Search This Blog

Followers

Powered By Blogger

Sunday, August 31, 2025

மன்னவரே 101


 

            அத்தியாயம் 101


  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மொத்த குடும்பமும் ஐ.சி.யூ விற்கு வெளியே சோகமாக புலம்பியபடியே காத்திருந்தனர்.சந்துருவின் பெற்றோர்களும் அங்கு தான் இருந்தனர். சந்துரு மருத்துவர்களோடு உள்ளே இருந்து, வேந்தனது உடல்நிலையை கண்காணித்துக் கொண்டிருந்தான். வெற்றியும் மூர்த்தியும் தான் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறிய படி,  பெரியவர்களுக்கு  அவ்வப்போது அருந்துவதற்கு நீர் கொடுத்து கவனித்துக் கொண்டனர்.


  சிறிது நேரத்திற்கு பிறகு வெளியே வந்த சந்துரு, வேந்தன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாக  தெரிவித்தான். 


  "இன்னும் கொஞ்ச நேரத்துல வேந்தனை நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க, இப்பதான் காயம் ஆன இடத்துல ஸ்டிச்சஸ் போட்டிருக்காங்க, அதனால கொஞ்ச நேரம் ஐ சி யூ ல அவனை வெச்சு தான் ஆகணும்."


  குடும்பத்தினருக்கு ஒரு இரண்டு மணி நேரமே இரண்டு யுகமாக தான் கடந்தது. அதற்கு பிறகு வேந்தன் தனியறைக்கு மாற்றப்பட, அனைவரும் அங்கு சென்றனர். 


  இன்னும் அவன் கண் விழிக்காததை கண்டு அனைவரும் கவலை கொண்டனர். சிறிது நேரத்திற்கு முன்பு வேந்தனை விட்டு பிரிந்து செல்லப் போவதாக கூறிய மதுவோ, தற்போது அவனது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். அதுவும் அவன் மருத்துவ உபகரணங்களுடன் சுவாசித்துக் கொண்டிருப்பதையும், அவன் உடல் முழுவதும் மருத்துவ உபகரணங்கள் மாட்டியிருப்பதையும் கண்டு கண்ணீர் சிந்தினாள்.


  "அவனுக்கு கான்சியஸ் வர கொஞ்ச நேரமாகும் தாத்தா, அவனுக்கு நினைவு  வந்தவுடனே நானே கால் பண்றேன், அதுவரைக்கும் இத்தனை பேர் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டாம், மற்ற பேஷன்ட்ஸ்க்கு தொந்தரவா இருக்கும், அதுதான் நாங்க எல்லாம் இருக்கிறோமே, நாங்க அவனைப் பார்த்துக்கிறோம், நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் பிரஷ் ஆகிட்டு வாங்க ."


  "சந்துரு சொல்றது சரிதான், அது தான் நாங்க மூணு பேர் இருக்கோமே, நாங்க பாத்துக்குறோம்." என்று வேந்தனின் நண்பர்கள் கூற,


  "ஆமாப்பா முதல்ல நான் போய் சாமிக்கு நேர்த்திக்கடனை செய்யனும், என் பேரன் மறு ஜென்மம் எடுத்தது போல திரும்பி  வந்திருக்கான், கண்டிப்பா நான் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு, கோயிலுக்கு போயி நேர்த்திக்கடனை முடிச்சிட்டே இங்க வரேன்."


  என்றபடி பூவுப் பாட்டி கிளம்ப, இங்கே இருந்து வேறு ஏதும் செய்ய முடியாது என்ற காரணத்தால், குடும்ப உறுப்பினர்களும் அங்கிருந்து கிளம்பினார். ஆனால் மது மட்டும் அங்கிருந்து செல்லாமல் வேந்தனது  கைகளை பிடித்தபடியே அமர்ந்திருக்க,


  "மது நீயும் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வாம்மா, அதுதான் நாங்க எல்லாம் இங்க இருக்கோமே."


  "இல்லண்ணா அவர் கண்ணு முழிச்சதுக்கு அப்பறமே நான் போறேன், அவர் கூட ஒரு வார்த்தை பேசிட்டா, எனக்கும் நிம்மதியா இருக்கும்."

    "என்னம்மா தங்கச்சி நீ?..... அவன் கண் முழிக்கும்போது நீ இப்படி கை புல்லா ரத்தக்கறையோட இந்த நிலைமையிலயா அவன் கண்ணு முன்னாடி வந்து நிற்ப்பே, நீதானம்மா அவனோட எனர்ஜி பூஸ்டர், வீட்டுக்கு போய் குளிச்சிட்டு பிரஷ்ஷா வா, கண்டிப்பா அவன் கண்ணு முழிச்சா,  உடனே உனக்கு கால் பண்றேன். எப்படியும் அவன் கண் முழிக்கறதுக்கு இன்னும் ரொம்ப நேரம் ஆகும், அதுக்குள்ள நீ வீட்டுக்கு போயிட்டே வந்துடலாம் ."


  பெரியவர்களுக்கும் அதுவே சரி என்று பட, அவளை வற்புறுத்தி தான் வீட்டிற்கு தங்களுடன் அழைத்துக் கொண்டு சென்றனர். கிளம்புவதற்கு முன்பு வேந்தனது கை விரல்களை இறுக்கமாக பிடித்து, ஒரு முறை அவனை உற்று நோக்கி விட்டுத்தான், அங்கிருந்து சென்றாள் மது. 

  தீபன் அப்போதுதான் போலீஸ் ஸ்டேஷனில் அடியாட்களை சிறையில் அடைத்து, அவர்களின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துவிட்டு, வேந்தனிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக, அவனைக் காண மருத்துவமனைக்கு வந்திருந்தான். அவர்கள் சென்று விட்டதை உறுதி படுத்திக் கொண்ட தீபன், கதவை தாழிட்டு விட்டு வேந்தனின் அருகே வந்து நின்றான். 


  இப்போது அந்த அறைக்குள் வேந்தனோடு அவனது நண்பர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். சந்துரு அங்கிருக்கும் மானிட்டரை செக் செய்து, குறிப்பேட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனுக்கு சற்று தள்ளி வெற்றியும் மூர்த்தியும் கவலையுடன், வேந்தனை சோகமாக பார்த்தபடி நின்று  கொண்டிருந்தனர்.


  சந்துருவை நேர்விழி கொண்டு நோக்கிய தீபன்,


    "அப்புறம் டாக்டர் சார், வேந்தன் இப்போ ரொம்ப சீரியஸா இருக்கானா?"


  "ஆ....ஆமா, ஆமா நீ ஏன் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு, இப்படி கேக்குறே? உன் கண்ணு முன்னாடி தானே கத்தியால குத்துனாங்க, தோள்ள தோட்டா உரசிட்டு போன இடத்துலயே, கத்தியால குத்தினதால பிளட் லாஸ் அதிகமா ஆயிருக்கு,  அவன் தோள்ள ரொம்ப பெரிய ஸ்டிச்சஸ் போட்டிருக்கு, அவன் கண் முழிக்க இன்னும் கொஞ்ச நேரமாகும், நீ வேணா போயிட்டு அப்புறமா வா டா, வாக்குமூலம் தானே வாங்கணும், அவன் கண் முழிச்சதும் நானே உன்னை  கூப்பிடுறேன்."


  "உங்களுக்கு எதுக்கு டாக்டர் சார் சிரமம், இதோ நானே அவன்கிட்ட  வாக்குமூலம் வாங்கிக்கறேன்."


சந்துரு திரு திரு திருவென்று முழிக்க, தீபன் வேந்தனின் வலது கால் அருகே சென்று ஏறி அமர, அம்மா என்று  அலறியபடியே எழுந்து அமர்ந்த வேந்தன், 


  "ஏண்டா உனக்கு அறிவு இருக்கா?... எருமை மாடு மாதிரி இருந்துட்டு என் கால்  மேல ஏறி உட்காருறயே, காலு எதுக்குடா ஆகறது?"


  "ம்ம்ம் சூப்பு வைக்கத்தான்."


  "எதே?"


    "ஆமா உன் பொண்டாட்டி கிட்ட சொன்னா தோலை உரிக்க கூட வேண்டாம், அப்படியே வெட்டி சூப்பு வைச்சிடும், கூட்டிட்டு வரட்டுமா?"


  "ஏண்டா உனக்கு இந்த கொலவெறி?"


  "சாருக்கு இப்ப எதுவும் வலிக்கலையா?நீ ரொம்ப நேரம் மயக்கத்துல இருப்பேன்னு, இதோ இந்த டாக்டர் சொன்னானே."


  "ஆ...ஆமா ஆமா, ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ, எனக்கு அப்படியே தலை சுத்துற மாதிரி இருக்கு."


"அடச்சீ கேவலமா நடிக்காத, எந்திரி நாயே."


    வேந்தன் திடீரென்று எழுந்து அமர்ந்ததை கண்டு, சோகமே உருவாக நின்று கொண்டிருந்த மூர்த்தி, வாயில் கை வைத்தபடி, அதிர்ச்சியோடு சிலையாகி விட்டான். வேந்தன் நார்மலாக பேசுவதைக் கண்டு நெஞ்சில் கை வைத்து படி,


  "அடப்பாவி,அப்போ நீ நல்லாத்தான் இருக்கியா? ஏதோ சீரியஸா இருக்கிற மாதிரி இவன் அந்த சீன் போட்டானே டா?... டேய் போலி டாக்டர்,..... உன்ன போய் சீரியஸா வேலை பாக்குறதா நெனச்சு, ஐஸ் வாட்டர் எல்லாம் கொண்டு வந்து கொடுத்தேனேடா?.....ச்சை அப்போ  அதெல்லாம் வெறும் நடிப்பா கோபால்... வெறும் நடிப்பா?..."


"டேய் நானே செம காண்டுல இருக்கேன், அவனுங்களோட சேர்ந்துகிட்டு நீயும் ஓவரா நடிக்காத,... எதுக்குடா இப்போ எல்லாரையும் ஏமாத்திட்டு இருக்கீங்க? எதுக்காக இப்படி ஒரு நாடகம்? ஏற்கனவே போட்ட நாடகத்தால தான் இவ்வளவு பிரச்சனை,  இப்ப எதுக்காக மறுபடியும், உனக்கு சீரியஸ்ன்னு நாடகம் போட்டு  குடும்பத்தையே இப்படி அழவெச்சிட்டு இருக்கே?"


  வேந்தன் எதுவோ பேச வர, கைநீட்டி அவனை தடுத்த தீபன்,


"நீ நிறுத்து, நீ பேசினா எது உண்மை எது பொய்யின்னே கண்டுபிடிக்க முடியாது, டேய் சந்துரு நீ சொல்லு, உனக்கு தான் ஃப்லோவா பொய் சொல்ல வராது."


Saturday, August 30, 2025

மன்னவரே 100


            

         அத்தியாயம் 100


    " ஓ அப்போ எங்க அம்மா அன்னைக்கு நம்மளை பார்த்தது தான் தப்பு ம்ம்ம், நீங்க செஞ்சது எதுவுமே தப்பு இல்ல அப்படித்தானே?..... இப்ப கூட நீங்க செஞ்சதை தான் நியாயம்னு சொல்ல வர்றீங்க இல்லையா?..... ஒரு பொண்ணோட அனுமதியே இல்லாம அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு, சட்டப்படி என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு?.... உங்க கிட்ட போய் சட்டத்தை பத்தி பேசுறேன் பாருங்க, அதுதான் கூடவே சட்டம் தெரிஞ்ச உங்க ப்ரெண்டு இருக்காரே, அவர் போதாதா வர்ற பிரச்சினைகள்ள இருந்து உங்களை ஈசியா எஸ்கேப் ஆக்கிவிட, நான் சொல்றது கரெக்ட் தானே தீபன் அண்ணா."


  "மது புரிஞ்சுக்கோ அன்னைக்கு உன்னை நான் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டது உன்னை போலவே, இவங்க யாருக்கும் தெரியாது. கல்யாணம் நடந்ததுக்கு அப்புறம், உங்க அம்மாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணின போது தான், அவங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்துச்சு.


    அவசரமா நான் உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணதுக்கு காரணமே, எங்க உன்னை இழந்து விடுவேனோன்ற பயம் தான். உன்னை நான் எப்பவும்  இழக்க விரும்பல மது, உன்னை கல்யாணம் பண்ணி என் கூடவே வெச்சுக்கணும்னு ஆசைப்பட்டேன்,  நீ எப்பவும் என் கூட இருக்கணும்னு நினைச்சேன், உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தான், அவ்வளவு அவசரமா உனக்கு கூட தெரியாம, உன்னை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன், சத்தியமா உன் மேல இருக்க காதல்னால தான் இத்தனையும் பண்ணினேன் மது, ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோயேன், வேற எந்த தவறான நோக்கமும் இல்ல."


   " வாட் காதலா?.....ஓஓஓஓஓ இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல காதலா?.... லவ் பண்ற பொண்ணு மனசு நோக கூடாதுன்னு  நினைக்கற லவ்வரை பார்த்திருக்கேன், தன் லவ்வரோட  கால்ல முள்ளு குத்துனா கூட, கண்ணு கலங்கி போற லவ்வரை பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா அவளை அவ குடும்பத்து கிட்ட இருந்து பிரிச்சு, கெட்ட பேரு வாங்க வெச்சு, அவளை முட்டாள் ஆக்கி, உங்க துணையாக ஆக்கிக்கிறது தான் நீங்க அந்த பொண்ணு மேல வச்சிருக்கற காதலா?"


  வேந்தனுக்கு தெரியும் எப்படியும் இந்த சூழ்நிலையை வரும், அதை தான் எதிர் கொண்டு தான் ஆக வேண்டி இருக்கும் என்று, ஆனால் அந்த நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று, அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவளது கோபத்தின் நியாயம் புரிந்தது, ஆனால் தன்னுடைய நிலையினை என்ன சொல்லி அவளுக்கு புரிய வைக்க?... வார்த்தைகள் இன்றி தடுமாறினான் வேந்தன்.


  "இதுக்கும் மேல உங்க முகத்துல முழிக்க கூட எனக்கு இஷ்டம் இல்ல, தயவு செய்து இனியாவது என்னை விட்டுடுங்க, எனக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா இனி என்னை நெருங்காதீங்க. உங்களை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு."


  அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு தோட்டா பறந்து வந்து வேந்தனது  தோளை உரசிக்கொண்டு, கல்மண்டபத்  தூணில் பட்டது. உரசி சென்ற குண்டு பட்டு, அவனது தோளில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. வேந்தனது தோளில் ரத்தத்தை கண்டு உறைந்து போய் நின்றிருந்த மதுவை, கீழே இழுத்து ஒரு தூணுக்கு பின்னால் அமர வைத்த வேந்தன். அவள் மீது எந்த குண்டும் படாதவாறு அவளை மறைத்தபடி   அமர்ந்து கொண்டான்.


" ஐயோ தீரா....., ர......ரத்தம் ....ரத்தம் வருது ..."


  அவள் கதறியபடி அவன் அருகில் செல்வதற்குள் இன்னும் பல தோட்டாக்கள் அவர்களை சுற்றி வெடிக்க ஆரம்பிக்க, சூழ்நிலையை புரிந்து கொண்ட நண்பர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு எதிரிகளை தாக்கத் தொடங்கினர்.துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தவனை நோக்கி தீபன் ஒரு கட்டையை தூக்கி வீச, அது சரியாக அவனது கையில் பட்டு, துப்பாக்கி தூரச்சென்று விழுந்தது. அதற்குள் அடியாட்கள் ஐந்தாறு பேர், கையில் ஆயுதங்களுடன் அவர்களை சூழ்ந்து கொண்டனர்.


