேகாவுடன் சேர்ந்து சித்ரா, தினமும் அங்கு சென்று அவனை நலம் விசாரித்து வந்தாள்.


    அவர்கள் தங்களுக்குள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள, இருவருக்கும் புரிதலை தாண்டிய ஒரு நல்ல நட்பு மலர்ந்தது. அவன் ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்பும் கூட இவர்களின் நட்பு தொடர்ந்தது.


  சித்ராவும் சிவாவும் பேசும் போது ரேகாவின் பார்வை ஒருவித கோபத்தோடு சித்ராவை நோக்கி தான் இருக்கும். ஆனால் அது தனது கற்பனையோ என்று சித்ரா எண்ணுமாறு, மறு நொடியே தனது முகத்தை சீராக்கிக் கொண்டு அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசத் தொடங்கி விடுவாள்.


  கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் நட்பு காதலாக உருமாறி, இருவரின் மனதிலும் வேரூன்றி கொண்டிருந்தது.


      சித்ரா முதன் முதலில் சிவாவின் மீது தனக்கு ஏற்பட்டுள்ள காதலை, ரேகாவிடம் தான் கூறினாள். அவள் தனக்கு இது சந்தோஷமே என்று கூறிய பிறகு தான், தனது காதலை சிவாவிடம் வெளிப்படுத்தினாள்.


    இவர்களின் காதல் சித்ராவின் வீட்டிற்கு தெரிய வர, அவள் வீட்டு காவலில் வைக்கப்பட்டால். அவசரமாக அவளின் திருமணத்திற்காக, வரனும் பார்க்கப்பட்டு, தேதியும் குறிக்கப்பட்டது.


  தன் பெற்றோரிடம் எவ்வளவு போராடியும் அவர்கள், அவளின் கருத்துக்களை கேட்பதாகவே இல்லை.


  ராணுவத்தில் உள்ள தனது அண்ணனுக்கு செய்தி அனுப்பியும் அங்கிருந்து எந்தவித பதில் கடிதமும் வராததால், ஒரு முடிவோடு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் சித்ரா.


Monday, September 8, 2025

பிம்பம் 4


 

அத்தியாயம் 4


இன்று


      "என்ன பாட்டி சொல்றீங்க பேயாவா? இந்த ஊருக்கு வெளியே இருக்கே, அந்த புளியமரத்துலயா?"


    பாட்டி ஆம் என்று தலையசைத்ததை கண்டு, ஜனாவின் முகம் போன போக்கை பார்த்து, விக்ரமுக்கு அன்றைக்கு அந்த புளிய மரத்தை கட்டிக்கொண்டு ஜனா நின்ற நிலைதான், கண் முன்னே காட்சியாக விரிந்தது. வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு வாய்க்குள்ளேயே மறைத்துக் கொண்டான் விக்ரம்.


    "ஏன் பாட்டி, விருப்பப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டவங்க எதுக்காக காவு வாங்க துடிக்கனும்? யாராவது அவங்கள கொன்னிருந்தால் தான் அவங்களை பழி வாங்குறதுக்காக இப்படி பேயா அலைவாங்க?"


    "அது கொலையோ தற்கொலையோ யாருக்கு தெரியும்?"


    "ஏன் பாட்டி அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் ஏதாவது பிரச்சனையா?"


    "ச்சே ச்சே அவன் அந்த புள்ளையை தங்கமா தான் தாங்கினான். ஆனா அவ அத்தைகாரிக்கு தான், இவளை மருமகளா கூட்டிட்டு வந்ததே புடிக்கல. அவளுக்கு அவங்க அண்ணன் மகளை கட்டி வைக்கணும்னு ஆசை. ஆனா அந்த பையன் அவ அத்தை பொண்ணோட சிநேகிதியை இல்ல காதலிச்சு கூட்டிட்டு வந்துட்டான்."


  "அந்த அம்மா அவ்வளவு பெரிய கொடுமக்காரியா பாட்டி?"


  "பின்ன இல்லாமையா அவளோட புருசங்காரன் பாதியிலயே அவளை விட்டுட்டு, பரதேசம் போகணும். ஆமா நீங்க என்ன, கோயில பத்தி விசாரிக்க வந்துட்டு, இந்த புள்ளையை பத்தியே விசாரிச்சுட்டு இருக்கீங்க?"


    பாட்டி தனது மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டே, சந்தேக கண்ணோடு அவர்களைப் பார்த்து கேள்வி கேட்க,


    " அது....அது ஒன்னும் இல்ல பாட்டி நாங்க எழுத்தாளர்ன்னு சொன்னோம்ல, ஒருவேளை நீங்க சொல்ற கதை நல்லா இருந்தா, அதையே ஒரு புக்கா எழுதலாம்னு தான். அதனால தான் இவ்வளவு விரிவா கேட்டுட்டு இருக்கோம். அந்த புக்குல உங்க போட்டோவையும் நீங்க சொன்ன கதைன்னு சொல்லி போட்டார்லாம் சரியா, எங்க ஸ்மைல். சூப்பர் பாட்டி இந்த படத்தையே அந்த புக்குல போட்டர்லாம், நீங்க மேல சொல்லுங்க."


    அந்தப் பாட்டி வாயெல்லாம் பல்லாக தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறத் தொடங்கினார்.


    பிரகாஷுக்கு  ஒரு மாமன் மகளும், மகனும் இருக்கிறார்களாம். தனது அண்ணனின் மறைவுக்குப் பிறகு தாய் இல்லாத அவர்களை தமது வீட்டிற்கு பின்னால்  குடிவைத்து,  பாதுகாத்து வளர்த்து வருகிறார் பிரகாஷின் தாயார்.


    சிறுவயதில் இருந்தே தனது அண்ணன் மகளே, தனக்கு மருமகளாக வரவேண்டும் என்று அவருக்கு ஆசை. ஆனால் தனது மகன், அவளின் தோழியை தனது வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பான் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். தனது மகனுக்காக அவளை ஏற்றுக் கொண்டாலும், அவன் இல்லாத பொழுதுகளில் முகத்தை காட்டவும் செய்வாராம்.


    சித்ராவுக்கு பைத்தியம் பிடித்து தன் பிள்ளையை விட்டு ஓடிப் போக வேண்டும் என்று, இந்த ஊரில் உள்ள குடுகுடுப்பைகாரனிடம் சென்று சித்ராவிற்க்கு சூனியம் கூட வைத்தாராம்.


    "பாஸ் நம்ம வந்த வேலை சிறப்பா முடிஞ்சது போல, நம்ம தேவைக்கு மேலயே நிறைய இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு."


  "இல்ல ஜனா, இங்க நாம வந்த வேலை இன்னம் முடியல. இப்பதான் ஆரம்பிக்க போகுது."


    "என்ன பாஸ் சொல்றீங்க ? அதுதான் தேவையான எல்லா விஷயத்தையும் இந்த பாட்டிங்க கிட்ட இருந்து வாங்கியாச்சே?"


    " நான் இங்க வந்ததுக்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கு. அதோ வராங்க பாரு அவங்க தான் பிரகாஷோட அம்மா சாந்தி. இன்னைக்கு எப்படியாவது அந்த வீட்டுக்குள்ள போய் சித்ரா தற்கொலை பண்ணிக்கிட்டதா சொன்ன இடத்தை பார்த்தாகணும் நமக்கு அங்க ஏதாவது க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கு."


    "என்ன பாஸ் இவங்க பார்க்கிறதுக்கு நம்ம ஊர் சொர்ணாக்கா மாதிரி இருக்காங்க, இவங்களுக்கு யாரு சாந்தின்னு பேர் வைச்சது. சரி பிளான் போட்டுட்டீங்களா, இல்ல இனிமேல் தானா?"


  "பிளான் ரெடி தான் ஜனா. நான் சொல்ற படி செய்."


அன்று


    சிவப்பிரகாஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்குள் தோழிகள் இருவரும் சென்றனர். இன்னும் அவன் கண்விழிக்காததால் அவன் அருகில் நின்று கொண்டிருந்த நண்பர்களிடம் இது எப்படி ஆனது என்று விசாரிக்க, 


  "நம்ம மாரியோட தங்கச்சி வீட்டுக்காரர் இருக்காருல்ல, அவருக்கு அவங்க அம்மா அப்பா பணத்துக்கு ஆசைப்பட்டு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறதா இருந்தாங்க, அதை தடுத்து நிறுத்துற தகராறுலதான் சிவாக்கு இப்படி அடிபட்டுடுச்சு."


        இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தன் சிவப்பிரகாஷ்.


      "எதுக்கு மாமா உனக்கு இந்த தேவையில்லாத வேல? யார் எப்படி போனா உனக்கு என்ன? அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் வேற  கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா, அது அவங்க குடும்ப பிரச்சினை, அதுக்குள்ள நீ ஏன் போய் தலையை விடற? பாரு இப்ப எப்படி அடிபட்டு வந்து படுத்து கிடக்கேன்னு?"


