அத்தியாயம் 44
சந்துரு பேச வரும் முன்பே வேந்தன் மதுவிற்கு பதில் கூற தொடங்கினான்.
"அது ஏதோ அர்ஜென்ட் மீட்டிங்காம். அதுதான் அவர் நேத்து மதியம் அவசரமா கிளம்பி போனதா சொன்னான்."
சந்துரு திரு திருவென முழிக்க, வேந்தன் மதுவிற்கு தெரியாமல் முழிகளை உருட்டி, அவனை ஆம் என்று சொல்லுமாறு, சைகையிலேயே மிரட்டி கொண்டிருந்தான்.
சந்துரு எப்படி தலையை ஆட்டுகிறோம் என்பதே தெரியாமல், ஒருவாறு ஆட்டி வைக்க,
"அவரை அங்க அப்படியே இருந்துக்க சொல்லுங்க, என் கண்ணுல மட்டும் அவர் மாட்டினாறு...அது அவருக்கும் நல்லதில்லை, உங்களுக்கும் ரொம்ப...நல்லதில்லை சொல்லிட்டேன்."
பேச்சுவார்த்தை முடிந்ததற்கு சான்றாக மது ஜன்னலுக்கு வெளியே தனது பார்வையை திருப்ப,
சந்துருவுக்கும் வெற்றிக்கும் புரிந்து விட்டது, இது வேந்தனது மற்றுமொரு திருவிளையாடல் என்று.
சந்துரு கொலைவெறியுடன் வேந்தனை பார்த்து முறைக்க, அவன் தீவிரமாக வேடிக்கை பார்ப்பது போன்று ஜன்னலின் புறம் முகத்தை திருப்பி கொண்டான்.
வேடந்தூரில் உள்ள ஊர் பெரியவர்கள் அனைவரும் மூர்த்தி ஐயாவின் வீட்டில் ஒன்றாக திரண்டு இருந்தனர். வேந்தனது திடீர் திருமணத்தை கேள்விப்பட்டு ஊர் மக்களும் மணமக்களைக் காண அவர்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தனர்.
மூர்த்தி ஐயா அப்போதுதான் காரில் வந்து இறங்கினார்.
"வாங்க வாங்க, என்ன எல்லாரும் இங்க ஒண்ணா திரண்டு வந்திருக்கீங்க? குருந்த மரத்தடியில மண்ணெடுக்கறது இன்னைக்கு தானே? அங்க இல்லாம எல்லாரும் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"
" ஐயா உங்க வீட்டுல விசேஷத்தை வச்சிட்டு...,அதுவும் இல்லாம நீங்க இங்க இருக்கும்போது நாங்க மட்டும் அங்க போய் செஞ்சா நல்லா இருக்காதுங்க. அதனாலதான் எல்லாரும் இங்க வந்துட்டோம்."
"அட என்னப்பா நீங்க? நமக்காக சாமிய காக்க வைக்கலாமா? நான் பொண்ணு மாப்பிள்ளை வந்ததும் நேரா அழைச்சிட்டு அங்க தான் வர போறேன். இதுக்கு மேலயும் நம்ம குல தேவியை காக்க வைக்க கூடாது. நீங்க எல்லாரும் போய் அங்க வேலையை பாருங்க. நான் கண்டிப்பா அவங்களோட அங்க வந்துடுறேன்."
பெரியவர் கூறியதும் மறுவார்த்தை ஏதும் இன்றி அனைவரும் கலைந்து சென்றனர்.
ராகுல் வேடந்தூரில் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, நிரஞ்சனா தனக்கு வாந்தி வருவதாக கூற, வண்டியை ஒரு மரத்தடியின் ஓரத்தில் நிறுத்தினான்.
இரண்டு நாட்களாக சரியாக உறங்காததாலும், இரவு நேர பயணமும், நேற்று சாப்பிட்ட உணவும் ஒத்துக் கொள்ளாமல், அவளுக்கு குமட்டிக் கொண்டு வந்தது.
கார் கதவினை திறந்து கொண்டு அவள் ஒரு புறம் அவசரமாக இறங்கி செல்ல, மறுபுறம் இருந்து தண்ணீர் பாட்டிலை தூக்கிக்கொண்டு இறங்கி வந்தான் ராகுல்.
அப்போது கொற்றவை தேவி கோவிலுக்கு பாதை அமைப்பதற்காக வந்திருந்த அமைச்சரின் அடியாட்கள் ஊருக்குள் இருந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் மூலமாகத்தான் நிரஞ்சனா, மருத்துவமனையில் இருந்து குருஜியிடம் கடத்திச் செல்லப்பட்டாள்.
இங்கு திடீரென்று அவளைக் கண்டதும் அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
"அண்ணே அங்க பாருங்க, அந்த பொண்ணு யாருன்னு தெரியுதா?"
"என்னத்தடா பார்க்க சொல்ற, எந்த பொண்ணு?"
"அதோ அந்த காருக்கு பின்னாடி பாருங்க, ஒரு பையன் கூட நிக்குதே, அது யாருன்னு தெரியுதா?"
