Search This Blog

Followers

Powered By Blogger

Friday, November 7, 2025

பூ மழையே 4


 

அத்தியாயம் 4


    அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு ரங்கநாயகியின் பேச்சு அந்த வீட்டில் அதிகமாக எடுபடுவதே இல்லை. எப்போதாவது தாய் பாசத்தைக் காட்டி, கிருஷ்ணமூர்த்தியை அவர் தனது பிடியில் வைத்துக் கொள்ள முயலும் போது கூட, கண்மணி தனது மகளதிகாரத்தை பயன்படுத்தி, தந்தையை தன் பக்கம் வைத்துக் கொள்வாள். 


   அதனால் ரங்கநாயகியால் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி, நடப்பவைகளை வேடிக்கை மட்டுமே  பார்க்க முடிந்தது.


    சுப்பிரமணியம் வாத்தியாரின் அறிவுரைப்படி, கண்மணி அவளுக்கு பிடித்த கலை அறிவியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டாள். 


   இதோ அவள் கல்லூரியில் சேர்ந்து கூட, கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்து விட்டது. போன வாரம் தான் கண்மணிக்கு பதினெட்டு வயதும் ஆரம்பமானது. இம்முறை கல்லூரியில் வட மாநிலத்திற்கு இன்ப சுற்றுலா செல்ல ஏற்பாடாகி இருக்க, அங்கு செல்ல அனுமதி வேண்டி தன் பெற்றோரின் பின்னே ஒரு வாரமாக கெஞ்சியபடியே சுற்றிக் கொண்டிருந்தாள் கண்மணி. 


    பிறந்ததில் இருந்தே ஒரு நாள் கூட தங்களை விட்டு பிரியாது இருக்கும் தங்களது செல்ல மகளை, ஒரு வாரம் சுற்றுலாவிற்கு அதுவும் வெளி மாநிலத்திற்கு அனுப்ப கிருஷ்ணமூர்த்திக்கும், வாசுகிக்கும் ஏனோ மனம் வரவில்லை.


    தனது கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து, முதன் முறையாக வெளியே சென்று வரும் வாய்ப்பை இழக்க விரும்பாமல், இன்பச் சுற்றுலா சென்று வர அனுமதி கேட்டு கிருஷ்ணமூர்த்தியின் பின்னே அவள் தற்போது சுற்றிக் கொண்டிருக்க, 


     “ஏன்டி என் மகனை இம்சை பண்ணிகிட்டு இருக்க, நீ  இவ்வளவு தூரம் தள்ளி இருக்க காலேசுக்கு படிக்கப் போறதே நான் தப்புன்னு சொல்லிகிட்டு இருக்கேன், ஆனா நீ டூருக்கு அதுவும் வேற ஊருப்பக்கம் போக ரெடியாகிட்டு நிக்கிறே?


   அப்பு மூர்த்தி அவ கெஞ்சறான்னு மனசு வுட்டறாதேப்பா,  உனக்கு ஞாபகம் இல்லையா ஜோசியர் சொன்ன கெடு  ஆரம்பிச்சாச்சு, போன இடத்துல இவ எவனயாவது கட்டிக்கிட்டு வந்து நிக்க  போறா, அப்பறம் ஊருக்குள்ள நாம தலை காட்ட முடியாது.”


     ரங்கநாயகியின் வார்த்தையில் கிருஷ்ணமூர்த்தி சற்று தயங்கி நிற்க, உடனே தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து விட்டாள் கண்மணி. 


   “அப்பா நான் உங்க கண்மணி ப்பா, என்னை நீங்க நம்ப மாட்டீங்களா? நான் போய் உங்களுக்கு துரோகம் பண்ணிடுவேனா?”


   அவள் கண்களை கசக்க அதற்கே கிருஷ்ணமூர்த்திக்கு பொறுக்கவில்லை, 

 

   “அச்சோ பாப்பா நீ ஏன்ம்மா அழற, அப்பா உன்ன நம்பாம வேற யாரை நம்புவேன்? என் குலசாமி கண் கலங்கலாமா? பாட்டி ஏதோ தெரியாம சொல்லிட்டாங்க, நீ அதையெல்லாம் மனசுல ஏத்திகிட்டு உன்னை கஷ்டப்படுத்திக்காத தாயி. ”


    “இல்ல இப்படி ஒரு வார்த்தை வந்த பிறகு நான் என்னை நிரூபிக்க எதாவது பண்ணணும் இல்ல. 


   இப்போ எழுதி வச்சுக்கோங்க ப்பா நான் நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அவரோட நல்லபடியா குடும்பமும் நடத்தி உங்க பேரை காப்பாத்துவேன். அதோட இந்த வீட்ல தான் ப்பா என் கல்யாணமும் நடக்கும், இது நீங்க தெய்வமா மதிக்கிற உங்க தெய்வத்தாய் மேல சத்தியம் ப்பா.”


   என்று ரங்கநாயகியின் தலையில் அடித்து சத்தியம் செய்வதற்காக, சிங்கம் சூர்யாவைப் போல கண்மணி கைகளை ஓங்கிக் கொண்டு வர, 


   “அய்யய்யோ இவள தடுக்க நினைச்ச பாவத்துக்கு என் சோலியை முடிச்சு விட்டுடுவா போலயே இந்த கொலகாரி.” 