  "என்ன ரேகா இப்படி சொல்லிட்ட? நாளைக்கு உனக்கே புகுந்த வீட்ல ஒரு பிரச்சனைனாலும், நான் முன்னாடி வந்து நிற்க மாட்டேனா? அந்த பொண்ணும் எனக்கு அப்படித்தான். கண்ணுக்கு  முன்னாடி ஒரு அநியாயம் நடக்கும்போது அதை எப்படி தட்டி கேட்காம இருக்க முடியும்." 


  "அதுவும் அந்த பொண்ணுக்கு ஒரு வயசுல குழந்தை இருக்கு, அதை கூட மறந்துட்டு அந்த ஆளு, இன்னொரு கல்யாணம் பண்ணிக்க நினைச்சான், பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதுதான் போலீஸோட போயி சண்டை போட்டு, அந்த கல்யாணத்தையே நிறுத்திட்டேன்."


  அப்போது சிவப்பிரகாசத்தின் தோழனான மாரி, அறைக்குள் நுழைந்து, அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்.


    "நீ மட்டும் இல்லைனா, என் தங்கச்சியோட வாழ்க்கையே பாழா போயிருக்கும் சிவா. இப்போ மாப்பிள்ளையோட குடும்பம் பூராவும் போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்காங்க. எங்க கிட்ட சமாதானமா போக பேச்சு வார்த்தை நடத்துறாங்க, இனிமே என் தங்கச்சியோட ஒழுங்கா வாழ்வேன்ன்னு, மாப்பிள்ளை போலீஸ் முன்னாடி உறுதி கொடுத்திருக்காரு. இது எல்லாமே உன்னால தான் சிவா நடந்தது."


  "மாரி ஒழுங்கா விசாரிச்சுட்டு  உன் தங்கச்சியை அங்க அனுப்பு. இப்போ சமாதானமா போற மாதிரி கூட்டிட்டு போய்ட்டு, பின்னாடி வேற ஏதாவது செய்திட போறாங்க. அதனால உன் கண்காணிப்பிலேயே உன் தங்கச்சியும் அவர் வீட்டுக்காரரும் இருக்கிற மாதிரி வேற வீட்டில் குடி வச்சுக்கங்க."


    மாரி அவனிடம் சரி என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வந்ததால், மறுபடியும் பலமுறை நன்றிகள் கூறிவிட்டு, அங்கிருந்த அவசரமாக சென்றான்.


  " இந்த டைம்ல எதுக்காக ரேகா தனியா வந்தே?"


  "இல்ல மாமா இவ என்னோட பிரண்டு பேரு சித்ரா, இவ கூட தான் இங்க வந்தேன்."


  " சரிம்மா  நான் இங்க பாத்துக்குறேன். முதல்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. லேடிஸ் மட்டும் இப்படி தனியா வெளியே வராது நல்லது இல்ல."


  "ஏன் சார் ஆம்பளைங்க மட்டும் தனியா வெளியே சுத்தலாமா? நாங்க ஹாஸ்பிடலுக்கு தனியா வர்றது கூட குத்தமா?"


  "நான் அதை குத்தம்னு சொல்லலைங்க, நம்ம சேஃப்டிய நாம தானே பார்த்துக்கணும். அப்பா அம்மா கிட்ட நீங்க இங்க வர்றீங்கன்னு சொல்லிட்டு வந்தா அது ஒரு சேப்டி, எதுவுமே சொல்லாம, நீங்க இப்படி இங்க ஹாஸ்பிடல் வந்ததை வேற யாராவது பார்த்து, வீட்டுல சொன்னா தேவையில்லாம பொண்ணுங்களோட பேரு தான் கெட்டுப் போகும். 


     நம்ம சமூகத்துல ஒரு தடவை ஒரு பொண்ணுக்கு பெயர் கெட்டுட்டா, அது அப்படியே நின்னு போயிடும். ஆனா இந்த கட்டுப்பாடு எல்லாம் ஆம்பளைங்களுக்கு கிடையாது, அது என்னவோ நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி. சரிங்க நீங்க கிளம்புங்க, டேய் போய் ஆட்டோ கூட்டிட்டு வந்து, அவங்களை பத்திரமா வண்டி ஏத்தி விட்டுட்டு தான், நீங்க உள்ள வரணும்."


  பெண்கள் என்றால் போதைப் பொருளாக நினைக்கும் ஆண்களும் உண்டு, எட்ட நிறுத்தி வேறுபாடு பார்க்கும் ஆட்களும் உண்டு. ஆனால் இவனது அணுகுமுறை சித்ராவுக்கு புதிதாகபட்டது. அனைவரிலும் இருந்து இவன் தனித்து தெரிந்தான்.


  அவனின் உடல்நிலை பற்றி விசாரித்து விட்டு தலையசைப்போடு  ரேகாவுடன் ஹாஸ்பிடலை விட்டு வெளியே வந்தாள்.


Saturday, September 6, 2025

பிம்பம் 3


 

             அத்தியாயம் 3


இன்று


  "ஏன் பாஸ், இது உங்களுக்கே நல்லாருக்கா? இப்படி கோயில் கோயிலா என்னை சுத்த வைக்கிறீங்களே? இது உங்களுக்கே நியாயமா படுதா?"


  "விட்றா நீ செஞ்ச பாவமெல்லாம் இதுனாலயாவது கரையட்டும்."


  "எது? பாவமா? அப்பழுக்கில்லாத இந்த பச்ச குழந்தையை போய் இப்படி சொல்லிட்டீங்களே பாஸ்? என்னால தாங்க முடியல?"


  "உன் பெர்ஃபார்மன்ஸை நிறுத்திட்டு வந்த வேலையை பார்க்கறியா?"


    "இங்க யாருகிட்ட போய் கேட்கறது? அங்கங்க ரெண்டு ரெண்டு பாட்டிங்களா சேர்ந்து உட்கார்ந்து, வெத்தலையோட ஊர் நாயத்தையும் சேர்த்து இடிச்சிகிட்டு இருக்காங்க."


    "அவங்க தான் நம்ம டார்கெட். அவங்களுக்கு தெரியாம ஊருக்குள்ள ஒரு விஷயமும் நடக்காது. போலீஸ்க்கு தெரியாத விஷயம் கூட இவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இவங்கதான் இந்த ஊரோட 24 ஹவர்ஸ் சிசிடிவி கேமரா."


  "அது... சரி... ஆமா என்ன கோயிலுக்குள்ள  ஃபுல்லா பெருசுங்களா இருக்கு. ஒரு பாவாடை தாவணியை கூட காணோமே? சரி முறைக்காதீங்க பாஸ் வந்த வேலையை கவனிக்கிறேன்."


    "இந்த ஊர்ல நடக்கற பௌர்ணமி பூஜை, ரொம்ப விசேஷம். அதுவும் சித்ரா பௌர்ணமிக்கு எப்பவும் ஊரே திரண்டு வந்து விழா எடுத்து கும்பிடுவாங்க. இன்னைக்கு சித்ரா பௌர்ணமி, காலைல இருந்தே ஊர்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் கோவில்ல தான் இருப்பாங்க. சாயந்திர நேரம் தான் கன்னிப்பெண்கள் எல்லாரும் ஒன்னு கூடி கும்மி அடிப்பாங்க."


  "ஓ அப்ப நமக்கு சாயந்திரமும் இங்க வேலை இருக்குன்னு சொல்ல வர்றீங்க, ஓகே பாஸ் நான் வாயை மூடிக்கிறேன், யூ ப்ரோசீட்."


    விக்ரம் மரத்தடியில் அமர்ந்திருந்த பாட்டிகளில் ஒருவரை நோக்கி சென்றான்.


  "என்னப்பா எந்த டிவி சேனல்ல இருந்து வந்திருக்கீங்க?... இல்லே ஏதும் பத்திரிகையில இருந்து வந்திருக்கீங்களா?"


    விக்ரமும் ஜனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு,


    " பாட்டி நாங்க எந்த டிவி சேனல்ல இருந்தும் வரல, பத்திரிக்கையில் இருந்தும் வரல. இவர் ஒரு எழுத்தாளர் உங்க கோயில பத்தி புக் எழுத போறாரு. இந்த கோயிலை பத்தி தெரிஞ்சுக்கத் தான், உங்ககிட்ட வந்திருக்காரு. உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் சொல்லுங்க, அது எங்களுக்கு புக் எழுத உதவியா இருக்கும்."


  "ஓஹோ… அப்பறம் எதுக்கு உன் கையில படம் புடிக்கிற பொட்டியை வச்சிருக்கே?"


  "இந்தக் கோயிலை போட்டோ எடுக்கறதுக்கு தான் பாட்டி இது. சரி இந்த கோயிலை பத்தி சொல்லுங்க, இங்க சித்ரா பௌர்ணமி அப்போ நடக்குற திருவிழா, ரொம்ப விசேஷமாமே?"


