Search This Blog

Followers

Powered By Blogger

Monday, June 30, 2025

மன்னவரே 48


 

            அத்தியாயம் 48


    "ராஜகுரு விஷயம் கேள்விப்பட்டீர்களா, என்ன தைரியம் இருந்தால் அந்த பார்த்திபன், நமது நாட்டை சிறை பிடிக்கப் போவதாக மடல் அனுப்பி இருப்பான். என் தந்தையும் வெட்கமின்றி அவன் கால்களில் போய் விழுந்து கிடக்கிறார்."


    "நானும் கேள்விப்பட்டேன் ரங்கா, அவனுக்கு தலைக்கனம் கூடிவிட்டது. ஒரே அடியாக அவன் தலையை கொய்து, நமது தெய்வம் காலக்கோடனுக்கு காணிக்கையாக்கி விடுவோம்."


    "விஜயன் சற்று பொறுமை காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ரங்கா. அந்த இரண்டு  காட்டுவாசிகளையும் துன்புறுத்தி, கொற்றவையின் இருப்பிடத்தை அறிந்திருந்தால், அவளது சிலைக்கு கீழ் உள்ள மந்திர தகடுகளை எடுத்து, நம் தெய்வத்திற்கு காணிக்கையாக்கி இருக்கலாம். அத்தோடு அந்த மகிழபுரி சாம்ராஜ்யமும் நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். நிலைமை கைமீறி போய்விட்டது. இனி அந்த காட்டினுள் நுழைவது முடியாத காரியம். நாம் சற்று காலம் பொறுத்து தான் போக வேண்டும்."


    "விஜயனுக்கு தற்போது எப்படி உள்ளது ராஜகுரு? தன் தங்கையின் கணவன் என்று கூட பாராமல், நடுவீதியில் நிறுத்தி, இப்படி உயிர் போகும் அளவுக்கு சித்திரவதை செய்ய சொன்ன, அந்த பார்த்திபனை பற்றி நினைக்கும் போது என் உள்ளம் கொதிக்கின்றது."


    "எப்படியும் விஜயனின் உடல் தேறுவதற்கு சில மாதங்களாவது ஆகும். நீ உன் தந்தையிடம் இது பற்றி எதுவும் கூறி விடாதே, அந்த பார்த்திபனுக்கு பயந்து விஜயனை காட்டிக் கொடுக்கவும் அவர் தயங்க மாட்டார்."


  மேனகா தேவி தன் குழந்தைகளுடன் புகுந்த வீடு போகாமல் பிறந்தகத்திலேயே தங்கி விட்டார்.


  பிரதீபன் தன் தாயினைப் போன்று அமைதியான குணம் படைத்தவன். ஆனால் மோகனாவோ தன் தந்தையை ஒத்து வளர்ந்து வந்தாள்.


    தனது கீழ் வேலை செய்யும் வேலைக்காரர்களை, அவள் ஒருபோதும் மதித்ததே இல்லை. ரஞ்சனியே அவளின் உற்ற தோழியானாள்.


  அவளுக்கு பிடித்தது இரண்டு விஷயங்கள் தான், ஒன்று புத்தாடைகளும் ஆபரணங்களும் அணிந்து கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்வது. இன்னொன்று மித்ர தேவேந்திரன்.


  மித்ரன் அரண்மனையில் எங்கிருக்கிறான் என்று தெரிய வேண்டும் என்றால் மோகனாவை கேட்டால் போதும், ஏனெனில் அவனின் பின்னே அவள் தான் வால் போன்று, எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பவள்.


    மித்ரன் தனது நண்பர்கள் பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன், கொற்றவை தேவி திருவிழாவை காண சென்று கொண்டிருந்தான். ரகுநந்தன் ரஞ்சனியின் அத்தை மகன்.


    மித்ரன் கொற்றவை தேவி திருவிழாவிற்கு செல்வது, அந்த நீலவிழிப் பெண் குழந்தையை காண்பதற்காக தான். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக சென்று தேடியும் கூட, அவளை காண முடியவில்லை.


  ஏந்திழை அம்மையார் தாய் தந்தை இல்லாத அந்த பிஞ்சு குழந்தைக்கு தானே கன்னி தாயாக மாறினார். அவளுக்கு மதுரவாணி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தார்.


  அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களின் கண்கள் அவள் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விழா நடைபெறும் போது எல்லாம் அவளை குகை கோயிலில் சென்று விட்டு விடுவார்.


    நண்பர்கள் மூவரும் தமது குதிரைகளில் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு பின்னால் பல்லுக்கு வரும் சத்தம் கேட்டது.


    நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மித்ரன் வெளிப்படையாகவே தலையினில் அடித்துக் கொண்டான்.


    "அடே பிரதீபா, உன் தங்கைக்கு மித்ரனை பின் தொடர்வதை தவிர, வேறு வேலையே இல்லையா என்ன? அவன் எங்கு சென்றாலும் எப்படி தான் கண்டுபிடிக்கின்றாளோ தெரியவில்லை. இவளுக்குத் தெரிய கூடாது என்று தான், அரண்மனையை சுற்றிக்கொண்டு பின் வாசல் வழியே திருவிழாவுக்கு புறப்பட்டோம், அப்படியும் கண்டுபிடித்து துரத்தி வந்து விட்டாளே."


    "என் தங்கை மித்ரனை எந்நேரமும் பின்தொடர்கிறாள் என்று உனக்கு எப்படி தெரியும்?"


    "அதுதானே, நந்தா அவள் என்னை பின்தொடர்வது அரண்மனைக்குள் இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். வெளியிடங்களில் அவ்வளவாக என்னை பின்தொடர மாட்டாளே? நீயோ ஓரிரு முறை தான் அரண்மனைக்குள் வந்து சென்றுள்ளாய், அது உனக்கு எப்படி தெரியும்?"


    "அதை நான் கூறுகிறேன் மித்ரா, என் தங்கையின் தோழியை எந்நேரமும் ரகுநந்தர் பின் தொடர்வதால், அவருக்கு இந்த விஷயம் தெரிந்துள்ளது என்று நினைக்கிறேன்."


"என்ன? அப்படியா நந்தா?"


    "அட நீங்கள் வேறு ஏனடா? கேலி செய்து கொண்டிருக்கிறீர்கள். என் மாமன் மகள் ஆறு வயது வரை, அத்தான் அத்தான் என்று என் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள். என்று உன் தங்கை அவளின் தோழியானாளோ, அன்றிலிருந்து என்னை பார்த்தால்,  முகத்தை திருப்பிக் கொண்டு செல்கின்றாள். அழகிய ஆடைகள் ஆபரணங்கள் கூட வாங்கி, என் அத்தையின் மூலம் அவளுக்கு கொடுத்து பார்த்தேன் பிரயோஜனமே இல்லை."


  "மானங்கெட்டவன், மாமன் பெண்ணை வசீகரிக்க, ஆடை ஆபரணங்களை லஞ்சமாகக்  கொடுக்கின்றான் பார்."


    "உனக்கு என்னடா பிரதீபா? உன் மாமன் மகளை வசீகரிக்க, சங்கினில் சிறிது பாலை ஊற்றி புகட்டினால் போதும். எனக்கு அப்படியா?"


  "எது? அடேய், கவிதாயினி இரண்டரை வயது குழந்தையடா. அவளைப் போய் என்னுடன் சேர்த்து வைத்து பேசுகிறாயே மடையா."


    "முதலில் இருவரும் உங்களது சண்டையை நிறுத்துகிறீர்களா? பிரதீபா உன் தங்கை இன்று என்னை பின்தொடரக்கூடாது அது உன் பொறுப்பு. நந்தா, நான் இப்படியே குறுக்கு பாதை வழியாக கொற்றவை தேவி கோயிலை நோக்கி செல்கிறேன். அவர்களை எப்படியாவது திசைத்திருப்பு."


  மித்ரன் குதிரையை தட்டி பாதையில் இருந்து விலகி காட்டினுள் நுழைந்தான்.


  பாதையை விட்டு விலகி வந்ததால் கரடு முரடான மேடு பள்ளங்களில் புகுந்து தான், செல்ல வேண்டி இருந்தது.


  அவன் சென்ற பாதை, கொற்றவை தேவி கோயிலின் பின்புறத்தை சென்று அடைந்தது. அங்கு கோயிலின் குளம் இருந்ததால், அதற்கு சற்று தள்ளியே குதிரையை கட்டிவிட்டு மித்ரன் இறங்கி நடக்கத் தொடங்கினான்.


  தீர்த்த குளம் முழுவதும் அல்லி மலர்களால் சூழ்ந்திருந்தது. அழகாக பூத்திருந்த பூக்களை கண்டதும் அதை பறிக்க அருகில் சென்ற மித்ரன், குளத்தின் கரையினில் செல்லும்போது கால் வழுக்கி அதன் உள்ளே விழுந்தான்.


      குளத்தில் உள்ளிருந்து எழ நினைத்த மித்ரனால், எழ முடியவில்லை. அவன் கால்களை அல்லி மலர் கொடிகள் நன்றாக சுற்றிக் கொண்டிருந்தது.


  குளத்தினில் நன்றாக மூழ்கி அதை அகற்றிட நினைக்கும்போது, நீல விழிகள் கொண்ட குட்டிப் பெண் பூ ஒன்று, அவனை நோக்கி வந்தது. தன் பிஞ்சு கரங்களில் இருந்த கூர்மையான கல்லை கொண்டு, அவன் கால்களை சுற்றியுள்ள கொடிகளை அறுத்தெறிந்தது.

Saturday, June 28, 2025

மன்னவரே 47


 

             அத்தியாயம் 47


  கொற்றவை தேவியின் சிலை செம்பளுப்பு நிறத்தால் ஆன செம்பவள கற்களால், ஆதிகால மனிதர்களால் உருவாக்கப்பட்டது. தேவியின் கண்களில் உள்ள நீல மணிக்கற்கள், எப்போதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும்.


  இயற்கை அன்னையாக மலைவாழ் மக்களால் போற்றப்பட்டவள். அவர்களின் குலதெய்வமான இந்த தாயை, சுற்றியிருந்த பல ராஜ்யங்களில் உள்ள அரசர்களும் வழிபட்டு வந்தனர். அந்த அளவுக்கு மகிமை பொருந்தியவள். 


  போருக்கு செல்லும் முன் இந்த தாயை வழிபட்டால் வெற்றி நிச்சயம் என்பது அப்போது பரவலான கருத்தாக இருந்தது. அதனால் இந்த கொற்றவை தேவியின் சிலையை கடத்திச் செல்லவும், தமது நாடுகளுக்கு தூக்கிச் செல்லவும் பலர் முனைந்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் மாண்டுதான் போயினர்.


  ஒரு கட்டத்தில் அரச குடும்பங்களின் தொல்லைகள் பொறுக்க முடியாமல், மலைவாழ் மக்கள், தமது தேவியை பத்திரமாக ஒரு குகையில் வைத்து வழிபட தொடங்கினர்.


     அதோடு பொதுவெளியில் கற்களால் ஆன கொற்றவை தேவியின் சிலையை எழுப்பி, அதற்கு விழா எடுத்து வருகின்றனர்.


    இவர்கள் குலத்தில் நீல கண்களுடன் பிறக்கும் பெண் குழந்தை, கொற்றவை தேவியின் அருளுக்கு பாத்தியமானவராக கருதுகின்றனர். அவரே தேவியின் உண்மையான செண்பவள சிலைக்கு பூஜை புனஸ்காரங்கள் செய்பவர் ஆவார். அவரைத் தவிர வேறு யாருக்கும் தேவியின் சிலை உள்ள இடம் தெரியாது.


    இருபத்து எட்டு வருடங்களுக்குப் பிறகு, இப்போது தான் அந்த மலைவாழ் மக்களின் குலத்தில் ஒரு பெண் குழந்தை நீலக் கண்களுடன் அவதரித்திருக்கின்றது. 


    இக்குழந்தையை பெற்றவர்கள் மிகவும் பாக்கியசாலிகளாக கருதப்படுகின்றனர். அவர்களும் அக்குழந்தையோடு சேர்த்து தேவியின் உண்மையான சிலையை தரிசிக்க முடியும்.


    அவ்வாறு தேவியின் சிலையை தரிசித்து வந்த இருவர் தான், விஜய பூபதியின் கைகளால் உயர்த் துறந்தவர்கள்.


  ஏந்திழை அம்மையாரும் இதேபோன்று இருபத்து எட்டு வருடங்களுக்கு முன், அரச குடும்பத்தினரால் தம் தாய் தந்தையரை இழந்தவர் தான்.


  "அரக்கனே இரண்டு உயிர்களை அநியாயமாக அழித்துவிட்டு சிறு குற்ற உணர்வு கூட இல்லாமல் பேசுகிறாயே, நீயும் ஒரு மனிதனா? நீ அதை மட்டுமா செய்தாய்? ஒன்றும் அறியா இந்த பிஞ்சுக் குழந்தையையும் கொல்லத் துணிந்தாயே? சரியாக அந்த நேரத்தில் நான் வில் தொடுத்து விட்ட அம்பு,  உன் உள்ளங்கையை பதம் பார்க்காமல் இருந்திருந்தால், பால்மணம் மறவா இந்த பிஞ்சுக் குழந்தையும், இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றிருக்கும்


  வேந்தே நாங்கள்தான் அரச சங்கார்த்தமே வேண்டாம் என்று தானே, நாங்கள் உண்டு காடு உண்டு என்று இருந்தோம்.உங்கள் முன்னோர்கள் தான் எமது அரச பரம்பரையால் தங்களுக்கு எந்த தீங்கும் நேராது என்று தேவியின் மீது உறுதி பூண்டனர். அதனால் தான் தங்கள் நாட்டினரை மட்டும் தேவியை பூஜித்து கொள்ள சம்மதம் கூறி காட்டினில் வந்து செல்ல அனுமதித்தோம். இப்போது இதற்கு என்ன பதில் கூற போகின்றீர்கள். பெற்றோரை இழந்து நிற்கும் ஒன்றும் அறியா இந்த சிறு குழந்தைக்கு தாங்கள் கூறப் போகும் நியாயம் தான் என்ன?"