  

  என்றபடி ரங்கநாயகி திண்ணையில் இருந்து குதித்து தெருவுக்குள் ஓடத் தொடங்கி விட, அவரைத் தொடர்ந்து ஓட முனைந்தவளின் கைகளைப் பற்றியவர், 


   “பாப்பா எனக்கு உன் மேல முழு நம்பிக்கை இருக்கு தாயி. உன்ன விட்டு பிரிஞ்சு இருக்கணுமேன்னு நாங்க யோசிச்சோம். உனக்கு இது தான் சந்தோஷமுன்னா உன் விருப்பப்படியே, நல்லபடியா போயிட்டு வாம்மா.”


   சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தவளோ அன்று இரவு தனது உடமைகளை பேக்கில் எடுத்து வைத்தபடி, இங்கு நடந்தவைகளை, வெளியூரில் தங்கி இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும், தன் உயிர்த் தோழி கவியிடம் கூறிக் கொண்டிருந்தாள். அனைத்தையும் கேட்டுவிட்டு கண்களில் நீர் வரும் அளவிற்கு சிரித்த கவிதா, 


   “உங்க பாட்டி எப்படியாவது உங்க மாமனுக்கு உன்னை கட்டிக் கொடுத்தே ஆகணும்னு ஒத்த கால்ல நிக்கும் போலயே, கிடைக்கிற கேப்ல எல்லாம் இந்த ஒரு வார்த்தையை போட்டே ஃபில்அப் பண்ணிட்டு இருக்காங்க, போற போக்க பார்த்தா உன் மாமன் தான் உனக்கு ஹஸ்பண்டா வருவாரு போலயே.”


  “என் மாமன கட்டிகிட்டா நான் குடும்பம் நடத்த முடியாது, நம்ம பிள்ளையார் கோயில்ல விநாயகருக்கு பக்கத்துல அவரை உட்கார வச்சு, நல்லா வசூல் வேணுமுன்னா பண்ணலாம். எனக்கு அன்பை திகட்ட திகட்ட கொடுக்கறவன் தான் வாழ்க்கைத்துணையா வேணும், இந்த வாழைப்பழ சோம்பேறி இல்ல.


    உனக்கு தெரியுமா கவி நாங்க டூர் போறது பிப்ரவரி பதிமூனாம் தேதி, சோ எங்க செட்ல நிறைய பேர் பிப்ரவரி பதினாலு அன்னைக்கு அவங்க அவங்க லவ்வர்க்காக நிறைய சப்ரைஸ் ரெடி பண்ணி வச்சிருக்காங்க. ஹும் நமக்குன்னு ஒருத்தன் எப்ப வந்து….இந்த மாதிரி எல்லாம் பண்ணி…”


    “ ஆமா ஆமா அப்படியே வந்தா மட்டும் உங்க அப்பத்தா அவனை திருஷ்டி சுத்தி வரவேற்கும் பாரு. ஆமா…என்ன நீ உங்க அப்பாகிட்ட டையலாக்கா அடிச்சு விட்டுட்டு வந்துட்டு, இப்ப லவ்வை பத்தி பேசிட்டு இருக்க? அப்பறம் உன் மாமனோட நிலைமை? முக்கியமான உங்க அப்பத்தா நிலைமை?”


    “ அவன் கிடக்குறான் அரிசி மூட்டை, நான் நிச்சயமா காதல் கல்யாணம் தான் பண்ணிக்க போறேன். அதோட ஒவ்வொரு நாளையும் ரசிச்சு ரசிச்சு அவரோட வாழனும், அவருக்காக என் உயிரையே கொடுக்க நினைக்கனும் அப்படி ஒரு ஆளு எப்ப வருவாரோ…”


   “ஓ…பார்த்த உடனே காதல்ல விழனுமோ?”


    *ச்சே ச்சே பார்த்தவுடனே வர்றதெல்லாம் ஜஸ்ட் சினிமாதனமான ஒரு அட்ரேக்ஷன் தான், அவங்க கூட பழகும் போது அவங்க இல்லாட்டி நான் இல்லை அப்படிங்கிற ஒரு நிலைமை வருமில்ல, அந்த இடத்துல துளிர்க்கிற காதல் தாண்டி உண்மையானது.”


   “பார்றா என்ன காதல் டயலாக் எல்லாம் பலமா இருக்கு, ஆல்ரெடி ஆளைக்கான செலக்ட் பண்ணிட்டயா என்ன?”


   “இதுவரைக்கும் இல்ல பார்ப்போம் போற ஊர்ல எவனாவது தேரறானான்னு?”


   “ஆமா ஆமா உன்ன வச்சு மேய்க்கிற அளவுக்கு அவனுக்கு உடல் வலிமை மட்டும் இல்ல, மன வலிமை அதிகமா இருக்க வேண்டாமா?”


  இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்க, ஜன்னலுக்கு வெளிப்புறம் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ரங்கநாயகி, கேலிப் புன்னகையோடு தனது மனதிற்குள் ஒரு புதிய திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்.


Saturday, November 1, 2025

பூ மழையே 3


 

அத்தியாயம் 3 


  காவல்நிலையத்திற்கு வக்கீலோடு வந்து சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி,  இன்ஸ்பெக்டரோடு கோபமாக சண்டையிடத் தொடங்கினார். 


  “சார் சார் முதல்ல கோபப்படாம நான் சொல்றத கொஞ்சம் நிதானமா கேளுங்க, நான் உங்களை அவமானப் படுத்தறதுக்காகவோ, இல்ல இந்த கல்யாணத்தை நிறுத்தறதுக்காகவோ உங்க அம்மாவை கைது செஞ்சுட்டு வரல. உங்க அம்மா என்ன வேலை பண்ணி இருக்காங்க தெரியுமா? இதோ நீங்களே இந்த வீடியோவை பாருங்க.”


  அந்த வீடியோவில் தனது சகாக்கள் புடை சூழ ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த ரங்கநாயகி, தனக்கு எதிரே நின்று கொண்டிருந்த அவ்வூரைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மனைவிக்கு புத்தி சொல்லிக் கொண்டிருந்தார். 


   “ஏன்டா பெருமாளு, அதுதான் உன் பிள்ளைக்கு பதினாறு வயசாச்சே  இதுக்கு அப்புறம் எதுக்கு அவளை மேல படிக்க வைக்க வெளியூருக்கு அனுப்பறே? ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டிக் கொடுத்து கடமையை முடிக்காம, பொட்ட புள்ளயை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இருக்க,  உனக்கு கூறுவாரு இருக்கா இல்லையா? 


   “இல்ல ஆத்தா எம்புள்ள தான் பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவியா வந்திருக்கா, அதோட எம்புள்ள மேல படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுது அதுதான்…, அது ஆசைப்பட்டபடி படிப்பையாவது கொடுப்போமுன்னு தான்…”


   “ஓஹோ… ஆசைப்பட்டு என்ன கேட்டாலும் செஞ்சு கொடுத்திடுவியோ?  அவள வெளியூருக்கு படிக்க அனுப்பறேல்ல, அங்க வேற எவனோ ஒரு ஜாதிக்கார பையன காதலிச்சிட்டு வந்து நின்னான்னா என்ன பண்ணுவ? அப்பவம் அவ ஆசைபட்டான்னு அவனுக்கே உன் பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பியோ? 


   ஊருக்குள்ள ஒருத்தன் உன்னை சேர்த்துக்க மாட்டான், அதுக்குத் தான் சொல்றேன் இப்பவே உனக்கு பிடிச்ச நல்ல மாப்பிள்ளையா பார்த்து ஏற்பாடு பண்ணு, இல்லாட்டி நானே பக்கத்து ஊர்ல இருக்கிற நம்ம சாதி சனத்துகிட்ட   விசாரிச்சு, ஒரு நல்ல பையனா பார்க்கறேன். உடனே கல்யாணத்தை முடிஞ்சிடு இதெல்லாம் தள்ளி போடக் கூடாது. 


   இப்ப என் பேத்தியையே எடுத்துக்கோ, அவளையும் தான் என் மகன் காலேஜில சேர்க்கறேன்னு சொன்னான், ஆனா நான் அதை இதை சொல்லி அவன் மனசை மாத்தி, இப்ப என் பேரனோட அவளுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கப் போறேன். 


     நம்ம பிள்ளைங்க நம்ம கண்காணிப்பில் இருக்கற வரைக்கும் தான், நம்ம பேச்சைக் கேட்கும். வெளிய மட்டும் போச்சு…அப்பறம்  ஊர்ல இருக்கறவங்க எல்லாம் நம்மள பத்தி பேசற மாதிரி ஆகிடும். புரிஞ்சுதா இல்லையா? “


   ஒருவாராக தலை குனிந்தபடியே அவர்கள் தலையாட்டிவிட்டு  செல்வதோடு வீடியோ முடிந்திருந்தது. 


    “பார்த்தீங்களா சார் இந்த வீடியோ தான் இப்போ ட்ரெண்டிங்ல இருக்கு, உங்க அம்மா பேசுற பேச்சை கேட்டு சோசியல் மீடியால எல்லாரும் கழுவி ஊத்துறாங்க. அதோட சாதி பிரச்சனையை தூண்டி விடற மாதிரியும், குழந்தை திருமணத்தை ஆதரிக்கிற மாதிரியும், உங்க அம்மா பேசியதால உடனே கைது பண்ணனுமுன்னு மேல் இடத்துல இருந்து எனக்கு அவ்வளவு பிரஷர் வந்திருக்கு. 


    அதோட இதுல அந்த பெருமாளோட பொண்ணு சூசைட்டுக்கு அட்டென்ட் பண்ணி இருக்கு. அதுக்கு உங்க அம்மா தான் காரணம்னு சொல்லி அவங்க மேல பொதுமக்கள் கேஸ் போட்டிருக்காங்க, இப்ப சொல்லுங்க நான் உங்க அம்மாவை கைது பண்ணது தப்பா?”


