அத்தியாயம் 40
"மதும்மா எங்களை பற்றி தெரியறதுக்கு முன்னாடி, உங்க அப்பா அம்மாவோட வாழ்க்கை பற்றி, நீ தெரிஞ்சுக்கனும்.
வடிவு சொன்னா உனக்கு எதுவும் தெரியாதுன்னு, உன் அப்பா அம்மாக்கு எப்படி கல்யாணம் நடந்தது தெரியுமா?"
மூர்த்தி தாத்தா நடந்தவைகள் அனைத்தையும், ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கு கூறி முடித்தார்.
"உங்க அம்மாக்கு நிஜமான கவலை என்ன தெரியுமாம்மா? ஏற்கனவே தன்னால அந்த குடும்பம் பிரிஞ்சு இருக்கு. இப்போ தன் பொண்ணாலயும் அது மறுபடியும் நடந்திடுமோ அப்படிங்கற பயம் தான்.
அதைவிட முக்கியம் நீங்க முறைப்படி கல்யாணம் செஞ்சுக்காதது."
மதுவிற்கு கோபம் கோபமாக வந்தது, தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேளாமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு முடிவெடுப்பதா? அவள் மறுத்து பேச வர, மூர்த்தி தாத்தாவோ கைகளை நீட்டி பேசுவதை நிறுத்தச் சொல்லி,
"உங்க ரெண்டு பேரையும் விசாரிக்க நான் இங்கே கூப்பிடல. உள்ளே ஐசியூல, போராடிட்டு இருக்க அந்த உயிருக்காக கேட்கறேன் முறைப்படி கல்யாணம் செஞ்சுக்க உங்க ரெண்டு பேருக்கும் சம்மதமா?"
இதற்கு மேல் அவள் என்ன சொல்ல?... அவள் அன்னை கூறி சென்ற வார்த்தைகள் மட்டுமே ரீங்காரமாக, அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
"வீட்ல இருக்குற பெரியவங்க எல்லாரும் பேசி, நாளைக்கு அதிகாலை முகூர்த்தமா உங்களுக்கு முறைப்படி கல்யாணம் பண்ணலாம்னு முடிவு எடுத்திருக்கோம். உங்க ரெண்டு பேருக்கும் இதுல சம்மதமா? இல்லே..."
தலை குனிந்தபடியே இருந்த மது திருவாய் மலர்ந்தாள்
"சம்மதம்."
அனைவரையும் விட, பல மடங்கு அதிர்ச்சியோடு, வேந்தன் திரும்பி மதுவை பார்த்தான்.
தாத்தா இப்படி ஒரு விஷயத்தை சொல்லியிருக்கும் போது இவளோட ரியாக்ஷன் வேற மாதிரி இல்ல இருந்து இருக்கணும். இது என்ன சூறாவளிக்கு முந்தைய அமைதியா?
மூர்த்தி தாத்தா வேந்தனின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்க, தன் நண்பர்களின் குலுக்களில் சுய நினைவுக்கு வந்தவன், மூர்த்தி தாத்தாவைப் பார்த்து முழித்தான்.
"உன் பதில் என்னப்பா?"
"நீங்க எது சொன்னாலும் எனக்கு சம்மதம்ங்க ஐயா."
அப்புறம் என்ன நண்பர்களின் துணையுடன் திருமண வேலைகள் ஆரம்பமானது.
மது வினுவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து எங்கோ வெளியே சென்று விட்டாள்.
வடிவுப்பாட்டியும் பூவுப்பாட்டியும் கனியமுதனும், பெண் வீட்டு சார்பாக திருமணதிற்கு தேவையானவற்றை கவனிக்க, வேந்தனின் நண்பர்கள் மற்ற வெளி வேலைகளை கவனித்துக் கொண்டனர்.
அடுத்த நாள் அதிகாலையிலேயே மதுவுக்கும் வேந்தனுக்கும் அமிர்தலிங்கேஸ்வரர் கோயிலில் முகூர்த்தம் என்று முடிவானது.
மது திரும்ப மருத்துவமனை வந்த போது எல்லோரும் பரபரப்பாக இருந்தனர். அன்னலட்சுமி அம்மா ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறினார்.
ஆகவே அங்கு அவரை, தான் பார்த்துக் கொள்வதாக கூறி மல்லிகா மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் சிவராமன் மட்டும், தன் மனைவி கண் விழிக்காமல் அங்கிருந்து நகர்வதாக இல்லை என்று கூறிவிட்டார். அதனால் அமுதனும் அவரோடு மருத்துவமனையிலேயே இருந்து கொண்டான்.