    "தங்கச்சி சீக்கிரமா அந்த கல் மண்டபத்துக்குள்ள அவனை கூட்டிட்டு போம்மா, இது யாரோட வேலைன்னு தெரியல, ஆனா அவங்களோட குறி எல்லாமே வேந்தன் மேல இருக்கிற மாதிரி தான் தெரியுது.  சீக்கிரமா ரெண்டு பேரும் உள்ள போங்க. வெற்றி உடனே கோயில்ல இருக்க நம்ம ஊர்காரங்களுக்கு கால் பண்ணி உடனே இங்க வர சொல்லு."

 

  நண்பர்கள் ஆயுதங்களோடு வந்த அடியாட்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க, வந்தவர்களில் ஒருவன் மட்டும், மதுராவின் அருகே அடிபட்டு படுத்திருந்த வேந்தனை நோக்கி, கத்தியை  தூக்கி பிடித்தபடி அடியெடுத்து வைத்தான்.


  கண்களில் மிரட்சியோடு அமர்ந்திருந்த மதுராவை மண்டபத்தின் உள்ளே  தள்ளிவிட்ட வேந்தன், தனது  தோளில் பட்ட  காயத்தோடு, வந்தவனோடு எதிர்த்து சண்டையிடத் தொடங்கினான்.


  "எவ்வளவு தைரியம் இருந்தா எங்க ஐயாவையே ஜெயிலுக்கு அனுப்பி இருப்ப நீ?.... எங்க தலைவரை ஜெயில்ல அடைச்சுட்டு அவர் பொண்ணுக்கே நீ கல்யாணத்துக்கு தேதி குறிக்கிறியோ?.... நீ உயிரோட இருந்தா தானே டா ஐயாக்கு எதிரா சாட்சி சொல்லுவே,அவர் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைப்பே, எங்க ஐயா சொன்னபடி  உன்னை உரு தெரியாம ஆக்குறேன் பாரு டா, அப்புறம் அந்த டாக்டர் பயலையும் வெட்டி வீசறேன், அப்பறம் எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு பார்கறோம் டா."


  வேந்தனின் தோளில் துப்பாக்கி குண்டு லேசாக மட்டும் உரசி விட்டு சென்றிருக்க, சிறு காயத்தோடு வேந்தன்  தப்பித்தான். அதனால் வந்தவர்களோடு அவனும் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனை எதிர்த்து சண்டையிட்டு கொண்டிருந்தவன் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, ரத்தம் வழிந்து கொண்டிருந்த அவனது தோளிலேயே இறக்க, ஒரு நொடி வலியினால் நிதானம் இழந்து வேந்தன் தடுமாறினான். 


  அவனை நோக்கி முன்னேறியவனை, காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியவன், விழுந்தவனை நெருங்குவதற்கு முன்பாகவே வலி காரணமாக கீழே விழ போனான் வேந்தன், அவனை தனது மடியில் தாங்கி கொண்டாள் மது. 


  அதற்குள் ஊர்க்கார்களும் வந்துவிட, அங்கிருந்து அடியாட்களை போலீஸ் உதவியோடு தீபன் சுற்றி வளைத்து பிடித்து விட்டான். வலியோடு போராடிய படியே தன் நண்பர்களை அருகே அழைத்த வேந்தன்,  அரை மயக்கத்தில் இருந்தபோதே தன் நண்பர்களிடம் உறுதியாக கூறிவிட்டான்.


    "டேய் வந்தவங்க மினிஸ்டர் கேஸ் விஷயமாக தான் என்னை கொல்ல வந்ததாக வெளியே சொல்ல வேண்டாம் புரிஞ்சுதா, எக்காரணம் கொண்டும் சந்துரு, லாவண்யாவோட  பேரை  எங்கேயும் வெளியே வர விடாதீங்க, அப்புறம் இவங்க கல்யாணத்துல பிரச்சனை வந்திட போகுது."


  "இதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் டா வேந்தா, டேய் என்ன பார்த்துட்டு இருக்கீங்க?.. தூக்குங்கடா நாம ரோட்டுக்கிட்ட  போறக்குள்ள ஆம்புலன்ஸ் வந்திடும்."


"ஒரு நிமிஷம் மூர்த்தி."


   மதுவின் மடியில் இருந்தபடியே தலை தூக்கி அவளை பார்த்தவன்,அவள்  கண்ணீரை துடைத்துவிட்டபடி,


  "  மது உன்னை நான் வாழ்நாள் முழுக்க, என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்கணும் நினைச்சேன், என்னால முடிஞ்ச அளவுக்கு உனக்கு சந்தோஷத்தை மட்டுமே அள்ளி அள்ளிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன், உன்னை காயப்படுத்தனும்னு என் மனசால கூட நான் நினைச்சது கிடையாது, ஆனா எதிர்பாராத விதமாக சில சம்பவங்கள் எல்லாம் நடந்துடுச்சு, என்னை மன்னிச்சிடு மதுரா. என் உயிர் போற நொடியுல நீ என்னை உன் மடியில  தாங்கின சந்தோஷமே எனக்கு போதும்.ஐ லவ் யூ மதுரா."


"ஐயோ அப்படி எல்லாம் பேசாதீங்க...... அண்ணா நீங்க தூக்குங்க, ரத்தம் வேற நிக்க மாட்டேங்குதே...."


  தீபன் அடியாட்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்ல,  மற்ற நண்பர்கள் மதுராவுடன் வேந்தனை தூக்கி கொண்டு மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸில் சென்றனர்.


  ஆம்புலன்ஸில் இருந்த கருவிகளைக் கொண்டு, சந்துரு வேந்தனுக்கு முதலுதவி செய்யத் தொடங்கினான். மதுவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கண்களை மூடியபடி  இருந்த, வேந்தனின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டவள் குழுங்கி அழ தொடங்கினாள்.


  மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேந்தனுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. கதவுகளுக்கு வெளியே நின்றிருந்த  மதுவின் கண்களில் கண்ணீர் வற்றாமல் வந்து கொண்டே இருந்தது, அதைத் துடைக்க கூட தோன்றாமல், தன் கைகளில் இருந்த வேந்தனின் ரத்தத்தை  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். 


  "எந்த நேரத்துல அவரை இனி பார்க்கவே கூடாதுன்னு சொன்னேனோ அப்படியே நடந்திடும் போல இருக்கே, .. கடவுளே எப்படியாவது அவரை காப்பாற்றி கொடு, இனி ஒரு நாளும் அவரை விட்டு பிரிய மாட்டேன். எனக்கு அவர் வேணும். கண்டிப்பா வேணும்."


  அவனது நண்பர்களுக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. இப்போதுதான் வாழ்க்கையையே தொடங்கி இருக்கிறார்கள், அதற்குள் அடுத்தடுத்து எத்தனை பிரச்சனைகள்? .... அதைவிட வேந்தனின் நிலைமை என்ன ஆகுமோ என்ற பயம் வேறு,....அவனது குடும்பத்திற்கு  இவனை பற்றிய விவரம் சொல்லாமல் இருக்க முடியாதே,  ஊர்காரர்கள் மூலம் விஷயம் தெரிந்தால் அவர்கள் பதட்டப்படக் கூடும் என்று நினைத்து, சந்துருவே தனது தந்தைக்கு அழைத்து அவர் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு நடந்தவற்றை எடுத்துக் கூற வைத்திருந்தான். அவர்களும் பதறிக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

Friday, August 29, 2025

மன்னவரே 99


 

             அத்தியாயம் 99


மதுவிற்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. எவ்வளவு பெரிய துரோகம், எதற்காக தன்னைச் சுற்றி இப்படி ஒரு சூழ்ச்சி வலை பின்னப்பட்டது. அதைவிட சற்று நேரத்திற்கு முன்பு மனதில் பூத்த காதல் மொட்டு, மலர்வதற்கு முன்பு நெஞ்சுக்குள் கருகி விட்டதே! அந்த வலி அவள் மனதை வெகுவாக அழுத்தியது. மனதின் வலி கண்களில் நீரை பெருக்கெடுக்க வைக்க, அதை துடைத்த படி தன் மீதே கோபம் கொண்டு, கண்களை இருக்க மூடி நின்றால் மது.


  இன்று காலையில் வேந்தனின் மீது தன் மனதில்  பூத்த காதலை, அவனிடம் வெளிபடுத்த, அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தவள், இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்தாளா என்ன?


  சற்று நேரத்திற்கு முன்பு வீட்டின் பின்புறம் அமைந்திருந்த பந்தலில்,  தன்னவனின் வரவை எதிர்பார்த்து, இங்கிருந்தபடியே ரோட்டை எட்டிப் பார்த்து கொண்டு, பூக்களை பறித்து கொண்டிருந்தாள் மது. 


  அப்போது ஒரு கார் தங்களது வீட்டை நோக்கி வருவதைக் கண்டு, யாராக இருக்கும் என்று எண்ணமிட்டபடியே வீட்டிற்குள் சென்றாள். ஹாலில் ஒரு வயதான தம்பதியர் வேந்தனின் தோழனான  சந்துருவுடன் அமர்ந்திருக்க, கேள்வியாக அவர்களை நோக்கிய படியே அங்கு வந்து நின்றாள்.


  வந்தவர்களை வரவேற்ற குடும்பத்தினர் அவர்களது நல விசாரிப்புகளுக்கு பிறகு, அவர்களுக்கு மதுவை அறிமுக படுத்தி வைத்தனர்.


  "அண்ணா இவ தான் எம் மருமக  வேந்தனோட சம்சாரம், பேரு மது. மது இவரு சந்திர சேகர் நம்ம வேந்தனோட தோஸ்த்து சந்துருவோட அப்பா, இவுக குடும்பமே டாக்டர் குடும்பம் தான்ம்மா, இவுகளும் இந்த ஊர் தான் வேலைக்காக வெளியூர் போய் செட்டில் ஆகிட்டாங்க, உங்க அம்மாவோட ஆப்ரேஷன் கூட இவங்க ஆஸ்பத்திரியில தான் நடந்தது."


  மதுவின் மனதிற்குள் ஏதோ ஒரு நம்பிக்கை உடைந்து கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு, குழப்பமான விழிகளோடு சந்துருவை ஏறிட்டவள், அவன் இவளது பார்வையை தவிர்த்தபடி, தனது மொபைலில் இருந்து, சீரியஸ்ஸாக வேந்தனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான்.


      சந்துருவின் தந்தை சந்திரசேகர், சந்துருவுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருப்பதாகவும், அவனது திருமண பத்திரிக்கையை முதலில் வேந்தனுக்கு வைக்க வந்திருப்பதாகவும் கூறி, நடந்த விஷயங்களை பற்றியும் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறினார்.


  "முதல்ல வேந்தன் என்கிட்ட வந்து சந்துருவோட லவ் விஷயத்தை பத்தியும், அவன் லவ் பண்ற பொண்ணோட  குடும்பத்தை பத்தியும் சொன்னப்ப நான் ரொம்ப கோவபட்டேன் தான், ஆனாலும் வேந்தன் தான் சொல்லி புரிய வைச்சான். கல்யாணத்துல கல்யாணம் பண்ணிக்க வேண்டியவங்களோட சம்மதம் மட்டும் இல்ல, அந்த குடும்பங்களோட சம்மதமும் அவங்க வாழ்த்துக்களும் கூட முக்கியம்கிறதை, அவன் எங்களுக்கு ரொம்ப தெளிவா எடுத்து சொல்லிபுரிய வெச்சான்.


  அதனாலதான் அந்த பொண்ணோட அப்பா இப்ப ஜெயில்ல இருக்கறது தெரிஞ்சும் கூட, இவங்க ரெண்டு பேர்த்துக்கும் நாங்களே கல்யாணம் பண்ணி வச்சிரலாம்னு முடிவு பண்ணி, அவங்க வீட்ல போய் பேசினோம், அவங்க அம்மாவுக்கும் இதுல  சந்தோஷம்தான், அதனாலதான் உடனே கல்யாணத்தையும் பிக்ஸ் பண்ணி, மொத பத்திரிகையை வேந்தனுக்கு கொடுப்பதுக்காக வந்தோம். அவன் இல்லாட்டி இவங்க கல்யாணம் இப்படி பெரியவங்க ஆசீர்வாதத்தோடு  நடந்திருக்கவே செய்யாது, வேந்தன் எங்கம்மா?"


  மதுவின் மூளைக்குள் சந்துருவின் தடுமாற்றமும், அவன் தந்தை பேசிக் கொண்டிருந்த வார்த்தைகளும் சேர்ந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியது.


  "வேந்தன் கோவில் வரைக்கும் போயிருக்கான் ண்ணா, அதுதான் திருவிழா வேலை எல்லாம் இருக்கே, வீட்டு பெரியவங்களும் அங்க தான் இருக்காங்க, இருங்க யாரையாவது விட்டு நான் வர சொல்றேன்."


"நானே போய் கூட்டிட்டு வரேன் அத்தை, கோயிலுக்கு போயிட்டு வந்த மாதிரியும் ஆச்சு இல்லையா? நானே போயிட்டு வரேன்."


"ஆனா மதும்மா, நீ தனியா எப்படி போவே?"


  "அதுதான் சந்துரு அண்ணா இருக்காரே த்தே, அவருக்கு தெரியாம இருக்குமா, அவரோட பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்க இருப்பாங்கன்னு? அவரை கூட்டிட்டு போறேன்."


  "சரி சீக்கிரமா போயிட்டு வாங்க, நான் உங்களுக்கெல்லாம் சாப்பிடுவதற்கு ரெடி பண்றேன், அண்ணா கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் போகணும். திருவிழா அன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கீங்க, சாப்பிடாம போக கூடாது, அதனால நீங்க இருந்து சாப்பிட்டு சாயங்காலமா சாமி கும்பிட்டு தான் கிளம்பனும்."


  அவர்கள் ஒத்துக்கொண்ட பிறகு சந்துரு பதட்டத்துடனே மதுவுடன் காரில் ஏறினான்.


  காரை ஓட்டிக் கொண்டிருந்த சந்துருவுக்கு பதற்றமாக இருந்தது, ஒரு கையால் வண்டியை ஒட்டியபடியே, மற்றொரு கையால் தொடர்ந்து வேந்தனுக்கு அழைத்துக் கொண்டிருந்தான்.


  "உங்க ப்ரெண்டு என் லைஃப்ல விளையாடுனது பத்தாதா? இப்போ நீங்க ஒத்த கையால வண்டியை ஒட்டி, என் லைஃப்பை க்ளோஸ் பண்ணிடலாம்னு நினைக்கிறீங்களா அண்ணா?"


  சந்துரு சட்டென்று பிரேக் அடித்து விட்டு மதுவை பார்த்து விழிக்க, நேர் பார்வையாக ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் புறம் திரும்பாமலேயே,


  " முதல்ல வண்டியை எடுங்க, சும்மா உங்க ப்ரெண்டுக்கு போன்ல கூப்பிட்டுகிட்டே  இருக்க வேண்டாம். அதுதான் நேரா போக தானே போறோம், இதுக்கு மேல  எதை என்கிட்ட இருந்து மறைக்கணும்னு நினைக்கிறீங்க?"


அவன் பதில் பேச வருவதற்குள் கைநீட்டி தடுத்தவள், போகலாம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட, அதற்கு மேல் அவனும் வேறு எதுவும் பேசாமல் கோவிலை நோக்கி வண்டியை செலுத்தினான்.