    கிருஷ்ணமூர்த்தி திரும்பி தனது தாயை முறைக்க அவர் மயக்கம் வருவது போன்று பாவனைக் காட்டி, அருகில் நின்றிருந்த தனது பேரனின் தோளில் கண்மூடி சாய்ந்து கொண்டார். 


     “கிருஷ்ண மூர்த்தி சார் இது மட்டும் இல்ல, இப்ப நீங்க உங்க பொண்ணுக்கு பண்ண போறது கூட பெரிய தப்பு தான். அதை உங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கணும்னு நினைச்சு உங்களை பார்க்க வந்தேன், உங்கம்மா என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா?”


    “அய்யய்யோ இருக்கறது பத்தாதுன்னு இந்த வாத்தி வேற எக்ஸ்ட்ரா என் மகன் கிட்ட போட்டுக் கொடுக்கிறானே, இருக்க இருக்க அவன் பார்வை வேற கொலைவெறியா மாறிட்டு வருது, என்ன செய்ய காத்திருக்கானோ? ஒருவேளை என்னை இங்கயே ஸ்டேஷன்ல விட்டு போட்டு போயிடுவானோ?”


   ரங்கநாயகி தனக்குள் புலம்பி கொண்டிருக்க சுப்பிரமணியம் வாத்தியார் மீண்டும் தொடர்ந்தார். 


  “உங்க பொண்ணு கல்யாணத்தை நான் நிறுத்தினா ஊர்ல இருக்குற புள்ளைங்களை பள்ளிக்கூடத்துக்கு வர விட மாட்டேன்னு மிரட்டறாங்க,  உங்களுக்காக தான் நான் அமைதியா திரும்ப வந்துட்டேன்.


   படிப்பு மேல அவ்வளவு மதிப்பு வச்சிருக்க நீங்களா உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்துவீங்க? அந்த பொண்ணுக்கு குடும்பம் நடத்துற  பக்குவம் வர வேண்டாமா சார்? அதுவரைக்கும் இந்த கல்யாணத்தை தள்ளி போடுங்க.”


     ஏற்கனவே இன்ஸ்பெக்டர் காட்டிய வீடியோவினால் வேதனையோடு நின்ற கிருஷ்ணமூர்த்திக்கு, சுப்பிரமணியம் வாத்தியாரின் பேச்சும் மனமாற்றத்தை கொடுத்திருந்தது.


   அதனால் இத்தோடு இந்த திருமண ஏற்பாட்டை நிறுத்தி விடுவதாக அவருக்கு வாக்களித்தவர், ஒரு வழியாக கேஸ் கொடுத்தவர்களையும்  சமாதானப்படுத்தி அதை வாபஸ் வாங்க வைத்திருந்தார்.


    திருமணம் நின்று விட்டதால் உறவுகள் அனைத்தும் அப்போதே இடத்தை காலி செய்திருக்க, வெறிச்சோடி கிடந்த வீட்டிற்குள் கோபத்துடன் நுழைந்த கிருஷ்ணமூர்த்தி, 


   “ஏம்மா வாயை வெச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா? நம்ம வீட்டு பிள்ளைக்கு கல்யாணம் பண்றோம்னா அது அவ ஜாதகத்த பார்த்து ஜோசியர் சொன்னதால செய்ய நினைச்சோம், இதுல எனக்கு விருப்பமே இல்ல தான், படிக்கிற பிள்ளைக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணறோமேன்னு நானே மனவேதனையோட தான் இதுக்கு சம்மதிச்சேன். 


   ஆனா நீங்க, என்னமோ பொண்ணுங்க படிக்கிறதே தப்புங்கற மாதிரி இப்படி பேசி வச்சிருக்கீங்க? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல…”


   என்று ஆரம்பித்து சரமாரியாக தனது கோபத்தை வார்த்தை மழைகளாய் கொட்டித் தீர்த்தவர், அங்கிருந்து வேகமாக தனது அறைக்குச் சென்று விட்டார். 

   

   இவ்வளவு நேரமும் பேரனின் தோளில் சாய்ந்து கொண்டு மயங்கியது போல் நடித்துக் கொண்டிருந்தவர், தன் மகன் உள்ளே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியே அக்கடா என்று சோபாவில் சாய்ந்தார். 


    அப்போது திடீரென கோல்டன் ஸ்பேரோ பாடல் இசைக்க, கூலிங் க்ளாஸை தனது கண்களில் மாட்டியபடி அவர் முன்பு ஆடிக் கொண்டு வந்து நின்றாள் கண்மணி.


Thursday, October 30, 2025

பூ மழையே 2

 


அத்தியாயம் 2


          காவல் நிலையத்தில் தலைக்கு கைக் கொடுத்து அமர்ந்திருந்த ரங்கநாயகி பலமான யோசனையில் இருந்தார். இந்த திருமணத்தை நிறுத்த கண்மணி எடுத்த முயற்சிகள் அத்தனையையும் அவளுக்கே தெரியாமல் தகர்த்தெறிந்து விட்டேனே, பிறகு எப்படி இது நடந்தது என்ற சிந்தனையில் இருந்தார். 