    "ஆமா ஆமா இங்க சித்ரா பௌர்ணமி விழா ரொம்ப சிறப்பா தான் நடந்துகிட்டு இருந்துச்சு, ஆனா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி திருவிழா அப்போ, அந்த சம்பவம் நடந்ததிலிருந்து, ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இந்த ஊர்ல இருக்க யாரும் ஆறு மணிக்கு மேல வெளியே வர்றதே இல்ல."


  இது அவர்களுக்கு கிடைத்த புதிய செய்தி.


  "என்ன பாட்டி சொல்றீங்க? அப்படி என்ன நடந்துச்சு? எதுக்காக பௌர்ணமி நாள் அன்னைக்கு மட்டும் ஆறு மணிக்கு மேல வெளியே வர மாட்டாங்க?"


  "அது....... ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி....... ,சித்ரா பௌர்ணமி அன்னைக்கு வயித்துப்புள்ளகாரி தற்கொலை பண்ணிக்கிட்டா இல்ல, அவ ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஆவியா வந்து காவு கேட்கிறதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க. ஒவ்வொரு மாசமும் பௌர்ணமி அப்போ ஊருக்கு முன்னாடி இருக்க அந்த புளியமரத்துகிட்ட, நிறைய பேர்  அவளை பார்த்ததா கூட சொல்லியிக்காங்க.


      இன்னைக்கு எப்படியும் ஆறு மணிக்கு முன்னவே கும்மி அடிச்சு முடிச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா அந்த புள்ள இறந்து போன நாள் இன்னைக்கு தான். இன்னையோட ரெண்டு வருஷம் ஆயிடுச்சு."


அன்று


  சித்ராவும் ரேகாவும் அலுவலகம் முடிந்து பஸ்ஸிற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.


    "ஏண்டி நாங்க தான் வேற வழி இல்லாம, இந்த கூட்ட நெரிசல்ல வந்துட்டும் போயிட்டும் இருக்கோம். உனக்கென்னடி உங்க அப்பாட்ட சொன்னா, ஒரு காரையே டிரைவரோட ஏற்பாடு பண்ணி தருவாரே, அப்புறம் எதுக்காக இந்த கூட்ட நெரிசல்ல சிக்கிகிட்டும், நிறைய இடி மன்னர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிகிட்டும்னு, இவ்வளவு கஷ்டப்படுற?"


    "ரேகா பணத்தால எல்லாத்தையும் வாங்கிட முடியாது, அனுபவம் தான் நம்ம வாழ்க்கைக்கு தேவையான, உண்மையான பயிற்சியை கொடுக்குது. அதை நான் நேரடியா ஃபேஸ் பண்ணனும்னு நினைக்கிறேன். வாழ்க்கையை வழி நடத்த ஒரு சில அனுபவங்கள் தான் நமக்கு உதவிகரமாக இருக்கும். அது எனக்கு இந்த பயணத்தின் போது கிடைக்குது."


  "தாயே தெரியாம கொஸ்டின் கேட்டுட்டேன் என்னை விட்டுடு ஆத்தா, ஒரு கேள்வி கேட்டது குத்தமாடி? இப்படியா இவ்ளோ பெரிய லக்சர் கொடுப்பே?"


  "ரேகா, வீட்டுக்கு வெளியே தான் நான் நானாக இருக்கேன். வீட்டுக்குள்ள போயிட்டா தங்க கூண்டுல அடச்ச கிளியோட கதைதான். வீட்ல யாரும் என்னோட சொல்ல மீறி நடக்க மாட்டாங்க தான், இருந்தாலும் அவங்களுக்காகவே அவங்க சொல்ற பேச்சை மட்டுமே கேட்டு நடந்துக்குவேன். அதனாலதான் வெளியே என்ன பிரச்சனை நடந்தாலும், என் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு என்னோட அப்பா அதுக்கு முழுசா சப்போர்ட் பண்றாரு.?"


  "அப்போ மேடம் வீட்டில எலி வெளியில புலின்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே ?"


  "ம்ம்ம், உறுதியா கிடையாது ஆனா  கிட்டத்தட்ட அப்படிதான்."


  இதைக் கேட்டு முறைத்துக் கொண்டிருந்த ரேகாவின் போன் இசைத்தது. அதை எடுத்துப் பேசிய ரேகாவின் முகம் கலவரத்தை தத்தெடுத்துக் கொண்டது.


  "என்னாச்சு ரேகா ஏதாச்சும் பிரச்சனையா?"


    "ஆமா சித்ரா, நான் சொல்லி இருக்கேன் இல்ல, என்னை எடுத்து வளர்த்த அத்தை பத்தி, அவங்க தான் கூப்பிட்டு இருந்தாங்க. அவங்க பையனை இங்க பக்கத்துல ஏதோ ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணி இருக்கிறதா, அவங்களுக்கு போன் வந்துச்சாம்."


  "என்னாச்சு அவருக்கு? எதுக்காக அட்மிட் பண்ணி இருக்காங்களாம்?"


  "அத்தைக்கும் அது பத்தி சரியா தெரியல? நான் இப்ப போய், நேரா எங்க மாமாவை ஹாஸ்பிடல்ல பார்த்து, என்னன்னு தெரிஞ்சுகிட்டு தான், அவங்களுக்கு திருப்பி கூப்பிடனும்."


" சரிப்பா நானும் உன் கூடயே வரேன், ஹாஸ்பிடல் நேம் கேட்டியா?"


  "கேட்டேன், பக்கத்துல இருக்குற அக்ஷயா நர்சிங் ஹோம்ல தான் சேர்த்திருக்காங்களாம்."


  "சரி, அந்த ஹாஸ்பிட்டல் இங்கிருந்து பக்கம் தான். வா நடந்தே போகலாம்."


  அக்ஷயா நர்சிங் ஹோமில் அறை எண் முன்னூற்று ஐந்தில் தலையில் கட்டுடன் படுத்திருந்தான் சிவா என்கின்ற சிவப்பிரகாஷ்.

Thursday, September 4, 2025

பிம்பம் 2

 



அத்தியாயம் 2

இன்று


  "பாஸ் என்ன பாஸ் இது, அந்த பண்ணையார்கிட்ட சொல்லி வீட்டை ஏற்பாடு பண்ண மாதிரி, சமையலுக்கும் யாரையாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல? இப்ப பாருங்க உங்க கையால தோசையை சுட்டு தர சொன்னா, அந்த தோசைக்கல்லையே எடுத்துக் கொண்டு வந்து வைக்கிறீங்க. எப்படி பாஸ் இது எல்லாத்தையும் திங்கிறது?"


    "உனக்கு வேண்டாட்டி எழுந்து போடா, போய் பட்டினியாக்கிடா. இங்க உனக்கு நான் பாஸா, எனக்கு நீ பாஸானே தெரியல? எல்லா வேலையும் நானே செஞ்சிட்டு இருக்கேன். நீ உக்காந்து குத்தமா சொல்லிக்கிட்டு இருக்க? எழுந்து போடா முதல்ல."


  "ஐயோ எதுக்காக இப்படி எல்லாம் பெரிய வார்த்தை பேசறீங்க. சாப்பாட்டை எப்பவும் வேஸ்ட் பண்ண கூடாது, தோசை நடுவுல தான் கருகியிருக்கு, பரவால்ல விடுங்க. அதை பிச்சு போட்டுட்டு சுத்தி இருக்கிறதை சாப்பிடலாம். ஓ! இதுதான் தேங்காய் சட்னியா? முறைக்காதீங்க பாஸ், என்ன கலர்ஃபுல்லா இருக்குது… வெள்ளை வெளையேன்னு."


  "திங்கிறத்துலயே குறியா இரு, நான் உன்கிட்ட நேத்து என்ன சொன்னேன்? போலீஸ் ஸ்டேஷன் போய் அங்க நமக்கு சாதகமாக ஒரு ஆள புடிச்சு, இந்த தற்கொலை கேஸ் பத்தி அவங்க என்ன எஃப் ஐ ஆர் பைல் பண்ணி இருக்காங்கன்னு, விசாரிச்சுட்டு வர சொன்னனா இல்லையா?"


    "அதெல்லாம் விசாரிச்சிட்டேன் பாஸ். நீங்க நேத்து கொஞ்சம் லேட்டா வந்தீங்க, அதனால தான் நான் தூங்கிட்டேன்.


    அந்த பொண்ணு ரொம்ப நாளாவே தனக்கு தானே, தனியா பேசிட்டு இருந்திருக்கு. கோவில்ல ஒரு நாள் அந்த பொண்ணோட புடவையில நெருப்பு புடிச்சுகிச்சாம், சுத்தி இருந்தவங்க பதறிப் போய் அந்தப் பொண்ணுகிட்ட, சொல்லிக் கூட கேட்காம,  நெருப்பு புடிச்ச புடவையோடவே நடந்து போயிட்டு இருந்திருக்கு. அங்கிருந்த மத்த ஆட்கள் தான் தண்ணியை எடுத்து, அந்த பொண்ணு மேல ஊத்தி, காப்பாத்தி இருக்காங்க.