  கோயிலுக்குச் சென்ற பிறகும் கூட வேந்தனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான் சந்துரு, ஆனால் அவன் தான் இவனது அழைப்பை ஏற்கவே  இல்லையே.


  வேந்தன் தன்னிடம் எதற்காக வேறொரு நபரை காட்டி சந்துருவின் தந்தை என்று,கோயில் அன்று கூறினார்? அவரைப் பார்த்த நாளன்று தானே குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை என்று, மன குழப்பத்தோடு சந்துருவோடு வந்து கொண்டிருந்தாள் மது.


  சந்துரு தனது போனை எடுத்து மதுவிற்கு தெரியாத வண்ணம் மீண்டும் வேந்தனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தான். 


    இன்று காலையில் வெகு நாட்களுக்குப் பிறகு அவனை அழைத்து பேசிய அவனது தந்தை, அவன் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததோடு, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டதாகவும் கூறினார்.


  அதோடு திருமணத்திற்கான முதல் பத்திரிகையை வைக்க, வெளியே செல்ல வேண்டும் வண்டியை எடு என்று கூற, ஆனந்தத்தில் இருந்தவன் அவரிடம் எதுவும் பேசாமல் வண்டி எடுத்தான்


  வண்டி வேடந்தூரை நெருங்கும் வேளையில் தான், வேந்தனின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரிந்து, அப்போதிருந்தே வேந்தனுக்கு அழைத்துக் கொண்டிருக்கிறான்.


  வழக்கமாக நண்பர்கள் சேர்ந்து இருக்கும் இடம் எது என்று அவனுக்கு தெரியும் என்பதால், சந்துரு மதுவுடன் நேராக அங்கு தான் சென்றான். ஆனால் அந்த நேரத்தில் வேந்தன் தனது திருமணத்தை பற்றிய விஷயங்களையெல்லாம் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருப்பான் என்று, அவனும் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வேந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட மதுவுக்கு பூமி பந்து, ராட்டினமாக சுழல்வது போன்ற ஒரு உணர்வு.


  மதுவின் உச்சபட்ச கோபத்தின் அளவானது, அவளது கண்களிலேயே தெரிய, நாகரிகம் கருதி நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற  முனைந்தனர்.


    "எங்க போறீங்க பிரதர்ஸ்,உங்க பிரண்டு என்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கும்போது மட்டும், எந்த வார்த்தையும் பேசாம கூடவே தானே இருந்தீங்க. இப்போவும் கூடவே இருங்க முடிவு என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா என்ன? அப்பவாவது இனி எந்த பொண்ணுக்கும் இந்த மாதிரி நம்பிக்கை துரோகம் பண்ண கூடாதுன்னு, உங்களுக்காவது தோனட்டும்."


  "மது அவங்களை எதுவும் சொல்லாத, ஏன்னா எல்லாமே நான்..."


  வேந்தனை  நோக்கி நிறுத்துமாறு கை நீட்டியவள், உச்சபட்ச கோவத்தில் கண்களை மூடி திறந்தால், மீண்டும் அவனது நண்பர்களை பார்த்து,


  "நான் உங்க ப்ரெண்ட்கிட்ட ரெண்டு மூணு வார்த்தை பேச வேண்டி இருக்கு, அதை பேசி முடிக்கிற வரைக்கும், உங்க ப்ரெண்டை வாயை திறக்க வேணாம்னு சொல்லுங்க, இல்ல எனக்கு வர கோபத்துக்கு என்ன வேண்ணா பேசிடுவேன்.  நான் இந்த குடும்பத்தோட மானம் ரொம்ப முக்கியம்னு  நினைக்கிறேன், அவருக்கு வேணும்னா குடும்பத்தை பத்தியும் அவங்க மனசு படர வேதனை பத்தியும் கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு இருக்கு. அவர் இப்படி நடந்து கிட்டதுக்காக பொது இடம்னு கூட பாக்காம கத்தி சண்டை போட்டு, அவர் குடும்பத்துக்கு ஒரு மானக்கேடு வர்ற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்,  தயவு செஞ்சு உங்க ப்ரெண்டை நான் பேசி முடிக்கிற வரைக்கும் எதுவும் பேசாம இருக்க சொல்லுங்க."


  நண்பர்கள் அவளிடம் ஏதோ பேச வர,


" உங்க ப்ரெண்டுக்கு சொன்னது தான் உங்களுக்கும், உங்ககிட்ட அட்வைஸ் வாங்குற அளவுக்கு, நான் அவ்வளவு தாழ்ந்து போகலன்னு நினைக்கிறேன்."


   வேந்தனை நோக்கி திரும்பியவள் அவனை நேர் விழி கொண்டு,


  "என்னை பாத்தா உங்களுக்கு எப்படி இருக்கு? நான் என்ன நீங்க விளையாடுற கை பொம்மைன்னு நினைச்சீங்களா, உங்க இஷ்டத்துக்கு எனக்கே தெரியாம இத்தனை வேலை பண்ணி வச்சிருக்கீங்க. நீங்க செஞ்ச வேலையால எங்க அம்மா உயிருக்கு போராடி ஹாஸ்பிடல்ல கிடந்தாங்களே, அப்ப கூட உங்களுக்கு, நீங்க செஞ்சு வச்ச காரியத்தோட வீரியம் தெரியலையா?


  எனக்கு வேண்டியது ஒரே ஒரு கேள்விக்கான பதில் தான், எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுணீங்க? என்னை எதுக்காக டார்கெட் பண்ணீங்க? ஒரு வேலை அன்னைக்கு நாம முதல் முதல்ல சந்திச்சப்ப நடந்த ஆக்சிடென்ட் கூட நீங்க போட்ட பிளான் தானா? எத்தனை பொய்கள் தான் என்கிட்ட சொல்லி இருக்கீங்க?"


" இல்ல மது நான் சொல்றதை  கொஞ்சம் பொறுமையா கேளு."


    "இதுக்கும் மேல என்ன பொறுமையா கேட்கணும்? அதுதான் உங்க வாய் மொழியா எல்லாத்தையும் கேட்டுட்டேனே,..... எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்?...... அன்னைக்கு கோயில்ல வச்சு அப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கீங்க, இன்னைக்கு இவங்க அப்பா இவரோட கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க வந்ததால தான், எனக்கு உங்களோட நிஜமான முகமே  வெளியே தெரிந்தது, இல்லாட்டி வாழ்க்கை ஃபுல்லா நானும் உங்களை நம்பி,  ஒரு முட்டாள் மாதிரி நீங்க ரொம்ப நல்லவர்னும், என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும் தான் இப்படி ஒரு அவசர கல்யாணம் பண்ணிக்கிட்டதா நினைச்சு வாழ்ந்துட்டு இருந்திருப்பேன். என்னோட அம்மா அவ்வளவு சீரியஸா,..... ஐ சி யூ ல உயிருக்கு போராடிட்டு இருந்தப்ப கூட உங்களுக்கு உண்மையை சொல்லனும்னு தோணல இல்லையா?..."


  “மதுரா ப்ளீஸ் நான் சொல்றதை நம்பு, ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கிட்டது என்னமோ உண்மைதான்.  அன்னைக்கு சந்துருவோட அப்பானு சொல்லி ஒருத்தரை நடிக்க வெச்சதுக்கு காரணம், கல்யாணமான அன்னைக்கே உன் நெத்தியில என் கையால குங்குமம் வெச்சு விடனும்னு ஆசை பட்டேன். அதுக்காக தான் அப்படி ஒரு ஆளை நடிக்க ஏற்பாடு பண்ணேன். ஆனா  நம்ம குடும்பம் மொத்தமும் அங்க வருவாங்கன்னும், அத்தைக்கு இப்படி சீரியஸா ஆகணும்னு நான் நினைச்சு கூட பார்க்கல."

Thursday, August 28, 2025

மன்னவரே 98


 

             அத்தியாயம் 98


   பீரோவினுள் எதையோ  தேடிக் கொண்டிருந்த வேந்தனுக்கு பின்னால் வந்து நின்றாள் மதுரா.


  "சார்,..... அது வந்து,.... அம்மாக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் என்னால நம்ம ரிலேஷன்ஷிப்பை பற்றி வெளிப்படையா எல்லார் முன்னாடியும் சொல்ல முடியல,.... அம்மாவோட மனசு சந்தோஷப்படணும்னு தான் நாம ஒற்றுமையா இருக்குற மாதிரி நடிச்சேன், சாரி,... நான் சொன்னபடி கண்டிப்பா உங்க வாழ்க்கைய விட்டு போயிடறேன்."


  அவளது பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றவன், இன்னும் தனது மனதை அவள் புரிந்து கொள்ளவில்லையா என்று வேதனையோடு, திரும்பி அவளது விழிகளை ஊடுருவி நோக்க, அவனது பார்வை வீச்சை தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்றாள்.


அந்த வீட்டில் உள்ளவர்களின் அன்பை கண்டு, மதுராவின் மனம் எப்போதோ உருகத் தொடங்கி விட்டது. அவர்களுடன் வாழ்நாள் முழுவதும் இதேப் போல இருந்து  விட மாட்டோமா என்று, இப்போதெல்லாம் அவளது மனது ஏங்க தொடங்கியது, இருந்தாலும் மனதை கல்லாக்கி கொண்டு, தனது சுயநலத்திற்காக வேந்தனது  வாழ்க்கையை கெடுக்க கூடாது என்று நினைத்து, மறுபடியும் அன்று கொண்டு வந்து அந்த டிவோர்ஸ் பாத்திரத்தை அவன் முன்பு வைத்தால்,


    "இதுல நான் எப்பவோ சைன் பண்ணிட்டேன் சார், நீங்களும் சைன் பண்ணிட்டீங்கன்னா இதை சப்மிட் பண்ணிடுவேன், என் அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்தையே பண்ணிக்கிட்டோம், ஆனா என்னோட சுயநலத்துக்காக உங்களுடைய வாழ்க்கையை அழிக்க எனக்கு விருப்பம் இல்ல, நாம பிரிஞ்சதுக்கு அப்பறம், நீங்க உங்க ஆசைப்படி  சந்தோஷமா உங்க வாழ்க்கைய வாழலாம் சார், நான் எந்த விதத்திலும் அதுக்கு தடையா நிற்க மாட்டேன்."


  "என்னோட ஆசை எதுவா இருந்தாலும் நிறைவேற்றி வைப்பியா மதுரா?"


    அவனது மதுரா என்ற அழைப்பு  அவளது ஆழ் மனதுவரை சென்று தீண்டியது, அவளால் அவன் கண்களை விட்டு வேறு எங்கும் பார்வையை திருப்ப முடியவில்லை,  கட்டுண்டது  போல் அவள் தலை தானாக ஆம் என்று ஆடியது.


  "ப்ளீஸ் இன்னொரு தடவை இந்த காகிதத்தை  என் கண்ணு முன்னாடி கொண்டு வராதே, என்னை பொருத்தவரைக்கும் கல்யாணம் ஆகுறது ஒரு தடவை தான், அதுவும் மனம் கவர்ந்த ஒருத்தியோட தான். கண்டிப்பா என்னால இதை மாத்திக்க முடியாது. உனக்கு என்னை பிடிக்கலைன்னாலோ, இல்ல என் கூட சேர்ந்து வாழ உனக்கு விருப்பம் இல்லை என்றாலோ, நான் தடை செய்ய மாட்டேன். நிச்சயமா நீ உன் விருப்பப்படி எங்கே வேணும்னாலும் போகலாம். பட் எனக்காக இப்படி பண்ணறேன்னு  மட்டும் சொல்லாத ப்ளீஸ் மதுரா."


  குரல் தழுதழுக்க அவளிடம் பேசிய வேந்தன், இதற்கு மேலும் தான் இங்கு இருந்தால், வேறு ஏதேனும் பேசி விடுவேனோ என்று நினைத்து, அவ்விடத்தை விட்டு வேகமாக  சென்று விட, அவன் சென்றது கூட உணராது அசையாத சிலையாக அங்கேயே நின்று விட்டால் மதுரா.


  அவனது வார்த்தைகள் அவளை கட்டிப் போட்டது. அவருக்கு தன்னை பிடித்திருக்கின்றதா?... அவரது கண்கள் பொய் கூறவில்லையே?.... அதில் உண்மையான அன்பை நான் கண்டேனே!.....  அப்படி என்றால் இது எனக்கான வாழ்க்கை, வேந்தன் எனக்குரியவர், அதோடு இந்த குடும்பமும் என்னுடையது தான்.... அவளது எண்ணப்போக்கை  நினைத்து, அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது, சொல்லப் போனால் வேந்தன் இப்படி கூறியதற்கு இவள் கோபம் தான் கொண்டிருக்க வேண்டும், அதை விடுத்து மனம் முழுவதும் மகிழ்ச்சியோடு இருக்க காரணம், அவள் நெஞ்சில் வேந்தன் தனது காலடித்தடத்தை பதித்து விட்டான் என்பதே ஆகும். இதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் ஒன்றும் சிறு பெண் அல்லவே.


  தனது நினைவுகளுக்குள் மூழ்கிக் கொண்டிருந்தவளை அவளது போன் இசைத்து கலைத்தது. அவளது தோழி வினு தான் அவளுக்கு அழைத்திருந்தாள்.மகிழ்ச்சியோடு அவளது அழைப்பை ஏற்றவள்,


   "வினு எப்படி இருக்க? உன்னோட பேசி எவ்வளவு நாளாச்சு? ஏன் எனக்கு கூப்பிடவே இல்ல?"


"ஏண்டி பேச மாட்டே, அங்க போனதும் கூட ஒருத்தி இருந்தாங்கறதே மறந்துட்டே? உன் போன் கூட ரொம்ப நாளா ஸ்விட்ச் ஆஃப்லயே கிடந்தது. உனக்கு ஏதாவது பிரச்சனையோன்னு நினைச்சு, வேந்தன் சாருக்கு கூப்பிட்டப்போ தான், நீ அங்க உன் குடும்பத்தோட மிங்கில் ஆகி பிஸியா இருக்கேன்கிறது தெரிஞ்சுது."


  "அதுவா,... நான் இருந்த மனநிலைமையில் போனுக்கு சார்ஜ் போட மறந்திருப்பேன், அதுதான் சுவிட்ச் ஆப்னு வந்து இருக்கும்."


  "அதுதான் தெரியுதே, நீ என்னை நல்லாவே மறந்துட்டேன்னு, நீ மறந்தாலும் வேந்தன் சார் மறக்காம அங்க நடக்குற  திருவிழாவுக்கு என்னை கூப்பிட்டு இருக்காரு தெரியுமா? அதோட என் அப்பா அம்மா கிட்ட பேசி பர்மிஷனும் வாங்கிட்டாரு, இன்னும் ரெண்டு நாள்ல நான் அங்க வர போறேன்."


"ஹே!.... அவர் இதை பத்தி என்கிட்ட ஒண்ணுமே சொல்லல,.... ரொம்ப சந்தோஷம் டி."


  "ஒருவேளை உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு நினைச்சிருப்பாரோ என்னவோ! நான் தான் போன் பண்ணி கெடுத்துட்டேன், மது நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?.... எனக்கு தெரிஞ்சு வேந்தன் சார் உன் மேல, ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி தான் எனக்கு தெரியுது. கண்டிப்பா நீ அந்த டிவோஸ் பேப்பர்ல அவர் கிட்ட கையெழுத்து வாங்கியே  ஆகணுமா?... இது ஒரு நல்ல வாழ்க்கை தானே?.... நீ ஏன் இதையே கண்டினியூ பண்ண கூடாது."