      கடைசி நேரத்தில் கண்மணி தனது ஆசிரியரின் மூலமாக, கல்வி தான் முதன்மை என்று தனது தந்தையிடம் பேச வைத்து, அவரது மனதை மாற்றி திருமணத்தை நிறுத்த எண்ணியிருந்தாள். அதற்காக பல முன் ஏற்பாடுகளையும் அவள் செய்து வைத்திருக்க, ஆசிரியர் இன்று வருவதற்கு முன்பாகவே கண்மணியின் எண்ணத்தை கண்டறிந்த ரங்கநாயகி, அவரை நேரில் சந்தித்து மிரட்டி இருந்தார். 


     “இங்க பாருங்கம்மா நீங்க பண்றது ரொம்ப தப்பு, படிக்கிற பிள்ளைக்கு இப்படி அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கிறது எவ்வளவு பெரிய குற்றம்னு தெரியுமா? பதினெட்டு வயசு ஆனா தான் உங்களால அந்த பொண்ணுக்கு கல்யாணமே பண்ண முடியும், அதுவும் அந்த பொண்ணு சம்மதத்தோட தான் நீங்க பண்ணணும், இல்லாட்டி அது மிகப் பெரிய கிரிமினல் குற்றம்.”


    “என்னய்யா வாத்தி எல்லாம் மறந்து போச்சா என்ன? இந்த ஸ்கூலுக்கு அரசாங்கம் செஞ்சத விட எம்புள்ள தான் நிறைய உதவி பண்ணி இருக்கான்,  அதனால தான் சுத்து வட்டார சனமெல்லாம் படிக்க முடியுது.  பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்னு சொன்னவங்க எல்லாரும், எம்புள்ள ஒரு சொல்லு சொல்லவும்  தான் இங்க அனுப்பி வைச்சாங்க, அதெல்லாம் மறந்து போயிடுச்சோ? நியாபகம் இருக்கட்டும் அடுத்தடுத்து வேற எந்த பிரச்சினையானாலும் நீ எங்க கிட்ட தான் வந்தாகனும், இதுல நீ என்னையவே தப்பு சொல்லறயா?


    எங்க வீட்டு பிள்ளைக்கு எப்ப கல்யாணம் பண்ணனுமுன்னு  எங்களுக்கு தெரியும். நீ அவ கூட சேர்ந்துகிட்டு இதுல மூக்கை நுழைச்சுகிட்டு இருந்த, அப்புறம் நடக்குற விளைவுகளுக்கு நான் பொறுப்பில்ல  பார்த்துக்க.


   ஆமா யார் சொன்னா அவளுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகலைன்னு? நாங்க லேட்டா ஸ்கூல் சேர்த்ததால அவளோட வயசு கம்மியாகிடுமா? அவளுக்கு பதினெட்டு வயசு பிறந்து இரண்டு வாரம் ஆகுது, இதோ இது தான் அவ பிறப்பு சான்றிதழ்.”


   அந்த சான்றிதழை கண்டு அதிர்ந்து நின்றார் சுப்பிரமணியம் வாத்தியார், ஏனென்றால் அவரும் இதே ஊரில் தானே இருபது வருடங்களாக வசித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு நிச்சயமாக தெரிந்தது இது போலி என்று. ஆனால் என்ன சொல்லி நிரூபிப்பது. அவரது தீவிரமான முகபாவனையை கண்டு, கைகளில் இருந்த சான்றிதழை வெடுக்கென்று பிடுங்கியவர், 


    “அவளுக்கு பதினெட்டு வயசாச்சு, இதுக்கு மேல அதை இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்த பார்த்தேன்னு வச்சுக்க, அப்பறம் பள்ளிக் கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு  புரளியை கிளப்பி, ஊருல இருக்க அத்தனை பிள்ளைங்களையும் படிக்க விடாம பண்ணிருவேன்.”


     “என்னம்மா இப்படி எல்லாம் பேசறீங்க?”


     “ஆமா நீ நான் சொல்லறதை  கேட்காட்டி நான் அப்படி தான் பண்ண வேண்டி இருக்கும். உனக்கு என் பேத்தி கல்யாணத்தை நிறுத்தனுமா, இல்ல ஊர்ல இருக்கிற மத்த பிள்ளைங்க படிக்கணுமா? அவ ஒருத்திக்காக மத்த பிள்ளைகளோட படிப்ப விட்டுத் தர போறியா? பள்ளிக்கூடத்துக்குள்ள பேய் இருக்குன்னு ஒரு புரளியை மட்டும் கிளப்பி விட்டா போதும், இந்த ஊருக்குள்ள ஒருத்தனும் தன் பிள்ளைகளை படிக்கறதுக்கு அனுப்ப மாட்டான். அப்புறம் அங்க உனக்கென்ன வேலை? அதனால பெரிய மனுசனா கல்யாணத்துக்கு வந்தமா அட்சதைய  போட்டோமான்னு இருக்கணும், வேற ஏதாவது குட்டையை குழப்பிக்கிட்டு இருந்த அவ்வளவு தான்.”