    அதுக்கு கூட எந்த ரெஸ்பான்சும் பண்ணாம, அந்த பொண்ணு பாட்டுக்கு நடந்து போயிடுச்சாம். அந்தப் பொண்ணு சாகும்போது மெண்டலி ஸ்ட்ராங்கில்லையாம். ஏதோ தெரியாத்தனமா சுருக்கு போட்டு மாட்டி இருக்கும் போல, அதுதான் மூச்சு திணறி இறந்திருக்கு.


     அந்தப் பொண்ணு வயித்துல இருந்த எட்டு மாச கருவும், அந்த பொண்ணோடவே மூச்சுத் திணறி செத்துப் போயிடுச்சுன்னு எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணி வச்சிருக்காங்க பாஸ். சரி நீங்க போன வேலை என்னாச்சு பாஸ், அந்த பொண்ணோட ஹஸ்பண்டை பார்த்தீங்களா?"


  "பார்த்தேன், அவங்க குடும்பத்தை பத்தியும் வெளிய லைட்டா விசாரிச்சேன், எல்லாரும் நல்லவிதமா தான் சொல்றாங்க. அந்த பொண்ணுக்கும் அவருக்கும் நடந்தது லவ் மேரேஜாம். பொண்ணு வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணி இருக்காங்க. இந்த பொண்ணோட அப்பா, ஏதோ ஜாதி கட்சி தலைவர் போல, அதனால அவங்க கல்யாணத்தப்ப ஊர் முன்னாடி அந்த பொண்ணையும் பையனையும் கண்டபடி திட்டி, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு, அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டு போயிட்டாங்களாம்.


அந்தப் பையன் பேரு பிரகாஷ். இந்த மாவட்ட இளைஞரணி தலைவரா இருக்கான். கட்சியில இருந்தாலும் ஒரு மெடிக்கல் ஷாப்ல நாலு பேரை வேலைக்கு வைச்சு நடத்திகிட்டு இருக்கான். இந்த தடவை கட்சி சார்பா அவனுக்கு கவுன்சிலர் பதவி கிடைக்கும்னு பேசிக்கிறாங்க. இதுக்கு முன்னாடியே நிறைய தடவை அந்த வாய்ப்பு வந்து, பல அரசியல் காரணங்களால தட்டி போனதா பேசிக்கிட்டாங்க. இந்தப் பையனும் அந்த பொண்ணை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாதாத்தான் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க" 


  அப்போது வெளியிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்க, இருவரும் வாசலுக்கு வெளியே சென்று பார்த்தனர்.


    "அண்ணே என்னை பண்ணையார் அனுப்பி வச்சாருங்கண்ணே. நீங்க இங்க இருக்கிற வரைக்கும் உங்களுக்கு சமைச்சு போடுறதுக்காக."


  இடுப்பில் உள்ள குழந்தையை தனது முந்தானையால் மூடியபடி நின்று கொண்டிருந்த இந்த இளம் பெண்ணை பார்த்து விக்ரம்,


    " வேலைக்கு வர்றது சரிதாம்மா, ஆனா நீ கை குழந்தைய வச்சுகிட்டு எப்படி எங்களுக்கு சமைச்சு போடுவே?"


  "அண்ணே  எம்புள்ள உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான்ணே. அவன் பாட்டுக்கு சிவனேன்னு இருப்பான். நான் அதுக்குள்ள உங்களுக்கு சமைச்சு வெச்சிட்டு, வீட்டுல இருக்க மேல் வேலை எல்லாம் பார்த்திடுவேன். சம்பளம் கூட நீங்க ஏதாச்சும் பார்த்து கொடுத்தால் போதுங்கண்ணே. அதை வைச்சு என் மகனுக்கு ஏதாவது வாங்கிக்குவேன்."


  "சரிம்மா, நீ சமையல் வேலையை மட்டும் பார்த்துக்கோ, குழந்தையை வச்சிட்டு வேற எதுவும் மேல் வேலை பார்க்க வேண்டாம். துவைக்கிற வேலை எல்லாம் நாங்களே பார்த்துக்குறோம் சரியா. நாளைல இருந்து வேலைக்கு வந்திடும்மா. ஆமா உன் பேர் என்ன?"


  "தேவி ண்ணே"


    " கைக்குழந்தையை வெச்சுகிட்டு நீயேம்மா இப்படி கஷ்டப்படறே? உன் வீட்டுக்காரர் என்ன பண்றாரு ?"


      "அது ஒரு கழிசடைண்ணே."


    "என்னம்மா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டே??"


  "அவர் ஒழுங்கா இருந்தா, நான் ஏன்ணே இப்படி கைக்குழந்தையோடு வேலைக்கு வரேன்? இந்த ஊரு ஆம்பளைங்களுக்கு குடும்பத்தை விட அரசியல் தான் முக்கியமா போச்சு. ஊராருங்க முன்னாடி நல்லவன் மாதிரி வேஷம் போடுறாங்க. ஆனா அவனவன் பொண்டாட்டி கிட்ட கேட்டா தானே தெரியும், அவனுங்களோட உண்மையான லட்சணம் என்னன்னு. சரி அதைவிடுங்க என்னோட கதையை சொல்லி உங்க நேரத்தை ஏன் நான் வீணாக்கனும். நாளைக்கு காலையில் இருந்து வேலை ஆரம்பிச்சிடுறேங்கண்ணே வரட்டுங்களா?"


    தேவி கூறியதை கேட்டு விக்ரம் சிந்தனையில் இருக்க, ஜனா தான் அவளுக்கு மறுமொழி கூறி அனுப்பி வைத்தான்.


அன்று


ஆபீஸ்க்கு லேட்டாக வந்த காரணத்தால் பர்மிஷன் லெட்டர் எழுதி, அதை தனது உயர் அதிகாரிக்கு அனுப்பிவைத்துக் கொண்டிருந்தாள் சித்ரா. அவள் அருகில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தால் அவளுடைய தற்போதைய தோழியான ரேகா.


     ரேகா வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றது. ரொம்ப பயந்து சுபாவமாக வந்து சேர்ந்த அவளுக்கு, தைரியசாலியான சித்ரா தோழியானாள்.


  " எதுக்கு சித்ரா உனக்கு இந்த தேவையில்லாத வேல? பஸ்ல அவன் தப்பா நடந்துகிட்டான்னா, அங்கேயே அடிச்சு விட்டுட்டு வேலையை பார்க்க வேண்டியது தானே? நீ எதுக்கு வான்டடா போய் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்திருக்க? எதுக்குடி நமக்கு இந்த தேவையில்லாத வேலை?"


    "இப்படியே நமக்கென்னன்னு போறதால தான், இவனுங்க எல்லாம் அதை அட்வான்டேஜா எடுத்துக்கிட்டு, மேல மேல நிறைய தப்பு பண்றாங்க. இவனுங்கள ரெண்டு மாசமாவது ஜெயிலுக்குள்ள தள்ளுனா, அடுத்து இன்னொரு பொண்ணு மேல கை வைக்க துணிவானுங்களா?  சரி அதை விடு, இன்னைக்கு உன் பாசமலர் ஏதோ உன்ன பார்க்க வர்றதா சொன்னியே, என்ன ஆச்சு?"


  "அவருக்கு ஏதோ அர்ஜென்ட் வேலை வந்திடுச்சாம், அதனால இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொன்னாரு."


  "உன்னோட அண்ணணும் என்னோட அண்ணா மாதிரி தான் போல? என்னோட அண்ணா, நாடு தான் முக்கியம்னு எங்க எல்லாரையும் விட்டுட்டு ராணுவத்தில் சேர்ந்துட்டாரு. ஆனா உன்னோட அண்ணா  வேலை வேலைனு ஓடிக்கிட்டே இருக்காரு."


 



Tuesday, September 2, 2025

பிம்பம் 1


 

            அத்தியாயம் 1


இன்று


    அந்த சிறிய பேருந்தானது மெய்க்காரன்பட்டி என்று எழுதப்பட்டிருந்த, அறிவிப்புப் பலகைக்கு அருகில் வந்துநின்றது.


    அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர். ஒருவன் காட்டன் ஷர்ட்டும் கருப்பு நிற பேன்ட்டும் அணிந்து, கைகளில் லக்கேஜ் பேக்கோடு நின்றிந்தான்.


  இன்னொருவனோ டி-ஷர்ட்டின் மீது கோட்டும், கிழிந்த ஜீன்ஸ்சும், கருப்பு கண்ணாடியும் அணிந்துகொண்டு, ஒரு தோல்பையுடன் அந்த ஊருக்கு சற்றும் பொருந்தாத ஒருவனாக வந்து இறங்கியிருந்தான்.