    "தாயே எமது முன்னோர்கள் கொடுத்த வாக்கு எப்போதும் மாறாது. நான் வழங்க போகும் இந்த தண்டனை நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும். நான் தங்களுக்கு ஒரு வாக்கு கொடுக்கிறேன். நான் மட்டுமல்ல என் பரம்பரையே தங்களது குலத்திற்கு பாதுகாப்பாளராக இருப்பர். தங்கள் குலத்தில் உள்ளோருக்கு ஏதாவது ஆபத்து என்றால், எங்களது உயிரை கொடுத்தாவது காப்போம். இது எனது மணி முடி மீது ஆணையாக, நான் எடுத்துக்கொண்ட உறுதியாகும். 


  விஜயா நீ செய்த தவறை எண்ணி வருந்துவாய் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீயோ சிறு குற்ற உணர்வு கூட இல்லாத நின்று கொண்டிருக்கிறாய். இரண்டு உயிர்களின் மதிப்பு அவ்வளவு எளிதாக போய் விட்டதா உனக்கு? இதோ உனது உயிரும் துடிக்கும் போது, அதை நீ உணர்ந்து கொள்வாய். யார் அங்கே இவனை நாட்டு மக்கள் அனைவரும் பார்க்குமாறு முச்சந்தியில் நிறுத்தி சாகும்வரை முள் சாட்டையால் அடியுங்கள்."


  "மன்னா நான் ரத்தினபுரியின் இளவரசன், அத்தோடு தங்களின் மைத்துனனும் ஆவேன். இந்த காட்டுவாசிகளுக்காக என்னை எதிர்க்க துணிந்தீர்களா?"


    "நீ யாராய் இருந்தால் என்ன? மகிழபுரியில் எப்போதும் நீதிக்கு மட்டுமே முதலிடம். செய்த குற்றத்திற்கு தக்க தண்டனையை நீ அனுபவித்தே ஆக வேண்டும். ம்ம்ம் இவனை இழுத்துக் கொண்டு செல்லுங்கள்."


  வீரர்கள் விஜய பூபதியை சங்கிலியால் பிணைத்து இழுத்துக் கொண்டு சென்றனர்.


  இந்த தீர்ப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. மேனகா தேவி அழுது கொண்டே குழந்தைகளுடன் சென்று விட்டார். 


  கொற்றவை தேவி திருவிழாவிற்காக தன் பிறந்தகம் வந்தவர், தன் கணவரின் இந்த செயலை அவர் எதிர்பார்க்கவே இல்லை. செய்வதை எல்லாம் செய்துவிட்டு சிறு குற்ற உணர்வு கூட இல்லாது, எதிர்த்து கொண்டு நிற்கும் அவரை காண்கையில் மேனகா தேவிக்கு வருத்தமாக இருந்தது. 


    தனது அண்ணனின் நீதி நியாயங்களை தெரிந்தவர் ஆதலால், தன் கணவருக்காக பரிந்து கொண்டு பேசவும், அவரால் முடியவில்லை. இருதலைக்கொல்லி எறும்பாக தவித்து நின்றார்.


  அரச கட்டளையை வீரர்கள் நடுவீதியில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, ஐந்தாறு குதிரைகளில் வந்த, கருப்பு துணியால் முகத்தை மூடிய வீரர்கள், காவல் வீரர்களை அடித்துப் போட்டுவிட்டு விஜய பூபதி தூக்கிக்கொண்டு சென்றனர்.


  நடந்தவைகளை கேள்விப்பட்டதும் பார்த்திபேந்திரர் கடும் கோபம் கொண்டார். ரத்தினபுரி அரசருக்கு அவசரமாக மடல் ஒன்றை எழுதினார்.


  உங்கள் தம்பி மகிழபுரி நாட்டின் குற்றவாளி, அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கேள்விப்பட்டால், எங்கள் நாட்டைப் பகைத்துக் கொண்டதாக அர்த்தம். போர் முரசு விரைவில் முழங்கும்.


  மடலை கண்டதும் ரத்னபுரியின் அரசரும், விஜய பூபதியின் அண்ணனுமான நாகேந்திர பூபதி, அடித்து பிடித்துக் கொண்டு பார்த்திபேந்திரரை சந்திக்க வந்தார்.


  "அரசர் பெருமானே, நான் அந்த பாவிக்கு அடைக்கலம் கொடுக்கவே இல்லை. அவன் எங்கு இருக்கிறான் என்று கூட எனக்கு தெரியாது. தயை கூர்ந்து நான் சொல்லுவதை நம்புங்கள்."


  "நான் உன்னை நம்புகிறேன் நாகேந்திரா, ஒருவேளை நீ பொய் சொல்கிறாய் என்று தெரிந்தால், ரத்தினபுரி தனி நாடாக இல்லாமல் மகிழபுரியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்."


    விஜய பூபதியின் உடல் முழுவதும் மூலிகை கட்டுகள் போடப்பட்டு, மஞ்சத்தின் மீது படுக்க வைக்கப்பட்டிருந்தான்.

 

  ரத்னபுரியின் ராஜகுருவான, சர்வேஸ்வரர், விஜய பூபதிக்கு மூலிகை நீரை புகட்டிக் கொண்டிருந்தார்.


  அப்போது நாகேந்திர பூபதியின் மகனும் விஜய பூபதியின் தோழனுமான, ரங்கராஜ பூபதி அவசரமாக அந்த அறையினுள் நுழைந்தான்.

Friday, June 27, 2025

மன்னவரே 46


 

            அத்தியாயம் 46


    குருந்த மரத்தடியினில் மண்ணினை தோண்ட ஆரம்பித்ததும், பலமான சூறை காற்று வீச ஆரம்பித்தது.


  இரண்டு மூன்று முறை மண்ணை கொத்தி எடுத்து தோண்ட ஆரம்பித்ததும், மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள் கடகடவென்று ஆட ஆரம்பித்தது.


  அங்கிருந்த மக்கள் பயந்து போய் மரத்தை விட்டு தள்ளி ஒதுங்கி நிற்க, ஒரு கட்டத்துக்கு மேல் மோகினி பள்ளத்தை சுற்றி இருந்த வேர்கள், பிய்த்துக்கொண்டு மரத்தின் வேரோடு, மூன்று நான்கு அடி தூரம் மேலே பறந்து போய், தள்ளி மண்ணில் விழுந்தது.


  மோகினி பள்ளத்தை மூடியிருந்த அந்த வேர்கள் அகன்றதும் கரும்புகை ஒன்று பள்ளத்தினுள் இருந்து சூறாவளியினோடே உயர எழுந்தது.


  அதனைக் கண்டு மக்கள் அனைவரும் திசைகொருவராக சிதறி ஓட, அந்த கரும்புகை, தனது மனம் கவர்ந்த மன்னவனை காண உயர பறந்து சென்றது.


  பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும், காதல் கொண்ட மனம், அவனை தான் முதலில் காண ஏங்கியது. ஆசையோடு அவனைக் காண வந்த அந்தக் கரும்புகை, தன்னுடைய இந்த நிலைக்கு காரணமானவளை அவனின் மனைவியாக கண்டபோது, அதற்கு அவளை கொன்று போடும் அளவுக்கு வெறியேறியது.


  கண்கள் ரத்தமென மின்ன, நான்கு அடிக்கு கீழே தொங்கும் நாக்கை சுழற்றி கொண்டே, அவளை நெருங்க தொடங்கிய போது, சில மந்திர உச்சாடனங்கள் அந்த கரும்புகையை எங்கோ இழுக்க தொடங்கியது.


  தனது எதிரி கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும், அவளை ஒன்றும் செய்யவிடாமல் தன்னை இழுக்கும் இந்த மந்திர உச்சாடத்தை உபயோகிப்பவனை நோக்கி, அதன் கோபம் பல மடங்காக திரும்பியது. அதே கோபத்துடன் அந்த மந்திர உச்சாடனத்தை தேடி சென்றது.


  அமைச்சரின் குருஜி தான் இந்த மந்திரத்தை உபயோகிக்க சொல்லி கொண்டிருந்தார். நிரஞ்சனா கிடைத்து விட்டதாக அமைச்சரின் ஆட்கள் கூற உடனே வேலையை தொடங்கினார் குருஜி. அங்குள்ள தன் சிஷ்யகோடிகளை நிரஞ்சனா இருக்கும் இடத்திற்கு அனுப்பி, பூஜையை தொடங்கினார்.


மது தன்னை தீரா என்று அழைத்ததால், அவளுக்கு முன் ஜென்ம நினைவு வந்ததாக எண்ணிய வேந்தன், அவளை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து, அந்த பெட்டியில் இருந்த நீல நிற கற்கள் மின்னும் தங்க வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான்.


  அவளது நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டு, அந்த பெட்டியில் இருந்த சிறிய கத்தியை வெளியே எடுத்தவன், அதன் கைப்பிடியை பிடித்து திருக அது வாளாக உருமாறி ஒளி வீசியது. அந்த நேரம் பார்த்து கீழே ஏதோ சத்தம் கேட்க மீண்டும் அதை சிறிய கத்தியாக மாற்றி, தனது உடைக்குள் வைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு கீழே இறங்கினான்.


  அங்கு ராகுலை கண்டதும் இவன் என்ன ஏது என்று விசாரிக்க, ராகுல் கூறியவற்றை கேட்டு கோபம் கொண்ட வேந்தன் மூர்த்தியிடம், மதுவையும் வீட்டில் உள்ளவர்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ராகுலுடன் நிரஞ்சனாவை தேடி சென்றான்.


கட்டிலின் மீது படுத்திருந்த மதுவிற்கு நினைவுகள் கால சக்கரத்தில் சுற்றி, முன் ஜென்மத்தை நோக்கி பயணித்தது.


  இதோ நாமும் கிளம்புவோம் நடந்த வரலாறுகளை திரும்பவும் கண்டு வர,


  மகிழபுரி பேரினைப் போலவே சந்தோஷங்களையும் மகிழ்ச்சியையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்ட வளமான ராஜ்யம். கொற்றவை தேவியின் அருளால் போர் தொடுத்த அத்தனை இடங்களிலும், வெற்றி கொடி நாட்டிய நாடு.


  அதை ஆளும் பார்த்திபேந்திரர் நீதிக்கும் நேர்மைக்கும் பெயர் போன பேரரசர். அனாவசியமாக நடக்கும் போரினை விரும்பாதவர்.


    ஆனால் தவறு என்று பட்டால், தன் சொந்தமே ஆனாலும் அதை தட்டிக் கேட்க துணிபவர். அவரின் தர்மபத்தினி தாரகை தேவி. தம் மன்னவரைப் போலவே தூய உள்ளம் கொண்டவர். 


    தாய் தந்தையர் இல்லாத தமது நாத்தனார்களை, தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களின் மனம் விரும்பிய மணாளர்களையே, தம் மன்னவரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தார்.


  தனது மூத்த நாத்தனாருக்கு பக்கத்து ராஜ்யமான ரத்னாபுரி இளவரசரையும், தனது இளைய நாத்தனாருக்கு தமது நாட்டின் படைத்தளபதியையும் திருமணம் செய்து வைத்தார். 


  இங்குதான் தான் தவறிவிட்டோமோ என்று மனம் வெதும்பி அரசு தர்பாரில் நடக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார், ஆறு மாத கைக்குழந்தையுடனும், அருகிலே தனது எட்டு வயது மகன் மித்ரதேவேந்திரனுடன்.


  அவர் அருகிலேயே படை தளபதியின் மனைவியும், அரசரின் இரண்டாவது தங்கையுமான ஆதிரை, தன் ஐந்து வயது குழந்தையான ரஞ்சனியுடன் மேல்மாடத்தில் நின்று கொண்டிருந்தார்.


  அரசு தர்பாரில் குற்றவாளி கூண்டில் ரத்னபுரியின் இளவரசர் விஜய பூபதி, இரண்டு உயிர்களைப் பறித்த பின்பும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி, உன்னால் முடிந்ததை பார் என்று ஆணவமாக நின்று கொண்டிருந்தார்.


  அவருக்கு இடப்பக்கத்தில் ஒரு கையில் ஐந்து வயது குழந்தையான மோகனசுந்தரியை தூக்கிக்கொண்டும், இன்னொரு கையில் எட்டு வயதான தனது மகன் பிரதீபனை பிடித்துக் கொண்டும், கூனிக்குறுகி நின்று இருந்தார், அரசரின் மூத்த தங்கையான மேனகா தேவி.


    பிரதீபனுக்கு தன் தந்தை ஏதோ மன்னிக்க முடியாத குற்றம் செய்துள்ளார் என்பது புரிந்தது.எனவே அவன் அமைதியாக நின்று கொண்டான்.


    ஆனால் தந்தையின் மீது அளவு கடந்த பாசத்தை வைத்துள்ள மோகனாவிற்க்கு, தன் தந்தையை இப்படி குற்றவாளி போல நிற்க வைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் இந்த அரசு சபையில் உள்ளவர்களை முற்றிலுமாக வெறுத்தாள்.


  அவருக்கு எதிர்ப்புறத்தில், மலைவாழ் மக்கள் குருவாக வணங்கும், ஏந்திழை அம்மையார், தனது கையில் இரண்டு வயது பெண் குழந்தையை சுமந்து கொண்டு, ருத்ர காளியாக நின்று கொண்டிருந்தார். 


    அந்தப் பிஞ்சு குழந்தை ஏந்திழை அம்மையாரிடம், தன் தாயைத் தேடிக் கொண்டிருந்தது. சுற்றி உள்ள அறிமுகம் இல்லாத புதிய முகங்களால் சற்று மிரண்டு போய், அம்மையாரின் தோள்களில் அழுகையினோடு சாய்ந்து கொண்டிருந்தது.