நேரம் இரவை தொட்டுக் கொண்டிருந்ததால் மது வினுவை அவளுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். வினு தான் உடன் இருப்பதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவளை மிரட்டி அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
பாட்டிகள் இருவரும் அவளை, வீட்டிற்கு போகலாம் என்று அழைக்க, மறுக்காமல் அவளும் கிளம்பி விட்டால்.
வேந்தனுக்கு மதுவின் இந்த அமைதி சரியாகப்படவில்லை. ஏதோ மனதில் ஒரு திட்டத்துடன் தான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறாள் என்று உறுதியாக நம்பினான். நாளையே வினுவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்.
பட்டு சேலை சரசரக்க பொன் ஆபரணங்களோடு ஜொலித்துக் கொண்டிருந்த மதுவிற்கு, புன்னகை மட்டும் குறையாகவே இருந்தது.
வினு காலையிலிருந்து, இத்தோடு முப்பத்து ஐந்தாவது முறையாக கேட்டுவிட்டாள் மதுவிடம்,
"கண்டிப்பா இப்படி ஒரு கல்யாணம் நடக்கணுமா மது? இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா? நான் வேணும்னா அண்ணாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசி பார்க்கட்டுமா?"
"இதையே நீ எத்தனை தடவை தான் கேட்ப? எனக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதம் தான். அத்தோடு எனக்காக யார்கிட்டயும் நீ போய் பேசிக்கிட்டு இருக்க வேண்டாம். அப்படி நீ பேசறேன்னு தெரிஞ்சுதுன்னா, இதுதான் நாம கடைசியா பேசுகிறதா இருக்கும். நாம நேத்து போயிட்டு வந்த இடத்தை பத்தியும், நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இது என் மேல சத்தியம்."
"மது ஏன்டி இப்படி பேசுற? நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ..."
அவள் அடுத்து பேச வருவதற்குள் கனியமுதன் மதுவை தேடிக் கொண்டு வந்திருந்தான்.
அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்து, வினு வெளியே செல்ல போக, மது வினுவின் கைகளை பற்றி, அவள் அருகிலேயே அமர்த்தி கொண்டாள்.
"மது...மதும்மா, உனக்கு...உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் தானே?"
"ரொம்ப சீக்கிரம் வந்து கேட்டுட்ட, இன்னும் முகூர்த்தத்துக்கு ஒரு...மணி... நேரம்... இருக்கே. கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் வந்து கேட்டு இருக்கலாம் இல்ல."
அவனால் என்ன பதில் சொல்ல முடியும். தன் கைகளில் இருந்த ஆபரணங்கள் அடங்கிய பெட்டியை, மதுவிடம் கொடுத்தான்.
"அம்மா உன்கிட்ட இந்த நகைகளை கொடுத்து, போட்டுக்க சொன்னாங்க."
"கொடுத்தாச்சில்ல, நீ கிளம்பலாம்."
வினுவிற்கு அமுதனை பார்க்க பாவமாக தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய, அவர்கள் நடந்து கொள்வதும் அப்படித்தானே.
மதுவின் நிலையில் இருந்து, ஒருமுறை கூட அவர்கள் யோசித்துப் பார்க்கவில்லையே, அவளின் தோழியான தனக்கே அவளைப் பற்றியும் அவளின் குணத்தைப் பற்றியும் தெரியும் போது, ரத்த சொந்தங்களான இவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லையே, என்ற ஆற்றாமையும் அவளுள் எழுந்தது.
தன் தாய் கொடுத்த நகைகளை அணிந்து கொண்டு தான் மது மணவறைக்கு வந்தால். முகத்தில் சிறிது கனிவு கூட இல்லாது, விறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மதுவை பார்க்க, வேந்தனுக்கு கஷ்டமாக இருந்தது.
"மிஸ் மதுரம் காலையில ஹார்லிக்ஸ்க்கு பதிலா, துணிக்கு போட வைச்சிருந்த கஞ்சியை குடிச்சிட்டீங்களா என்ன? முறைக்காதீங்க மிஸ் மதுரம், அக்னி குண்டத்தை மூணு தடவை சுத்தி வரும்போது, ஒடஞ்சு விழுந்தர போறீங்க. விறைப்பை கொஞ்சம் கம்மி பண்ணுங்க. இல்லாட்டி நான் உங்களை தூக்கிட்டு சுத்தற மாதிரி ஆயிட போகுது."
அதிகாலை முகூர்த்தத்தில், வேந்தனது திருக்கரங்களால் மாங்கல்யம்தனை கழுத்தினில் பூட்டிக் கொண்டால் மதுரயாழினி.
No comments:
Post a Comment