  "புரியுது வினு, ஆனா இது ஒன்னும் டிராமா கிடையாதே, பழக பழக பிடிச்சிரும்னு சொல்றதுக்கு, பிரிஞ்சு போகனும்னு  நான் முடிவெடுத்ததே  அவருக்காக தான்,  என்னோட சுயநலத்துக்காக தான் இந்த அவசர கல்யாணமே நடந்தது, இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரும் என்னை பிடித்திருக்கிறதா சொன்னாரு."


"ஹேய் சூப்பர் டி! அப்புறம் என்ன உனக்கு பிரச்சனை? நீயும் ஐ லவ் யூ டூன்னு சொல்லி ஜோடி சேர்ந்துக்க வேண்டியது தானே, அதுதான் பார்த்தேனே, முதல் நாள் அப்படி சண்டை கட்டிட்டு, அடுத்த தடவை பார்க்கும்போது ஆபீஸ்ல அவரு கண்ணாலயே போயிட்டு வரேன்னு சொல்றதும், நீ அவருக்கு தலையை உருட்டி ஆட்டி சம்மதம் சொன்னதையும், நீங்க ரெண்டு பேரும் சரியான பேர் தெரியுமா?"


  " போதும் போதும் உன் சார் புராணம், நீ ஊருக்கு வா, அதுக்கப்புறம் பேசிக்கலாம், மறக்காம அப்பா அம்மாவை கேட்டதா சொல்லு."


    "சரி மது நான் ஊருக்கு வரும்போது, ரெண்டு பேரும் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கான ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன், புரியுது இல்ல."


  " முதல்ல நீ ஊருக்கு வாடி அதுக்கப்புறம் அதெல்லாம் பேசிக்கலாம்."


   அவளிடம் பேசிவிட்டு போனை வைத்தவள், முகத்தில் புன்னகை மலர கீழே வந்தாள். சில நாட்களாக மௌனமாக சுற்றிக் கொண்டிருந்தவள்  விரிந்த புன்னகையோடு அனைவரிடமும் கலகலப்பாக பேசத் தொடங்கினாள், அடிக்கொரு முறை தன் கணவன் வருகிறானா என்று கண்களால், வாசலில் அவனை தேடவும் மறக்கவில்லை.


  தான் எடுத்து வந்த பொருட்களை எதிரில் வந்த கோயில் ஆட்களிடம்  கொடுத்துவிட்டு, தனது நண்பர்களை தேடிச் சென்றான் வேந்தன். அவர்கள் அப்போதுதான் கோவில் வேலைகளை முடித்துக் கொண்டு, கோவிலுக்கு சற்று தள்ளி இவர்கள் எப்போதும் சந்தித்து பேசும்  வெளிமண்டபத்தின் திண்ணையில், மூலையில் அமர்ந்து திருவிழா ஏற்பாடுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.


சோகமாக வந்தவன் அவர்களுக்கு இடையே வந்த அமர, வெற்றி தீபன் மூர்த்தி  மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போதுதான் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றிருந்தான் மாறன். அவனும் இப்போது இவர்கள் கூட்டத்தில் சேர்ந்து, கலகலப்பாகவும் பெரியவர்களிடம் தன்மையாகவும் பழக தொடங்கி விட்டான்.


"என்ன மாப்ள காத்து தப்பா அடிக்குதே?...  எப்பவுமே வீடு விட்டா கோவில் வேலை, கோயில் விட்டா வீடுன்னு இருக்க வேந்த மகராசா, இந்த ஏழைங்க பக்கம் கருணை  பார்வையை வீசி இருக்காரு."


  "டேய் மூர்த்தி ஓவரா பேசாதே, ஏன்டா நான் உங்க கிட்ட வர்றதே இல்லையா? இல்ல பேசுறது இல்லையா?"


  "பேசுனீங்க மகராசா, ஆனா அதெல்லாம் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி, ஆனாலும் கல்யாணம் ஆனா பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவாங்கன்னு ஊரும் உலகம் சொல்ற பழமொழியை, உன்னோட வாழ்க்கையில இருந்து தான்டா நான் பிராக்டிகலா தெரிஞ்சுகிட்டேன்."


"டேய் மூர்த்தி எதுக்கு வேந்தனை வம்புக்கு இழுக்கறே?"


  "ஆமா இவரு வயசு புள்ள, நான் கையை புடிச்சு வம்பு இழுக்கிறேன், ஏன்டா தீபா நீ வேற கடுப்ப கிளப்புறே, இவன் கல்யாணமே சங்கடத்தில் நடந்துச்சே,  அந்த புள்ள முகத்தை திருப்பிட்டு இருக்கும், பாவம் இவன் கஷ்டத்துல இருப்பான்னு நினைச்சு இவனை பார்க்க போனா, கழுத்தை புடிச்சு வெளியே தள்ளாத குறையா விரட்டி விட்ராண்டா, சரி வெளிய எங்கயாவது நிறுத்தி பேசினா கூட,  புது மாப்பிள்ளை மாலை நேரம் எங்கேயும் வெளியே சுத்தக்  கூடாதுன்னு பாட்டி  சொல்லி இருக்காங்கன்னு, அப்படியே கழட்டி விட்டு போறான்டா."


" டேய் பெரியவங்க சொன்னதை மதிச்சு நடந்தது ஒரு குத்தமா? இதுக்கு போய் இவ்வளவு பெருசா, டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்கே நீ."


  "டேய் அவன் சந்தோஷமா இருந்தா உனக்கு ஏன்டா வேகுது? "


"டேய் வெட்டிப் பயலே நீ என்ன அவனுக்கு வக்காலத்தா?"


  "வெற்றி மூர்த்தி இரண்டு பேரும் சண்டை போடுறதை முதல்ல நிறுத்துங்க, வேந்தா என்ன ஆச்சு? ஏன் உன் முகம் டல்லா இருக்கு? ஏதாவது பிரச்சனையா?"


  சரியாக அந்த நேரத்தில் வேந்தனின் அலைபேசி இசைத்தது, அதில் சந்துருவின் பெயரை கண்டு முகச்சுழிப்போடு அதை கீழே வைத்தான்.


  "டேய் சந்துரு தானே கூப்பிடறான், போனை ஏன் அட்டென்ட் பண்ண  மாட்டேங்கறே? ஏதாவது அவன் கல்யாண விஷயமா கூப்பிட போறான் வேந்தா, எடுத்து பேசு."


    "சார் எப்படி அவன் போனை  அட்டென்ட் பண்ணுவாரு, போனை எடுத்தால் அவன் கழுவி கழுவி இல்ல ஊத்துவான்,  அவனோட கல்யாணத்த ஒரேடியா நிறுத்திய மகானாச்சே."


"என்ன சந்துருவோட கல்யாணம் நின்னுடுச்சா? டேய் மூர்த்தி என்ன தாண்டா சொல்ல வர, சொல்றதை ஒழுங்கா சொல்லு ."


  "ஆமாண்டா சந்துருவோட அப்பா கிட்ட போய், சந்துரு லாவண்யாவோட லவ்வை பத்தி ஓபன் பண்ணிட்டான், அதோட  லாவண்யா யாரோட பொண்ணுங்கறதையும் சொல்லிட்டு வந்துட்டான். அவங்களுக்கு நடக்க இருந்த ரெஜிஸ்டர் மேரேஜும் நின்னு போச்சு."


  "அடப்பாவி, ஏண்டா உனக்கு இந்த கொலவெறி, அவங்க லவ்ல உனக்கு சீனியர் டா, அவங்க மேரேஜ் பண்ணா உனக்கு என்ன வந்தது?"


  "இல்ல தீபா அப்பா அம்மாக்கு தெரியாம தான் மதுவும் நானும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்..."


  "பண்ணிக்கிட்டோம்னு சொல்லாத மகனே, பண்ணிகிட்டேன்னு சொல்லு, ஏன்னா நீ பண்ண அந்த திருட்டு கல்யாணம் பத்தி, கையெழுத்து போட்ட  அந்த பிள்ளை மதுவுக்கே தெரியாதே, சரி சரி முறைக்காத மேட்டருக்கு வா."


  "அப்படி பண்ணியதால மதுவும் சரி, அவளோட அப்பா அம்மாவும் சரி எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு நேரடியா பார்த்துட்டேன், என்னோட பேரன்ட்ஸீம் கூட  எனக்கு எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசையா இருந்திருப்பாங்க,  அவங்க கண்ணுல அந்த வலியை பார்த்துட்டு, என் பிரண்டு அவனும் அதே தப்பு பண்ணும் போது பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? அதுதான் சந்துருவோட அப்பாவை சந்திச்சு பேசினேன். எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா அவர் இவங்க மேரேஜ்க்கு ஒத்துக்குவாரு, அதனாலதான் இவங்களோட ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தியும் சொல்லிட்டு வந்தேன்."


இவன் பேசிக் கொண்டிருக்கும்போது தனது நண்பர்களின் பார்வை  அதிர்ச்சியோடு வாசல் பக்கம் செல்வதை கண்டு, தனக்கு பின்னே திரும்பி பார்த்தான். அங்கே கண்கள் சிவந்த நிலையில் உச்சபட்ச கோவத்தில் சந்துருவுடன் நின்று கொண்டிருந்தால் மதுரா.


Wednesday, August 27, 2025

மன்னவரே 97


 

             அத்தியாயம் 97


  திருவிழாவிற்காக ஊரெங்கும் சொந்தங்கள் நிறைய ஆரம்பித்தனர். மது பெற்றோரையும் அண்ணனையும் கண்டு கொள்ளவே இல்லை, அவர்களை  வீட்டிற்கு வந்த விருந்தினர்களாக  மட்டுமே நினைத்தால், அவள்  அண்ணனாக முன் வந்து பேசினாலும்,  அவள் நின்று கூட பேசவில்லை, உடனே அங்கிருந்து சென்று விடுவாள்.


  சில நாட்களாகவே மது அந்த வீட்டில் சுற்றி கொண்டிருந்ததால், எது எது எங்குள்ளது என்று அனைத்தும் அத்துபடியாக தெரிந்தது. அது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை . அடுப்படியிலும் சரி வீட்டின், உள்ளேயும் சரி, யாரேனும் ஒரு பொருளைக் கேட்டால், அவளது கால்களும் கைகளும் தன்னிச்சையாக அதை எடுத்து வந்து நீட்டியது. 


  அது எப்படி என்று அவளுக்கே தெரியவில்லை. அதுமட்டுமா? வேந்தன் தனது வீட்டை நெருங்கும் போதே, அவளது கால்கள் தானாகவே வாசலில் வந்து நிற்கும். இதைவிட தினமும் இரவு வேந்தனை விட்டு தள்ளி ஒரு  மூலையில் படுத்திருப்பவள், ஒவ்வொரு நாளும் காலையில், எப்படி வேந்தனின் நெஞ்சத்தில் தலை வைத்தபடி துயில் எழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. 


இதற்கும் வேந்தன் தான்  படுத்திருக்கும் இடத்தை விட்டு, ஒரு அடி கூட நகர்ந்ததில்லை, இவள் தான் அவனிடத்திற்கு சென்று அவன் நெஞ்சில் தலை சாய்த்து படுத்துக்  கொண்டிருக்கின்றாள். 


  இருவருக்கும் இடையே தலையணைகளை வைத்து பார்த்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை, அடுத்து வந்த நாட்களில் தரையில் பாய் போட்டு கூட படுக்க துவங்கி விட்டாள், என்ன ஆச்சரியம் மறுநாள் காலையில் எப்போதும் போல அவன் நெஞ்சில் இருந்துதான் துயில் எழுவாள்.


  இதைப் பற்றி அவனிடம் கேட்கலாமா என்று கூட பல நாள் யோசித்திருக்கின்றாள் , இருந்தும் அவன் ஏதேனும் தன்னை பற்றி தவறாக நினைத்து விடுவானோ?... என்று ஒரு மனம் கூற, அதை அப்படியே விட்டு விட்டாள். பாவம் அவள் அறியவில்லை இது எல்லாம் அவனது மணவாளனின் திருவிளையாடல் என்று.


  தினமும் இரவு தூங்கும் போது, நல்ல பிள்ளையாக சிறிது இடைவெளி விட்டு தான், மதுரா துயில்வாள். என்ன தான் படுத்தவுடன் அவள் உறங்கி விட்டாலும், என்றுமே அடுத்து சிறிது நேரத்தில் உறக்கத்தில் புரண்டு கொண்டே இருப்பாள், அரை தூக்கத்தில் இருக்கும் அவளை வேந்தன் இழுத்து, தனது மார்பிலே படுக்க வைத்துக் கொள்ள, அதன் பிறகு சுகமாக தூங்கிக் விடுவாள் அவனின் இதயராணி. எப்போது தனது மனைவியிடம் மாட்டிக் கொள்ள போகின்றானோ தெரியவில்லை!


மதுராவிற்கு இது திருமணம் முடிந்து வரும் முதல் பண்டிகை என்பதால்,  மாப்பிள்ளை பெண்ணிற்காக உடைகள் மற்றும் நகைகளை வாங்கி வந்திருந்தனர் அவளின் பெற்றோர், இது குறித்து  அவள் தாய் அவளிடம் பேச வந்த போது, அவரோடு பேச மறுத்து விலகி நடந்தால் மதுரா, ஒரு கட்டத்தில் அவளது கைகளை பிடித்துக் கொண்டு அவளது பாரா முகத்தைக் கண்டு அழத் தொடங்கி விட்டார் அன்னலட்சுமி.


பூவுப் பாட்டி தான் மதுராவை மிரட்டி, லட்சுமி அம்மாவின் அருகே அவளை அமர வைத்தார். அவளுக்குமே கண்களில் நீர் கோர்த்து விட்டது, இருந்தும் ஒரு பிடிவாதம், எப்படி தன்னை அவர்கள் தவறாக நினைக்கலாம், அந்த அளவு நம்பிக்கையை கூட, நான் அவர்களுக்கு கொடுக்கவில்லையா என்ன?... 


  அதுவும் தனது திருமணத்தை கூட பார்க்க மாட்டேன் என்று சொன்னவர்கள் தானே? என்று ஒரு கோபம். இருந்தும் தன் தாய் அழுவதை பார்க்க முடியாமல், அவர் அருகே மறுப்பு கூறாமல் அமர்ந்து விட்டாள்.


" லட்சுமி எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்க? இப்பதான்  ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து, ஏதோ நாலு வார்த்தை பேசிட்டு இருக்கே, அது பொறுக்கலையா?... மது இது ரொம்ப தப்பும்மா, அம்மா செஞ்சது தப்பாவே இருக்கட்டும், எவ்வளவு முறை நீ ஏதாவது தப்பா பேசி இருந்தாலும், இறங்கி வந்து அவ சமாதானப்படுத்தி இருப்பா?...இப்போ ஏதோ புத்தி கெட்டுப் போய் தப்பா பேசிட்டா, அதுக்காக அந்த ஒரு வார்த்தையையே புடிச்சுகிட்டு அவளை நீ ஒதுக்கி வைக்கலாமா? எடுத்து தூக்கி வீச, இது என்ன வேண்டாத பொருள்ன்னு நினைச்சயாம்மா? உறவுமா,.... ஒரு குடும்பத்துக்குள்ள நல்லது கெட்டது, மன கசப்பு எல்லாமே இருக்க தான் செய்யும், அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு?... 


