Search This Blog

Followers

Powered By Blogger

Friday, June 20, 2025

மன்னவரே 39


 

அத்தியாயம் 39


   "இத்தனை பேர் சுத்தி நிற்கறோம் நம்மள மனுசனாவாவது மதிச்சானான்னு பாரேன்.


அந்தப் புள்ள அழுகுறதுக்கு காரணமே இவன்தான். ஆனா அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு, எப்படி கண்ணாலேயே ஆறுதல் சொல்லிட்டு இருக்கான் பாரேன்."


  "ஏண்டா நீங்க வேற, அவனே வருத்தத்துல இருக்கான். இப்படி ரெண்டு பேரும் அவனை வெறுப்பேத்திட்டு இருக்கீங்க."


    "உனக்கு தெரியாது தீபா, ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு எங்களை வர சொல்லி, இவன் எங்களை என்ன மிரட்டு மிரட்டுனான்னு தெரியுமா?" 


  "அத விடு கல்யாண பொண்ணுக்கே தெரியாம, கல்யாணம் நடந்த கதையை எங்காவது கேள்விப்பட்டு இருக்கியா? அதுக்கு சாட்சி கையெழுத்து போட்டுட்டு வந்திருக்கோம்டா நாங்க."


  "கூடிய சீக்கிரம் உன் கையாலேயே எங்களுக்கு கை காப்பு போட வேண்டி இருக்கும். எதுக்கும் உனக்கு தெரிஞ்ச நாலஞ்சு நல்ல வக்கீலோட அட்ரஸ் கொடுடா. முன் ஜாமினுக்கு எதுக்கும் இப்பவே நாங்க மூணு பேரும் சொல்லி வச்சுக்கிறோம்."


    "கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்டா, வேந்தா ஏதாவது பிரச்சனையா? யாருக்கும் தெரியாம நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கன்னா, கண்டிப்பா ஏதோ விஷயம் இல்லாம இருக்காது. சொல்லு ஏதாவது பிரச்சனையா? என்னால முடிஞ்ச உதவி ஏதாவது செய்யறேன்."


    " தீபா உன்னோட உதவி கண்டிப்பா எனக்கு தேவைப்படும். எனக்கு ஒரு வாக்கு கொடு தீபா, ஒருவேளை நான் மது பக்கத்துல இல்லாது போனா, மதுராவுக்கு ஏதாவது ஆபத்துன்னா, சொந்த பந்தங்களையே எதிர்த்து நிற்க வேண்டிய நிலையும் வரும், அப்போ ஒரு சகோதரனா அவளோட நீ துணை நிற்கணும்."


  வேந்தன் கூறியதை கேட்ட நண்பர்கள் அனைவரும் பதறிவிட்டனர்.


      "டேய் என்னடா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க, உங்க ரெண்டு பேருக்கும் ஒன்னும் ஆகாது. நாங்க எல்லாருமே உங்க கூட தான் இருக்கோம்."


  "என்னடா இப்போ, இன்னைக்கே அந்த பொண்ண முறைப்படி உன் கூட கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கிறோம் பாரு."


  "அவங்க எதுக்கும் ஒத்து வரலைன்னா, நம்ம ஊருக்கு அப்படியே மதுவை கடத்திட்டு போயிடலாம். அதுக்காக நீ ஏன்டா என்ன என்னமோ பேசிக்கிட்டு இருக்க."


    வேந்தனின் பார்வை மதுவை மட்டுமே வட்டமிட்டு கொண்டிருந்தது. அவனுக்கும் புரிந்தது எவ்வளவு காலத்திற்கு தான் இதை தள்ளி போட முடியும். வரப்போகும் ஆபத்தை எதிர்கொண்டு தானே ஆக வேண்டும்.


  ஒன்று அவளது வீழ்ச்சி அல்லது மதுராவின் முடிவு. இதில் இரண்டில் ஏதோ ஒன்று நடந்தே தீர வேண்டும். அதை நினைக்கும் போதே அவனுக்கு நெஞ்சம் பதறியது. என்ன ஆனாலும் சரி இம்முறை மதுராவை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று முடிவு எடுத்துக் கொண்டான். 


  ஆனால் அதை மதுரா புரிந்து கொள்ள வேண்டுமே, 


அடுத்தவர்களுக்காக


வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தவளே,


உன்னை மனம் முழுவதும் 


சுமந்து நின்ற என்னை


ஏனடி நினைக்க மறந்தாய்?


        வேந்தனது பார்வையும் பேச்சும் ஏனோ நண்பர்களுக்கு வித்தியாசமாக பட்டது. ஆனால் ஏதோ பிரச்சினை என்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது.


    எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனுக்கு துணை நிற்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டனர்.