     அவருக்கு தன் வேலையைப் பற்றி கூட கவலை இல்லை, ஆனால் தற்போது தான் ஊர் பெரியவரான கிருஷ்ணமூர்த்தியின் சொல் கேட்டு, அந்த ஊர் மக்கள் அனைவரும் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவரது தாயே இப்படி ஒரு செயலை செய்தாறென்றால் என்னவென்று சொல்வது? 


   அதோட கிருஷ்ணமூர்த்திக்கு தன் தாய் என்றால் எவ்வளவு இஷ்டம் என்று இந்த ஊருக்கே தெரியுமே, அதனால் தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவரை பார்த்து, ஏளன சிரிப்பை உதிர்த்த ரங்கநாயகி, 


    “ஒழுங்கு மரியாதையா கவர்மெண்ட் கொடுக்கற காசோட நான் கொடுக்கற காசையும் வாங்கி வச்சுகிட்டு வேலையை பார்த்துகிட்டு இரு, அதை விட்டுட்டு எனக்கு எதாவது குடைச்சல் குடுக்க நினைச்சே, அதுக்கப்புறம் இந்த பள்ளிக்கூடமே இருக்காது ஞாபகத்துல வச்சுக்கோ.”


     அப்படி அவரை மிரட்டி தனது காரியத்தை சாதித்தவர், திருமணத்திற்கு முதல் நாள் நடந்த நிச்சயத்தில் சங்கீத் பங்க்ஷனின் போது,  கூலிங் கிளாஸ் சகிதம் தனது கூட்டாளிகளோடு இணைந்து, கோல்டன் ஸ்பேரோ பாட்டுக்கு அட்டகாசமாக ஆடிக் கொண்டிருந்தார். அவரது ஆட்டத்தை பார்த்த கண்மணிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. 


   இந்தக் கிழவி இவ்வளவு கான்ஃபிடன்ட்டா இருக்குதுன்னா ஏதோ ஒரு வேலை பார்த்திருக்குன்னு அர்த்தம் என்று மனதில் எண்ணியவள், உடனே அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவள், பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு அறைக்குச் சென்று, தனது தோழி கவிதாவிற்கு அழைத்திருந்தாள். 


   கவிதா அவளது உயிர் தோழி, சிறுவயதில் இருந்தே அவளுடன் படிப்பவள், கவி என்று அவள் ஆரம்பிப்பதற்கு முன்பே அங்கு கவிதா சுப்பிரமணியம் வாத்தியார் தற்போது தனது வீட்டில் தான் இருப்பதாகவும், தனது தந்தையிடம் ரங்கநாயகி பேசியவற்றை கூறி புலம்பிக் கொண்டிருப்பதாகவும், ஒன்று விடாமல் கூறினாள். 


  “நல்ல வேலை கண்மணி, என் பாட்டி காமாட்சி தன் சிநேகிதியோட ஆட்டம் போட கல்யாண வீட்டுக்கு போயிடுச்சு, இல்லாட்டி இங்க நடக்கறதை எல்லாம் ஒன்னு விடாம உன் பாட்டி ரங்கநாயகி கிட்டப் போட்டு கொடுத்திருக்கும். 


     உன்னோட பாட்டி வாத்தியாரை மிரட்டி இப்படி நம்ம பிளான்ல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுடுச்சே, இனி எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்தறது?”


   “எங்க வீட்டு கிழவியை பத்தி தெரிஞ்ச விஷயம் தானே கவி, அந்த கிழவி இப்படி எல்லாம் பண்ணுமுன்னு நான் முன்னவே எதிர்பார்த்தேன், ஒரு பிளான் போனா என்ன, அது தான் அடுத்து பிளான் பி கையில ரெடியா இருக்கே, நீ இப்ப என்ன பண்ற, நான் இப்போ உனக்கு அனுப்புற வீடியோவை, அப்படியே சாருக்கு காட்டு, அப்புறம் நான் சொல்றபடி செய்யச் சொல்லு, அப்புறம் இந்த கல்யாணம் தன்னால நிக்கும்.”


    பாத்ரூமில் இருந்து வெளியே வந்தவள், தனது பேரனின் கை பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்த ரங்கநாயகியை பார்த்தபடியே  மனையில் சென்று அமர்ந்தாள். 


   அங்கிருந்து குழம்பிய முகத்தோடு சென்றவள்,  திரும்பி வரும்போது தெளிவாக இருப்பதைக் கண்டு ரங்கநாயகியின் மனதிற்குள் ஏனோ பூச்சி பறந்தது. இருந்தும் தன்னை மீறி எதுவும் நடந்து விடாது என்ற எண்ணத்தில், தனது பேரனோடு  கோல்டன் ஸ்பேரோவிற்கு ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தவரின் கைகளில், இரும்புச் சங்கிலியை மாட்ட சிறிது நேரத்திலேயே அந்த ஊரின் காவல் துறையினர் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தனர். 