  அவர்கள்  கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு மனித நடமாட்டமும் இல்லை. இரு பக்கமும் மரங்களாலும் புதரினாலும் சூழப்பட்டிருந்தது அந்த மண் ரோடு.


  "பாஸ் ஊர்ல அத்தனை வேலையை விட்டுட்டு, இந்த கிராமத்துக்கு எதுக்காக வந்திருக்கோம் நாம? அப்படி என்ன முக்கியமான ப்ராஜெக்ட் இது? நான் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கேன், நீங்க என்ன இந்த முள்ளு காட்டை ஏதோ பூஞ்சோலையை பார்க்கிற மாதிரி  ரசிச்சு பார்த்துகிட்டு வர்றீங்க. கால் வலிக்குது கொஞ்சம் நின்னு போங்க பாஸ்."


      "ஏண்டா லக்கேஜ் பேக்கை தூக்கிட்டு நானே ஸ்பீடா நடக்குறேன்.  தோல் பையைதானே மாட்டிகிட்டு இருக்க, உன்னால இந்த ஸ்பீடுக்கு கூட நடக்க முடியாதா என்ன? இவ்வளவு நேரம் பஸ்ல உட்கார்ந்து தானே வந்தோம், அப்புறம் என்ன?"


    "எது உட்கார்ந்து வந்தோமா? நல்லா குதிச்சு குதிச்சு வந்தோம்னு சொல்லுங்க பாஸ். அதுதான் கரெக்டா இருக்கும். அதுவும் எத்தனை வளைவு! இந்த பஸ்ல ஒரு பத்து நாள் வந்தா போதும், யோகா பண்ணாமலே என் உடம்பு குறைஞ்சிடும் போல இருக்கு."


  " நல்லது தானே, எப்போ பாரு ஃபாலோ பண்ணி போற ஆளுங்ககிட்ட மாட்டிகிட்டு அடி வாங்குறதே உனக்கு வேலையா போச்சு. ஒவ்வொரு தடவையும் நான் வந்து உன்னை காப்பாத்த வேண்டியதா இருக்கு. நீ ஒல்லியானால் அதிலிருந்து நான் ரிலீஃப் ஆகலாம் இல்லயா."


  "பாஸ், தி கிரேட் துப்பறிவாளன் விக்ரம் பேசற பேச்சா இது. உங்களோடு பிஏவான இந்த ஜனாவை காப்பாத்தாம, வேற யாரை காப்பாத்த போறீங்க? நான் ஒல்லியானாலும், குண்டாக இருந்தாலும் எப்பவுமே பைனல் டச்சு நீங்க தான் கொடுத்தாகணும்."


  விக்ரம் அவனை முறைத்து விட்டு வேகமாக நடக்க,


  "பாஸ் பாஸ் இப்போ எதுக்கு இப்படி கோச்சுகிட்டு இவ்வளவு ஸ்பீடா நடக்குறீங்க? முதல்ல நாம இங்க எதுக்காக வந்து இருக்கோம்னு நீங்க காரணத்தை சொல்லாட்டி, நான் இந்த புளிய மரத்தை விட்டு நகர மாட்டேன்."


    ஜனார்த்தனன் அங்கிருந்த புளிய மரத்தை, தன் கை கொண்டு இறுக்கமாக கட்டிக் கொள்ள,


    "ஜனா ஊர்ல ஒரு பேச்சு உண்டு உனக்கு தெரியுமா? பேய்ங்க எப்பவுமே புளிய மரத்துல தான் தொங்குமாம்."


  ஜனா சட்டென்று அந்த புளிய மரத்திலிருந்து பின்வாங்க, அதில் அடித்திருந்த ஒரு ஆணி, அவன் சட்டையோடு மாட்டிக் கொண்டது.


    "அய்யய்யோ பாஸ் பேய் புடிச்சி இழுக்குது....., பேய் புடிச்சு இழுக்குது.... எப்படியாவது என்னை காப்பாத்துங்க."


      விக்ரம் சிரித்துக் கொண்டே அவன் மண்டையில் அடித்து விட்டு, அந்த ஆணியை மரத்தில் இருந்து பிடுங்கி, அவன் சட்டையில் இருந்து நீக்கி தூர வீசினான்.


      திடீரென்று கருமேகம் சூழ்ந்து சூறைக்காற்று அடித்தது.


    "பாஸ் எந்த நேரத்துல பேய் பத்தி பேசினீங்களோ, இப்படி பேய் காத்தா அடிக்குதே!! இப்பவாச்சும் சொல்லுங்களேன், எதுக்காக இந்த பேய் கிராமத்துக்கு வந்திருக்கோம்."


    அடை மழைக்கு ஒதுங்கி, அந்த புளிய மரத்திற்கு அடியில் நின்று கொண்டு, ஜனாவிற்கு பதில் கூற தொடங்கினான் விக்ரம்.


  "கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு மிலிட்டரி ஆபீசர் நம்மள பார்க்க வந்திருந்தாரே ஞாபகம் இருக்கா?"


  "ஆமாம் பாஸ், அவர் பேரு கூட ஏதோ கிருஷ்ணமூர்த்தின்னு சொன்னாருல்ல. ஏதோ ஒரு டைரியை கூட உங்ககிட்ட கொடுத்தாரே. அதிலிருந்த போட்டோ கூட, தெரியாம நீங்க வெச்சிருந்த மை  பாட்டில்ல விழுந்து குளிச்சிடுச்சே. முறைக்காதீங்க பாஸ், சரி.... தெரியாம என் கைபட்டு அது கவுந்துடுச்சு, நான் என்ன பண்ணட்டும்.ம்ம்ம் மேல சொல்லுங்க."


  "அவரோட தங்கச்சி இறந்ததுல அவருக்கு ஏதோ சந்தேகம் இருக்காம். அது தற்கொலை இல்ல, கொலை தான்னு நம்பறாரு. அது பத்தி விசாரிக்க தான் நாம இங்க வந்திருக்கோம்."


  "என்ன பாஸ், ஊர்ல அவ்ளோ பெரிய ப்ராஜெக்டை எல்லாம் விட்டுட்டு, இந்த தற்கொலை கேசை பத்தி விசாரிக்க, நீங்களே நேரடியா வந்திருக்கீங்களே? இதுக்கு நம்ம அசிஸ்டன்சே போதுமே?"


  "ஜனா அந்த மிலிட்டரி ஆபீஸர் தன்னோட சொந்த பந்தங்களை எல்லாம் விட்டுட்டு, நம்ம நாட்டுக்காகவும் நம்மள போல இந்த நாட்டுல வாழ்ற மக்களுக்காகவும் தான், அந்த எல்லையில குளிர்லையும் பனியிலையும் வெயில்லையும் வேலை பார்க்கறாரு. அவருக்காக நாம, இந்த ஒரு விஷயத்தை கூட செய்ய கூடாதா? அதனாலதான் இந்த கேஸ்காக நானே நேரடியாக இங்க வந்திருக்கேன்."


    "நாம இங்க இருக்க எல்லார்கிட்டயும் ஒரு எழுத்தாளரா, இந்த ஊர் கோயிலை பத்தி ஆராய்ச்சி பண்ணி, எழுத வந்திருக்கோம்னு தான் சொல்ல போறேன். நீ பாட்டுக்கு எதையாவது உளறி வச்சிடாதே, அப்புறம் நம்ம கண்ணு முன்னாடி இருக்கற ஒரு சில க்ளு கூட, நம்ம கண்ணுக்கு தெரியாம போயிடும்."


    சட்டென்று அந்த பேய் மழை நின்று அமைதியானது. வானம் தெளிவாகவும், காற்று சற்று இதமாகவும் வீச ஆரம்பித்தது.


    "என்ன பாஸ் இது! அலாவுதீன் அற்புத விளக்கை தேய்ச்சா வருமே, அந்த மாதிரி இந்த புல் மழை ஸ்வைங்குனு வந்துட்டு ஸ்வைங்குனு போயிடுச்சு.


  ஆமா நாம இங்க தங்கறதுக்கும், திங்கிறதுக்கும் ஏதாவது ஏற்பாடு பண்ணி இருக்கீங்களா? இல்ல ஊருக்குள்ள போய் தான் நாம கதையை கிரியேட் பண்ணனுமா பாஸ்?"


    "இந்த ஊரு வாத்தியார் எனக்கு தெரிஞ்சவர்தான். அவர் மூலமா இந்த ஊர் பண்ணையார்கிட்ட உதவி கேட்டிருக்கேன். செய்யறேன்னு சொல்லி இருக்காரு போய் பார்ப்போம்."


அன்று


அமைதியாக ஓடிக் கொண்டிருந்த அந்த அரசு மாநகர பேருந்தில், வீல் என்ற ஒருவரின் கன்னத்தில் அறையும் சத்தத்தில், பஸ்ஸில் இருந்த அனைவரும் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிப் பார்த்தனர்.