  தாயின் அருகில் நின்று கொண்டிருந்த மித்ரதேவேந்திரனுக்கு அந்த பிஞ்சுக் குழந்தையின் நீல கண்களில் தெரிந்த, பயத்தை காணும் போது, அனைத்து ஆறுதல்படுத்த வேண்டும் போல தோன்றியது.


  அரசர் பார்த்திபேந்திரர், விஜய பூபதி நோக்கி, பேசத் தொடங்கினார்.

 

    "விஜயா உன் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு நீ என்ன பதில் கூற போகிறாய்?"


  "நான் என்ன குற்றம் புரிந்தேன்? கொற்றவை தேவியின் சிலையை காட்டுமாறு, அந்த காட்டுவாசிகளிடம் எவ்வளவோ முறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர்கள் அதை காது கொடுத்து  கேட்பதற்கு கூட தயாராக இல்லை. கடவுள் என்ன அவர்களுக்கு மட்டும் சொந்தமானவரா? வந்த கோபத்திற்கு அவர்கள் இருவரின் சிரத்தையும் கொய்தேன்."

Thursday, June 26, 2025

மன்னவரே 45


 

             அத்தியாயம் 45


  மதுவிடம்  விளக்கேற்ற சொல்லிவிட்டு, வீட்டு பெண்கள் அனைவரும் வரிசையாக வந்து அவள் நெற்றியில் திலகமிட்டனர். பிறகு பெரியோர் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குமாறு கூறினர்.


  கடைசியாக வடிவுபாட்டி தன் கரங்களால் ஜொலித்துக் கொண்டிருக்கும் அப்பெட்டியை எடுத்து, இதை பெற்றுக் கொள்ளுமாறு மதுவினை நோக்கி நீட்டினார்.


"மதும்மா இந்த பெட்டிய இவ்வளவு நாளும் என் பாதுகாப்பில் வைச்சிருந்தேன். இனி இது உன்னோட பொறுப்பு.


  என்னம்மா பாக்குற இது நம்ம  பிறந்த வீட்டிலிருந்து வாக்கப்பட்டு இந்த குடும்பத்துக்குள் வர மருமகளுக்காக,  நம்ம புகுந்த வீட்ல கொடுக்கிற ஒரு பொக்கிஷம்னே சொல்லலாம். இதை பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது இனி உன்னுடைய பொறுப்பு."


மது புரியாமல் திரும்பி வேந்தனை பார்க்க அவன் கண்களால் வாங்கிக்கொள் என்று சைகை செய்ததும், இவள் அதனை வாங்கிக் கொண்டால்.


  அவள் திருக்கரம் பட்டதும் பெட்டியானது உடனே திறந்து கொண்டது. இதை அங்குள்ளோர் யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் தலைமுறை தலைமுறையாக திறக்கப்படாமல் இருக்கும் பெட்டி, இப்போது திறந்து விட்டது என்றால் குலதேவி தன் இல்லம் திரும்பி விட்டார் என்று தானே அர்த்தம்.


    குலதேவி வருவாள் என்று கூறியதோடு,மோகினி பள்ளத்தில் இருக்கும் அந்த மாயக்கெட்ட சக்தியும் உயிர்த்தெழும் என்பது இவர்களின் முன்னோர் வாக்கு. அதனால் அனைவருக்கும் ஒருவித அச்சம் தோன்றியது.


மது இங்கு பெட்டியை தன் கரங்களில் வாங்கிக் கொண்ட அதே நேரம், அங்கு குருந்த மரத்தடியில் பூஜைகள் ஆரம்பமானது.


    மது தன் கையில் இருந்து பெட்டியை வடிவுப்பாட்டியிடமே திருப்பிக் கொடுத்துவிட்டாள்.


  "இப்போதைக்கு இது உங்க கிட்டயே இருக்கட்டும் பாட்டி, இந்த வீட்டு மருமகளுக்கான நேரம் வரும்போது, இது கைமாறுனா போதும் அதுவரைக்கும் நீங்களே வெச்சிருங்க."


  குடும்பத்தார் இவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாமல் விழிக்க, மல்லிகா தான் முதலில் சுதாரித்து,


  "கவி, அண்ணி டயர்டா இருப்பாங்க, நீ அவங்களை அண்ணனோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா."

 

  வேந்தன் தனது பாட்டியிடம் இருந்து அப்பெட்டியை பெற்றுக் கொண்டவன்,


  "அது ஆத்தா...வீட்ல பெரியவங்க எல்லாம் இத்தனை பேர் இருக்கும் போது, எப்படி இந்த பொறுப்பை தான் ஏத்துக்கிறதுன்னு தான், உங்ககிட்டயே இதை கொடுத்துட்டு போயிட்டா. அவளுக்கு இத பத்தி தெளிவா தெரியாது இல்லையா, விடுங்க நான் இத பத்தி சொல்லி அவ கையில இதை கொடுத்துடறேன். இல்லயில்ல கையோட இந்த வளையலை போட்டே விட்டுடுறேன் போதுமா."


    அவன் பெட்டியை தூக்கிக் கொண்டு மேலே செல்ல, மூர்த்தி ராகுலுடன் வீட்டினுள் நுழைந்தான்.


  மூர்த்தி ஐயாவின் வீட்டில் சிம்பிளாக ஊர் மக்களுக்கு கல்யாண விருந்து வைப்பதற்காக ஏற்பாடாகி இருந்தது. அது சம்பந்தமாக பொருட்களை வாங்கிக் கொண்டு மூர்த்தி வந்து கொண்டிருக்கும்போது ராகுல் நடுரோட்டில் அடிபட்டு விழுந்து கிடப்பதை கண்டான்.


அவனை எழுப்பி, என்ன ஏது என்று விசாரிக்க, அவன் கூறிய செய்திகளை கேட்டு அதிர்ந்து போனான். உடனே அவனை அழைத்துக்கொண்டு மூர்த்தி தாத்தாவின் வீட்டை நோக்கி சென்றான்.


        ராகுல் நிரஞ்சனாவை காப்பாற்றியதையும் அவளை இங்கு அழைத்துக் கொண்டு வரும்போது ஏற்பட்ட இடர்களையும் பற்றி குடும்பத்தாரிடம் எடுத்துக் கூறினான். அதை கேட்டு ஆண்கள் அனைவரும் நிரஞ்சனாவே தேடிக் கிளம்ப, பெண்கள் தமது வீட்டுப் பெண்ணை காப்பாற்றுமாறு பூஜை அறையினை தஞ்சம் புகுந்தனர்.


    கவி மதுவை, வேந்தனின் அறையில் சென்று விட்டுவிட்டு கீழே வந்து விட்டாள். சாதாரண நேரமாக இருந்திருந்தால் மது இந்நேரம் கவியுடன் பேச்சு கொடுத்து, தோழியாகி இருப்பாள்.


    ஆனால் அவளே, கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்களின் பாதிப்பால் மௌன அவதாரம் எடுத்து விட்டாளே.


    வேந்தன் அறையினுள் நுழையும் போது, மது ஜன்னல் கம்பிகளை பிடித்தவாறு, வெளியே பார்வையால் வெறித்துக் கொண்டிருந்தாள்.


அரவம் கேட்டு மது திரும்பிப் பார்க்க, வேந்தன் கைகளில் உள்ள பெட்டியை கட்டிலின் மீது வைத்துக் கொண்டிருந்தான்.


"என்ன மிஸ்ஸஸ் மதுரம் கல்யாணம் ஆகி கிடைக்கிற ஃபர்ஸ்ட் கிப்ட் இது, இதை போய் இப்படி வேண்டாமுன்னு சொல்லிட்டு வந்துட்டீங்களே."


  ஆஹா என்ன இது, அனல்  பார்வையால்ல இருக்கு. வேந்தா சமாளி விட்டுடாதே,


  "சரி உங்களுக்கு வேண்டாம்னா அதை வாங்கி, என் கையிலயாவது கொடுக்கலாம்ல. எனக்கும் இப்பதானே கல்யாணம் ஆயிருக்கு."


  "கிப்ட் தானே? இருங்க குடுக்குறேன்."


    மது தனது பையில் இருந்து ஒரு கவரை எடுத்து, வேந்தனது கைகளில் வைத்தாள்.


  அதைப் பிரித்துப் பார்த்த வேந்தனுக்கு முகத்தில் ஈயாடவில்லை.


  "கிப்ட் கேட்டீங்களே, இதுதான் என்னால முடிஞ்ச, உங்களுக்கான கிப்ட். மியூச்சுவல் டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ணி இருக்கேன். நான் ஆல்ரெடி இதுல சைன் பண்ணிட்டேன். நீங்களும் சைன் பண்ணா இதை சப்மிட் பண்ணிடலாம்."


    "என் குடும்பத்தோட கட்டாயத்தால தானே, நீங்க என் கழுத்துல தாலி கட்ட வேண்டியதா போச்சு. பெரியவங்க சொல்லை மீற முடியாமல் தானே நீங்க இதுக்கு சம்மதிச்சீங்க. எனக்காக நீங்க ஏன்  உங்க சந்தோஷத்தை விட்டுக் கொடுக்கணும். அதனால தான் இதுக்கு ஏற்பாடு பண்ணினேன்


      என்ன மிஸ்டர் எம்டீ சார், என் கிப்ட் உங்களுக்கு பிடிச்சிருக்கா?"


    வேந்தன் தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.


"வாவ் எனக்காக நீ இப்படி ஒரு கிப்ட் கொடுப்பன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ கொடுத்துட்ட, உனக்கு நான் கொடுக்க வேண்டாம்."


  வேந்தன் தனது பாக்கெட்டில் கைவிட்டு பதக்கம் வைத்த ஒரு செயினை எடுத்தான்.


     "இதுதான் நான் உனக்காக குடுக்கற கிப்ட்."


    அது மது கனவில் பார்த்த அதே செயின். வேந்தன் அதை தன் கரங்களால் அவள் கழுத்தில் அணிவிக்கும் போது, மது தன்னை மறந்து கண்களில் நீர் சூழ வேந்தனை பார்த்து தீரா என்று அழைத்தால்,


  மதுவிற்கு திடீரென்று தனது கனவில் தோன்றிய அந்த வாளை வீசிக்கொண்டு வந்த உருவம் நினைவுக்கு வர, அவனுக்கு பின்னே ஜன்னலின் வழியே நோக்கினால்.


  அன்று கண்ட அந்த சுந்தர முகம் இன்று கருப்பு புகை சூழ, கண்களில் நெருப்பு போன்று ஒளி வீச, விகார தோற்றத்துடன் நாக்கு ஐந்து அடிக்கு கீழே சுழற்றிக்கொண்டு தொங்க, இவளை வெறித்துக் கொண்டிருப்பதை கண்டு மது மயங்கி சரிந்தாள்.

Wednesday, June 25, 2025

மன்னவரே 44


 

             அத்தியாயம் 44


      சந்துரு பேச வரும் முன்பே வேந்தன் மதுவிற்கு பதில் கூற தொடங்கினான்.


  "அது ஏதோ அர்ஜென்ட் மீட்டிங்காம். அதுதான் அவர் நேத்து மதியம் அவசரமா கிளம்பி போனதா சொன்னான்."


  சந்துரு திரு திருவென முழிக்க, வேந்தன் மதுவிற்கு தெரியாமல் முழிகளை உருட்டி, அவனை ஆம் என்று சொல்லுமாறு,  சைகையிலேயே மிரட்டி கொண்டிருந்தான். 


  சந்துரு எப்படி தலையை ஆட்டுகிறோம் என்பதே தெரியாமல், ஒருவாறு ஆட்டி வைக்க,


    "அவரை அங்க அப்படியே இருந்துக்க சொல்லுங்க, என் கண்ணுல மட்டும் அவர் மாட்டினாறு...அது அவருக்கும் நல்லதில்லை, உங்களுக்கும் ரொம்ப...நல்லதில்லை சொல்லிட்டேன்."


  பேச்சுவார்த்தை முடிந்ததற்கு சான்றாக மது ஜன்னலுக்கு வெளியே தனது பார்வையை திருப்ப,


  சந்துருவுக்கும் வெற்றிக்கும் புரிந்து விட்டது, இது வேந்தனது மற்றுமொரு திருவிளையாடல் என்று.


    சந்துரு கொலைவெறியுடன் வேந்தனை பார்த்து முறைக்க, அவன் தீவிரமாக வேடிக்கை பார்ப்பது போன்று ஜன்னலின் புறம் முகத்தை திருப்பி கொண்டான்.


  வேடந்தூரில் உள்ள ஊர் பெரியவர்கள் அனைவரும் மூர்த்தி ஐயாவின் வீட்டில் ஒன்றாக திரண்டு இருந்தனர். வேந்தனது திடீர் திருமணத்தை கேள்விப்பட்டு ஊர் மக்களும் மணமக்களைக் காண அவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.


    மூர்த்தி ஐயா அப்போதுதான் காரில் வந்து இறங்கினார்.


    "வாங்க வாங்க, என்ன எல்லாரும் இங்க ஒண்ணா திரண்டு வந்திருக்கீங்க? குருந்த மரத்தடியில மண்ணெடுக்கறது இன்னைக்கு தானே? அங்க இல்லாம எல்லாரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"


  " ஐயா உங்க வீட்டுல விசேஷத்தை வச்சிட்டு...,அதுவும் இல்லாம நீங்க இங்க இருக்கும்போது நாங்க மட்டும் அங்க போய் செஞ்சா நல்லா இருக்காதுங்க. அதனாலதான் எல்லாரும் இங்க வந்துட்டோம்."


  "அட என்னப்பா நீங்க? நமக்காக சாமிய காக்க வைக்கலாமா? நான் பொண்ணு மாப்பிள்ளை வந்ததும் நேரா அழைச்சிட்டு அங்க தான் வர போறேன். இதுக்கு மேலயும் நம்ம குல தேவியை காக்க வைக்க கூடாது. நீங்க எல்லாரும் போய் அங்க வேலையை பாருங்க. நான் கண்டிப்பா அவங்களோட அங்க வந்துடுறேன்."