    அங்கிருந்த அனைவரும் திருமணத்தை நிறுத்துவதற்காக தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைக்க, ஆனால் அவர்களோ ரங்கநாயகியை கைது செய்ய பிடிவாரண்ட்டோடு வந்திருந்தவர்கள், அங்கிருப்போரின் எதிர்ப்பையும் மீறி கையோடு அவரை அழைத்துச் சென்று விட்டனர்.


Tuesday, October 28, 2025

காதல் பூ மழையே! 1

 

அத்தியாயம் 1

   கண்களுக்கு எட்டும் தூரம் வரை மனித பிணங்களின் குவியல்கள் மட்டுமே தெரிய, அங்கங்கு துப்பாக்கி ஏந்தியபடி சுற்றிக் கொண்டிருக்கும் முகமூடி ஆட்களின் கண்களில் சிக்காமல் இருக்க, பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தாள் கண்மணி. 

   தற்போது தான் முதல் வருட கல்லூரிப் படிப்பில் இருப்பவள், வட மாநிலத்திற்கு முதல் முறையாக கல்லூரி சுற்றுலா வந்திருக்க, எதிர்பாராத விதமாக அவர்கள் இருந்த இடத்திற்கு சற்று தள்ளி, திடீரென குண்டு வெடிப்பு நடந்தது. 

    அதில் மாணவர்கள் அனைவரும் திசைக்கொருவராக சிதறி போயிருந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி அவள் சம்பவ இடத்திற்கே வந்திருந்தாள். அங்கு தான் முகமூடி அணிந்த சிலர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி, அங்கு இறந்து கிடந்தவர்களின் முகத்தை திருப்பிப் பார்த்தபடி யாரையோ தேடிக் கொண்டிருந்தனர். 

     தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் சோலையூரில், செல்வந்தரான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாசுகிக்கு மகளாக பிறந்த, அந்த வீட்டின் இளவரசியான இவள், அவர்களின் உயிர் மூச்சாவாள். ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தாய் ரங்கநாயகி மட்டும், அவளை அவரது உயிரை வாங்குவதற்காகவே பிறந்தவள் என்பார்.

   கிருஷ்ணமூர்த்திக்கோ தனது மகளை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அவளுக்கு அது வந்தாள் தானே! எந்நேரமும் விளையாட்டுதனமாக இருக்கும் கண்மணி, தேர்வு நேரத்தில் கூட படிப்பது அரிது. 

   ஆனால் எப்படியும் ஓரளவுக்கு மதிப்பெண் பெற்று விடுவாள். ப்ளஸ் டூ முடித்து கலை அறிவியல் கல்லூரியில் அவள் சேர்வதாகக் கூற, அதற்கு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கினார் ரங்கநாயகி. 

   "என்னப்பா மூர்த்தி நீ மறந்துட்டயா என்ன? நம்ம ஜோசியர் இவளுக்கு இந்த வருஷம் கல்யாணம் பண்ணியே ஆகனும்னு சொல்லல, நீங்களா பண்ணாட்டியும் அதுவா நிச்சயம் நடக்கும்னு சொன்னாரே, இப்ப எதுக்கு அவளுக்கு காலேசு படிப்பு? அவ வயசுல இருக்கும் போது, எனக்கு நீ பொறந்து நாலு வருஷம் முடிஞ்சு இருந்தது தெரியுமா?"

   அவருக்கும் அது ஒன்று தான் யோசனையாக இருந்தது, தனது மகளை நன்கு படிக்க வைத்து ஊரார் வியக்கும் படி அவளை நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் என்று அவருக்கு ஆசை. 

    என்ன தான் சொத்து இருந்த போதும்,  சிறுவயதிலேயே அவரது தந்தை இறந்து விட, ஒட்டுமொத்த குடும்ப பொறுப்பும் அவர் தலையில் தான். தொழிலை நடத்திய படியே தந்தை ஸ்தானத்தில் இருந்து தனது தங்கைக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார்.  அடுத்தடுத்து அவருக்கு இருந்த குடும்பத் பொறுப்புக்களால் தனது படிப்பை அவரால் தொடர முடியவில்லை. 

   ஊரார் என்னதான் பணத்திற்கும் அவரது குணத்திற்கும் மதிப்பு கொடுத்து மரியாதையாக நடந்து கொண்ட போதும், அவரது வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட உறவுகள் சிலர், அவரை படிக்காத தற்குறி என்றே குத்தலாக பேசுவர். அதனால் தனது பெண்ணை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஜோசியர் சொன்ன விஷயத்தால் கொஞ்சம் குழப்பமுற்றார். 

  ஏனெனில் அவரது தங்கைக்கு அற்ப ஆயுசு  என்று முன்பே ஜோசியர் கூறியிருக்க, அதை நம்ப மறுத்தார் கிருஷ்ணமூர்த்தி. ஆனால் ஜோசியரின் கூற்றுப்படியே பிரசவத்தின் போது அவரது தங்கை இறந்து விட, அதன் பிறகு அவரால் ஜோசியத்தை நம்பாமல் இருக்க முடியவில்லை. கண்மணியின் பூப்புனீராட்டு விழாவிற்காக தேதி குறிக்க சென்ற போது அவளது ஜாதகத்தை ரங்கநாயகி எடுத்து நீட்ட,

   "பிள்ளைக்கு 18 வயசு முழுமையா பூர்த்தியாகும் முன்னயே மாங்கல்யம் கழுத்துல ஏறிடும் ப்பா."

