அத்தியாயம் 11
இன்று
"பாஸ் நான் சொல்றது உண்மைதான் நேத்து டாக்டர் தாமோதரனை வந்து பார்த்தது நாகலிங்கம் தான். நீங்களே இந்த வீடியோவை பாருங்க."
அங்கிருந்தவர்கள் அனைவரும் ஜனாவின் செல்போனில், டாக்டரின் அறையில் நேற்று நடந்த நிகழ்வுகளை காண தொடங்கினர். ஜனா காட்டிய வீடியோவானது டாக்டர் தாமோதரனின் அறையில் உள்ள சிசிடிவி கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட பதிவு. அதில் நாகலிங்கம் தாமோதரனை வந்து பார்ப்பதும், கையில் ஏதோ பேப்பரை வைத்துக் கொண்டு அவரிடம் சீரியஸாக வாதாடி கொண்டிருப்பதும் தெரிந்தது. அப்போது திடீரென்று ஒரு வெளிச்ச புள்ளி பரவ, அவர்கள் இருவரின் பார்வையும் ஒரு இடத்தில் பயத்தோடு நிலைகுத்தி நின்றது. வீடியோ இரண்டு நிமிடங்கள் அப்படியே நின்று விட்டது.
டாக்டர் தாமோதரன் தனது கபோர்டிலிருந்து ஒரு மருந்து பாட்டில் மற்றும் இன்ஜெக்ஷனை எடுத்து, நாகலிங்கத்தின் வலது கையில் செலுத்தினான். அதற்கு நாகலிங்கம் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் உள்வாங்கிக் கொண்டான். பிறகு நாகலிங்கம் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ கத்தியை எடுத்து தாமோதரனிடம் கொடுக்க, நாகலிங்கத்தின் கண் முன்னே டாக்டர் தாமோதரன் தன் கை நரம்புகளை, முகத்தில் எந்தவித மாறுதலையும் காட்டாமலேயே, திரும்பத் திரும்ப அறுத்துக் கொண்டிருந்தான்.
விக்ரம் அவர்கள் இருவரது முகத்தையும் கூர்ந்து கவனித்தான், அவர்கள் சுயநினைவின்றி பிறர் ஆட்டி வைக்கும் பொம்மை போன்று, சொல்வதை செய்து கொண்டு இருப்பவர்கள் போல தெரிந்தது.
நாகலிங்கம் அங்கிருந்து வெளியேறியதும் டாக்டர் தாமோதரனின் முகத்தில் சிறிது சிறிதாக வலியின் சாயல் தெரிய தொடங்கியது. பிறகு கண்கள் இருட்டிக் கொண்டு வர அப்படியே தலை குப்புற கீழே விழுந்தார். அடுத்து பகல் நேர செக்யூரிட்டி அந்த ரூமில் நுழையும் வரை எந்தவித மாறுபாடும் அந்த அறையில் ஏற்படவில்லை.
விக்ரம் மறுபடியும் அவசரமாக டாக்டர் தாமோதரனின் அறைக்குச் சென்றவன், அவரது நாற்காலிக்கு கீழே இருந்து, நாகலிங்கத்துக்கு அவர் செலுத்திய மருந்து பாட்டிலையும் இன்ஜெக்ஷனையும் தனது கிளவுஸ் கைகளால் கைப்பற்றி, தனது மொபைலில் அதை போட்டோ எடுத்துக் கொண்டான்.
அங்கு டேபிளின் அடியில் இருந்த பேப்பரை எடுத்து, யாரும் அறியாமல் தனது பாக்கெட்டினுள், பத்திரமாக பதுக்கி வைத்து கொண்டான். பிறகு அந்த பாட்டிலையும் இன்ஜெக்ஷனையும் போலீசாரிடம் ஒப்படைத்தான்.
அன்று
சித்ரா அறையினில் இருந்து வெளிவந்ததிலிருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி, அவள் துணிகளில் சீமெண்னையை ஊற்றுவதை பார்த்து, அவளை தடுக்க வந்தார்.
ஆனால் சித்ரா அவரின் மீதும் சீமெண்னையை ஊற்றினால். தன் கையில் இருந்த தீப்பெட்டியை உரைத்து தீக்குச்சியை நெருப்போடு அந்த துணிகளின் மீது போட்டாள். அதிர்ந்து போய் நின்ற சாந்தி, அலற தொடங்கினார். சுற்றி இருக்கும் ஆட்களை உதவிக்கு அழைத்தார்.
அதற்குள் சித்ரா தனது சேலையின் முந்தானையை அந்த நெருப்பை நோக்கி கொண்டு செல்ல, அதற்குள் அருகில் இருந்த ஆட்கள் சாந்தியின் குரல் கேட்டு ஓடி வந்தனர். அவள் செய்யப் போகும் காரியத்தை கண்டு ஆளுக்கு ஒருவராக, அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டனர். எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பொம்மை போல நேர் குத்திய பார்வையோடு நின்றவர்வளை கண்டு சாந்திக்கு பயமாக இருந்தது. அவளின் கைகளை கட்டி அறையின் உள்ளே தள்ளி, கதவை சாத்தினார். உடனடியாக தனது மகனுக்கு போனில் அழைத்து நடந்ததை கூறினார்.
சித்ரா துணிகளின் மீது சீமண்ணையை ஊற்றுவதை உறுதிப்படுத்திக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்ததாக எண்ணி, நாகலிங்கம் சத்தம் இல்லாமல், வந்தது போலவே பின்பக்க வழியாக வெளியே சென்று விட்டான். பிறகு சிறிது நேரம் கழித்து முன்பக்கம் வழியாக வந்தவன், தனது அத்தையிடம் விவரம் கேட்க,
"ஐயோ அத்தை என்ன இது நெருப்பு பத்திகிட்டு எரியுது? யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க முதல்ல, வீட்டுக்குள்ள எப்படி நெருப்பு புடிச்சுச்சு?"