"டேய் இது அந்த மாறனோட தங்கச்சி தானே, நாம தானே அந்த புள்ளையை கடத்தி, குருஜி கிட்ட அனுப்பி வச்சோம். தப்பிச்சு வந்துருச்சு போலடா."
"சரி இருங்க மெதுவா போய் பேச்சு கொடுத்து பார்ப்போம்."
நிரஞ்சனா ராகுல் கொடுத்த தண்ணீர் பாட்டிலில் இருந்த நீரால், முகத்தை கழுவி விட்டு நீரை அருந்தினால்.
"அட சின்னம்மா, நீங்க மாறன் ஐயாவோட தங்கச்சி தானே? எங்கம்மா போயிட்டீங்க இரண்டு நாளா? உங்களை காணமுன்னு ஐயா ஊர் பூரா தேடிட்டு இருக்காரு? இவர் யாருங்கம்மா? உங்களுக்கு தெரிஞ்சவரா? இல்ல ஏதாவது உங்க கிட்ட பிரச்சனை பண்றாரா? தைரியமா சொல்லுங்கம்மா நம்ம பசங்கள வச்சு ஒரு வழி பண்ணிடுவோம்."
நிரஞ்சனாவிற்கு அவர்களைப் பார்த்ததாக கூட நினைவில்லை. இருந்தும் ராகுலை பற்றி அவர்கள் கேட்டதால்,
"அதெல்லாம் எதுவும் இல்ல. இவர் எனக்கு தெரிஞ்சவர் தான்."
"என்னங்கம்மா நம்ம வீட்டுக்கு போகாம இந்த ஊருக்குள்ள வந்து இருக்கீங்க? சரி வாங்க நாங்க உங்களை ஐயா கிட்ட கூட்டிட்டு போறோம்."
ராகுலுக்கு இவர்களை பார்க்கும்போது நம்பிக்கையே வரவில்லை. அவர்கள் பேசும் வார்த்தை வேறாகவும் அவர்களின் கண்களில் தெரிந்த உணர்வு வேறாகவும் தோன்றியது.
"பரவால்லைங்க அதான் இவ்வளவு தூரம் வந்துட்டோமே, நானே அவங்கள வீட்ல விட்டுடுறேன்."
நிரஞ்சனாவும் அதையே ஆமோதிப்பதாக தலையாட்டினாள்.
"தம்பி நீங்க வெளியூரு, ஊருக்குள்ள வயசு பொண்ணு ஒரு வயசு பையன கூட்டிட்டு வந்தா என்ன பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாது. நீங்க கெளம்புங்க, நாங்க அவங்கள வீட்ல விட்டுடறோம்."
"அவங்க எப்படி பேசினாலும், நான் அவங்க வீட்ல இருக்குறவங்கள சமாளிச்சுக்கிறேன். நீங்க கிளம்புங்க நிரஞ்சனா வண்டியில ஏறுங்க."
"யோவ் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு கூட்டிட்டு போற, எங்களை தாண்டி நீ போயிடுவியா? டேய் சின்னம்மாவை போய் கூட்டிட்டு வாங்கடா."
நிரஞ்சனா ராகுலின் கைகளை இறுக பற்றி கொண்டு அவனுக்கு பின்னே ஒளிந்து கொண்டு நின்றாள். ஏனோ அவளுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை வரவில்லை.
எதிரில் இருந்த ஆட்கள் ராகுலை தள்ளிக்விட்டு கொண்டு நிரஞ்சனாவின் கையை பிடித்து இழுக்க, அங்கு ஒரே கைகலப்பானது.
ராகுல் முடிந்த அளவு அவர்களிடம் இருந்து நிரஞ்சனாவை மீட்க போராடினான். ஆனால் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்களில் ஒருவன் கட்டையால் அவன் மண்டையில் அடிக்க, ஒரு நொடி நிதானத்தை இழந்தான் அப்போது அங்கிருந்தவர்கள் கீழே இருந்த மண்ணை அள்ளி, அவன் கண்களில் தூவி விட்டு நிரஞ்சனாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு குறுக்குப் பாதையில் இறங்கினார்.
மணமக்களது கார் மூர்த்தி தாத்தாவின் வீட்டின் முன் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மதுவிற்கு ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு தோன்றியது.
வீட்டு வாசலில் கல்யாணத்துக்கே உரிய வாழை மாவிலை தோரணங்களும் தென்னை ஓலை பந்தலும் போடப்பட்டிருந்தது.
மணமக்களை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி கரைத்து சுற்றப்பட்டது.
வீட்டினுள் நுழைந்தவர்களை நேராக பூஜை அறைக்கு கூட்டிக்கொண்டு போயினர் வீட்டுப் பெண்கள்.
மது பூஜை அறையில் நுழையும் போதே, அவள் உடலோடு சேர்த்து அந்த பூஜையறையில் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் அதிர்ந்தது.
அப்பெட்டியானது பொன்னொழி வீசி ஜொலிக்க தொடங்கியது.
அதனைக் கண்டு வீட்டுப் பெரியவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் நின்றனர்.
No comments:
Post a Comment