   "என்னய்யா சொல்லறீங்க சின்ன பிள்ளை அது, எப்படி இந்த வயசுல கல்யாணம் பண்ணி வைக்கிறது?"

   "தம்பி நீங்களா பண்ணாட்டியும் நடக்கப் போற விதியை மாத்த முடியாது இல்லையா?"

   என்றபடி அவர் விழாவிற்கு நல்ல நாள் குறித்துக் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு வெளியே வந்த கிருஷ்ணமூர்த்திக்கு முகம் வாடி விட்டது. 

   " என்னப்பா மூர்த்தி ஜோசியர் இப்படி சொல்லிட்டாரு? அவரு சொல்லறதெல்லாம் வேற கண்டிப்பா நடக்குமே? சரி என் மக பையன் தான் எம்பேத்தியை கட்டிக்க போறான்னு ஊர் அறிஞ்ச விஷயமாச்சே, கொஞ்ச நாள் கழிச்சு நடக்கப் போற கல்யாணம் அவ பள்ளிக்கூடம் முடிச்சதும் நடக்கட்டும் சரியா? "

   மூர்த்தி அப்போது எதுவுமே பேசவில்லை, கடவுள் விட்ட வழியென்று அவர் மீது பாரத்தை போட்டு விட்டார். அதன் பிறகு ஜோசியர் சொன்னதையே மறந்து கூட போனார். 

    தற்போது தனது தாய் இதை ஞாபகப்படுத்தவும் தான், மனக் குழப்பத்தில் சுற்றிக் கொண்டு இருந்தார். ஆனால் ரங்கநாயகி தனது பேரன் சேகருக்கு அழைப்பு விடுத்து கல்யாணத்துக்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.

   சேகரோ ஒழுங்காக பள்ளி செல்லாமல்  ஊரைச் சுற்றிக் கொண்டு ஊதாரியாகத் திரிபவன். தந்தை சொத்தில் உடல் வளர்த்து வந்தவனோ, சோம்பேறி தனத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்தான். அதோடு கண்மணியை விட பதிமூன்று வயது மூத்தவன், இவனது இந்த குணத்திற்க்காகவே இவனுக்கு பெண் தர யாரும் முன்வரவில்லை. 

    வாசுகிக்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லை என்றாலும், தனது மாமியாரை எதிர்த்து பேச முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்மணிக்கு அதெல்லாம் இல்லையே சும்மாவே தனது பாட்டிக்கு தொல்லைகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பவளுக்கு, இப்போது தானாக வந்து ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜீம் கிடைத்தால்…அவனது இரட்டை நாடி இளைக்கும் அளவுக்கு சேகரை நன்றாக, வேலை வாங்கத் தொடங்கினாள் கண்மணி. 

   வாழைப்பழத்தை உரிப்பதற்கு கூட கூடவே சில அல்லக்கைகளை வைத்துக் கொண்டு சுற்றும் சேகரிடம் சென்று, மாங்காய் பறித்து கொடு மாமா, அந்த பொருளை எடுத்துக் கொடு மாமா, நீர் இறைத்துக் கொடு மாமா என்று அவனை விரட்டிக் கொண்டே இருந்தாள். 

    முதலில் அவளை கண்டாளே ஆசையாக ஓடி வருபவன், தற்போதெல்லாம் அவளது மாமா என்ற குரலை கேட்டாளே, பதறிக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறான். அதோடு தனது பாட்டியிடம், 

   "ஐயோ அம்மாச்சி இப்பவே இவளால நான் பாதியா இளைச்சுட்டேன், நிம்மதியா சாப்பிடக் கூட விடாம மாமா மாமான்னு ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கா, இப்பவே இப்படின்னா கல்யாணத்துக்கு அப்பறம்  ஐய்யய்யோ என்னால இவளை கட்டிக்க முடியாது ப்பா."

   அவனது தலையில் தட்டி சுற்றும் முற்றும் பார்த்தவர் சற்று தணிந்த குரலில், 

    "அடேய் இம்புட்டு வயசுக்கு மேல உனக்கு பொண்ணு தர யாருடா வரிசையில நிக்கிறா? கல்யாணம் முடியிறவரைக்கும் அவ பேச்ச கேட்டு நடக்கறது போல சும்மா நடி, கல்யாணம் மட்டும் முடியட்டும், அவ ஆட்டத்தை எல்லாம் அடக்கி மூலையில உட்கார வைக்கல, நான் ரங்கநாயகி இல்லடா."

  ரங்கநாயகி தனது மகனிடம் நைச்சியமாக பேசி, அவசர அவசரமாக நிச்சயத்தை வீட்டளவில் ஏற்பாடு செய்து விட்டார். 

    ஆனால் நிச்சியத்தன்று யாரும் எதிர்பார்க்காதபடி ரங்கநாயகியை போலீசார் கைது செய்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று விட்டனர்.