    அதுக்காக இது பெருசா இருக்கு, இது சிறுசா இருக்குன்னு சொல்லி அதை வெட்டி வீசவா செய்யறோம்? எல்லாத்தையும் ஒண்ணா தானே வெச்சி இருக்கோம், அந்த மாதிரி தான் வீட்ல இருக்குற பெரியவங்களா இருந்தாலும் சரி, சின்னவவங்களா இருந்தாலும் சரி, அவங்க பேச்சு நம்மள காயப்படுத்தினாலும் பொறுத்து தான் போகணும், அதுதான் ஒரு குடும்பத்தையே வடிவமைக்கும். 


   முதல்ல அவ கிட்ட பேசு. டாக்டர் ஏற்கனவே உங்க அம்மாவை பார்த்து சூதானமா பாத்துக்க சொன்னாங்க, அவ மனசு கஷ்டப்படுற மாதிரி எந்த விஷயத்தையும்  சொல்லாதீங்க, முடிஞ்ச அளவுக்கு சந்தோஷமா வச்சுக்கங்கன்னு  சொன்னாங்க. இப்போ நீயே அவளை கஷ்டப்படுத்தலாமா மதும்மா?"


  ஏற்கனவே தனது அன்னை அழுத  போதே மதுராவிற்கும் கண்களில் நீர் கோர்த்து விட்டது. இப்போது அவரது உடல்நிலையை பற்றி கேள்விப்பட்டதும் மனது பொறுக்கவில்லை.


  “ரொம்பத்தான் உங்க மருமகளுக்கு சப்போர்ட் பண்றீங்க? உங்க ஆசை மருமக என்கிட்ட கோபப்பட்டு  பேசும்போது எங்க போனீங்களாம்? அப்போ எனக்கு சப்போர்ட்டுக்கு வந்தீங்களா என்ன? அவங்களுக்கு துணையாக தானே இருந்தீங்க,..... அப்படி நான் என்ன தப்பு  தப்பு பண்ணிட்டேன்?.... என் கல்யாணத்துக்கே வர மாட்டேன்னு ஒதுங்கி நிக்கிற அளவுக்கு?....லவ் பண்ணது ஒரு குத்தமா? அவங்க என்னை ஒதுக்கினதால தான்,  நானும் ஒதுங்கியே இருந்துட்டேன்."


  "  நீ  காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதை நான் ஒன்னும் தப்புன்னு சொல்லல மது, ஏன்னா நானும் அதே வேலையை தான் பண்ணிணேன். ஆனா நீ ஏன் உன் காதலை பத்தி எங்ககிட்ட எதுவுமே சொல்லல?...உன்னோட விருப்பத்தை வாய் விட்டு சொல்ல கூட முடியாத படியா நாங்க உன்னை வளர்த்தோம்?.... அதுவும் இல்லாம அந்த கோயில்ல வெச்சு நீ இந்த புனிதமான தாலியை பத்தி தப்பா பேசவும் என்னால பொறுத்துக்க முடியல,.... என்னோட வளர்ப்பு தப்பா போயிடுச்சோன்னு நினைச்சு தான், நான் அப்படியெல்லாம் பேசிட்டேன், மன்னிச்சுடுடா."


  "ம்ஹூம், மன்னிச்சாச்சு மன்னிச்சாச்சு  அதுதான் நான் உங்களை மன்னிக்கலைன்னா, அடிக்கறதுக்கு ஆள் துணைக்கு வச்சுட்டு இருக்கீங்களா? எந்த  ஊர்லையும் இவ்வளவு ஒற்றுமையான மாமியார் மருமகளை நான் பார்த்ததில்லைப்பா!..."


  "எம் மருமகளுக்காக நான் வராம  வேற யார் சப்போர்ட்டுக்கு வருவாங்க?... என் சப்போர்ட் எப்பவுமே என் மருமகளுக்கு தான்."


  "நீங்க உங்க மருமகளுக்கு சப்போர்ட்டு பண்ணா,  எனக்கு ஏன் மாமியார் சப்போர்ட்க்கு வருவாங்க, அதுவும் ஒருத்தரா என்ன?.... ரெண்டு பேர் இருக்காங்களே எனக்கு மாமியாரா.... என்னத்தை சொல்றீங்க?" 


  கோவில் விஷயமாக ஏதோ ஒரு முக்கியமான பொருளை எடுக்க வந்த வேந்தன், வெகு நாட்களுக்குப் பிறகு மதுவின் கலகலப்பான பேச்சை கேட்டு புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தான்.


  "கண்டிப்பா மது எங்க வீட்டுக்கு  குலமகள் நீ, இந்த வீட்ல இருக்கிற எல்லாரோட சப்போர்ட்டும் உனக்கு மட்டும் தான்."


      இந்த வார்த்தை போதாதா பெற்றவர்களுக்கு, மதுவின் குடும்பத்திற்கு மனது நிறைந்து விட்டது. மதுவிற்கு நல்ல குடும்பத்தில் வாழ்க்கை அமைந்துவிட்டதை கண்டு  நிம்மதியாக இருந்தது.


  மதுவை பொருத்தவரை அவளது பெற்றோருக்கு தான் வேந்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவே இருந்து விட்டுப் போகட்டும், நாளை எங்களுக்கு விவாகரத்தே ஆனாலும் அதை யாரிடமும் சொல்லாமல், இங்கிருந்து வெளியேறி விடுலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போதைக்கு தன் தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும் இத்தகைய சூழ்நிலையில், பிரிவது பற்றிய பேச்சு இப்போதைக்கு வேண்டாம் என்று ஒத்திப் போட்டு, வேறு விஷயங்களை பேசி அவர்களை சிரிக்க வைத்தாள்.


  "மது எனக்கொரு வாக்கு கொடுப்பயா நீ? எக்காரணத்தைக் கொண்டும் மாப்பிள்ளை கூட நீ சண்டை போடக் கூடாது, உன் கழுத்தில் இருக்கிற இந்த தாலிக்காக தான் நமக்கு சண்டையே வந்துச்சு, எக்காரணம் கொண்டும் இதை நீ கழுத்தில் இருந்து கழட்டக் கூடாது, இந்த வீடு தான் இனி உனக்கு உலகம், இங்க இருக்கிறவங்க யார் மனமும் நோகும் படி எப்பவும் நடந்துக்க கூடாது, என் வளர்ப்பு எப்போதும் தப்பா போகக் கூடாது மது."


  நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்ததால், அவரின் மூச்சு தடை பட ஆரம்பித்தது. அவரது கைகளை பிடித்துக் கொண்ட மது,


"கண்டிப்பா இந்த வீட்ல யார் மனசும் நோகும் படி, நான் நடந்துக்க மாட்டேன்ம்மா. அதோட உங்க மாப்பிள்ளை கண் கலங்காதபடி, வாழ்க்கை முழுவதும் நல்லபடியா பாத்துக்குறேன் போதுமா?.. வாழ்நாள் முழுவதும் கூடவே இருந்து, என் தொல்லை அனுபவிக்கனும்னு அவர் தலையில் எழுதி இருந்தா, யாரால் அதை மாத்த முடியும்."


   வேந்தனுக்கு அவளது பேச்சை கேட்டு சந்தோஷமே, மனதுக்குள் குதூகளித்தாலும் அதை வெளி காட்டிக் கொள்ளவில்லை, ஒருவேளை தனது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்து விட்டால் மதுரா சந்தேகம் கொண்டு இவனை  கேள்விகளால் துளைத்தெடுக்க கூடுமே?... அதனால் அங்கு இருந்தவர்களை பார்த்து ஒரு சிறு புன்னகையை மட்டும் வீசிவிட்டு, தனது அறைக்கு சென்றான்.


மதுரா அவனை சற்றும் அங்கு எதிர்பார்க்கவில்லை, அதுவும் தான் இவ்வாறு பேசிய இந்த நேரத்தில். தனது இந்தப் பேச்சுக்கான  விளக்கத்தை அவனுக்கு கூற வேண்டும் என்று, அவன் சென்றதும் பின்னாலேயே அறைக்கு சென்று விட்டாள். சுற்றி இருந்த உறவுகள்  இவர்கள் செயலை கண்டு, நல்ல அன்னியோன்யம் என்று நினைத்துக் கொண்டு, ஒருவருக்கு ஒருவர் புன்னகைத்துக் கொண்டனர்.


Tuesday, August 26, 2025

மன்னவரே 96


 

            அத்தியாயம் 96


  ராகுலுக்கு தனது குடும்ப சூழ்நிலை பற்றி  தெளிவாக தெரிந்ததால்,  தொழிலில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து விட்டு, நிரஞ்சனாவை பெண் கேட்டு வரலாம் என்று தனது மனதிற்குள் ஒரு உறுதி எடுத்திருந்தான். ஆனால் திடீரென்று அவளை கண்டதும், தனது உணர்வுகளை அடக்க முடியாமல், நிரஞ்சனா அவனை கட்டிக் கொண்டபோது, அவனும் அவளை அணைத்திருந்தான். 


    ஏனோ அவளை விட்டுக் கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவன் சுயநினைவுக்கு வரும் முன்பே, விஷயம் விபரீதமாகி இருந்தது. தன்னை நம்பி, திருவிழாவிற்கு அழைப்பு விடுத்திருந்த இந்த குடும்பத்திற்கு, இப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டேனே?.. இதனால் தன் குடும்பமும் இப்படி அனைவரின் முன்பும், தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே?... என்று மனம் வருந்தினான்.


  சரோஜா பாட்டி தான் முதலில் தன் திருவாயை திறந்தார்.


  "எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்குள்ள புகுந்து, நம்ம புள்ளகிட்டையே இப்படி நடந்திருப்பான்."


"ஆத்தா நீ கொஞ்சம் சும்மா இரு, தம்பி நாங்க எல்லாரும் உங்க மேல நிறையவே மரியாதை வெச்சிருந்தோம், கண்டிப்பா இப்பவும் வெச்சிருக்கோம், ஏன்னா எங்க வீட்டு பொண்ணை பத்திரமா நீங்க தான் கூட்டிட்டு வந்தீங்க, அவளுக்கு உங்களை பிடிச்சிருந்தா கட்டி கொடுக்கறதுல எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, ஏன்னா எங்க குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, நாங்க காசு பணத்தையோ இல்ல, சாதியையோ பெருசா பார்க்கறது இல்ல, குடும்பத்தையும் பையனோட குணத்தையும் தான் பார்க்கறோம், ஆனா உங்க குடும்பமும் உங்க சாதி சனமும் எங்க பொண்ணை இது போலவே  ஏத்துக்குமா?"


  ராகுல் இவர்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் அதிர்ந்து போய் நின்றதிலேயே வெளிப்படையாக தெரிந்தது.


  "என்ன தம்பி பேசாம நிக்கிறீங்க? எங்க முடிவை நாங்க சொல்லிட்டோம், இனி நீங்களும் உங்க அம்மாவும் தான் முடிவை சொல்லணும்."


  தன் மகன் அதிர்ச்சியில் நிற்பதை கண்டு தானே பேச ஆரம்பித்தார் ராகுலின் தாயார்,


"எனக்கு என் மகனோட சந்தோஷம் தான் முக்கியம். எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம், நாங்க எங்க ஊரை விட்டு வந்து பல வருஷம் ஆச்சு, என் பையன் தான் பாடுபட்டு என் பொண்ணுங்களை கரையேத்தினான், இப்போ அவனோட கல்யாணத்தை முடிச்சிட்டு, அவனோட இன்னொரு தங்கச்சிக்கு நான் மாப்பிள்ளை பார்த்துக்கிறேன், நீங்க ஆக வேண்டியதை பாருங்க."


  அப்போதுதான் அவனுக்கு சுய நினைவு வந்தது, உடனே அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.


  "ஐயா  ஒரு நிமிஷம், எனக்கு நிரஞ்சனாவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தான், ஆனா இங்கே ராணி மாதிரி இருக்குற உங்க பொண்ணை கல்யாணத்துக்கு அப்பறம், நானும் ராணி மாதிரி பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். அதுக்காக ஒரு சில வருஷம் மட்டும் எனக்காக காத்திருக்க முடியுமா? நான் இப்ப தனியா தொழில் தொடங்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன், அதுல ஒரு நல்ல நிலைக்கு வந்துட்டு, என் தங்கச்சிக்கும் ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணத்தை முடிச்சிட்டு, நானே உங்ககிட்ட வந்து பொண்ணு கேட்கலாம் என்று தான் நினைச்சுட்டு இருந்தேன், அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆயிடுச்சு. ப்ளீஸ்,.... எனக்கு கொஞ்ச காலம் மட்டும் டைம் கொடுங்க, கண்டிப்பா ஒரு நல்ல நிலைமையில் வந்து நிரஞ்சனாவை கல்யாணம் செஞ்சு நான் கூட்டிட்டு போறேன்."


  இப்போது வேந்தனும் அவனுக்குத் துணையாக வந்தான், ஏற்கனவே ராகுலுக்கு ஆதரவாக பேசி தான் தனது தாத்தாக்களை இவ்வாறு முடிவெடுக்க வைத்திருந்தான். இப்போது அவனது வேலையை பற்றியும், அவன் வேலையில் எவ்வளவு சின்சியர் என்பதை பற்றியும் கூறி, விரைவிலேயே அவன் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது, அதனால் நாம் அவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுப்பதில் தவறு இல்லை என்று கூற, அவர்களும் ஒரு மனதாக சம்மதித்தனார்.


  மறுமொழி பேச வந்த சரோஜா பாட்டியை மாறன், தனது பார்வையாலேயே அடக்கி இருந்தான். எப்படியோ நிரஞ்சனா மற்றும் ராகுல் திருமணமும் ஒருமனதாக முடிவானது.


  வெகு நாட்களாக தீபன் வீட்டிற்கு வராமல் இருப்பதால், அனைவரும் அவனுக்கு ஏதோ வேலை என்று நினைத்திருக்க,  கவியால் மட்டும் தான் சரியாக அவனது மனதை புரிந்து கொள்ள முடிந்தது. குற்ற உணர்ச்சியால் தான் அவன் வீட்டிற்கு வருவதில்லை என்று புரிந்து கொண்டவள், நேராக  அவனது இல்லத்திற்கே சென்றுவிட்டாள்.


  அன்று அவனுக்கு விடுமுறை நாள் தான், எப்போதுமே விடுமுறை நாட்களில் வேந்தனின் இல்லத்தில் தான், தனது பொழுதை போக்கிக் கொண்டிருப்பான். ஆனால் இன்று ஏனோ, அங்கு செல்ல தயக்கமாக இருந்தது. என்னதான் அவர்கள் தன்னை தப்பாக நினைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று மனம் கூறினாலும், மூளை அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. இனி எந்த  தைரியத்தில் யார் துணையோடு சென்று கவியை போய் பெண் கேட்க?..


        தனக்கு யார் இருக்கிறார்கள் என் சார்பாக திருமணத்தை முன் நின்று நடத்த?... அந்த கவலை வேறு மனதை வாட்டி வதைத்தது. முதலில் கவிக்கு என்னை பிடித்திருக்கின்றதா என்று கூட தனக்கு தெரியாதே?... காலை உணவை கூட உட்கொள்ளாமல் கட்டிலில் படுத்திருந்தவனின் மீது ஜக்கில் உள்ள தண்ணீரை ஊற்றி நனைத்து, எழுப்பினால் கவி.


  திடீரென்று தன் மீது தண்ணீர் கொட்ட, அலறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவன், தன் எதிரே முறைத்துக் கொண்டு நின்றிருந்த கவியை கண்டு, இமைக்க மறந்தான்.


  "என்ன?.. இன்னும் உங்க சோக கீதத்தை வாசிச்சு முடிக்கலையா?.... தலை மேல தூசு விழுந்தா தட்டி விட்டுட்டு போகனும், அதை விட்டுட்டு நான் அழுக்குன்னு ஒதுங்கி நிற்க கூடாது,...  கொஞ்சமா நினைஞ்சாச்சு பாத்ரூம்ல போய் முழுசா தலையை முழுகிட்டு  வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ."