    சிவராமன் அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை சீட்டு, சாமிக்கு பூக்கள் எல்லாம் தான் வாங்கிக் வருவதாக கூறி, குடும்பத்தாரை கோவிலினுள் செல்லுமாறு அனுப்பி வைத்தார். 


      ஆனால் அவர் வாங்கிக் கொண்டிருக்கும் போதே, லட்சுமி அம்மாவை மயங்கிய நிலையில், தனது குடும்பத்தார் கோவிலினுள் இருந்து தூக்கிக் கொண்டு வர, பதறி அடித்து அவரிடம் ஓடினார். 


    அவரை மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்க்கும் வரை, தன் மனைவியின் கையை விடாமல் இறுக பற்றிக் கொண்டு வந்தார்.


  தன் உயிரில் கலந்த உறவை, இந்த நிலையில் காணும் போது, அவருக்கு தன்னைச் சுற்றி இருந்த உலகம், நின்று போனது போன்று தோன்றியது.


  அவரின் கவனம் முழுவதும், தன் மனைவின் மீது மட்டுமே நிலை கொண்டிருந்தது.


    அவருக்கு மைல்டு அட்டேக் என்று டாக்டர்கள் கூறிய போது பதறித்தான் போனார். பிறகு அவரைக் காண உள்ளே சென்றபோதுதான் தன் மனைவியின் மூலம் தன் மகளுக்கு நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டார்.


  தன் உயிரில் பாதியான மனைவியின் நிலையை கண்டு வருந்துவதா? அல்லது மகளின் திருமணத்தை எண்ணி வருந்துவதா?


  அவர் அதிலிருந்து தெளிவதற்கு முன்பே, மறுபடியும் தனது மனைவியின் உடல்நிலை மோசமாகி, அவசர சிகிச்சை பிரிவில் அவரை அழைத்துக்கொண்டு போக செய்வதறியாது உடைந்து போனார்.


  கனியமுதன் தான், தந்தையின் நிலையை கவனித்து அவருடனே இருந்தான்.


  மூர்த்தி தாத்தா சிவராமனை அணுகி பேசத் தொடங்கினார்.


  "சிவராமா பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீயே, இப்படி இடிஞ்சு போய் உக்காந்து இருந்தா எப்படிப்பா?


    பெத்தவங்க கிட்ட சொல்லாம செஞ்சுக்கிட்டாலும், அது கல்யாணம் தானே, அதை இல்லைன்னு நாம சொல்ல முடியாது இல்ல. நடந்ததென்னவோ நடந்துடுச்சு, இனி நடக்க போறது என்னன்னு பார்க்க வேண்டாமா?"


  "நான் என்னங்கய்யா சொல்லட்டும், நான் என் பெத்தவங்களுக்கு பண்ணத, இப்ப என் பொண்ணு எங்களுக்கு பண்ணி இருக்கா.


  அவ விருப்பம் இது தான்னு தெரிஞ்ச பிறகு, இனி பேசி என்ன ஆகப்போகுது. அதுதான் அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டாங்களே."


"அதுக்காக இப்படியே விட்டு விட முடியுமா? சின்ன பிள்ளைங்க அவங்கதான் கல்யாணத்தை விளையாட்டா எடுத்துக்கிட்டாலும், நாம அதை முறைப்படி செஞ்சு வைக்க வேணாமா? லட்சுமி சொன்னத கேட்ட இல்ல."


  "நீங்க சொல்ல வர்றது புரியுதுங்கயா, நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு அது சம்மதம்."


   மூர்த்தி ஐயா, வடிவுப்பாட்டியிடமும் பூவுப்பாட்டியிடமும் கலந்தாலோசித்தார்.


    வேலப்பன் ஐயாவிடமும், ஊரில் உள்ள பூவுப்பாட்டியின் குடும்பத்தாரிடமும் இதைப் பற்றி கூற வேண்டுமே, என்று மூர்த்தி ஐயா கூறியதற்கு, பூவுப்ப்பாட்டி வேண்டாம் என்று முற்றிலுமாக மறுத்து விட்டார்.


    அவர்களுக்கு தெரிந்தால் இன்னும், பிரச்சனை தான் அதிகமாகும். அதனால் இங்கு அனைத்தையும் முடித்துவிட்டு நேராக ஊருக்கு சென்று சொல்லிக் கொள்ளலாம் என்று கூறினார்.


    மதுவையும் வேந்தனையும் தன்னுடன் வருமாறு அழைத்த மூர்த்தி தாத்தா, கார் பார்க்கிங்கை நோக்கி நடந்தார்.


மதுவும் வேந்தனும் அவர் எதற்காக அழைக்கின்றார் என்று புரியாமல், தம் நண்பர்கள் புடைசூழ அவருடன் சென்றனர்.


No comments:

Post a Comment