  பெரியவர் கூறியதும் மறுவார்த்தை ஏதும் இன்றி அனைவரும் கலைந்து சென்றனர்.


  ராகுல் வேடந்தூரில் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, நிரஞ்சனா தனக்கு வாந்தி வருவதாக கூற, வண்டியை ஒரு மரத்தடியின் ஓரத்தில் நிறுத்தினான்.


  இரண்டு நாட்களாக சரியாக உறங்காததாலும், இரவு நேர பயணமும், நேற்று சாப்பிட்ட உணவும் ஒத்துக் கொள்ளாமல், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.


கார் கதவினை திறந்து கொண்டு அவள் ஒரு புறம் அவசரமாக இறங்கி செல்ல, மறுபுறம் இருந்து தண்ணீர் பாட்டிலை தூக்கிக்கொண்டு இறங்கி வந்தான் ராகுல்.


    அப்போது கொற்றவை தேவி கோவிலுக்கு பாதை அமைப்பதற்காக வந்திருந்த அமைச்சரின் அடியாட்கள் ஊருக்குள் இருந்து வந்து கொண்டிருந்தனர்.


  அவர்கள் மூலமாகத்தான் நிரஞ்சனா, மருத்துவமனையில் இருந்து  குருஜியிடம் கடத்திச் செல்லப்பட்டாள்.


  இங்கு திடீரென்று அவளைக் கண்டதும் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.


  "அண்ணே அங்க பாருங்க, அந்த பொண்ணு யாருன்னு தெரியுதா?"


    "என்னத்தடா பார்க்க சொல்ற, எந்த பொண்ணு?"


  "அதோ அந்த காருக்கு பின்னாடி பாருங்க, ஒரு பையன் கூட நிக்குதே, அது யாருன்னு தெரியுதா?"


    "டேய் இது அந்த மாறனோட தங்கச்சி தானே, நாம தானே அந்த புள்ளையை கடத்தி, குருஜி கிட்ட அனுப்பி வச்சோம். தப்பிச்சு வந்துருச்சு போலடா."


  "சரி இருங்க மெதுவா போய் பேச்சு கொடுத்து பார்ப்போம்."


      நிரஞ்சனா ராகுல் கொடுத்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரால், முகத்தை கழுவி விட்டு நீரை அருந்தினால்.


    "அட சின்னம்மா, நீங்க மாறன் ஐயாவோட தங்கச்சி தானே? எங்கம்மா போயிட்டீங்க இரண்டு நாளா? உங்களை காணமுன்னு  ஐயா ஊர் பூரா தேடிட்டு இருக்காரு? இவர் யாருங்கம்மா? உங்களுக்கு தெரிஞ்சவரா? இல்ல ஏதாவது உங்க கிட்ட பிரச்சனை பண்றாரா? தைரியமா சொல்லுங்கம்மா நம்ம பசங்கள வச்சு ஒரு வழி பண்ணிடுவோம்."


  நிரஞ்சனாவிற்கு அவர்களைப் பார்த்ததாக கூட நினைவில்லை. இருந்தும் ராகுலை பற்றி அவர்கள் கேட்டதால்,


  "அதெல்லாம் எதுவும் இல்ல. இவர் எனக்கு தெரிஞ்சவர் தான்."


  "என்னங்கம்மா நம்ம வீட்டுக்கு போகாம இந்த ஊருக்குள்ள வந்து இருக்கீங்க? சரி வாங்க நாங்க உங்களை ஐயா கிட்ட கூட்டிட்டு போறோம்."


  ராகுலுக்கு இவர்களை பார்க்கும்போது நம்பிக்கையே வரவில்லை. அவர்கள் பேசும் வார்த்தை வேறாகவும் அவர்களின் கண்களில் தெரிந்த உணர்வு வேறாகவும் தோன்றியது.


    "பரவால்லைங்க அதான் இவ்வளவு தூரம் வந்துட்டோமே, நானே அவங்கள வீட்ல  விட்டுடுறேன்."


      நிரஞ்சனாவும் அதையே ஆமோதிப்பதாக தலையாட்டினாள்.


    "தம்பி நீங்க வெளியூரு, ஊருக்குள்ள வயசு பொண்ணு ஒரு வயசு பையன கூட்டிட்டு வந்தா என்ன பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது. நீங்க கெளம்புங்க, நாங்க அவங்கள வீட்ல விட்டுடறோம்."


  "அவங்க எப்படி பேசினாலும், நான் அவங்க வீட்ல இருக்குறவங்கள சமாளிச்சுக்கிறேன். நீங்க கிளம்புங்க நிரஞ்சனா வண்டியில ஏறுங்க."


"யோவ் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு கூட்டிட்டு போற, எங்களை தாண்டி நீ போயிடுவியா? டேய் சின்னம்மாவை போய் கூட்டிட்டு வாங்கடா."


  நிரஞ்சனா ராகுலின் கைகளை இறுக பற்றி கொண்டு அவனுக்கு பின்னே ஒளிந்து கொண்டு நின்றாள். ஏனோ அவளுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை.


  எதிரில் இருந்த ஆட்கள் ராகுலை தள்ளிக்விட்டு கொண்டு நிரஞ்சனாவின் கையை பிடித்து இழுக்க, அங்கு ஒரே கைகலப்பானது.


ராகுல் முடிந்த அளவு அவர்களிடம் இருந்து நிரஞ்சனாவை மீட்க போராடினான். ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்களில் ஒருவன் கட்டையால் அவன் மண்டையில் அடிக்க, ஒரு நொடி நிதானத்தை இழந்தான் அப்போது அங்கிருந்தவர்கள் கீழே இருந்த மண்ணை அள்ளி, அவன் கண்களில் தூவி விட்டு நிரஞ்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு குறுக்குப் பாதையில் இறங்கினார்.


  மணமக்களது கார் மூர்த்தி தாத்தாவின் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மதுவிற்கு ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது.


வீட்டு வாசலில் கல்யாணத்துக்கே உரிய வாழை மாவிலை தோரணங்களும் தென்னை ஓலை பந்தலும் போடப்பட்டிருந்தது.


மணமக்களை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி கரைத்து சுற்றப்பட்டது.


  வீட்டினுள் நுழைந்தவர்களை நேராக பூஜை அறைக்கு கூட்டிக்கொண்டு போயினர் வீட்டுப் பெண்கள்.


மது பூஜை அறையில் நுழையும் போதே, அவள் உடலோடு சேர்த்து அந்த பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் அதிர்ந்தது.


அப்பெட்டியானது பொன்னொழி வீசி ஜொலிக்க தொடங்கியது.


அதனைக் கண்டு வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் நின்றனர்.


Monday, June 23, 2025

மன்னவரே 43


 

             அத்தியாயம் 43

 

          மாறனுக்கு அவர்களை கண்டு கோபம் வந்தாலும், தற்போது சூழ்நிலை சரியில்லை என்பதை உணர்ந்து, அங்கிருந்து உடனே வெளியேறி விட்டான்.


  உள்ளே வந்தவர்களை வரவேற்று அமர வைத்த மூர்த்தி தாத்தாவின் மகள்கள், அவர்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது கொண்டுவர உள்ளே செல்ல போக,


    "வேண்டாம்மா கொஞ்சம் இப்படி உட்காருங்க. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.


    எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. வேந்தனுக்கு திடீர்னு கல்யாணம் முடிஞ்சிடுச்சு மச்சான்.


  அவன் ஏற்கனவே ஒரு பொண்ண விரும்பி இருக்கான் போல இருக்கு, என்ன பிரச்சனைன்னு தெரியல எங்க யாருக்குமே அவங்க கல்யாணத்தை பத்தி தெரியப்படுத்தவே இல்ல.


      எங்களுக்கா ஒரு கட்டத்துல இது தெரிய வந்தது. அதுதான் மாப்பிள்ளையும் பொண்ணையும் இன்னைக்கு ஊருக்கு கூட்டிட்டு வரப் போறோம்.


  மாப்ள நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க, இது நாங்களே எதிர்பார்க்காதது தான்." 


    வீட்டில் உள்ளவர்கள் அவர் கூறுவதை மட்டும் தான் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. ஏற்கனவே தெரிந்த விஷயம் தான் என்றாலும், கேட்கும் போது நிரஞ்சனாவை நினைத்து மனம் வருந்தினர்.


    "வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு யாருன்னா...?"


  "என் பையன் சிவராமனோட பொண்ணு சரிங்களா மாப்ள. என் பொண்டாட்டி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான், போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொன்னா.


  இது எங்க வீட்டு கல்யாணம் தான். அவ என் பேத்தி தான், கண்டிப்பா பொண்ணு வீட்டுக்காரங்களா நாங்க  மணமக்களை வரவேற்க உங்க வீட்டுக்கு வர்றோம்."


  வேலப்பன் ஐயா தமது புதல்வர்களை திரும்பிப் பார்க்க, அவர்களும் இதை ஆமோதித்தனர்.


  வந்த காரியம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று அவர்கள் நினைக்கவே இல்லை.


  எப்படி சமாளிக்க போகின்றோமோ என்று பதட்டத்துடன் தான், வேலப்பன் ஐயா வீட்டிற்கு மூவரும் வந்தனர். தீபனை தாத்தாவுடன் போகச் சொன்னது வேந்தன் தான். 


  மாறன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்று அவன் உறுதியாக நம்பினான். வந்த வேலை சுபமாக முடிந்ததை எண்ணி மகிழ்ந்தனர். 


  வேலை அதிகம் இருப்பதாக கூறி அவர்கள் உடனே கிளம்ப, வேலப்பன் ஐயா தானும் உடன் வருவதாக கூறி அவர்களுடன் கிளம்பி விட்டார்.


  ராகுல் ஒரு வழியாக மேலூரை நெருங்கிக் கொண்டிருந்தான். நிரஞ்சனா, தன் கூடு கண்ட பறவையாக நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள்.


  சென்று கொண்டிருந்த பாதை இரு வழி பாதையாக பிரிந்தது. எந்த வழியில் செல்ல வேண்டும் என்று அவளை கேட்க எண்ணி திரும்பியவன், அவளின் நிம்மதியான உறக்கத்தை பார்த்து அதை கலைக்க விரும்பாமல், வெளியே யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம் என்று காரை விட்டு இறங்கினான்.


  சற்று தூரம் தள்ளி ஒரு டீக்கடை இருக்க, அதை நெருங்கி சென்றான். விடியும் நேரமானதால் அப்போதுதான் கடைக்காரர் கடையில் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.


  அந்தக் கடைக்கு சற்று தள்ளி ஒரு மினி வேனில், ஐந்தாறு பேர் கையில் ஏதோ போட்டோவுடன் வருவோர் போவோரை எல்லாம் கண்காணித்து கொண்டிருந்தனர்.


  அவர்களில் ஒருவனை ராகுலுக்கு எங்கோ பார்த்தது போன்று ஒரு ஞாபகம். நன்கு அவன் முகத்தை உற்றுப் பார்த்த போது தான் அவனுக்கு நினைவு வந்தது. நேற்று இரவு நிரஞ்சனாவை தேடி வந்தவர்களில் இவனும் ஒருவன்.


    அப்படி என்றால் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பது நிரஞ்சனாவை பிடிப்பதற்காக தானா?


  உடனே வந்த வேகத்தில் காரினை நோக்கி சென்றவன், காரில் அமர்ந்து அவசரமாக காரினை திருப்பினான்.


  கார் கதவு அறைந்து மூடும் சத்தம் கேட்டு எழுந்த நிரஞ்சனா, தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்து புன்னகையுடன் அவனை நோக்கி திரும்பினாள். அதற்குள் ராகுல் வண்டியை திருப்ப,


    "என்ன பண்றீங்க நீங்க வந்த பாதை கரெக்ட் தான். எதுக்காக காரை திருப்புறீங்க? இப்படியே போனா தான் எங்க ஊருக்கு போக முடியும்."


  "அப்படியே போனா உங்க ஊருக்கு இல்ல, எமலோகத்துக்கு தான் போகணும். என்ன முழிக்கிறீங்க, கொஞ்சம் எட்டி பாருங்க, உங்கள துரத்திட்டு வந்த அந்த மந்திரவாதிங்க ரோட்ட மரிச்சு நின்னு, உங்க போட்டோவை வச்சுக்கிட்டு ஒவ்வொரு காரா கண்காணிச்சிட்டு இருக்கிறாங்க.


உங்க ஊருக்கு போக, வேற ஏதாச்சும் வழி இருக்கா?"


  அவள் பயந்து விழிகளுடன் இல்லை என்று தலையை ஆட்ட,


  "பயப்படாதீங்க வேற ஏதாவது வழி இருக்கான்னு பார்க்கலாம். உங்க ஊருக்கு வெளியில, யாராவது உங்க  சொந்தக்காரங்க இருக்காங்களா? இல்லாட்டி தெரிஞ்சவங்க யாராவது? அவங்க வீடு இங்க வெளியே இருந்தா, அவங்க மூலமா உங்க வீட்டுக்கு கூப்பிட்டு பார்க்கலாமே?"


"எங்க பக்கத்து ஊரான வேடந்தூர்ல எனக்கு தெரிஞ்சவங்க இருக்காங்க. அந்த ஊருக்குள்ள போய்ட்டா நம்மள யாரும் எதுவும் செய்ய முடியாது. மூர்த்தி தாத்தா எல்லாத்தையும் பார்த்துப்பாரு அங்க வேணும்னா போகலாம்."


    ராகுலும் சரியென்று ரஞ்சியிடம் வழி கேட்டு கொண்டே, வேடந்தூரை நோக்கி வண்டியை திருப்பினான். ஆனால் அவர்கள் அறியவில்லை, அங்கு தான் அவர்களுக்கான பேராபத்து காத்திருக்கிறதென்று.