  சுடிதார் அணிந்த காளி தேவியாக, தனக்கு அருகில் நின்ற சிறு பெண்ணிடம், சில்மிஷம் செய்ய வந்த அந்த வாலிபனை வகையறையே இல்லாமல் அடித்து நொறுக்கி கொண்டிருந்தால் சித்ரா.


  "ராஸ்கல் ஒரு சின்ன பொண்ண கூட விட்டு வைக்க மாட்டீங்களாடா? அவ குழந்தைடா, அவ கிட்ட போய் என்ன வேலை பார்க்குற? உன்னை எல்லாம் நடுரோட்டில நிக்க வச்சு, செருப்பாலயே அடிச்சு கொல்லனும்,பொறுக்கி நாயே."


    "என்னடி ஓவரா  துள்ளுறே? பஸ்ல கூட்டமா இருந்தது, அதனால அந்த பாப்பாவை கொஞ்சம் கை வைச்சு அந்தப் பக்கமா நகர்த்தி விட்டேன்.  அதுக்கு என்னமோ லபோ திபோன்னு கத்தற,எம்மேல கையை வைக்கிறே. நான் யாருன்னு தெரியுமா? கவுன்சிலரோட மச்சான்." 


  "நீ யாரா இருந்தா எனக்கென்னடா? கண்டக்டர் அண்ணா நேரா பஸ்சை போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க. இந்த பொறுக்கி நாயை எல்லாம் வெளிய நடமாட விடக்கூடாது. என் மேல கை வச்சான்னு சொல்லியே, நான் கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன்."

   


என்னவரே என் மன்னவரே






அத்தியாயங்கள்

  1. மன்னவரே 01
  2. மன்னவரே 02
  3. மன்னவரே 03
  4. மன்னவரே 04
  5. மன்னவரே 05
  6. மன்னவரே 06
  7. மன்னவரே 07
  8. மன்னவரே 08
  9. மன்னவரே 09
  10. மன்னவரே 10
  11. மன்னவரே 11
  12. மன்னவரே 12
  13. மன்னவரே 13
  14. மன்னவரே 14
  15. மன்னவரே 15
  16. மன்னவரே 16
  17. மன்னவரே 17
  18. மன்னவரே 18
  19. மன்னவரே 19
  20. மன்னவரே 20
  21. மன்னவரே 21
  22. மன்னவரே 22
  23. மன்னவரே 23
  24. மன்னவரே 24
  25. மன்னவரே 25
  26. மன்னவரே 26
  27. மன்னவரே 27
  28. மன்னவரே 28
  29. மன்னவரே 29
  30. மன்னவரே 30
  31. மன்னவரே 31
  32. மன்னவரே 32
  33. மன்னவரே 33
  34. மன்னவரே 34
  35. மன்னவரே 35
  36. மன்னவரே 36
  37. மன்னவரே 37
  38. மன்னவரே 38
  39. மன்னவரே 39
  40. மன்னவரே 40
  41. மன்னவரே 41
  42. மன்னவரே 42
  43. மன்னவரே 43
  44. மன்னவரே 44
  45. மன்னவரே 45
  46. மன்னவரே 46
  47. மன்னவரே 47
  48. மன்னவரே 48
  49. மன்னவரே 49
  50. மன்னவரே 50
  51. மன்னவரே 51
  52. மன்னவரே 52
  53. மன்னவரே 53
  54. மன்னவரே 54
  55. மன்னவரே 55
  56. மன்னவரே 56
  57. மன்னவரே 57
  58. மன்னவரே 58
  59. மன்னவரே 59
  60. மன்னவரே 60
  61. மன்னவரே 61
  62. மன்னவரே 62
  63. மன்னவரே 63
  64. மன்னவரே 64
  65. மன்னவரே 65
  66. மன்னவரே 66
  67. மன்னவரே 67
  68. மன்னவரே 68
  69. மன்னவரே 69
  70. மன்னவரே 70
  71. மன்னவரே 71
  72. மன்னவரே 72
  73. மன்னவரே 73
  74. மன்னவரே 74
  75. மன்னவரே 75
  76. மன்னவரே 76
  77. மன்னவரே 77
  78. மன்னவரே 78
  79. மன்னவரே 79
  80. மன்னவரே 80
  81. மன்னவரே 81
  82. மன்னவரே 82
  83. மன்னவரே 83
  84. மன்னவரே 84
  85. மன்னவரே 85
  86. மன்னவரே 86
  87. மன்னவரே 87
  88. மன்னவரே 88
  89. மன்னவரே 89
  90. மன்னவரே 90
  91. மன்னவரே 91
  92. மன்னவரே 92
  93. மன்னவரே 93
  94. மன்னவரே 94
  95. மன்னவரே 95
  96. மன்னவரே 96
  97. மன்னவரே 97
  98. மன்னவரே 98
  99. மன்னவரே 99
  100. மன்னவரே 100
  101. மன்னவரே 101
  102. மன்னவரே 102
            

Monday, September 1, 2025

மன்னவரே 102


 

            அத்தியாயம் 102


"எதுவானாலும் நீ என்கிட்டயே கேட்கலாம் தீபா, ஏன்னா நான் தான் சந்துருவை அப்படி சொல்ல சொன்னேன்.எதுக்கு இந்த மொறைப்பு?..... அப்படி என்ன நான் பெருசா பொய் சொல்லிட்டேன்? நான் ஐசியூல சீரியஸா படுத்துட்டு இருக்கறதாவா சொன்னேன்? ஆபத்து கட்டத்தை தாண்டிட்டதா தானே சொல்லி இருக்கேன். அதோட எனக்கு காயம்ப் பட்டிருக்கிறது உண்மைதானே, எனக்கு என் மது வேணும்,அவளை என்னோடவே வெச்சுக்க எனக்கு வேற வழி தெரியல, நீயே கேட்ட இல்ல அவ பேசினதை,..... என்னை விட்டுட்டு போறேன்னு  சொல்றா டா........, அவ இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது, அவளை விட்டு பிரிய கூடாதுன்னு தான், அவளை அப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன், இப்போ மது  என்னை விட்டுட்டு போறேன்னு சொல்லும் போது, என்னால தாங்கிக்க முடியல டா மச்சான்,....... உடம்புல இருந்து உயிரை அப்படியே உருவி எடுக்கிற மாதிரி வலிக்குது டா தீபா."


  "டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கே?"


  "வேற என்ன சொல்ல சொல்றே? என்னால கண்டிப்பா மது இல்லாமல் வாழ முடியாது, அது ஏன்னு எனக்கே தெரியல, ஏதோ ஒரு பந்தம், அவளை கூடவே வச்சுக்கணும்னு தோணுது. அவ இல்லாட்டி நான் இல்லைன்கிறது, என் மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சு. எனக்கு என்னோட மதுரா வேணும், அதுக்காக நான் எந்த ஒரு எல்லைக்கும் போவேன்."


வேந்தனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறியது.


  "தீபா நாங்க ஒன்னும் பொய் சொல்லல, அவனுக்கு காயம் பட்டிருக்கிறது உண்மைதான், அதுவும் ஆழமா.... அதோட இப்பதான் ஆபரேஷன் முடிஞ்சிருக்கு, எவ்வளவு பெரிய ஸ்டிச்சர்ஸ் போட்டு இருக்கு தெரியுமா உனக்கு?.... இவன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி கொஞ்சம் பாடியை ஸ்ட்ராங்கா வெச்சிருந்ததால தான்,  ஏதோ இந்த அளவுக்கு தெளிவா பேசறான், இல்லாட்டி அளவுக்கு அதிகமா அவ்வளவு  ரத்தம் உடம்புல இருந்து வெளியே போனதுக்கு, இவன் எப்பவோ மயக்கம் போட்டு விழுந்திப்பான், நாங்க ஒன்னும் குடும்பத்துல இருக்கவங்க எல்லார்கிட்டயும், இவன் ரொம்ப சீரியஸா இருக்கான்னு பொய் சொல்லலையே, அவன் ஆபத்து கட்டத்தை தாண்டிட்டான் ஆனாலும் இன்னும் கண் விழிக்கவில்லைன்னு  மட்டும் தானே சொல்லி இருக்கோம்."


    "எல்லாம் சரி தான்டா, ஆனா எதுக்காக இந்த பொய்? ஏற்கனவே இவன் மதுக்கிட்ட உண்மையை மறைச்சதால தான் இவ்வளவு பிரச்சனை, மறுபடியும் இவன் இப்படி நடந்துக்கிறது நல்லா இல்ல சந்துரு, அந்த பொண்ணு ரொம்ப பாவம் டா. இவன் மறுபடியும் இப்படி நடந்துக்கிறது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா, அந்த பொண்ணு மனசொடைஞ்சு போயிடும் டா."


