Search This Blog

Followers

Powered By Blogger

Saturday, June 21, 2025

மன்னவரே 41


 

            அத்தியாயம் 41


என்னதான் மனதிற்கு ஒப்பாத திருமண ஏற்பாடாக இருந்தாலும், வேந்தனின் அருகில் மணமேடையில் அமரும் போது, மனதில் தோன்றிய பூரிப்பை அவளால் உணர முடிந்தது.


  தாய் தந்தையின் அனுமதியோடு நடக்கும் திருமணமாக இருந்தாலும், ஏனோ இந்த சூழ்நிலை புதிதாகவே அவளுக்கு பட்டது.


  வேந்தனின் கரங்களால் மாங்கல்யம்தனை சூடிக் கொள்ளும் போது, மனது முழுக்க ஒரு இதமான நிம்மதி பரவுவது போல அவளுக்கு தோன்றியது.


    விழிகளில் திரண்ட இருத்துளி நீர், எதற்காக என்றே அவளுக்கே தெரியவில்லை.


  கண்மூடி தன் மனதில் உண்டான உணர்வுகளில் லயித்திருந்தவள், வேந்தனது மதுரா என்ற அழைப்பில்தான் கண்களைத் திறந்தாள்.


  வேந்தன் குங்குமத்தை எடுத்து மதுவின் நெற்றியில் வைக்கும் போது, ஒரு நொடி இருவரும் தங்களை மறந்து முன் ஜென்ம நினைவுகளில் மூழ்கி போயினர்.


  நான்கு கண்களும் காதலாகி தீண்டிக்கொண்ட, அந்த அழகான உணர்வுகளின் வெளிப்பாட்டை கேமரா அழகாக பதிந்து கொண்டது.


  மணமக்கள் இருவரும் மூலவர் சன்னதிக்கு சென்று லிங்கத் திருமேனியரிடம் ஆசி பெற்று வந்தனர்.


    திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் இருவரும், நேராக மருத்துவமனைக்குத்தான் அழைத்து வரப்பட்டனர். 


    திருமணத்தின் போது மதுவின் தாய் தந்தையர் இருவருமே அவளுடன் இல்லை, கனியமுதன் மட்டுமே அங்கு இருந்தான். ஆகவே அவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக இங்கு அவர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.


  திருமணம் முடிந்த கையோடு வேந்தனின் அம்மாவும் பெரியம்மாவும் அவர்களின் கணவர்களோடு, மணமக்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


  மூர்த்தி ஐயா வேலப்பன் ஐயாவின் குடும்பத்தாரிடம் பேசுவதற்காக, திருமணம் முடிந்ததும் நேராக அங்கு சென்றுள்ளார்.


பாட்டிமார்கள் இருவரும் மணமக்களோடு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். தீபனும் மூர்த்தியும் கூட ஊரில் ஏற்பாடுகளை கவனிக்கச் சென்று விட, வெற்றியும் சந்துருவும் தான் மணமக்களோடு சேர்ந்து வந்திருந்தனர்.


  மதுவின் பெற்றோர் மருத்துவமனையில் உள்ளதால் திருமணம் முடிந்ததும், நடக்க வேண்டிய சடங்குகள் அனைத்தையும், மணமகன் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே நேராக மருத்துவமனையில் இருந்து வேடந்தூரை நோக்கி பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.


மது மருத்துவமனைக்கு வந்ததிலிருந்து பாட்டிகள் சொல்வதை மட்டுமே செய்து கொண்டிருந்தாள். அவர்கள் சொன்ன காரணத்திற்காக மட்டுமே தமது பெற்றோர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றவள், பிறகு ஒதுங்கி நின்று கொண்டாள். ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவில்லை.


  அவளின் தாய் தந்தையர் அவளிடம் பேச முயற்சிக்க, இவள் ஒரு வார்த்தை கூட திரும்பப் பேசவும் இல்லை, அவர்கள் சொன்னதை கேட்டுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவும் இல்லை.


  நிலைமை மோசமாவதை உணர்ந்து வடிவுப்பாட்டி தான், நல்ல நேரம் போவதாக கூறி, மணமக்களை அங்கிருந்து வெளியே கூட்டி வந்தார்.


  லக்ஷ்மி அம்மாவின் அறையில் இருந்து வெளியே வரும்போதுதான், வினு மருத்துவமனையினுள் நுழைந்து கொண்டிருந்தாள். 


    மது வினுவிடமிருந்து ஒரு கவரை வாங்கி, தான் அணிந்திருந்த அத்தனை நகைகளையும் கழட்டி அதில் வைத்து விட்டு, அதில் இருந்த கம்மலையும் கண்ணாடி வளையல்களையும் மட்டும் போட்டுக் கொண்டால்.


  தான் கழட்டி வைத்த அத்தனை நகைகளையும், தன் அண்ணன் கைகளில் கொடுத்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறினால்.


  மது திடீரென்று இப்படி செய்ததும், அனைவரும் அதிர்ந்து அப்படியே நின்றுவிட, வினு மட்டும் மதுவின் பின்னால் சென்று கொண்டிருந்தால்.