  வெற்றி காரினை ஓட்டிட அவன் பக்கத்தில் சந்துரு அமர்ந்திருந்தான். பாட்டிகள் இருவரும் கடைசி சீட்டில் உட்கார்ந்து விட, இரண்டுக்கும் நடுவில் உள்ள சீட்டில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருந்தனர்.


    "வெற்றி அப்படியே அந்த மெயின் ரோட்ல என்னை இறக்கி விட்டுடு. அங்கிருந்து நான் ஹாஸ்பிட்டல் போய்கிறேன்."


    "ஏன்டா நீ ஊருக்கு வரலையா?"


    "இல்ல வேந்தா அப்பா வேற வெளிநாடு போயிருக்காரு. வீட்ல அம்மாவும் தங்கச்சியும் மட்டும் தான் தனியா இருப்பாங்க. நான் அங்க வந்துட்டு உடனே திரும்பி வந்தாலுமே லேட்டாயிடும். அதோட ஹாஸ்பிடல்லயும் ஏதாவது எமர்ஜென்சின்னா ஆள் வேணும் இல்ல."


  இதனைக் கேட்ட மது உடனே சந்துருவைப் பார்த்து,


  "உங்க அப்பா வெளிநாடு போய் இருக்காரா? அவர் எப்ப போனாரு?" 


  ஆஹா கல்யாணம் ஆன அன்னைக்கே டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுவான் போல இருக்கே என்று வேந்தன் மனதுக்குள் புலம்ப,


    அந்த நேரம் பார்த்து சரியாக வெற்றியின் கைப்பட்டு, காரில் பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.


மாட்டிக்கிச்சே...


மாட்டிக்கிச்சே...


மாட்டிக்கிச்சே ...


மாட்டிக்கிச்சே...


Sunday, June 22, 2025

மன்னவரே 42


 

            அத்தியாயம் 42


  மூர்த்தி ஐயா தீபனுடனும் தனது மூத்த மகனுடனும் வேலப்பன் ஐயாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.


  பூவுபாட்டி இவர் வருவதற்கு முன்பே, தனது கணவருக்கு போனில் அழைத்து பேசினார்.


  "நான் பூவாத்தா பேசுறேன்."


  பல வருடங்கள் கழித்து தன்னுடன் மனைவி பேசுவது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 

  "பூவு நல்லா இருக்கியாம்மா? உடம்புக்கு இப்ப பரவாயில்லையா? டாக்டர் ஏதாவது சொன்னாங்களா? இன்னைக்கே வந்து உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாமா?"

  "ஏன், நான் நிம்மதியா இருக்கறது உங்களுக்கு பொறுக்கலையா?"


    "என்னம்மா இப்படி சொல்லிட்ட, நம்ம வீட்டுக்கு தானே உன்னை கூப்பிட்டேன்."


  "என்னை சாவடிக்க துணிஞ்ச வீட்டுக்குன்னு சொல்லுங்க."


  "என்னம்மா சொல்ற?"


  பாட்டி  மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு வீட்டில் நடந்தவைகளை விவரிக்க,


  "இப்படியா பண்ணாங்க? சத்தியமா இதெல்லாம் எனக்கு எதுவும் தெரியாதும்மா. வரட்டும், இருக்கு அவங்களுக்கு."


  "நீங்க என்கிட்ட நடந்துக்கிட்டதை பார்த்து வளர்ந்தவங்க தானே, வேற எப்படி நடந்துக்குவாங்க?"


"......"


    "ஒரு பொண்ணுக்கு புகுந்த வீட்டுல  கிடைக்கிற மரியாதை, அவ புருஷன் அவகிட்ட எப்படி நடந்துக்குறான்ங்கறதை பொறுத்து தான்.


  நீங்கதான் என்னை பொண்டாட்டியா என்ன, மனுஷியா கூட மதிச்சது இல்லையே.


    நானா உங்ககிட்ட கேட்டது ஒரே ஒரு விஷயம் தான், என் அண்ணனோட கடைசி ஆசையும் அதுதான். என்னை அதை நிறைவேத்த விட்டீங்களா? அப்போ இருந்த சூழ்நிலையில, குடும்பம் உறவுன்னு ஒரு கயிறு என்னை கட்டி வைச்சிருந்தது, ஆனால் இப்போ அது விட்டுப் போச்சு."


"பூவு ஏன் இப்படி எல்லாம் பேசுற?"


  "என் மனசுல இருக்க ஆதங்கத்தை இன்னைக்காவது வெளியே கொட்டுறேன் அவ்வளவுதான். அப்போ என்னால என் மருமகள் கூட உறுதுணையா நிக்க முடியல.


  எனக்காக என் பையன் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ஆனா இப்போ எங்க அண்ணனுக்கு கொடுத்த வாக்கை காப்பாத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அது என் பேத்தியை பார்த்துக்கிறது மூலமா நான் நிறைவேத்த போறேன்."


  "பேத்தியா? சிவ...சிவராமனை பார்த்தியா?"


  "அவனோட தான் இருக்கேன். லட்சுமிக்கு உடம்பு சரியில்ல ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.


  உங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க, உங்களுக்கு தான் அவங்க ஆகாதவங்களாச்சே.


இன்னும் கொஞ்ச நேரத்துல, மூர்த்தி அண்ணன் அங்க வருவாரு."


    "மூர்த்தியா? எதுக்காக?"


      "வேந்தன் தான் காதலிக்கிற பொண்ணை, யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனுக்கு கல்யாணமான விஷயம் தெரிஞ்சதும், இவங்க முறைப்படி  பொண்ணு மாப்பிள்ளைய அங்க ஊருக்கு கூட்டிட்டு வராங்க.


    நான் சொல்ல சொல்ல கேட்காம, உங்கள மதிச்சு, நடந்த விஷயத்தை சொல்ல அங்க வர்றாரு. வேந்தன் கல்யாணம் செஞ்சிருக்க பொண்ணு வேற யாரும் இல்ல சிவராமனோட பொண்ணு தான்.


    உங்களுக்கு புண்ணியமா போகும் எனக்காக இது ஒன்னு மட்டுமாவது செய்ங்க. அந்த நல்ல மனுசனோட மனசு நோகற படி எதையும் பேசிடாதீங்க


நாங்க இப்போ ஊருக்கு தான் பொண்ணு மாப்பிள்ளையோட வந்துகிட்டு இருக்கோம். உங்களால முடிஞ்சா என் கூட துணையாக நில்லுங்க, இல்லையா என்னை இப்படியே விட்டுடுங்க, என் பேத்தியை நான் பார்த்துக்கிறேன்."


பூவுப்பாட்டி படபடவென்று பேசிவிட்டு தொலைபேசியை வைத்து விட்டார்.


    வேலப்பன் ஐயா மனபாரத்தோடு அப்படியே நாற்காலியில் அமர்ந்து விட்டார். ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு முடிவோடு, வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்தவர் பூவுப்பாட்டி கூறிய அனைத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தார்.


  கேட்ட அனைவருக்கும் மனதில் வெவ்வேறு உணர்வுகள்.


சிவராமனும் அன்னலட்சுமியும் கிடைத்து விட்டார்கள் என்று மகிழ்வதா? இல்லை வேந்தனின் திருமணத்தைப் பற்றி அறிந்தால் நிரஞ்சனாவின் மனம் படும் பாட்டை பற்றி வருந்துவதா?


  மாறன் தான் இந்த செய்தியை கேட்டவுடன் குதிக்க ஆரம்பித்து விட்டான்.

  

  "என்னப்பா நெனச்சிட்டு இருக்காங்க அந்த வீட்டுல இருக்கிறவங்க. இவ்வளவு நாளா என் தங்கச்சிக்கு ஆசை காட்டிட்டு, இப்போ வேற ஒரு பொண்ணை மருமகளா கொண்டு வந்தா என்ன அர்த்தம்? இதுக்கு உங்க அம்மாவும் உடந்தையா?


  இவ்வளவு நாளா அவங்க கூட இருந்து, பார்த்து கிட்ட நம்மளை விட, ஓடிப்போன அந்த ஆளோட, மக தான் முக்கியமா போயிட்டாளா?"


    "மாறா இது என்ன பேச்சு? பெரியவங்க சின்னவங்கன்னு மரியாதை இல்லாம. அவர் உனக்கு சித்தப்பா, மரியாதையா பேசு."


  "என்னப்பா, திடீர்னு உடன் பிறந்தவர் மேல பாசம் பொத்துக்கிட்டு வருது. என் தங்கச்சியை இங்கே அழவெச்சுட்டு, அங்க உங்க தம்பி பொண்ணு நல்லா வாழ்ந்துடுவாளா? இல்லே நான் தான் அவளை நல்லா வாழ விட்டுடுவேனா? "


  பொறுமை இழந்த வேலப்பன் ஐயா கத்த தொடங்கி விட்டார்.


  "மாறா...என்ன பேச்சு பேசுற நீ...? புகுந்த வீட்டில புதுசா வாழ போற  பொண்ணை பார்த்து பேசுற பேச்சா இது? அவளும் உனக்கு தங்கச்சி மாதிரி தானேடா? அவ வாழ்க்கை நல்லா இருக்க கூடாதுன்னு, நினைக்கிறது கூட ரொம்ப தப்பு."


     "கண்டதுங்களையெல்லாம் என்னால தங்கச்சியா ஏத்துக்க முடியாது தாத்தா. எனக்கு தங்கச்சியா இருக்கிற தகுதி, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டு, குடும்பத்தை விட்டு ஓடிப்போனவரோட பொண்ணுக்கு இல்ல.


  இங்க என் தங்கச்சியை காணோம் ஆனா, அங்க அந்த வேந்தன் அவசர அவசரமா கல்யாணம் பண்ணி இருக்கான். எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு, ரஞ்சியை அவன்தான் ஏதோ பிளான் பண்ணி கடத்தி வச்சிருக்கணும்."


    "மாறா...போதும் வாயை மூடு…வேந்தனை என்னன்னு நெனச்சே? உன்னை மாதிரி சுயநலத்துக்காக சொந்த பாட்டியவே கொலை பண்ண முயற்சி பண்ணுறவன்னா?"


  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அப்படியே அதிர்ந்து நின்று விட்டனர்.


    "மாமா என்ன சொல்றீங்க, மாறன் அத்தையை கொலை பண்ண முயற்சி செஞ்சானா?"


  "ஆமாம்மா, உன் புள்ள தான், உன் புள்ள மட்டும் இல்ல உன் பொண்ணும் சேர்ந்து தான் இந்த வேலைய பார்த்து இருக்காங்க. பூவு பின் வாசல்ல தானா விழுகல, இவங்க அந்த இடத்துல எண்ணெய்யை கொட்டி விழுக வச்சிருக்காங்க. இதைக் காரணமா வச்சு வேந்தனுக்கும் நிரஞ்சனாவுக்கும் கல்யாண ஏற்பாட்டை செய்யறதுக்காக."  


  மாறன் மிரண்டு நின்று விட்டான். எப்படி தாங்கள் தீட்டிய திட்டம் வெட்ட வெளிச்சமானது என்று.


  சரியாக அந்த நேரத்தில் தான் மூர்த்தி ஐயா, தீபனுடனும் தனது மூத்த மகனுடனும் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்.

Saturday, June 21, 2025

மன்னவரே 41


 

            அத்தியாயம் 41


என்னதான் மனதிற்கு ஒப்பாத திருமண ஏற்பாடாக இருந்தாலும், வேந்தனின் அருகில் மணமேடையில் அமரும் போது, மனதில் தோன்றிய பூரிப்பை அவளால் உணர முடிந்தது.


  தாய் தந்தையின் அனுமதியோடு நடக்கும் திருமணமாக இருந்தாலும், ஏனோ இந்த சூழ்நிலை புதிதாகவே அவளுக்கு பட்டது.


  வேந்தனின் கரங்களால் மாங்கல்யம்தனை சூடிக் கொள்ளும் போது, மனது முழுக்க ஒரு இதமான நிம்மதி பரவுவது போல அவளுக்கு தோன்றியது.


    விழிகளில் திரண்ட இருத்துளி நீர், எதற்காக என்றே அவளுக்கே தெரியவில்லை.


  கண்மூடி தன் மனதில் உண்டான உணர்வுகளில் லயித்திருந்தவள், வேந்தனது மதுரா என்ற அழைப்பில்தான் கண்களைத் திறந்தாள்.


  வேந்தன் குங்குமத்தை எடுத்து மதுவின் நெற்றியில் வைக்கும் போது, ஒரு நொடி இருவரும் தங்களை மறந்து முன் ஜென்ம நினைவுகளில் மூழ்கி போயினர்.


  நான்கு கண்களும் காதலாகி தீண்டிக்கொண்ட, அந்த அழகான உணர்வுகளின் வெளிப்பாட்டை கேமரா அழகாக பதிந்து கொண்டது.


  மணமக்கள் இருவரும் மூலவர் சன்னதிக்கு சென்று லிங்கத் திருமேனியரிடம் ஆசி பெற்று வந்தனர்.


    திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும், நேராக மருத்துவமனைக்குத்தான் அழைத்து வரப்பட்டனர். 


    திருமணத்தின் போது மதுவின் தாய் தந்தையர் இருவருமே அவளுடன் இல்லை, கனியமுதன் மட்டுமே அங்கு இருந்தான். ஆகவே அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.


  திருமணம் முடிந்த கையோடு வேந்தனின் அம்மாவும் பெரியம்மாவும் அவர்களின் கணவர்களோடு, மணமக்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


  மூர்த்தி ஐயா வேலப்பன் ஐயாவின் குடும்பத்தாரிடம் பேசுவதற்காக, திருமணம் முடிந்ததும் நேராக அங்கு சென்றுள்ளார்.


பாட்டிமார்கள் இருவரும் மணமக்களோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தீபனும் மூர்த்தியும் கூட ஊரில் ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட, வெற்றியும் சந்துருவும் தான் மணமக்களோடு சேர்ந்து வந்திருந்தனர்.