  "தீபா நான் மதுவை எவ்வளவு லவ்  பண்றேன்னு உனக்கே தெரியும், அவ மனசு நோகும்படி நடக்க எனக்கு மட்டும் என்ன ஆசையா?.....ஒன்னு மட்டும் உறுதியா சொல்றேன் டா, அவ என்னோட இல்லன்னா அவளாலயும் சந்தோசமா இருக்க முடியாது டா, எனக்கு நல்லா  தெரியும் டா, என் மதுவோட  மனசு புல்லா நான் மட்டும் தான் இருக்கேன், எங்க இரண்டு பேராளையும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கவே முடியாது ."


    "டேய் நீ தான் அந்த பொண்ணை லவ் பண்ணினே,ஆனா  அந்த பொண்ணு உன்னை லவ் பண்ணதா சொல்லவே இல்லையே, அதுமட்டுமா கல்யாணமான அன்னைக்கே  உன்கிட்ட, அந்த பொண்ணு  டைவர்ஸ் நோட்டீஸ் நீட்டினதா  சொன்னயே?"


  "ஆமா,..... ஆனா எனக்கு கண்டிப்பா தெரியும் அவ மனசுல நான் தான் இருக்கேன், நீ வேணா பாரு அவளால என்னை இங்க தனியா விட்டுட்டு போக முடியாது, கண்டிப்பா திரும்ப வருவா."


  அவன் சொன்னது போலவே சிறிது நேரத்தில் கதவு தட்டப்பட, உடனே அவசரமாக படுத்துக்கொண்ட வேந்தன், மருத்துவ உபகரணங்களை, சந்துருவின் உதவியோடு மாட்டிக் கொண்டான்.


   மூர்த்தி சென்று கதவை திறக்க, வெளியே மூர்த்தியின் மனைவி கோதாவரி, மயங்கிய நிலையில் இருந்த மதுவை தாங்கி பிடித்தபடி நின்று கொண்டிருந்தால். மதுவின் கைகளில் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது, 


  அவளை அந்த நிலையில் கண்டதும், நண்பர்கள் அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. சந்துரு தான் முதலில் வேகமாக ஓடி வந்தான், கண்மூடி படுத்திருந்த வேந்தனுக்கு மது நின்று கொண்டிருந்த நிலை தெரியவில்லை.


  "சிஸ்டர் என்னாச்சு மதுவுக்கு? ஏன்  அவங்க கை எல்லாம் ஒரே ரத்தமா இருக்கு? நீங்க முதல்ல உள்ள வாங்க, டேய் என்ன எல்லாரும் அப்படியே நிக்கிறீங்க?... முதல்ல சிஸ்டரை  பெட்ல படுக்க வைங்க."


சந்துருவின் வார்த்தையை கேட்டதும் கண்களை திறந்த வேந்தன், ஏறிக்கொண்டிருந்த டிரிப்ஸ் ஊசியை கழட்டி வீசிவிட்டு, மதுவிடம் பாய்ந்தோடி வந்தான். மதுவை தனது கைகளில் அள்ளி கொண்டவன், அவளை சத்தமாக பெயர் சொல்லி அழைத்த படியே, தூக்கி வந்து மெத்தையில் படுக்க வைத்தவன். அவளது வலது கையில் வழிந்து கொண்டிருந்த ரத்தத்தை கண்டு, 


  "ஐயோ ரத்தம் எவ்வளவு போயிருக்கு? ஐயோ மதுரா ஆபத்து இருக்கறது தெரிஞ்சும், உன்னை தனியா விட்டுடனே, எல்லாம் அந்த மினிஸ்டரோட வேலையா தான் இருக்கும், என்னை காயப்படுத்தனும்னு நினைச்சு உன்னை இப்படி பண்ணிட்டானே,நான் என்ன பண்ணுவேன், டேய் சந்துரு சீக்கிரமா வந்து பாரு டா,காயம் எவ்வளவு பெருசா இருக்குன்னு தெரியலயே, ரத்தம் வேற அதிகமா போயிருக்கும் போல, ஏன்டா அங்கயே நின்னுட்டு இருக்க, சீக்கிரமா வந்து மதுவை செக் பண்ணு, ஐயோ மதுரா என்னை கண் திறந்து பாரேன் ப்ளீஸ் என்னை தனியா விட்டுட்டு போயிடாதே மதும்மா,... நீ இல்லாத வாழ்க்கை எனக்கும் கிடையாது, என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்விடு, மதுரா நான் பேசறது உனக்கு கேக்குதா?  உன்னோட தீரன் பேசுறேன், கண்ணை திறந்து பாரும்மா மதுராஆஆஆ.."


  தனது கைகள் நடுங்க அவளது கையில் வழியும் ரத்தத்தை  வேந்தன்  தொட  முனையும் போது, அவன் கைகளை தடுத்து பிடித்த மது, கண்களை திறந்து வேந்தனை நேர் விழி கொண்டு நோக்கினால்.


  ஆம் மது தனது கைகளில் குங்கும கரைச்சலைக் கொட்டி கொண்டு, வேந்தனின் வாய்மொழியாகவே  அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காகத்தான் இவ்வாறெல்லாம் நடித்தால்.


இவ்வளவு நேரமும் அவன்  தனக்காக தவித்த தவிப்பை கண்களை மூடியபடியே  கண்டவள், ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அழுவதை கண்டு பொறுக்க முடியாமல் தான், கண் விழித்து விட்டால். 


மதுவை பெரியவர்கள் தன்னுடன் வருமாறு கூறிய போது, அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு, கடைசியாக அவனது கைகளை கோர்த்த போது, மதுவின் மீது இருந்த நேசத்தால் வேந்தன், தான் மயக்கத்தில் நடித்துக் கொண்டிருப்பதைக் கூட மறந்து, அவள் கை விரல்களோடு தனது விரல்களை பின்னிக் கொண்டான். அப்போதே அவளுக்கு லேசாக சந்தேகம் துளித்து விட்டது, அதனால் தான் அவனை உற்று நோக்கி விட்டுச் சென்றாள். பெரியவர்களை முன்னாள் செல்ல சொல்லிவிட்டு, கோதாவரியுடன்,  வேந்தனது அறையை நோக்கி வந்தாள்.


  சரியாக அந்த நேரத்தில் தான் தீபன் வேந்தனிடம் தனது கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கூறிய அனைத்தையும் கேட்டவளுக்கு, அவன் தன்னிடம் பொய் சொன்னதற்காக அவன் மீது கோபம் வராமல், மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்தது.


எதற்காக அவன் தன் மீது இவ்வளவு காதலை வைத்திருக்கிறான் என்று அவளுக்கு புரியவே இல்லை, தன் மீது இவ்வளவு காதலா?... என்று மனதிற்குள் மகிழ்ந்தாலும், ஒரு பக்கம் சிறிய சோகமும் மனதில் இலையோடிக் கொண்டு தான் இருந்தது.


  மது நண்பர்கள் பேசிக் கொண்ட அனைத்தையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள், வேந்தன் கூறியது போல அவளாலும் வேந்தனை விட்டு தள்ளி இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் எப்படி எல்லாம் பதறிவிட்டாள், அதுவும் அவனது ரத்தத்தை தனது கைகளில் பார்த்த போது,..... அப்பப்பா தன் உயிரே போனது போல அல்லவா இருந்தது.


  எப்படி அவனக்கு தன் மீது இவ்வளவு காதல் வந்தது?.... அவன் மீது தான் கொண்ட காதலை, தானே அறியாத போது, எவ்வாறு தன் மனதிற்குள்  இருந்த  நேசத்தை, அவன் அறிந்து கொண்டான்?.... மாயக்கள்ளன் தான்.

தற்போதும் கூட தன்னை ஏமாற்றத்தானே முயற்ச்சிக்கின்றான், தன்னிடம் உண்மையை கூறாமல் இருப்பதை கண்டு, அவளுக்கு சிறு கோபம் தலை தூக்கியது. அவன் வாயாலேயே இந்த நாடகத்தை கலைக்க வேண்டும் என்பதற்காகத்தான், ரிசப்ஷனில் இருந்த குங்குமத்தில் சிறிது நீரை விட்டு, தனது கைகளில் ஊற்றிக் கொண்டவள், கோதாவரியிடம் தான் சொல்வதை மட்டும் கேட்குமாறு, இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள். ஆனால் ஒரு கட்டத்தில் வேந்தன் மனம் நொந்து புலம்புவதை கேட்க முடியாமல் தான், கண் விழித்து இப்படி வேந்தனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.


  கோதாவரி எப்போதோ அங்கிருந்து அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கதவை சாத்தி விட்டாள். வெளியே வந்தவர்களிடம் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் இடையில் நாம் நிற்பது அவ்வளவு நல்லதல்ல என்று கூறி, மூர்த்தியுடன் வந்து வெளியே உள்ள சேரில் அமர்ந்து  கொண்டாள், தற்போது உள்ளே வேந்தன் தான் மதுவிடம் என்ன கூறுவது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தான்.