"அதை ஏன்டா கேக்குற? நான் வராண்டால இருந்தேன், இவ திடீர்னு துணிமணிகளை கொண்டு வந்து நடு வராண்டால போட்டா, அப்புறம் நேரா சமையல் அறைக்கு போனவ, சீமண்ணையையும் தீப்பெட்டியையும் எடுத்துட்டு வந்தா, நான் பார்க்க பார்க்கவே சீமண்ணையை துணி மேல ஊத்துனா, தடுக்க போன என் மேலயும் அதை ஊத்தினாடா நாகு, அப்புறம் தான் நான் கத்தி அக்கம்பக்கத்துல இருக்கவங்களை கூப்பிட்டேன். அதுக்குள்ள தீக்குச்சியைபத்தி துணி மேல போட்டு விட்டுட்டா!.. அதுமட்டுமா அவளோட முந்தானையை எடுத்து தீயில காட்ட போறாடா! எனக்கு ரொம்ப பயமா இருக்கு, அவளுக்கு ஏதோ காத்து கருப்புதான் புடிச்சி இருக்கும் போல இருக்கு."
" நீ வேற ஏன்த்தே இந்த காலத்துல போய் காத்து கருப்புன்னுட்டு, மொதல்ல நல்ல டாக்டரா பார்த்து காட்டினா சரியா போய்டும்."
" என் புள்ள போயும் போயும் இப்படி ஒரு பைத்தியக்காரியை கட்டிட்டு வந்திருக்கானே, வயித்துல புள்ளை இருக்கு, ஆனா அதைய பத்தி நெனப்பே இல்லாம, முந்தானையை தீயில காட்டுறாடா, எனக்கு அப்படியே பதறிபோயிடுச்சு தெரியுமா."
சரியாக அந்த நேரத்தில் உள்ளே வந்த சிவா விவரத்தை கேட்ட பின்பு, அறையினை திறந்து கொண்டு உள்ளே போக, சோர்வாக கை கட்டப்பட்ட நிலையில் படுத்து இருந்தால் சித்ரா. துடித்து போய் அவள் அருகில் சென்று அவளை தன் மடியில் தாங்கிக் கொண்டான் சிவா.
மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் இது பற்றி கூறிய போது, அவளுக்கு ஒன்றுமே நினைவில் இல்லை. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்று அரற்றினாள், ஆனால் சாந்தி அவளை திட்டி தீர்த்து விட்டார்.
"அறிவு கெட்டவளே சாகறதுன்னு முடிவெடுத்தா, நீ தனியா இருக்கும்போதே, சாக வேண்டியது தானேடி? வயித்துல எங்க குடும்ப வாரிசை வச்சிட்டு, அதோடவே சேர்ந்து எரிஞ்சு போகணும்னு நினைக்கிறே? உனக்கு அப்படி எரிஞ்சே சாகணும்னா, குழந்தையை பெத்து கொடுத்துட்டு நீ என்னமோ பண்ணி தொலை. இருந்து இருந்து இப்படி ஒரு பைத்தியக்காரியை போய் கட்டிட்டு வந்த பாருடா, உன்ன சொல்லணும்."
"அம்மா சும்மா உளறிட்டு இருக்காதே, நீ ஏன் அவளை பைத்தியம் பைத்தியமுன்னு இப்படி பேசிகிட்டு இருக்க, ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி பண்ணி இருப்பா. இதை நீ பேசி பேசியே பெரிய விஷயம் ஆக்காதே, அப்புறம் நடந்ததை ஊர் முழுக்க சொல்லிட்டு திரியாதே, சரியா?"
"நான் ஏண்டா சொல்லப் போறேன்? இவ ஆடுன ஆட்டத்தை தான் அக்கம் பக்கத்துல இருக்கவங்க அத்தனை பேரும் பார்த்தாங்களே, அது போதாது? சரி சரி முறைக்காத உன் பொண்டாட்டிய நான் எதுவும் பேசலப்பா."
சித்ரா எவ்வளவு யோசித்தும் என்ன நடந்தது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்து படுத்தது மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றது. அதற்குப் பிறகு நடந்தவைகள் எதுவுமே அவள் மனதிலும் சரி, மூளையிலும் சரி பதியவே இல்லை.
அவள் அழுவதை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத சிவா, அந்த நேரத்தில் வேறு எந்த மருத்துவமனையும் திறந்திருக்காத காரணத்தால், அவளை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு டாக்டர் தாமோதரனை சந்திக்கச் சென்றான்.
"மிஸ்டர். சிவா அவங்களுக்கு ஒன்னுமே இல்ல, இது பொதுவா கர்ப்பமான பெண்களுக்கு வர ஹார்மோன் சேஞ்சா இருக்கலாம். அதனால ஏற்படுற மன அழுத்தத்தால் ஒரு வேளை அவங்க இப்படி நடந்துகிட்டு இருக்கலாம். கொஞ்ச நாள் வேற ஏதாவது இடத்துல இருந்தா அவங்க மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். வேற ஊருக்கு அவங்களை கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் இருந்து பாருங்களேன்."
சிவாவுக்கும் அதுவே சரி என்று பட்டது, ஒருவேளை அவள் இங்கு இருந்தால் தனது தாய் இன்று நடந்த நிகழ்வை பற்றி கூறிக் கூறியே, அவளின் மனதை புண்படுத்தி விடுவார் என்று நினைத்த சிவா, சித்ராவை சிறிது காலம் அவளது அன்னையின் வீட்டில் விட்டு வரலாம் என்று முடிவு செய்தான்.