  மதுவின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ளதால் திருமணம் முடிந்ததும், நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தையும், மணமகன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே நேராக மருத்துவமனையில் இருந்து வேடந்தூரை நோக்கி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.


மது மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து பாட்டிகள் சொல்வதை மட்டுமே செய்து கொண்டிருந்தாள். அவர்கள் சொன்ன காரணத்திற்காக மட்டுமே தமது பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றவள், பிறகு ஒதுங்கி நின்று கொண்டாள். ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவில்லை.


  அவளின் தாய் தந்தையர் அவளிடம் பேச முயற்சிக்க, இவள் ஒரு வார்த்தை கூட திரும்பப் பேசவும் இல்லை, அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவும் இல்லை.


  நிலைமை மோசமாவதை உணர்ந்து வடிவுப்பாட்டி தான், நல்ல நேரம் போவதாக கூறி, மணமக்களை அங்கிருந்து வெளியே கூட்டி வந்தார்.


  லக்ஷ்மி அம்மாவின் அறையில் இருந்து வெளியே வரும்போதுதான், வினு மருத்துவமனையினுள் நுழைந்து கொண்டிருந்தாள். 


    மது வினுவிடமிருந்து ஒரு கவரை வாங்கி, தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழட்டி அதில் வைத்து விட்டு, அதில் இருந்த கம்மலையும் கண்ணாடி வளையல்களையும் மட்டும் போட்டுக் கொண்டால்.


  தான் கழட்டி வைத்த அத்தனை நகைகளையும், தன் அண்ணன் கைகளில் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறினால்.


  மது திடீரென்று இப்படி செய்ததும், அனைவரும் அதிர்ந்து அப்படியே நின்றுவிட, வினு மட்டும் மதுவின் பின்னால் சென்று கொண்டிருந்தால்.


  மது கொடுத்து விட்டுப் போன, நகைகளை கையில் வைத்திருந்த கனியமுதனுக்கு, கண்ணில் நீர் நிறைந்து போனது.


அந்த நகைகளை வடிவுபாட்டியின் கைகளில் கொடுத்தவன். வேந்தனைப் பார்த்து பேச தொடங்கினான்


"சின்ன பொண்ணுங்க அவ, ஏதாவது துடுக்குத்தனமா பேசிட்டா மனசுல வச்சுக்காதீங்க. இப்படி அவளை தனியா அனுப்ப கூடிய சூழ்நிலை வரும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. எங்க வீட்டு இளவரசி அவ, பத்திரமா பாத்துக்கங்க வேந்தன்."

 

    "முதல்ல கண்ணை தொடைங்க அமுதன். உங்க வீட்டில அவ இளவரசியா இருந்திருக்கலாம், ஆனா இனிமேல் எனக்கு அவதான் மகாராணி, கண்டிப்பா அவளை நான் நல்லபடியா பாத்துக்குவேன்.


  இப்ப கொஞ்சம் கோவத்துல இருக்கா, அதனாலதான் இப்படி நடந்துக்கிட்டா. கண்டிப்பா கொஞ்ச நாளிலேயே இந்த கோபம் குறையும். நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க அமுதன். அத்தை, மாமாவை நல்லா பாத்துக்கோங்க, நாங்க போயிட்டு வரோம்."


மதுவின் சம்பள பணம், எப்போதும் அவளது வங்கி கணக்கிலேயே தான் இருக்கும். அதை வைத்து நேற்று வெளியே சென்ற போது, தனக்கான தங்கக் காதணிகளை வாங்கியவள், சில கண்ணாடி வளையல்களையும் வாங்கிக் கொண்டாள். 


    எப்படியும் இந்த வீட்டில் இருந்து குண்டுமணி தங்கம் கூட, எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்ற முடிவோடு தான் இருந்தாள்.


  காலையில் தனது தாயின் நகைகளை அணிந்தது கூட, கல்யாணத்தின்போது, பேசு பொருள் ஆக கூடாது என்பதற்காக மட்டுமே, அதை அணிந்து கொண்டாள்.


  வீட்டில் பெட்டிகளை எடுத்து வைக்கும் போதே, சில துணிமணிகளுடன் தனது அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வைத்திருந்தால்.


  "வினு நான் கேட்டது என்ன ஆச்சு?"


  மதுவிடம் ஒரு கவரை கொடுத்த வினு,


    "மது ப்ளீஸ், நானும் உன் கூட வர்றேனே."


    "வேண்டாம் வினு எனக்காக நேத்துல இருந்து நீ ரொம்பவே அலைச்சல் பட்டுட்ட. கண்டிப்பா நான் திரும்ப வருவேன். உன்ன விட்டா எனக்கு வேற யாரு இருக்கா."


  இதை கூறும் போதே, மதுவுக்கும் வினுவுக்கும் கண்களில் குளம் கட்டிவிட்டது.


    கஷ்டப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்ட மது, வினுவிடம் தலையை அசைத்து விட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


    பிறகு அனைவரும் வந்ததும் கார் வேடந்தூர் நோக்கி புறப்பட்டது. வேந்தன் மருத்துவமனையின் உள்ளேயே பாட்டிகளிடம் கூறிவிட்டான், உள்ளே நடந்ததை பற்றி யாரும் எதுவும், மதுவிடம் பேசக்கூடாது என்று.


  இங்கு ஒரு ஜோடி வேடந்தூரை நோக்கி  பயணத்தை மேற்கொள்ள, அங்கு இன்னொரு ஜோடியோ, ஊருக்கு போகும் வழியில் இருந்து மாறி, எங்கெங்கோ சுற்றி, கடைசியாக ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.


  கூகுள் மேப்பின் உதவியுடன் பயணத்தை தொடங்கிய ராகுல், அங்கங்கு சாலையில் தோண்டப்பட்ட குழிகளாலும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாலும், அவனால் சரியாக வழி கண்டுபிடித்து செல்ல முடியவில்லை.


  அது இரவு நேரமானதால், யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை. ஒரு வழியாக விடிய தொடங்கியதும் தான், வெளிப்பட்ட மக்களின் உதவியோடு, ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


  விடியலின் போதே வேடந்தூரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து, எப்போது வேண்டுமானாலும் பேய் மழை பெய்யும் என்ற ஒரு காலநிலையை கொண்டு இருந்தது.


  நாச்சியம்மன் கோயிலின் முன்பு கட்டப்பட்ட மணிகள் யாவும், பலமான காற்றினால் வேகமாக அடிக்க தொடங்கியது.

Friday, June 20, 2025

மன்னவரே 40


 

            அத்தியாயம் 40

 

      "மதும்மா எங்களை பற்றி தெரியறதுக்கு முன்னாடி, உங்க அப்பா அம்மாவோட வாழ்க்கை பற்றி, நீ தெரிஞ்சுக்கனும்.


  வடிவு சொன்னா உனக்கு எதுவும் தெரியாதுன்னு, உன் அப்பா அம்மாக்கு எப்படி கல்யாணம் நடந்தது தெரியுமா?"


    மூர்த்தி தாத்தா நடந்தவைகள் அனைத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கு கூறி முடித்தார்.


    "உங்க அம்மாக்கு நிஜமான கவலை என்ன தெரியுமாம்மா? ஏற்கனவே தன்னால அந்த குடும்பம் பிரிஞ்சு இருக்கு. இப்போ தன் பொண்ணாலயும் அது மறுபடியும் நடந்திடுமோ அப்படிங்கற பயம் தான்.


  அதைவிட முக்கியம் நீங்க முறைப்படி கல்யாணம் செஞ்சுக்காதது."


  மதுவிற்கு கோபம் கோபமாக வந்தது, தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேளாமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு முடிவெடுப்பதா? அவள் மறுத்து பேச வர, மூர்த்தி தாத்தாவோ கைகளை நீட்டி பேசுவதை நிறுத்தச் சொல்லி,


  "உங்க ரெண்டு பேரையும் விசாரிக்க நான் இங்கே கூப்பிடல. உள்ளே ஐசியூல, போராடிட்டு இருக்க அந்த உயிருக்காக கேட்கறேன் முறைப்படி கல்யாணம் செஞ்சுக்க உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?"


  இதற்கு மேல் அவள் என்ன சொல்ல?... அவள் அன்னை கூறி சென்ற வார்த்தைகள் மட்டுமே ரீங்காரமாக, அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.


  "வீட்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் பேசி, நாளைக்கு அதிகாலை முகூர்த்தமா உங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கோம். உங்க ரெண்டு பேருக்கும் இதுல சம்மதமா? இல்லே..."


  தலை குனிந்தபடியே இருந்த மது திருவாய் மலர்ந்தாள்


     "சம்மதம்."


    அனைவரையும் விட, பல மடங்கு அதிர்ச்சியோடு, வேந்தன் திரும்பி மதுவை பார்த்தான்.


    தாத்தா இப்படி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கும் போது இவளோட ரியாக்ஷன் வேற மாதிரி இல்ல இருந்து இருக்கணும். இது என்ன சூறாவளிக்கு முந்தைய அமைதியா?


      மூர்த்தி தாத்தா வேந்தனின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க, தன் நண்பர்களின் குலுக்களில் சுய நினைவுக்கு வந்தவன், மூர்த்தி தாத்தாவைப் பார்த்து முழித்தான்.


  "உன் பதில் என்னப்பா?"


  "நீங்க எது சொன்னாலும் எனக்கு சம்மதம்ங்க ஐயா."


  அப்புறம் என்ன நண்பர்களின் துணையுடன் திருமண வேலைகள் ஆரம்பமானது.


  மது வினுவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து எங்கோ வெளியே சென்று விட்டாள்.


      வடிவுப்பாட்டியும் பூவுப்பாட்டியும் கனியமுதனும், பெண் வீட்டு சார்பாக திருமணதிற்கு தேவையானவற்றை கவனிக்க, வேந்தனின் நண்பர்கள் மற்ற வெளி வேலைகளை கவனித்துக் கொண்டனர்.


  அடுத்த நாள் அதிகாலையிலேயே மதுவுக்கும் வேந்தனுக்கும் அமிர்தலிங்கேஸ்வரர் கோயிலில் முகூர்த்தம் என்று முடிவானது.


  மது திரும்ப மருத்துவமனை வந்த போது எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். அன்னலட்சுமி அம்மா ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறினார்.


    ஆகவே அங்கு அவரை, தான் பார்த்துக் கொள்வதாக கூறி மல்லிகா மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.


    ஆனால் சிவராமன் மட்டும், தன் மனைவி கண் விழிக்காமல் அங்கிருந்து நகர்வதாக இல்லை என்று கூறிவிட்டார். அதனால் அமுதனும் அவரோடு மருத்துவமனையிலேயே இருந்து கொண்டான்.

   

  நேரம் இரவை தொட்டுக் கொண்டிருந்ததால் மது வினுவை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். வினு தான் உடன் இருப்பதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவளை மிரட்டி அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.


பாட்டிகள் இருவரும் அவளை, வீட்டிற்கு போகலாம் என்று அழைக்க, மறுக்காமல் அவளும் கிளம்பி விட்டால்.


    வேந்தனுக்கு மதுவின் இந்த அமைதி சரியாகப்படவில்லை. ஏதோ மனதில் ஒரு திட்டத்துடன் தான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறாள் என்று உறுதியாக நம்பினான். நாளையே வினுவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.


  பட்டு சேலை சரசரக்க பொன் ஆபரணங்களோடு ஜொலித்துக் கொண்டிருந்த மதுவிற்கு, புன்னகை மட்டும் குறையாகவே இருந்தது.


  வினு காலையிலிருந்து, இத்தோடு முப்பத்து ஐந்தாவது முறையாக கேட்டுவிட்டாள் மதுவிடம், 


    "கண்டிப்பா இப்படி ஒரு கல்யாணம் நடக்கணுமா மது? இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா? நான் வேணும்னா அண்ணாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசி பார்க்கட்டுமா?"


  "இதையே நீ எத்தனை தடவை தான் கேட்ப? எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். அத்தோடு எனக்காக யார்கிட்டயும் நீ போய் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம். அப்படி நீ பேசறேன்னு தெரிஞ்சுதுன்னா, இதுதான் நாம கடைசியா பேசுகிறதா இருக்கும். நாம நேத்து போயிட்டு வந்த இடத்தை பத்தியும், நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இது என் மேல சத்தியம்."


    "மது ஏன்டி இப்படி பேசுற? நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..."


  அவள் அடுத்து பேச வருவதற்குள் கனியமுதன் மதுவை தேடிக் கொண்டு வந்திருந்தான்.


அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, வினு வெளியே செல்ல போக, மது வினுவின் கைகளை பற்றி, அவள் அருகிலேயே அமர்த்தி கொண்டாள்.


    "மது...மதும்மா, உனக்கு...உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானே?"


    "ரொம்ப சீக்கிரம் வந்து கேட்டுட்ட, இன்னும் முகூர்த்தத்துக்கு ஒரு...மணி... நேரம்... இருக்கே. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து கேட்டு இருக்கலாம் இல்ல."


  அவனால் என்ன பதில் சொல்ல முடியும். தன் கைகளில் இருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டியை, மதுவிடம் கொடுத்தான்.


  "அம்மா உன்கிட்ட இந்த நகைகளை கொடுத்து, போட்டுக்க சொன்னாங்க."


  "கொடுத்தாச்சில்ல, நீ கிளம்பலாம்."


    வினுவிற்கு அமுதனை பார்க்க பாவமாக தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய, அவர்கள் நடந்து கொள்வதும் அப்படித்தானே.


    மதுவின் நிலையில் இருந்து, ஒருமுறை கூட அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லையே, அவளின் தோழியான தனக்கே அவளைப் பற்றியும் அவளின் குணத்தைப் பற்றியும் தெரியும் போது, ரத்த சொந்தங்களான இவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையே, என்ற ஆற்றாமையும் அவளுள் எழுந்தது.