  அவள் சென்று விட்டாள், அவனுக்குத்  தான் இது கனவோ என்ற சந்தேகம்!.... இல்லையே தலையில் இருந்து சொட்டிக் கொண்டிருக்கும் நீரானது அது உண்மை என்று பறைசாற்றியது. தனது கவியா இது?... தனக்காக வந்திருக்கின்றாளா?....மனம் துள்ளியது ஆனால் அடுத்த நிமிடமே மனம் தனது நிலையை எண்ணி வருந்தியது. ஆனால் அவள் பேசிய வார்த்தைகள் ரீங்காரமாக அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்களில் மின்னல் வெட்ட, தனது தேவதையை காண அவசரமாக குளித்து முடித்து வெளியே வந்தான் தீபன். 


  டைனிங் டேபிளில் அவனுக்கான உணவு பதார்த்தங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் கவி. குறுகுறு பார்வையோடு புன்னகை முகமாக வந்தமர்ந்தவனை, முறைத்துக் கொண்டே அவனது தட்டில் உணவை பரிமாறினாள்.


  "கவி எனக்காக வந்தியா?"


  "இல்ல, பக்கத்து வீட்டு தாத்தாவை பார்த்துட்டு போகலாமுன்னு வந்தேன், பக்கத்துல உங்க வீட்டு கதவு திறந்து கிடந்தது, போலீஸ் வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டானோன்னு பார்த்துட்டு போலாமுன்னு வந்தேன். வாயை மூடிக்கிட்டு சாப்பிடுங்க,.... இல்லாட்டி என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்குவீங்க."

  

    "வாயை மூடிக்கிட்டு எப்படி சாப்பிடறது?"


  கவி அவனை பார்த்த கோபப் பார்வைக்குப் பின், அவன் நிமிர்ந்து கூட  பாராது, தட்டில் வைத்த உணவுகளை, வெகு நாட்களுக்கு பிறகு, மனதோடு வயிறும் நிறையும் அளவுக்கு உண்டான்.


  சின்ன வயசுல ஆசையா கட்டிக்கிறயான்னு கேட்டதுக்கே, என்னை வீடு ஃபுல்லா துரத்தி துரத்தி அடிச்சவளாச்சே, இப்போ செம கோபத்துல இருக்கிற மாதிரி தெரியுது, எங்கெங்கெல்லாம் அடிபட போகுதோ,  நாளைக்கு வேற ஒரு முக்கியமான கேஸ் ஹியரிங் இருக்கே, ஆண்டவா அடி பலமா விழாம காப்பாத்துப்பா, கைகளை கழுவிய படி சிந்தனையில் இருந்தவன் திரும்பிய போது, கவி அவனை நோக்கி வருவதைக் கண்டு கண்களை மூடி நின்றுவிட்டான்.


  ஓடி வந்தவள் அவனது நெஞ்சில் சாய்ந்து இறுக்கமாக அவனைக் கட்டிக்கொள்ள, சுயநினைவுக்கு வருவதற்கே அவனுக்கு இரண்டு நிமிடம் பிடித்தது.  இவ்வளவு நாளும் அவன் தான் கவியின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான், கவி எப்போதும் அவன் மீது விருப்பம் இல்லாதது போல தான் நடந்து கொள்வாள். திடீரென்று தான் தனிமையை உணரும் நேரத்தில், இவளது அருகாமை கிடைக்குமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.


  அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனின் காதில், பெண்ணவள் தனது காதலை சொன்னால் வாய்மொழியாக. 


  "ஐ மிஸ் யூ டா மாமா, ஐ லவ் யூ சோ மச். இனி ஒரு முறை என்னை இப்படி தனியா தவிக்க விடாதே."


    "இந்த வார்த்தையை உன் வாயால கேட்டதுக்கு அப்புறமும் உன்னை விட்டு தள்ளி இருப்பேனா கவி. ஏனோ மனசுல  ஒரு சின்ன நெருடல் அவ்வளவுதான்."


  " இனிமேல் அது சின்னதா கூட வரக் கூடாது."


      தீபன் வெகு நாட்களாக வீட்டு பக்கம் வராததால், அவனுக்கு இன்று விடுமுறை என்று அறிந்த வடிவுப் பாட்டி, அவனுக்கு பிடித்த உணவுகளை ஆசையாக சமைத்து எடுத்து கொண்டு அவனது வீட்டிற்கு கிளம்பினார். சுந்தரமூர்த்தி தாத்தாவும் வேந்தனுடன் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தார், போகும் வழியில் அவரை விட்டுவிடுவதாக கூறி, தீபனின் இல்லத்திற்கு சென்றனர், அவர்கள் வீட்டினுள் நுழைந்த போது தான், கவியும் தீபனும் நின்றிருந்த நிலையை கண்டு வாய் பிளந்து நின்றனர். வீட்டில் உள்ள அனைவருக்கும் கவியை தீபனுக்கு கட்டிக் கொடுக்க விருப்பம் இருந்ததால், கவின் படிப்பு முடிந்ததும் இவர்கள் திருமணத்தை விரைவிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.


  திருவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது, வீட்டில் அனைவரும் இருக்க, தன் இரண்டாவது மகனின் குடும்பம் மட்டும் இல்லாதது சற்று சங்கடமாக இருந்தது பூவுப் பாட்டிக்கு, அதை தன் கணவரிடம் பகிர்ந்து கொண்டவர், அடுத்த நாளே கணவரோடு சென்று அவர்கள் வீட்டில் உள்ள அனைவரையும், நடந்தவற்றை மறந்து விட்டு திருவிழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


  ஏற்கனவே மதுவை நினைத்து வாடிக் கொண்டிருந்த குடும்பம், அவளை பார்க்க வேண்டும் என்ற ஆசையில், நிச்சயம் திருவிழாவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தனர்.


திருவிழாவிற்கு முதல் நாள் குருந்த மரத்தின் அடியில், கொற்றவை தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யும் வேலை ஆரம்பமானது, வேந்தனுக்கு புரிந்து விட்டது இன்றோடு தங்களது புனர் ஜென்மம் தங்களை விட்டு நீங்க போகின்றது என்று, அன்றைய இரவு

குருதேவரின் முன்னிலையில் ஒரு மரகத வண்ண பெட்டிக்குள், வீரபத்திரரின் வாளையும், கொற்றவை தேவயின் அருள்  நிறைந்த வளையல்களையும்  அன்னையின் சிறிய வடிவ சிலையோடு சேர்த்து வைத்தனர். பெட்டிக்கு கீழே மந்திர தகடுகளை பதித்து பூஜை செய்தவர், அதன் மீது பெட்டியை வைத்து,  கொற்றவை அன்னையின் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அடுத்த நொடி மதுரா மயங்கி சரிய, அவளை கைகளில் தாங்கிக் கொண்டான் வேந்தன். மதுராவும் தீரனும் தங்களது கடமை தீர்ந்தது என்று, இம் மண்ணுலகை விட்டு காற்றாகி கரைந்து போயினர். வேந்தனின் நெஞ்சுக்குள் மட்டும், அவர்களின் நினைவுகள் நீங்காமல் பதிந்து நின்றது.


  நாளை காலை மதுரயாழினியாக துயில் எழப் போகும் தன் மனைவியிடம், நடந்தவைகளை மறைக்காமல் எடுத்துக் கூறி, தனது தவறுகளை ஒத்து கொள்ள வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டான் வேந்தன். மனைவியை நெஞ்சில் தாங்கிய படியே பார்த்துக் கொண்டிருந்தவன், தாமதமாகவே உறங்கினான்.


அடுத்த நாள் கண்விழித்த மது, தான் வேந்தனின் மார்பில்  துயில் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டவள் அவசரமாக அவனிடம் இருந்து விலகினாள்.


  குளித்து முடித்த சிறு தயக்கத்தோடு கீழே இறங்கி வந்தவளை, வீட்டுப் பெண்கள் சகஜமாக பேசி தங்களோடு இணைத்துக் கொள்ள, முதல் நாள் வகுப்பில் சேரும் குழந்தை போல திருத்திருவென்று விழித்துக் கொண்டிருந்தாள் மது. சிறிது நேரத்தில் வெள்ளந்தியான அந்த வீட்டாரின் பாசத்தில், ஒன்றாக கலந்து போனால்.


  வெகு நேரம் சென்றே கண் விழித்த வேந்தன், தனக்கு அருகில் மதுவை கைநீட்டி தேட, அவள் கைக்கு அகப்படாமல் போனதும், கஷ்டப்பட்டு கண் விழித்தவன், நேரத்தை கண்டு அவசரமாக கிளம்பி கீழே வந்தான்.


  அந்த நேரத்தில் தான் மதுவின் தாய் தந்தையர் அவளது அண்ணனுடன் வீட்டுக்குள் நுழைந்தனர். வீடு தேடி வந்தவர்களை  முறையாக வரவேற்க வேண்டும் என்ற விதிக்கு உட்பட்டு, அவர்களை வாருங்கள் என்று மட்டும் கேட்டுவிட்டு மது ஒதுங்கிக் நின்று கொண்டால்.


    தனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த தனது குடும்பத்தாரை திரும்பியும் பார்க்காமல், நின்று கொண்டிருந்தாள். என்னதான் மற்ற குடும்ப உறுப்பினர்கள் இன்முகமாக வரவேற்று, அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தாலும், மது யாரோ போல் ஒதுங்கி நிற்பது அவர்களின் மனதுக்கு சங்கடமாக இருந்தது. அதைப் புரிந்து கொண்ட பூவுப் பாட்டி,


"ஏத்தா உனக்காக தானே வந்திருக்காங்க ரெண்டு வார்த்தை நல்லா இருக்கீங்களான்னு கேளு?.... என்ன கோவம் இருந்தாலும், இப்படி முகத்தை திருப்பிட்டு நிற்க கூடாது த்தா?"

    "உங்க பையனும் மருமகளும் அவங்க குடும்பத்தோட உங்களை பார்க்க வந்திருக்காங்க, வந்த விருந்தாளிங்களை என்னால வாங்கன்னு மட்டும் தானே கேட்க முடியும், எனக்கும் அவங்களுக்கும் தான் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே, அப்பறம் என்ன சிரிச்சு பேச சொல்றீங்க?.... நம்பிக்கை இல்லாத இடத்துல எனக்கு எப்பவுமே பேச்சு கிடையாது. நான் சமையல் வேலையை பார்கறேன் அத்தை"


  அவள் மீது நம்பிக்கை இல்லாமல் நடந்து கொண்டதற்காக, அவளைப் பெற்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால், அவர்களை இவ்வாறு நினைக்கத் தூண்டியது தனது செயல் தான் என்று தெரிய வந்தால், என்ன ஆட்டம் ஆட போகின்றாளோ?... இப்போதைக்கு திருவிழா முடியும் வரை எந்த உண்மையையும், அவளிடம் சொல்லாமல் இருப்பதே நல்லது என்று, தனக்குத்தானே முடிவெடுத்துக் கொண்ட வேந்தன், வந்தவர்களை வரவேற்று அவர்களுடன் பேசத் தொடங்கினான்.

   

  நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன?...நடந்தவைகள் அனைத்தும் தெரிய வரும்போது, மதுவின் முடிவு என்னவாக இருக்கும்?

Monday, August 25, 2025

மன்னவரே 95


 

            அத்தியாயம் 95


"நீங்கள் இருவரும் மறுஜென்மம் எடுத்து வந்ததற்கான நோக்கம், முற்றுப் பெற்று விட்டது. இருந்தும் இன்னும் சில நாட்களுக்கு பூர்வ ஜென்ம ஞாபகங்களோடு தான் நீங்கள்  வாழப்போகின்றீர்கள். இந்தக் குருந்த மரத்தின் அடியில் கொற்றவை அன்னையின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும், அந்த சமயத்தில்  உங்கள் இருவருக்கும் இடையே இருந்த பூர்வ ஜென்ம நினைவுகள் அனைத்தும் அப்படியே மறைந்து போகும். தங்கள் கைகளில் இருக்கின்ற வீரபத்திரரின் வாளையும், கொற்றவை அன்னையின் சக்திகளை உள்ளடக்கிய இந்த வளையல்களையும், இதோ கொற்றவை அன்னையின் இந்த சிறு விக்ரகத்தையும், ஒரு பெட்டியில் வைத்து, அந்த சிலைக்கு அடியில் அஸ்திவாரமாக புதைத்து வைக்க வேண்டும். இனி இந்த மோகினிப் பள்ளம் தீய சக்திகளை விரட்டும் ஒரு புண்ணிய ஸ்தலமாக வருங்காலத்தில் புகழ் பெறப் போகின்றது. இந்த எல்லை கோட்டை மிதிக்கும் போதே தீயவைகள் அனைத்தும் அடியோடு சாம்பலாகும், இது என் அப்பன் ஈசனின் அருள்வாக்கு. இதை முன் நின்று செயல்படுத்த வேண்டியது தங்களது பொறுப்பு இளவரசே."


  "தங்கள் விருப்பப்படியே செய்கிறேன் குருதேவா."


    அன்றைய அனைத்து செய்தித் தாள்களிலும் அமைச்சர் பொன்னுரங்கம் கைது செய்யப்பட்டது தான், பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பணத்திற்காக வெளிநாட்டுக்காரர்களிடம், இந்த மண்ணின் பொக்கிஷமான தெய்வ சிலைகளை, எடுத்து தருவதாக வாக்குறுதி கொடுத்து, அதற்காக பல உயிர்களை அந்த சாமியாரின் துணை கொண்டு பறித்த குற்றத்திற்காக, தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டிருந்தான்.


  இவர்களின் சதிக்கு உறுதுணையாக, இந்த ஊரிலிருந்து உதவி செய்து வந்ததாக கூறி, தீபனின் தந்தை பூபதியும் கைது செய்யப்பட்டார்.


        ஊர் மக்களால் இதை நம்பவே முடியவில்லை. இவர் இப்படி இவ்வளவு அமைதியாக, அதுவும் ஆன்மீக போர்வை போர்த்திக் கொண்டு, இத்தனை வேலைகளை செய்திருக்கிறாரா?.... என்று அனைவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.


  வேலப்பன் ஐயாவின் குடும்பத்தார் வேடந்தூரில் இருக்கும் மூர்த்தி தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். ராகுலையும் நிரஞ்சனாவையும் கூட்டிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு வந்த மாறன், நடந்தவைகள் அனைத்தையும் தனது குடும்பத்தாரிடம் விரிவாக எடுத்துரைத்தான். இவ்வளவு நாட்களாக அரசியல் என்ற பெயரில், தமது குடும்பத்திற்கு பல இன்னல்களை ஏற்படுத்தியதற்கு, மன்னிப்பு வேண்டி வேலப்பன் தாத்தாவின் கால்களில் விழுந்தான்.


  "நீ இந்த அளவுக்கு மாறினதே போதும் ராசா, இப்பவாவது அரசியல் தந்திரங்களை நீ கண்டுபிடிச்சியே!.... உன்னை வச்சு அந்த அரசியல்வாதிங்க இந்த ஊரை ஆட்டிப்படைக்க நினைச்சிருக்காங்க, நல்லவேளை எப்படியோ தப்பா எதுவும் நடக்கறதுக்கு  முன்னாடியே உனக்கே எல்லா உண்மையும் தெரிய வந்துச்சே, ஆனா அவங்க புத்தி தெரிஞ்சு, நீயாவே திருந்தின பத்தியா,அதுவே சந்தோஷம்ப்பா, நான் உன்னை அரசியலில் இருக்க வேண்டாமுன்னு சொல்லல ராசா, அரசியலில் இருந்தாலும் நியாயமா, மக்களுக்கு நன்மை செய்யிற மாதிரி நடந்துக்கணும்."