  கைகளை கட்டிக் கொண்டு குறுகுறு விழியோடு வேந்தனை பார்த்துக் கொண்டிருந்த மதுராவிற்கு, வேந்தனை பார்த்தால், தவறு செய்துவிட்டு தாயிடம் மன்னிப்பு கேட்கும் குழந்தையைப் போலத்தான் அவன் முகம் தோன்றியது. அள்ளி அணைக்கத் துடித்த  கைகளை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டு, பேசுவதற்காக தொண்டையை செறுமினால், ஆனால் அதற்குள் வேந்தனே பேசத் தொடங்கி விட்டான். 

   

  "என்னை.... என்னை மன்னிச்சிடு மதுரா, நான் திரும்பவும் அதே தப்பை  பண்ணிட்டேன்,.... ப்ளீஸ் நீ என்னை விட்டு பிரிஞ்சு போகாதே,  அப்படி ஏதாவது நடந்திடுமோன்னு தான் நான் இப்படி எல்லாம் பண்ணினேன். என்னை புரிஞ்சுக்கோ  மதுரா,...."


  அப்போதும் மதுரா கைகளை கட்டியபடி,  வாய் திறக்காமல் அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,ஒரு பெருமூச்சை வெளியே விட்ட வேந்தன்,


  "புரியிது மதுரா, கட்டாயப்படுத்தி யார் மேலையும் காதலை வர வைக்க முடியாது, நான் உன் மனசுல இருக்கேன்னு நினைச்சேன்,..... அப்படி இல்லைன்னும் போது என்ன செய்ய?.... நீ என்னை விட்டு போகலாம் மதுரா, நானே நேரடியா நம்ம குடும்பத்துல இருக்கறவங்க கிட்ட பேசறேன், நான் செஞ்ச எல்லாத்தையும் ஒன்னு விடாம சொல்றேன், ஆனா சந்துரு , லாவண்யாவோட பேரு மட்டும் எந்த பிரச்சனைலயும் வெளியே வராமல் பாத்துக்கோ. நீ சொன்னபடி நான் உன்னை விட்டு போயிடுறேன், கண்டிப்பா இனி உன்னை நான் தொந்தரவும் பண்ண மாட்டேன் மதுரா."


  கடைசி வார்த்தையை கூறும்போது வேந்தனது குரல் துக்கத்தால் கமறியது. இதற்கு மேல் பொறுக்க முடியாது என்று பேசிக் கொண்டிருந்தவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு, பேசிக்கொண்டே சென்ற வேந்தனது இதழ்களை தனது இதழ்களால் சிறை செய்தாள் மதுரா.


  முதலில் அதிர்ந்து போய் நின்ற வேந்தன் சில நிமிடங்களிலேயே அவளது செயலை தனது கைகளில் எடுத்து கொண்டு , அவளை தீவிரமாக அனுகத் தொடங்கினான். அவனது தீவிரத்தை தாங்கி கொள்ள முடியாது,  கைகளால் மது அவனை தள்ள, மூச்சுக்காற்றுக்காக அவள் போராடுவதை உணர்ந்து, அவள் இதழ்களை தன் இதழ் சிறையிலிருந்து விடுவித்தான்.


  "நீ கடைசி வரைக்கும் திருந்த மாட்ட டா கேடி கேடி ." 

 

   என்ற படி அடிக்க வந்தவளது கைகளை சேர்த்து பிடித்தவன், அவளை சுற்றி விட்டு, அவளது தோள்வளைவில் முகம் பதித்து கொண்டான்.


    "எப்படி டி கண்டு பிடிச்சே?"


    "நான் இங்க இருந்து போகும்போது உன் கை விரலை பிடிச்சுட்டு இருந்தேனே! அப்போ நீ மயக்கத்துல நடிச்சிட்டு இருக்கிறதை மறந்து, என் கையோட சேர்த்து அழுத்தம் கொடுக்கும் போதே தெரிஞ்சு போச்சு, நீ கேடி வேலை பாத்துட்டு இருக்கேன்னு. அதனால தான் வீட்ல இருக்கவங்க எல்லாரையும் அனுப்பி வச்சிட்டு,  அண்ணி கூட திரும்ப ரூமுக்கு வந்தேன். அப்போ வழக்கம்போல உன் வாயாலயே நடந்த அத்தனையையும் தெளிவா கேட்டாச்சு."


   அவளது தோள்பட்டையில் தனது மூக்கை வைத்து உரசியவன்,


  "சாரி மதுரா ஒவ்வொரு தடவையும் நான் உன்கிட்ட இப்படி தான் நடந்துக்குறேன், ஆனா என்னால நீ இல்லாம இருக்க முடியாது டி."


  "ஓ எம்டீ சார்க்கு எம்மேல எப்போ இருந்து இவ்வளவு லவ் ம்ம்ம்?"


  "அதுதான் எனக்கும் தெரியலையே? எப்படி இருந்த என்னை, இப்படி காதல் பைத்தியம் புடிச்சு சுத்த வெச்சுட்டே,.... 


எனை மறந்து போவாயோ என் கண்மணியே?"


உயிர் பிரியும் வேளையிலும் 

 

உம்மை மறவேன் எம் மன்னவரே....


  "அடேய் உங்க காதல் காவியத்தை கொஞ்சம் வீட்டுல போய் பேசேன் டா, கதவு சாத்திட்டு டாக்டர் போலீஸோட வெளியே நிக்கிறதால, வர்றவன் போறவன் எல்லாம் ஒரு மாதிரி பாத்துட்டு போறான்."


மூர்த்தியின் குரல் கேட்டு, மது அவசரமாக வேந்தனிடம் இருந்து விலக,


  "இவனுங்களையெல்லாம் கூட வெச்சுகிட்டு.... கட்டின பொண்டாட்டியவே லவ் பண்ண விட மாட்டேங்குறானுங்க. உள்ள வந்து தொலைங்கடா என் உயிர் எடுக்கும் தோழர்களா."


  உள்ளே வந்த சந்துருவிடம் மது வேந்தனின் உடல் நலத்தை பற்றி விசாரித்து, அவனை  எப்போது வீட்டிற்கு கூட்டி செல்லலாம் என்று கேட்க,


  "அவன் நல்லாதாம்மா இருக்கான், ஸ்டிச்சஸ் போட்டிருக்க இடத்துல மட்டும் தண்ணி படாம பார்த்துக்கனும், ரொம்ப ஸ்டெய்ன் பண்ணி எதையும் கொஞ்ச நாளைக்கு தூக்க கூடாது. நீ இப்பவே கூட வீட்டுக்கு கூட்டிட்டு போலாம், அவனை கொஞ்ச நாள் வீட்ல ரெஸ்ட்ல இருக்கற மாதிரி பார்த்துக்கம்மா, இல்லாட்டி வேலை இருக்குன்னு வெளியே கிளம்பிடுவான்."


"சரிங்கண்ணா நான் பார்த்துக்கறேன், கவிகிட்ட சொல்லி இரண்டு பேர்க்கும் வீட்ல இருந்து டிரஸ் கொண்டு வர சொல்லறேன், ஈவினிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கறோம்."


  வீட்டில் இருப்பவர்களிடம் தாங்கள் வருவதாக கூறியவள், மருத்துவமனையிலிருந்து வேந்தனை நேராக கோவிலுக்குத் தான் அழைத்துச் சென்றாள்.


    மாலைவேளையில் அவ்வளவாக கூட்டம் இல்லை, இரவை நெருங்கும் நேரத்தில் தான் திருவிழா கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் தான் அவனை  இப்போது  அழைத்து வந்திருந்தாள்.


அழகு நாச்சி அம்மையிடம் உளமார மன உருகி வேண்டி கொண்டவள், வேந்தனது கைகளாலேயே குங்குமத்தை தனது நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டால்.


  மோகினி பள்ளத்தின் அருகில் வந்த போது, குருந்த மரத்திற்கு அடியில் புதிதாக செய்யப்பட்ட, குலதேவியின் கைகூப்பிய நிலையில் அமர்ந்திருந்த சிலையை கண்டவுடன், ஏனோ தன்னிச்சையாக  மதுவின் கை விரல்கள், வேந்தனது கை விரல்களை கோர்த்துக் கொண்டது. 


  வேந்தனுக்கும் அதே நிலை தான் போல, மதுராவின் கைவிரல்களை கோர்த்துக் கொண்டவன், எப்பிறவியிலும் இவளை பிரியாத வரம் வேண்டுமென்று மனமார வேண்டிக் கொண்டான். அவர்களது வேண்டுதலுக்கு செவி சாய்த்தது போல குருந்த மரத்திலிருந்த மலர்கள், அழகாக அவர்கள் மீது மலர் மழையாக பொழிந்து தங்களது  வாழ்த்துக்களை கூறியது. நாமும் அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.


                           

                             அன்புடன், 


            சரண்யா சதீஷ்குமார்.