    தன் தாய் கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு தான் மது மணவறைக்கு வந்தால். முகத்தில் சிறிது கனிவு கூட இல்லாது, விறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மதுவை பார்க்க, வேந்தனுக்கு கஷ்டமாக இருந்தது.


"மிஸ் மதுரம் காலையில ஹார்லிக்ஸ்க்கு பதிலா, துணிக்கு போட வைச்சிருந்த கஞ்சியை குடிச்சிட்டீங்களா என்ன? முறைக்காதீங்க மிஸ் மதுரம், அக்னி குண்டத்தை மூணு தடவை சுத்தி வரும்போது, ஒடஞ்சு விழுந்தர போறீங்க. விறைப்பை கொஞ்சம் கம்மி பண்ணுங்க. இல்லாட்டி நான் உங்களை தூக்கிட்டு சுத்தற மாதிரி ஆயிட போகுது."


    அதிகாலை முகூர்த்தத்தில், வேந்தனது திருக்கரங்களால் மாங்கல்யம்தனை கழுத்தினில் பூட்டிக் கொண்டால் மதுரயாழினி.

மன்னவரே 39


 

அத்தியாயம் 39


   "இத்தனை பேர் சுத்தி நிற்கறோம் நம்மள மனுசனாவாவது மதிச்சானான்னு பாரேன்.


அந்தப் புள்ள அழுகுறதுக்கு காரணமே இவன்தான். ஆனா அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு, எப்படி கண்ணாலேயே ஆறுதல் சொல்லிட்டு இருக்கான் பாரேன்."


  "ஏண்டா நீங்க வேற, அவனே வருத்தத்துல இருக்கான். இப்படி ரெண்டு பேரும் அவனை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க."


    "உனக்கு தெரியாது தீபா, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எங்களை வர சொல்லி, இவன் எங்களை என்ன மிரட்டு மிரட்டுனான்னு தெரியுமா?" 


  "அத விடு கல்யாண பொண்ணுக்கே தெரியாம, கல்யாணம் நடந்த கதையை எங்காவது கேள்விப்பட்டு இருக்கியா? அதுக்கு சாட்சி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கோம்டா நாங்க."


  "கூடிய சீக்கிரம் உன் கையாலேயே எங்களுக்கு கை காப்பு போட வேண்டி இருக்கும். எதுக்கும் உனக்கு தெரிஞ்ச நாலஞ்சு நல்ல வக்கீலோட அட்ரஸ் கொடுடா. முன் ஜாமினுக்கு எதுக்கும் இப்பவே நாங்க மூணு பேரும் சொல்லி வச்சுக்கிறோம்."


    "கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்டா, வேந்தா ஏதாவது பிரச்சனையா? யாருக்கும் தெரியாம நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கன்னா, கண்டிப்பா ஏதோ விஷயம் இல்லாம இருக்காது. சொல்லு ஏதாவது பிரச்சனையா? என்னால முடிஞ்ச உதவி ஏதாவது செய்யறேன்."


    " தீபா உன்னோட உதவி கண்டிப்பா எனக்கு தேவைப்படும். எனக்கு ஒரு வாக்கு கொடு தீபா, ஒருவேளை நான் மது பக்கத்துல இல்லாது போனா, மதுராவுக்கு ஏதாவது ஆபத்துன்னா, சொந்த பந்தங்களையே எதிர்த்து நிற்க வேண்டிய நிலையும் வரும், அப்போ ஒரு சகோதரனா அவளோட நீ துணை நிற்கணும்."


  வேந்தன் கூறியதை கேட்ட நண்பர்கள் அனைவரும் பதறிவிட்டனர்.


      "டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாது. நாங்க எல்லாருமே உங்க கூட தான் இருக்கோம்."


  "என்னடா இப்போ, இன்னைக்கே அந்த பொண்ண முறைப்படி உன் கூட கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறோம் பாரு."


  "அவங்க எதுக்கும் ஒத்து வரலைன்னா, நம்ம ஊருக்கு அப்படியே மதுவை கடத்திட்டு போயிடலாம். அதுக்காக நீ ஏன்டா என்ன என்னமோ பேசிக்கிட்டு இருக்க."


    வேந்தனின் பார்வை மதுவை மட்டுமே வட்டமிட்டு கொண்டிருந்தது. அவனுக்கும் புரிந்தது எவ்வளவு காலத்திற்கு தான் இதை தள்ளி போட முடியும். வரப்போகும் ஆபத்தை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.


  ஒன்று அவளது வீழ்ச்சி அல்லது மதுராவின் முடிவு. இதில் இரண்டில் ஏதோ ஒன்று நடந்தே தீர வேண்டும். அதை நினைக்கும் போதே அவனுக்கு நெஞ்சம் பதறியது. என்ன ஆனாலும் சரி இம்முறை மதுராவை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று முடிவு எடுத்துக் கொண்டான். 


  ஆனால் அதை மதுரா புரிந்து கொள்ள வேண்டுமே, 


அடுத்தவர்களுக்காக


வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தவளே,


உன்னை மனம் முழுவதும் 


சுமந்து நின்ற என்னை


ஏனடி நினைக்க மறந்தாய்?


        வேந்தனது பார்வையும் பேச்சும் ஏனோ நண்பர்களுக்கு வித்தியாசமாக பட்டது. ஆனால் ஏதோ பிரச்சினை என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.


    எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனுக்கு துணை நிற்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.


    சிவராமன் அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை சீட்டு, சாமிக்கு பூக்கள் எல்லாம் தான் வாங்கிக் வருவதாக கூறி, குடும்பத்தாரை கோவிலினுள் செல்லுமாறு அனுப்பி வைத்தார். 


      ஆனால் அவர் வாங்கிக் கொண்டிருக்கும் போதே, லட்சுமி அம்மாவை மயங்கிய நிலையில், தனது குடும்பத்தார் கோவிலினுள் இருந்து தூக்கிக் கொண்டு வர, பதறி அடித்து அவரிடம் ஓடினார். 


    அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கும் வரை, தன் மனைவியின் கையை விடாமல் இறுக பற்றிக் கொண்டு வந்தார்.


  தன் உயிரில் கலந்த உறவை, இந்த நிலையில் காணும் போது, அவருக்கு தன்னைச் சுற்றி இருந்த உலகம், நின்று போனது போன்று தோன்றியது.


  அவரின் கவனம் முழுவதும், தன் மனைவின் மீது மட்டுமே நிலை கொண்டிருந்தது.


    அவருக்கு மைல்டு அட்டேக் என்று டாக்டர்கள் கூறிய போது பதறித்தான் போனார். பிறகு அவரைக் காண உள்ளே சென்றபோதுதான் தன் மனைவியின் மூலம் தன் மகளுக்கு நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டார்.


  தன் உயிரில் பாதியான மனைவியின் நிலையை கண்டு வருந்துவதா? அல்லது மகளின் திருமணத்தை எண்ணி வருந்துவதா?


  அவர் அதிலிருந்து தெளிவதற்கு முன்பே, மறுபடியும் தனது மனைவியின் உடல்நிலை மோசமாகி, அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துக்கொண்டு போக செய்வதறியாது உடைந்து போனார்.


  கனியமுதன் தான், தந்தையின் நிலையை கவனித்து அவருடனே இருந்தான்.


  மூர்த்தி தாத்தா சிவராமனை அணுகி பேசத் தொடங்கினார்.


  "சிவராமா பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே, இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருந்தா எப்படிப்பா?


    பெத்தவங்க கிட்ட சொல்லாம செஞ்சுக்கிட்டாலும், அது கல்யாணம் தானே, அதை இல்லைன்னு நாம சொல்ல முடியாது இல்ல. நடந்ததென்னவோ நடந்துடுச்சு, இனி நடக்க போறது என்னன்னு பார்க்க வேண்டாமா?"


  "நான் என்னங்கய்யா சொல்லட்டும், நான் என் பெத்தவங்களுக்கு பண்ணத, இப்ப என் பொண்ணு எங்களுக்கு பண்ணி இருக்கா.


  அவ விருப்பம் இது தான்னு தெரிஞ்ச பிறகு, இனி பேசி என்ன ஆகப்போகுது. அதுதான் அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டாங்களே."


"அதுக்காக இப்படியே விட்டு விட முடியுமா? சின்ன பிள்ளைங்க அவங்கதான் கல்யாணத்தை விளையாட்டா எடுத்துக்கிட்டாலும், நாம அதை முறைப்படி செஞ்சு வைக்க வேணாமா? லட்சுமி சொன்னத கேட்ட இல்ல."


  "நீங்க சொல்ல வர்றது புரியுதுங்கயா, நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்."


   மூர்த்தி ஐயா, வடிவுப்பாட்டியிடமும் பூவுப்பாட்டியிடமும் கலந்தாலோசித்தார்.


    வேலப்பன் ஐயாவிடமும், ஊரில் உள்ள பூவுப்பாட்டியின் குடும்பத்தாரிடமும் இதைப் பற்றி கூற வேண்டுமே, என்று மூர்த்தி ஐயா கூறியதற்கு, பூவுப்ப்பாட்டி வேண்டாம் என்று முற்றிலுமாக மறுத்து விட்டார்.


    அவர்களுக்கு தெரிந்தால் இன்னும், பிரச்சனை தான் அதிகமாகும். அதனால் இங்கு அனைத்தையும் முடித்துவிட்டு நேராக ஊருக்கு சென்று சொல்லிக் கொள்ளலாம் என்று கூறினார்.


    மதுவையும் வேந்தனையும் தன்னுடன் வருமாறு அழைத்த மூர்த்தி தாத்தா, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தார்.


மதுவும் வேந்தனும் அவர் எதற்காக அழைக்கின்றார் என்று புரியாமல், தம் நண்பர்கள் புடைசூழ அவருடன் சென்றனர்.


Wednesday, June 18, 2025

மன்னவரே 38


 

             அத்தியாயம் 38


  மருத்துவமனை வளாகத்தில் ஐசியூவின் முன்பு, வேந்தன் மற்றும் மதுவின் மொத்த குடும்பமும், லட்சுமியம்மா கண் முழிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர்.


    அவர்களுக்கு சற்று தள்ளி, கண்களில் கண்ணீர் பெருக, ஐ சி யூ வின் கதவுகளை வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தால் மது. அவளின் இந்த நிலையை பார்த்து, மனம் நொந்தவாரே வாசல் பக்கம் ஒரு பார்வையும் இவளின் மீது ஒரு பார்வையுமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் வேந்தன்.


  இவளை இந்நிலையில் காணப் பொறுக்காமல், மதுவின் தோழியான வினுவிற்கு தொலைபேசியில் அழைத்து, இந்த ஹாஸ்பிடலில் முகவரியைச் சொல்லி, உடனே வந்து பார்க்குமாறு கூறியிருந்தான். அவளுக்காக தான் வாசலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 


    இப்போதைய சூழ்நிலையில் தன்னைவிட, அவளது தோழியின் துணையே அவளுக்கு பக்கபலமாக இருக்கும் என்று உணர்ந்து, வினுவை அழைத்திருந்தான்.


      லட்சுமி அம்மாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் வெளியே வந்து அனைவரையும் சத்தம் போட தொடங்கினார்.


  "நான் தான் உங்ககிட்ட சொல்லி இருந்தேனே, அவங்களுக்கு மேல மேல பிரஷரை ஏத்தக்கூடாதுன்னு, திரும்பவும் ஏன் இப்படி பேசி பேசி அவங்க உயிருக்கு  ஆபத்தை ஏற்படுத்துறீங்க. இப்ப அவங்களை ஐ சி யு குள்ள கண்டிப்பா அட்மிட் பண்ணியே ஆகணும்."


  லட்சுமி அம்மா ஐ சி யு வில் அட்மிட் செய்யப்பட்டார் பல உபகரணங்களின் உதவியால் சீராக மூச்சு விட ஆரம்பித்தார்.


    நடந்ததை நினைத்துப் பார்த்த மதுவிற்கு தன்நிலையை எண்ணி, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.


    பிறருக்கு நன்மை செய்ய வேண்டி ஒரு பொய்யை சொல்ல போக, அது தனக்கே இப்படி வினையாக முடியும் என்று, அவள் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை.


  அதைவிட தனது குடும்பம், தன் மீது வைத்த நம்பிக்கை இவ்வளவுதானா என்று என்னும்போது, அவளுக்கு மனம் கனத்துப் போனது.


  தனது வாய்மொழியாகவே கேட்டாலுமே, இவர்கள் தங்கள் வீட்டுப் பெண் அப்படி எல்லாம் செய்ய மாட்டாள்  என்று கூற வேண்டாமா? இது தான் அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையா? என்று அவள் மனது அவளிடமே கேள்வி கேட்டது.


    அது மட்டுமா தன் உடன் பிறந்தோனும் தன்னை பெற்றெடுத்தவருமான தந்தையுமே, தன்னிடம் இன்னும் இது பற்றி, ஒரு வார்த்தை கேட்கவில்லையே, அவர்களும் என்னை நம்பவில்லையோ? என்று மனம் வெதும்பினால்.


    அமுதனால் இன்னும் நம்ப முடியவில்லை கோயிலில் பேசியது தனது தங்கைதானா என்று. அதுவும் தங்களுக்கு தெரியாமல் அவள் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் என்று அவனால் நம்பவே முடியவில்லை.


  பூவுப்பாட்டிக்கு வடிவுப்பாட்டி ஆறுதல் கூறிக் கொண்டிருக்க, தளர்ந்து போய் அமர்ந்திருந்த, தனது தந்தையை ஆறுதல் படுத்த அவரோடு அமர்ந்திருந்தான் அமுதன். இதனால் தன் தங்கையிடம் சென்று பேச அவனால் முடியவில்லை.


  ஒருவேளை தனது தங்கைக்கும் வேந்தனுக்கும் முன்பே அறிமுகம் இருக்குமோ, என்ற சந்தேகமும் அவனுக்கு தோன்றாமல் இல்லை.