    "எப்படியோ எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது, அதுக்கு அந்த அம்மனுக்கு தான் நம்ம நன்றி சொல்லணும். அடுத்த வாரம் நடக்க போற திருவிழால பூச்சட்டி எடுத்து, இந்த நன்றி கடனை அம்மனுக்கு செலுத்தணும், ஆமா வேந்தனும் மதுவும் எங்கே?"


    அப்போது சரியாக வேந்தனும் மதுவும் வீட்டு வாசலில் வந்து நின்றனர்.


வடிவுப்பட்டி அவர்களை அப்படியே நிற்க வைத்து, ஆலம் சுற்றி தான் வீட்டின் உள்ளே அழைத்து வந்தார்.


    வேந்தனும் மதுவும் இன்னமும் தீரன் மற்றும் மதுராவாகத்தான் தங்களை உணர்ந்தனர்.


  அந்த வீட்டுக்குள் வேந்தனுடன் கரம் கோர்த்து, கால் எடுத்து வைக்கும் போது, மதுராவின் கண்கள் தன்னால் கலங்கியது. அவளது விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டு தீரன் புன்னகையுடனே வீட்டினுள் அழைத்து வந்தான்.


  அவர்களை அமர வைத்து மீண்டும் ஒருமுறை பூவுப் பாட்டி திருஷ்டி சுற்றி போட்டார். வீட்டுப் பெண்கள் மதுவுடன் பேசிக் கொண்டிருக்க, ராகுல் வேந்தனின் அருகில் வந்து தான் வீட்டிற்கு கிளம்புவதாக கூற, தனது ஆருயிர் நண்பன் ரகுநந்தனை அனைத்து விடுவித்தவன். அடுத்த வாரம் நடைபெற இருக்கும் திருவிழாவிற்கு கட்டாயம் தங்களது குடும்பத்தாரோடு பங்கேற்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தான். மற்ற குடும்ப உறுப்பினர்களும் அதேபோன்று அவனிடம் கேட்டுக்கொள்ள, அவனும் ஒருமனதாக தனது குடும்பத்தாரை  அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி விடை பெற்றான். அவன் கிளம்புவதற்கு முன்பு நிரஞ்சனாவை தனது கண்களுக்குள் நிறைத்துக் கொள்ள மறக்கவில்லை, அவளும் அதே போல அவனை தன் கண்களின் வழியே மனதிற்குள் புகுத்திக் கொண்டாள்.


  மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அறையில், தன் மதுராவிற்காக காத்துக் கொண்டிருந்தான் தீரன். நொடிகள் யுகமாக கழிய, தனது தேவதை வரும் திசை பார்த்து, கண்கள் பூத்து காத்திருந்தான் அந்த காதலன். எவ்வளவு தடைகள்?.... எவ்வளவு போராட்டங்கள்?...அனைத்தையும் கடந்து, இப்போது தன் கரம் சேர்ந்த நாயகியை, தன் நெஞ்சுக்குள் பொத்திக் கொள்ள  அவனுக்கு ஆசை உண்டானது.


  வன தேவதை அவள் பச்சை பட்டுடுத்தி வைரம் மற்றும் தங்க ஆபரணங்களை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, பொன் தாலியோடு அவனிட்ட பதக்கம் பதித்த சங்கிலி கழுத்தில் மின்ன, மணம் வீசும் மல்லிகை மலர்களை தலையினில் சூடிக் கொண்டு, தேவதை போல அசைந்து வந்தாள் தனது மன்னவனே தேடி.


  அவள் அணிந்திருந்த நகைகளுக்கு போட்டியாக முகம் அது குங்குமமாக சிவந்திருக்க, இமைக்க மறந்து தன்னவளை பார்த்திருந்தான் தீரன். கதவை தாளிட்டு விட்டு திரும்பிய பின்னும் கூட, அவளை இன்னும் அவன் வைத்த கண் வாங்காமல்  பார்த்துக் கொண்டிருக்க, தனது வெட்கத்தை ஒதுக்கி அவனோடு வாயாட முடிவு செய்தாள்.


  "என்ன தீரரே பார்வை எல்லாம் பலமாக இருக்கின்றது?...... ஏன் இன்று நீங்கள் தங்களது அத்தை மகளை காணச் செல்லவில்லையா?"


  "என் ஆசை மனையால் இங்கிருக்க, அவர்களைத் தேடி நான் எதற்காக செல்லப் போகிறேன், என் அன்னக்கிளியே?"


    "அப்படியா!... ஆனால் உங்கள் அத்தை மகளின் கண்களில் இருந்து வரும் கண்ணீரை கண்டு விட்டால் போதும், தங்களை சுற்றியுள்ள உலகம் கூட தங்களுக்கு மறந்து விடுமே?"


அவள் புருவத்தை ஏற்றி, கண்களில் கூர்மையுடன், வார்த்தைகளில் கொக்கியிட்டு நிறுத்த,


  "உண்மை தான், உறவுகளின் மீது கொண்ட பாசத்தால், சிறிது நிதானத்தை இழந்து விட்டேன், ஆனால் என் உயிரில் கலந்தவளை தனியாக தவிக்க வைத்து விட்டு, எவ்வாறு அவளை மறந்து போவேன். உயிர் பிரியும் நேரத்தில் கூட அவளை பிரிந்து செல்ல மனம் வராமல், உனது முகத்தை மட்டும் என் கண்களுக்குள் நிறைத்த படி  உயிர் நீத்தேனே!... அப்படி இருந்தும் கூட என் மீது நம்பிக்கை வரவில்லையா மதுரா?...."


அவன் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, ஒடிச் சென்று அவனை கட்டிக் கொண்டவள்.


  "வேண்டாம் தீரா, நான் தங்களை நம்பவில்லை என்றால் என்னையே நான் மாய்த்துக் கொண்டதற்கு சமம். நான் தங்களிடம் விளையாட்டுக்காக அப்படி பேசுவேன் அவ்வளவே, இனியொரு முறை இதுபோல பேசி என் மனதை நோகடிக்காதீர்கள்."


    மதுராவை எப்படி சமாளிக்க வேண்டும் என்று தீரனுக்கு தெரியாதா  என்ன? தன்னை அணைத்துக் கொண்டவளை பூக்குவியலைப் போல கைகளில் அள்ளிக் கொண்டவன், ஜென்ம ஜென்மமாக அவள் மீது கொண்ட தன் ஒட்டுமொத்த காதலையும் அவளிடம் காட்டி, அவளை கொண்டாடி தீர்த்தான். அடுத்து வந்த நாட்களில் அவர்கள் தீரன் மதுராவாகவே தங்களது வாழ்வை வாழ்ந்தனர். தம்பதியராகவே திருவிழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டவர்கள். கொற்றவை அன்னையின் கோவிலிலிருந்து சீர் எடுத்து வரும் விழாவை பக்தியோடு மேற்கொண்டனர். குருந்தங்காட்டிற்குள்  சென்றபோது மதுராவின் கண்கள் தானாக கலங்கியது, அவளது கரங்களை கோர்த்தபடி ஆறுதல் அளித்தான் வேந்தன். பல வருடங்களுக்குப் பிறகு அழகு நாச்சிஅம்மைக்கு கோலாகலமாக விழா எடுக்கப்பட்டது.


    அந்த ஒரு வாரத்திற்குள் குருந்த மரத்தின் அடியில் கொற்றவை தேவிக்கு சிலை எழுப்பும் வேலையை ஆரம்பித்திருந்தான் வேந்தன். திருவிழா முடிந்து வரும் மறுவாரத்தில் ஒரு நன்னாளில், கொற்றவை அன்னையை  பிரதிஷ்டை செய்து விடலாம் என்று ஊர் பெரியவர்களால் முடிவெடுக்கப்பட்டது. அதற்கான வேலைகள் மொத்தத்தையும் வேந்தன் தன் தலைமையில் ஏற்றுக்கொண்டான்.


  திருவிழாவிற்கு ராகுலும் தனது குடும்பத்தாரை அழைத்து வந்திருந்தான். ஏனென்றால் ஒரு வித ஈர்ப்பு நிரஞ்சனாவின் மீது அவனுக்கு ஏற்பட்டு இருந்தது, பார்க்கும் பெண்களை எல்லாம் தன் உடன் பிறந்த தங்கையாக நினைத்தவனுக்கு, நிரஞ்சனாவை அவ்வாறு நினைக்கத் தோன்றவில்லை. ஏதோ பல வருடங்கள் பழகியது போல ஒரு பிணைப்பு, அவளை விட்டு தள்ளி இருக்க அவனால் முடியவில்லை. அதுபோன்ற ஒரு  நிலையில் தான், நிரஞ்சனாவும் இருந்தாள். 


    திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அடுக்கடுக்காக பல வேலைகள் குவிந்து கிடந்தன, அதனால்  திருவிழா முடியும் வரை அனைவரும் வேடந்தூரிலேயே தங்கி இருந்து, வேலைகளை பகிர்ந்து கொள்வதாக ஏற்பாடாக இருந்தது.


  திருவிழா வேலையாக ஆண்கள்   அனைவரும் கோவில்வரை சென்றிருக்க, பெண்கள் வேலையாக உள்ளே இருந்தனர்.  அவர்களுடன் இல்லாமல் வீட்டிற்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் தனியாக அமர்ந்து, வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா, இன்று ஏனோ ராகுலின் நினைவு அதிகமாக அவளை தாக்கியது. அந்த நேரத்தில் தான், தனது குடும்பத்தாருடன் வாசலில் வந்து நின்றான் ராகுல், சத்தம் கேட்டு வீட்டு பெண்கள் வெளியே வந்து பார்க்க, தனது குடும்பத்தார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியவன், அங்கு நிரஞ்சனாவை தன் கண்களால் துளாவ, அவனது தவிப்பை புரிந்து கொண்ட மது, ராகுல் அருகே வந்து யாரும் அறியாமல் பின்பக்கமாக கை நீட்ட, புரிந்து கொண்டவன் பாய்ந்தோடினான் தனது பிரியமானவளை காண,  ஏதோ உந்துதல் தோன்ற, தனக்கு பின்னால் திரும்பி பார்த்த நிரஞ்சனா, அங்கு நின்ற ராகுலை கண்டவுடன் ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள்.


"என்னை உங்களோடவே கூட்டிட்டு போயிடறீங்களா?.... நீங்க இல்லாம என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல."


  சரியாக அந்த நேரத்தில் தான், வீட்டு  ஆண்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். கோவிலுக்கு வேலைக்காக  எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் வீட்டின் பின்புறம் இருக்க, அதை எடுத்து செல்ல வந்தவர்கள், இந்த காட்சியை கண்டு அப்படியே சிலையாகி நின்றனர். இவ்வளவு நாட்களாக நிரஞ்சனாவின் அமைதிக்கு காரணம் வேந்தனின் திருமணம் என்று நினைத்துக் கொண்டிருக்க, இப்போதுதான் அவள் முகம் வாடி இருந்ததற்கு காரணம் ராகுல் என்று அறிந்து கொண்டனர். 


  அவசரமாக வீட்டு உறுப்பினர்களுக்கு நடுவே பஞ்சாயத்து வைக்கப்பட்டது. ராகுலின் தாயாருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, இருந்தும் தன் மகனை பற்றி நன்கு அறிந்திருந்ததால், மகனின் காதலுக்கு பக்க துணையாக நின்றார்.


Sunday, August 24, 2025

மன்னவரே 94


 

              அத்தியாயம் 94


      நிரஞ்சனாவை தேடி சென்ற மாறனும் ராகுலும், பல மணி நேர தேடுதல்களுக்குப் பிறகு, கடைசியாக வேடந்தூருக்கும் மேலூருக்கும் இடையே உள்ள காட்டுக்கு நடுவில், ஒரு குகையை கண்டுபிடித்தனர். 


    பதுங்கிப் பதுங்கி உள்ளே சென்றவர்கள், ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் பல உடல்கள் அங்கங்கே தூக்கி வீசப்பட்டிருப்பதை கண்டு, அதிர்ந்து போயினர். 


    அங்கு அந்த உடல்களுக்கு நடுவே பெரிய ராட்சச சிலையின் முன்பு, நிரஞ்சனா படுக்க வைக்கப்பட்டிருந்தால். ஓடிச் சென்று அவளை எடுத்துக்கொண்டு, இருவரும் உடனடியாக அந்த குகையை விட்டு வெளியே வந்து விட்டனர்.


  கொற்றவை தேவியின் சிலை பூமிக்குள் புதைய ஆரம்பிக்கும் போதே, குகை ஆட்டம் காண ஆரம்பித்தது. படிப்படியாக குளத்தில் இருந்த நீரின் அளவு கூட உயரத் தொடங்கியது. அதோடு குகை அப்படியே இடிந்து விழ ஆரம்பித்தது. பெரிய பாறாங்கல் ஒன்று சாமியாரின் மீது விழுந்து, அவனை அப்படியே நசுக்கிக் கொன்றது.


  குகையில் இருந்து விழும் கற்களுக்கு இடையே, தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடிய மதுராவின் கைகளை, ஒரு வலிய கரம் பிடித்து இழுக்க, தடுமாறி குளத்துக்குள் விழுந்தவளை, தன் கைகளில் ஏந்தி கொண்டான் வேந்தன்.


  காட்டிற்கு வெளியே அமைந்திருந்த ஏரியில் குதித்து சுரங்கப்பாதையின் வழியே, மூலவர் சன்னிதியை அடையலாம் என்று நினைத்திருந்தவன், சுரங்கப்பாதை அடைபட்டு இருக்க, தனது கையில் உள்ள வீரபத்திரரின் வாளைக் கொண்டு, அதை சுக்கு நூறாக அதை உடைத்தபடி முன்னேறி சென்றான்.


  நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதை உணர்ந்தவன், வேகமாக நீந்திச் சென்று, மதுராவை தனது கைகளில் ஏந்திக் கொண்டு எதிர் திசையில் நீந்தத் தொடங்கினான் வேந்தன்.


  வேந்தனின் ஸ்பரிசத்தை உணர்ந்த மதுரா, வெகு காலத்திற்குப் பிறகு அவனை சந்திப்பதால், கண்களில் நீருடன் அவனோடு ஒட்டிக் கொண்டாள். அவளைக் கைகளில் இறுக்கமாக பிடித்தபடி எதிர்நீச்சல் போட்டு, ஏரி கரையை நோக்கி முன்னேறியவன், அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஏரிக்கரையின் மீது ஏறினான்.

    இருவருக்கும் வெகு நூற்றாண்டுகளுக்கு பிறகான சந்திப்பு இது, அந்த நான்கு கண்களும் காதலில் கசிந்துருகி கட்டிக்கொள்ள நினைக்கும் நேரம், இடி முழக்கம் ஒன்று வானிலிருந்து எழுந்து, அருகருகே நின்று கொண்டிருந்த இருவரையும் தூர வீசியது.


  மணல் புயலுக்குள் வேந்தன் தத்தளித்துக் கொண்டிருக்க, தூக்கி வீசப்பட்ட மதுராவின் அருகே மோகனமாக தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, ஆவி உருவத்தில் நடந்து வந்தால் மோகனா.