  மது கொடுத்து விட்டுப் போன, நகைகளை கையில் வைத்திருந்த கனியமுதனுக்கு, கண்ணில் நீர் நிறைந்து போனது.


அந்த நகைகளை வடிவுபாட்டியின் கைகளில் கொடுத்தவன். வேந்தனைப் பார்த்து பேச தொடங்கினான்


"சின்ன பொண்ணுங்க அவ, ஏதாவது துடுக்குத்தனமா பேசிட்டா மனசுல வச்சுக்காதீங்க. இப்படி அவளை தனியா அனுப்ப கூடிய சூழ்நிலை வரும்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. எங்க வீட்டு இளவரசி அவ, பத்திரமா பாத்துக்கங்க வேந்தன்."

 

    "முதல்ல கண்ணை தொடைங்க அமுதன். உங்க வீட்டில அவ இளவரசியா இருந்திருக்கலாம், ஆனா இனிமேல் எனக்கு அவதான் மகாராணி, கண்டிப்பா அவளை நான் நல்லபடியா பாத்துக்குவேன்.


  இப்ப கொஞ்சம் கோவத்துல இருக்கா, அதனாலதான் இப்படி நடந்துக்கிட்டா. கண்டிப்பா கொஞ்ச நாளிலேயே இந்த கோபம் குறையும். நீங்க எதுவும் மனசுல வச்சுக்காதீங்க அமுதன். அத்தை, மாமாவை நல்லா பாத்துக்கோங்க, நாங்க போயிட்டு வரோம்."


மதுவின் சம்பள பணம், எப்போதும் அவளது வங்கி கணக்கிலேயே தான் இருக்கும். அதை வைத்து நேற்று வெளியே சென்ற போது, தனக்கான தங்கக் காதணிகளை வாங்கியவள், சில கண்ணாடி வளையல்களையும் வாங்கிக் கொண்டாள். 


    எப்படியும் இந்த வீட்டில் இருந்து குண்டுமணி தங்கம் கூட, எடுத்துக் கொண்டு போகக்கூடாது என்ற முடிவோடு தான் இருந்தாள்.


  காலையில் தனது தாயின் நகைகளை அணிந்தது கூட, கல்யாணத்தின்போது, பேசு பொருள் ஆக கூடாது என்பதற்காக மட்டுமே, அதை அணிந்து கொண்டாள்.


  வீட்டில் பெட்டிகளை எடுத்து வைக்கும் போதே, சில துணிமணிகளுடன் தனது அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வைத்திருந்தால்.


  "வினு நான் கேட்டது என்ன ஆச்சு?"


  மதுவிடம் ஒரு கவரை கொடுத்த வினு,


    "மது ப்ளீஸ், நானும் உன் கூட வர்றேனே."


    "வேண்டாம் வினு எனக்காக நேத்துல இருந்து நீ ரொம்பவே அலைச்சல் பட்டுட்ட. கண்டிப்பா நான் திரும்ப வருவேன். உன்ன விட்டா எனக்கு வேற யாரு இருக்கா."


  இதை கூறும் போதே, மதுவுக்கும் வினுவுக்கும் கண்களில் குளம் கட்டிவிட்டது.


    கஷ்டப்பட்டு தன்னை சமாளித்துக் கொண்ட மது, வினுவிடம் தலையை அசைத்து விட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


    பிறகு அனைவரும் வந்ததும் கார் வேடந்தூர் நோக்கி புறப்பட்டது. வேந்தன் மருத்துவமனையின் உள்ளேயே பாட்டிகளிடம் கூறிவிட்டான், உள்ளே நடந்ததை பற்றி யாரும் எதுவும், மதுவிடம் பேசக்கூடாது என்று.


  இங்கு ஒரு ஜோடி வேடந்தூரை நோக்கி  பயணத்தை மேற்கொள்ள, அங்கு இன்னொரு ஜோடியோ, ஊருக்கு போகும் வழியில் இருந்து மாறி, எங்கெங்கோ சுற்றி, கடைசியாக ஊரை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது.


  கூகுள் மேப்பின் உதவியுடன் பயணத்தை தொடங்கிய ராகுல், அங்கங்கு சாலையில் தோண்டப்பட்ட குழிகளாலும், மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டதாலும், அவனால் சரியாக வழி கண்டுபிடித்து செல்ல முடியவில்லை.


  அது இரவு நேரமானதால், யாரிடமும் விசாரிக்கவும் முடியவில்லை. ஒரு வழியாக விடிய தொடங்கியதும் தான், வெளிப்பட்ட மக்களின் உதவியோடு, ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


  விடியலின் போதே வேடந்தூரை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்து, எப்போது வேண்டுமானாலும் பேய் மழை பெய்யும் என்ற ஒரு காலநிலையை கொண்டு இருந்தது.


  நாச்சியம்மன் கோயிலின் முன்பு கட்டப்பட்ட மணிகள் யாவும், பலமான காற்றினால் வேகமாக அடிக்க தொடங்கியது.

No comments:

Post a Comment