    அவசரமாக மருத்துவமனை வளாகத்தில் நுழைந்த வினு, நேராக மதுவிடம் சென்று அமர்ந்தாள்.


    "என்னாச்சு மது?"


    "யாருக்கும் தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன். அது தெரிஞ்சதால அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு."


  "கண்டிப்பா இருக்காது, எங்களுக்கு தெரியாம இதை நீ செஞ்சிருக்கவே மாட்டே, ஏதாவது ஒரு சிச்சுவேஷனா இருந்திருக்கலாம். அதனால நீ பொய் சொல்லி இருக்கலாம், அது தெரியாம அம்மா இதை உண்மைனு நினைச்சுட்டாங்களா? சரி விடு அம்மா திரும்ப வந்ததும் நம்ம சொல்லி புரிய வச்சுக்கலாம்."


  ஐ சி யூ வின் கதவுகளை வெறித்துக் கொண்டிருந்த மதுவின் பார்வை, வினுவிடம் திரும்பியது. அவளை கட்டிக்கொண்டு கதறி அழ  தொடங்கினாள்.


  வினு பேசியதை கேட்ட கனியமுதனுக்கு, தான் ஏன் அவ்வாறு நினைக்கவில்லை என்று, மனது உறுத்தியது.


    "அடடா மது குட்டி, எதுக்காக இப்போ டேமை இப்படி ஓபன் பண்ணிட்டு இருக்க, லட்சும்மா ரொம்ப தான் உன்னை திட்டிட்டாங்களோ, விடு அவங்க வந்ததும் நாம ரெண்டு பேரும் சேர்ந்து, அவங்களை ஒரு கை பார்த்துக்கலாம் சரியா அழக்கூடாது."


  தோழியை தனது சேய்யாக்கி தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் வினு. அவள் மன பாரம் போக்க, வேறு கதைகளை பேசி அவளை திசைதிருப்பத் தொடங்கினாள்.


வினுவின் வரவால் தனது மனதை நிலைப்படுத்திக் கொண்ட மதுவிற்கு, அப்போதுதான் நினைவு வந்தது.


  "ஆமா வினு நான் உனக்கு கால் பண்ணவே இல்லையே? உனக்கு எப்படி தெரியும், நான் இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கேன்னு? அண்ணா கூப்பிட்டு இருந்தானா?"


    தன் அண்ணன் தனக்காக வினுவை வரவழைத்து இருப்பானோ என்று ஆர்வத்தோடு மது கேட்க,


"இல்ல மது, வேந்தன் சார் தான் எனக்கு கூப்பிட்டு இருந்தாரு. உடனே இங்க என்னை வர சொன்னாரு."


  அப்போதுதான் மதுவிற்கு வேந்தனின் குடும்பமும் இங்கே இருப்பது நினைவுக்கு வந்தது. உடனே திரும்பி வேந்தனை தேடியவள், தனக்கு சற்று தள்ளி நண்பர்கள் புடை சூழ நின்று கொண்டு, தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் வேந்தனை கண்டால்.


    அவனைக் கண்டவுடன் மறுபடியும் நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர, கண்களில் மீண்டும் கண்ணீர் சூழ்ந்தது. தனது உதட்டை கடித்த அழுகையை அடக்கி கொண்டவளை வேந்தன், சூழ்நிலை அறிந்து கண்களாலே அவளுக்கு ஆறுதல் கூற தொடங்கினான்.


    வேந்தன் அவனது வலது கையை நெஞ்சில் வைத்து, கண்களை மூடி திறந்து அனைத்தையும் தான் பார்த்துக் கொள்வதாக விழி வழியே அவளுக்கு செய்தி அனுப்ப, புரிந்து கொண்டு சரியென்று அவளும் தலையை அசைத்தால்.


  இடது கையால் இதழ்களுக்கு நேராய் வைத்து ஸ்மைலி என்று சைகை அனுப்ப, அவளும் மென்னகை புரிந்தால்.


  இவர்களின் விழி மொழியினை அங்குள்ளவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர், ஆனால் அனைவரின் மனதிலும் தோன்றியது ஒன்றுதான், ஒருவேளை லட்சுமி அம்மா கூறியது உண்மை தானோ என்று.


    இவ்வளவு நேரமும் ஒருவேளை லட்சுமி அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே தெரிந்தது, இருவருக்கும் இடையே இருக்கும் புரிதல்.


  அப்போதே சுந்தரமூர்த்தி ஐயா ஒரு முடிவு எடுத்துவிட்டார். அதை பற்றி மதுவின் தந்தையிடம் பகிர்ந்து கொள்ள, அவரை நோக்கி சென்றார்.


  வினு உள்ளே நுழையும் போதுதான் வேந்தனின் நண்பர்களும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.


    விஷயம் அறிந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து, வேந்தனை முறைத்துக் கொண்டே அவனை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.


    ஆனால் வேந்தன் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை. அவனது பார்வை மொத்தமும் மதுவின் மீது மட்டுமே இருந்தது.

Tuesday, June 17, 2025

மன்னவரே 37


 

             அத்தியாயம் 37


    குருஜியின் ஆசிரமத்தில் விஜயன், தன்னைச் சுற்றி, தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்த, குருஜியின் சீடர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.


    "இப்படி மாடு மாதிரி வளர்ந்து இருக்கீங்களே கொஞ்சமாவது அறிவு இருக்கா? இப்படி அந்த பொண்ணை தொலைச்சிட்டு வந்து நிக்கிறீங்களே, இதுதான் நீங்க பொறுப்பா இருக்கற லட்சணமா?"


    "அந்தப் பொண்ணு பத்திரமா பாத்துக்கிறதை தவிர, உங்களுக்கு என்னடா வேலை? அப்படி என்ன வேலையை பார்த்து கிழிச்சீங்க?"


    "பொறு விஜயா சற்று அமைதி கொள்."


  "எப்படி குருஜி அமைதியா இருக்கிறது. நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள். அந்த பொண்ணு நம்மகிட்ட இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமுன்னு உங்களுக்கே தெரியும். இவனுங்க இப்படி தொலைச்சிட்டு வந்து நிக்கிறானுங்களே இனி எப்படி என் பொண்ணு நினைச்சதை சாதிப்பா.


  இதுக்காக நம்ம எவ்வளவு வேலை பார்த்திருக்கோம், கோயில்ல இருக்கிற சாமியை மந்திர கட்டால அடக்கி வைச்சிருக்கோம்.


  அந்த காட்டு பிச்சியை, அந்த காட்டை விட்டு எங்கேயும் வெளியே போக முடியாதபடி, மந்திரத்தால கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம்.


    அது மட்டுமா அந்த கோயில்ல சாமி ஆடுற பூசாரியை, குருந்த மரத்தடியில் இருந்து மண் எடுக்கணும்னு சொல்ல சொல்லி, மண்ணு எடுக்கிறது மூலமா அந்த காட்டு பிச்சியோட மிச்சம் இருக்கிற சக்தியை எல்லாம் முடக்கப் போறோம்.


        இத்தனையும் எதுக்காக, என் பொண்ணோட ஆசைக்காக தான், ஆனா அதுவே நடக்காம போயிடும் போல இருக்கே."


      "விஜயா நான் சொல்வதை முதலில் பொறுமையாக கேள். ஏற்கனவே அந்த பெண் நிரஞ்சனாவின் உடலில், உன் பெண்ணின் ஆன்மா ஒப்புவதற்கான வழிமுறைகளை செய்து விட்டேன்.


  இனி ஒன்றே ஒன்றுதான் பாக்கி, நாளை உன் மகள் அந்த மோகினி பள்ளத்தில் இருந்து வெளிப்படும் போது, இந்த நிரஞ்சனா அந்த ஊரில் இருக்க வேண்டும்.


  இந்தப் பெண் நிரஞ்சனாவை, உன் மகளுக்காகவே உருவேற்றி வந்துள்ளோம். அவளைத் தவிர வேற யார் உடலிலும் உன் மகளின் ஆன்மாவால் உட்புக முடியாது.


  எனது கணிப்பு சரி என்றால் நம்மிடமிருந்து தப்பித்த அந்த பெண், நிச்சயமாக அவளது ஊரிற்குதான் சென்று கொண்டிருப்பாள்.


  அதனால் கவலை ஏதும் இல்லை, நீ அமைதி கொள் விஜயா, நிச்சயம் வெற்றி நமதே."


    லட்சுமியம்மாவுக்கு மதுவை வேந்தனுடன் கண்டபோது அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவனை திருமணம் செய்து கொண்டு விட்டதாக கூறிக் கொண்டிருக்க, அவர் முற்றிலுமாக உடைந்து போனார்.


    நிரஞ்சனாவை பற்றி பூவுப்பாட்டி காலையில் தான் அவரிடம் கூறியிருந்தார். ஏற்கனவே தன்னால், தனது புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீராமல் அப்படியே இருக்க, மீண்டும் தான் பெற்ற மகளால், புதிதாக உருவாகி இருக்கும் இந்த பிரச்சினையை எண்ணி மனம் துவண்டார். 


    சரி விதி ஆடும் ஆட்டத்தில், யாருக்கு யார் என்பது இறைவன் போட்ட முடிச்சு, அதை யாரால் மாற்ற முடியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் மேலும் பேசியதை கேட்டு அதிர்ந்து நின்றார்.


  அதுவும் அவள் தாலி மற்றும் குங்குமத்தை பற்றி கூறியது, தனது வளர்ப்பு பொய்த்து விட்டதோ என்று அந்த தாய் மனது நொறுங்கிப் போனது..


  அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டு கோவிலில் சரிந்தவரை, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 


    டாக்டர்கள் அவரை பரிசோதித்துவிட்டு இது அவருக்கு மைல்டு அட்டாக் என்று கூறினர்.


    அவரின் மன அழுத்தமும், எதிர்பாராத அதிர்ச்சியும் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறினர். மீண்டும் இது போன்று அதிர்ச்சியான தகவல்கள் எதுவும் அவரை  நெருங்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.


  குடும்பத்தினர் அனைவரும் லக்ஷ்மியம்மாவை காண உள்ளே செல்ல, மெதுவாக கண்விழித்தவர் தன் மகளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டு, கத்த தொடங்கினார்.


  "அவள வெளிய போக சொல்லுங்கத்தே. நான் யாரையும் இப்ப பார்க்க தயாரா இல்லை, என்னோட வளர்ப்பு சரியா இல்ல போல, அதனாலதான் பெத்தவங்க கிட்ட கூட சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்க அவ முடிவு பண்ணிட்டா.


    அது மட்டுமா, எந்த நாட்டுல பிறந்துட்டு தாலியும் நெற்றி நிறைய வைக்கிற குங்குமமும் மதிப்பில்லைன்னு சொல்லிட்டா? எனக்கு அவளைப் பார்க்க இஷ்டம் இல்ல, வெளியே போக சொல்லுங்க."


    "அம்மா நான் சொல்றதை கேளு,  அவர்கிட்ட சும்மா விளையாட்டுக்காக தான் சொல்லிட்டு இருந்தேன்."


    "எது விளையாட்டு, தாலி உனக்கு விளையாடும் விஷயமா? குங்குமமும் மாங்கல்யமும் எவ்வளவு புனிதமானதுன்னு தெரியுமா?  இந்த நாட்டுல பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் அது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியுமா?"


"அம்மா நான் சொல்றத கேளு."


  "இனி கேட்க என்ன இருக்கு, அதுதான் நீ சொன்னது எல்லாத்தையுமே என் காதால கேட்டுட்டேனே."


    "ஐயோ அம்மா..., நான் சொல்ல வர்றதை கொஞ்சம் கேளு, நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. சில விஷயத்துக்காக நான் பொய் சொன்னேன்."


   வடிவுப்பாட்டி தான் மதுவிற்கு ஆதரவாக பேசினார்,


  "லட்சுமி மொதல்ல புள்ள சொல்றத, கொஞ்சம் காது கொடுத்து கேளு. அதுக்கு முன்னவே நம்ம புள்ளைய நாமலே சந்தேகப்படலாமா?"


  "இதுக்கு மேல என்ன கேட்கிறது. கண்ணால பாத்தாச்சு, அவ வாய்மொழியாகவே கேட்க வேண்டிய அளவுக்கு கேட்டாச்சு. இதுக்கு மேலயும் அவ என்ன சொல்லி, நான் என்னத்த கேட்க. இன்னைக்கு காலையில அவ ரெஜிஸ்டர் ஆபீஸ் போனது உண்மையா, பொய்யான்னு மட்டும் என் மேல சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்க"


  "நான் போனது உண்மைதான். ஆனா…"


    "போதும் இதுக்கு மேல நீ சொல்ற எதையும் நான் கேட்க வேண்டாம். அத்தை நான் தான் சொல்றனே அவள வெளியே போக சொல்லுங்க. இங்கயே இருந்து என்னை உயிரோட கொல்ல வேண்டாமுன்னு சொல்லுங்க.


  அவள பெத்ததுக்கு எனக்காக ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்ய சொல்லுங்க, என்னோட கடைசி ஆசையும் இதுதான்.


  இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு பொண்ணுக்கும் மாங்கல்யம் என்கிறது புனிதமானது. அதை கட்டிக்காம குடும்பம் நடத்துவது ஒரு தப்பான முறையா போய்விடும். தயவு செய்து அவர் கையால, இவ கழுத்துல மாங்கல்யம் வாங்கிட்டு, என் பொணத்தை வந்து பார்க்க சொல்லுங்க.


  அப்படி இல்லைனா, அவ என்னை பாக்கவே வரவேண்டாம் வெளிய போக சொல்லுங்க."


    பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, மூச்சுக்களை பெரிது பெரிதாக இழுத்து விட ஆரம்பித்தார்.


  உடனே டாக்டரும் நர்ஸ்களும் அழைக்கப்பட்டு, அவருக்கு மறுபடியும் சிகிச்சை ஆரம்பமானது.