  தனது கைகளை சுழற்றி திரிசூலத்தை வரவழைத்த மதுரா அதை மோகனாவை நோக்கி வீச, அது அவளது ஆன்மாவின் உள்ளே புகுந்து சென்று, தூர விழுந்தது. ஒரு ஏளனப் பார்வையுடன் மதுராவை நெருங்கியவள்,


    "உன் திரிசூலம் என்னை என்ன செய்துவிடும்?.... நான் இப்போது ஆன்மா மட்டும் அல்ல, எனது ஆன்ம பலத்தை தவத்தின் மூலம் பல்கி பெருக்கிக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்திருக்கும் காலக்கோடரின் மறு அவதாரம் நான். என்னை வெல்ல உன் கொற்றவையின்  சக்தி மட்டும் போதாதடி காட்டு பிச்சி, எவ்வளவு தைரியம் இருந்தால் மறுபிறப்பிலும் என் மாமனை கட்டிக் கொண்டு,என்னை எதிர்க்க துணிந்திருப்பாய்?..... இனி உனக்கு பிறவி என்பதே இருக்காதடி, உன் ஆன்மாவை நான் வெளியே விட்டால் தானே, நீ மீண்டும் பிறந்து வருவாய்?.... இனி என்றைக்கும் உனது ஆன்மா எனக்கு மட்டுமே அடிமையடி."


    தனது கைகளால் மதுராவின் கழுத்தை நெறிக்கத் தொடங்கிய  மோகனா, மதுராவின் கண்களின் வழியே அவளது உயிரை உறிஞ்சத் தொடங்கினாள்.


    தனது ஒரு கையால் மடியில் பதுக்கி வைத்திருந்த அந்த பெட்டியையும், இன்னொரு கையால் தனது கழுத்தை நெறுக்கிக் கொண்டிருந்த மோகனாவின் கையையும் மதுரா பிடிக்க, தீப்பட்டது போல அலற தொடங்கினால் மோகனா.


  மூச்சு விட சிரமமாக இருந்த போதிலும், மோகனாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த மதுரா, அவளை இறுக்கமாக தனது கைக்குள் வைத்துக் கொள்ள தொடங்கினால், அடுத்த நிமிடமே வேந்தனை சுற்றி இருந்த மணல் புயல் மறைந்து போனது.


    வேகமாக தனது வாளோடு முன்னேறி வந்தவன், மதுராவின் கைக்குள் அடங்காமல் வெளியேற துடித்துக் கொண்டிருந்த மோகனாவின் மீது, வீரபத்திரரின் வாளை உபயோகிக்க, துடிதுடித்துப் போனாள்  மோகனா.


    "மாமா உங்களை திருமணம் செய்து கொள்ள நினைத்தது தவறா? சிறு வயது முதல் உங்களையே கணவனாக மனதில் நினைத்து உயிர் வளர்த்த நான், என்ன குற்றம் செய்து விட்டேன் என்று எனக்கு இப்படி ஒரு தண்டனை,....... என் மனம் கவர்ந்தவனை,.....என் மாமன் மகனை அடைய நினைத்தது அவ்வளவு பெரிய   தவறா? ...... உங்களுக்காக தானே நான் இவை அத்தனையும் செய்தேன்?.. என் மீது துளி கூட உங்களுக்கு அன்பு ஏற்படவே இல்லையா?...அவ்வளவு பெரிய பாவியா நான்?...."


  கண்களில் பொங்கும் நீரோடு, தன்னை நோக்கி கேள்விகளை தொடுத்து கொண்டிருந்த மோகனாவின் முகத்தைப் பார்த்து, ஒரு நிமிடம் வேந்தன் தடுமாற, அதை பயன்படுத்தி அவன் பிடியிலிருந்து வெளியேற முயன்றவளை, மதுரா தன் கை கொண்டு வீரபத்திரரின் வாளை மோகனாவின் மீது வைத்து அழுத்த, அடுத்த நொடி மதுராவின் கைகளில் உள்ள வளையல்களில் இருந்து சக்தி ரூபத்தின் ஒளி,சிவ வடிவமான  வீரபத்திரரின் வாளின் வழியே பாய்ந்து, சிவசக்தி ரூபமாக மோகனாவை தாக்கத் தொடங்கியது.


  மோகனாவின் அலறல் இப்போது அதிகமாகிக் கொண்டே சென்றது, மோகனம் சிந்திய அவளது கண்கள் இருள் குழிகளாக மாற, கரும் புகை போர்த்திய உடலில், ஐந்தடிக்கு  குறையாத நாக்கு ஒன்று தொங்கி வாளாக சுழல, அவளது மோகன ரூபம் மறைந்து கொடூர பிசாசாக அவளது உருவம் மாறியது.


    "அத்தை மகள் என்றால் போதுமே, ஆவியாக இருந்தால் கூட அவளின் கண்களில் நீரை கண்டதும், உங்கள் மனம் அப்படியே அவள்புறம் பாய்கிறதோ?.... உங்களை பிறகு பேசிக் கொள்கிறேன்.


    என்னே உந்தன் வார்த்தை ஜாலங்கள்!.... இந்த அளவுக்கு பேசும் நீ, அடுத்தவள் கணவனை அபகரிக்க நினைப்பது தவறு என்பதை மட்டும் நினைக்காமல்  போனாயே?..  போன ஜென்மத்தில் மட்டுமல்ல, இந்த ஜென்மத்திலும் அவர் எனது கணவர் தான், ஏன் இனி வரும் என் அத்தனை பிறவிகளுக்கும் அவர் எனக்கானவர் தான் புரிந்ததா உனக்கு?.."


  அலறலினோடே அவள் இவளை முறைத்து கொண்டு, அவள் மீது பாய வர,


  "இவ்வளவு நாட்கள், செய்த தவறுக்காக மண்ணுக்குள் புதைந்து கிடந்து, இவ்வளவு தண்டனைகளை  அனுபவித்தும் கூட, உனது மனம் மீண்டும் தீய வழிக்கு தான் செல்கின்றது, இனி நீ திருந்த போவதுமில்லை, உன்னால் இவ்வுலகத்திற்க்கு எந்த பிரயோஜனமும் இருக்கப் போவதில்லை, யாருக்காக நீ இதையெல்லாம் செய்தாயோ? அவர் கைகளாலேயே நீ மடிந்து போ, தீரா உங்கள் வாளை சுழற்றி, இவளை  மோகினி பள்ளத்தை நோக்கி வீசுங்கள். அங்கு குருதேவர் ஶ்ரீ சக்கர பூஜை  செய்து கொண்டிருக்கிறார், இன்றே இவளுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும், ம்ம்ம் சுழற்றுங்கள்."


  அவள் கைகளை எடுப்பதற்கு முன்பே, அவள் கைகளோடு தன் கைகளை இணைத்தவன் வாளை சுழற்றி வீச, அது மோகனாவின் ஆன்மாவோடு மோகினி பள்ளத்தை நோக்கி பறந்தது.


  தனது கைகளை அவன் கைக்குள் இருந்து வம்படியாக பிரித்தவள்,அவனை முறைத்தபடியே மோகினி பள்ளத்தை நோக்கி வேகமாக சென்றாள்.


  "ஹம்ம்,..... எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இவள் என்னை முறைப்பதையும், சந்தேக கண் கொண்டு எரிப்பதையும் விடமாட்டாள் போலவே?"


  என்றபடியே அவள் பின்னால் ஓடினான் வேந்தன்.


  மோகினி பள்ளத்தின் முன்பு, ஶ்ரீ சக்கரத்தின் மையத்தில், வீரபத்திரரின் வாளோடு ஆன்மாவாக வந்து சேர்ந்தாள் மோகனா. தனக்கு முன்பு யாக குண்டத்தில் அமர்ந்து,வேத உச்சாடனங்கள் புரிந்து கொண்டிருந்த குருதேவரை தனது சக்திகளின் மூலம் தடுக்க முயச்சித்தாள்.


    அந்த ஶ்ரீ சக்கரத்தில் இருந்து அவள் வெளியேற முயற்சித்துக் கொண்டிருக்க, வேகமாக ஓடி வந்த மதுராவை பார்த்து குருதேவர் பேச தொடங்கினார்.


  "அம்மா மதுரவாணி உடனே மந்திர தகடுகளை  மோகனாவை நோக்கி வீசு."


  குருதேவரின் சொல்படி மதுரா மந்திர தகடுகளை மோகனவை நோக்கி வீசிய அடுத்த நிமிடம், மோகனாவின் ஆன்மா பற்றி எரியத் தொடங்கியது. அவளின் கதறல் எட்டுத்திக்கும் ஒலிக்க ஆரம்பித்தது. சில நிமிடங்களிலேயே மோகனா காற்றோடு காற்றாக கரைந்து போனாள். அதோடு காலகோடரின் குகையும் வெடித்து சிதறியது.

மன்னவரே 93


 

             அத்தியாயம் 93


  "வேந்தா நான் முள்ளுக்காட்டுக்கிட்ட இருந்து பேசுறேன், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மதுரா குருந்தங்காட்டுக்குள்ள போறதை பார்த்தேன், அவங்களை பின் தொடர்ந்து போலான்னு நினைக்கும் போது, அமைச்சரும், அப்புறம் அந்த சாமியாரும் நிறைய ஆட்களோட மதுராவை தொடர்ந்து அந்த காட்டுக்குள்ள நுழையறதை பார்த்தேன், கொஞ்சம் கேப் விட்டு அவங்களைத்தான் நான் ஃபாலோ பண்ணி போயிட்டு இருந்தேன். ஆனா என்னால காட்டுக்குள்ளயே நுழைய முடியலே, திடீர்னு மர வரிசை எல்லாம் மாறின மாதிரி இருக்குது, சுத்தி சுத்தி ஒரே இடத்திலேயே வந்துகிட்டு இருக்கேன், நீ சீக்கிரமா இங்கே வா, தங்கச்சி கொற்றவை கோவிலை நோக்கி போற மாதிரி தான் எனக்கு தெரியுது."


    வெற்றி கூறியதை கேட்ட போது, வேந்தனுக்கு கொற்றவை தேவியின் மூலவர் சன்னிதி தான் நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் மதுராவிற்க்கு முன் ஜென்ம நினைவுகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டதா?... அந்த அன்னையை மீறி யாராலும் அவளை நெருங்க முடியாது தான் ஆனால்,அந்த காலகோடனை பூஜிக்கும் அந்த சாமியாரும் அங்கு இருக்கின்றானே, அந்த நயவஞ்சகனால் மதுராவிற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால்?.... நினைக்கும் போதே வேந்தனுக்கு நெஞ்சம் பதறியது. வெற்றி போனில் பேசிய அனைத்தையும், அருகில் இருந்த ராகுல் மற்றும் மாறன் இருவருமே கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்.


    "வேந்தா இன்னும் என்ன யோசனை? நீ உடனே போய் உன் பொண்டாட்டியை காப்பாத்து, நான் இப்பவே போலீசுக்கும் மீடியாக்கும் தகவல் கொடுக்கிறேன். அவங்க வந்தா மட்டும் தான் அந்த அமைச்சரையும், ப்ராடு சாமிஜியையும் கையும் களவுமா பிடிக்க முடியும். நீ எதுக்கும் கவலைப்படாம தைரியமா போ, நானும் இவரும் போய் ரஞ்சனியை கூட்டிட்டு வர்றோம்."


மாறனை ஒருமுறை அணைத்து விடுவித்த வேந்தன், அடுத்த நொடியே அவசரமாக தனது வண்டியை குருந்தங்காட்டை நோக்கி விரட்டினான்.


  குகை நோக்கி வந்து கொண்டிருந்த மோகனாவின் ஆன்மா கைக்கெட்டிய தூரத்தில் மதுராயிருந்தும், அவளை அழிக்க முடியாது போன தனது ஒட்டு மொத்த கோபத்தையும், தன்னை அழைத்தவர்களின் மீது காட்ட உத்வேகத்தோடு வந்து கொண்டிருந்தாள். 


  அவள் வந்து இறங்கியதும் தான், தான் தற்போது இருப்பது காலக்கோடனின் குகை கோயில் என்று புரிந்தது. அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்த நிரஞ்சனாவை கண்டு குதூகளித்தவள், அவளை நோக்கி செல்ல, நிரஞ்சனாவன் கைகளில் இருந்த கயிறு அவளை உள்ளே வரவிடாமல் தூக்கி வீசியது.


    ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்தவள் இப்போது நிரஞ்சனாவையும் நெருங்க முடியாமல் போனதால் ஏற்பட்ட கோபத்தை எல்லாம், சுற்றி இருந்த குருஜியின் சிஸ்யர்களின் மீதும், அங்கிருந்த அமைச்சரின் அடியாட்களின் மீதும் காட்டினாள். அவர்களது ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக தூக்கிப்போட்டவள் மதுராவை வதைக்கும் வெறியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.


  மதுரா குருந்தங்காட்டை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே, இயற்கை அன்னை வெகு காலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தமது பிள்ளையை, மெல்லிய தென்றலாக தீண்டி சென்றார்.


  காட்டிற்குள் அவள் கால் எடுத்து வைக்கும் போதே, மதுராவின் கண்கள் கலங்கிவிட்டது, வெகு நாட்களுக்கு பிறகு  தாயை சென்று சேர்ந்த சேய் போல, மனமெங்கும் ஒரு பரவசம் உண்டானது.


அங்கங்கு வளர்ந்திருந்த முட்செடிகள் கூட தானாக விலகி நிற்க, பூ பாதை ஒன்று மதராவிற்காக தானாக உருவானது.


மதுரா கண்களை மூடி முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி இருந்த போது, கயவர்களின் கூட்டம் தன்னை பின் தொடர்ந்து வருவதை மனக்கண்ணால் காண முடிந்தது. அவர்களின் பின்னே தன்னை பாதுகாப்பதற்க்காக ஒரு உயிர் அவர்களை பின் தொடர்ந்து வருவதையும் உணர முடிந்தது.ஒரு மர்மமான புன்னகையோடு அவள் திரும்பி பார்க்க, வெற்றி குருந்தங்காட்டினுள்ளே நுழைய முடியாத படி, அங்கேயே சிக்கி  கொண்டான்.


    குருந்தங்காட்டிற்குள் மதுராவை பின் தொடர்ந்து செல்வதற்கு முன்பாகவே, அமைச்சருக்கும் அவரது ஆட்களுக்கும், சாமியார் ஒரு முத்திரையை அவர்களின் கைகளில் கொடுத்தார்.


  "இது எதுக்காக குருஜி?"


  "இந்த காடு கொற்றவையோட சாம்ராஜ்யம், இதுக்குள்ள நாம போனா கண் கட்டுவித்தை காட்டி, நம்மள காட்டுக்குள்ள தொலைஞ்சு போக வெச்சிடுவா, அதனால தான் இன்னைக்கு வரைக்கும் உள்ள போன உன்னோட ஆட்களால, அந்த மூலவர் சன்னிதியை கண்டுபிடிக்கவே முடியல, இந்த காலகோடரோட முத்திரை உங்க கிட்ட  இருக்கிற வரை, இந்த மரங்கள் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம் உங்களை பாதிக்காது, நாம அந்த காட்டுவாசி பொண்ணை பின் தொடர்ந்து போனா, மூலவர் சன்னதியை கண்டுபிடிக்க முடியும். அதுக்காக தான் இந்த முத்திரையை எல்லாருக்கும்  கொடுத்து இருக்கேன். இத கவனமா கீழே போடாம வெச்சுகுங்க, இது உங்க கையில இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எந்த ஆபத்தும் நெருங்காது.."


  சிறிது தூரம் சென்றதுமே பூமி அதிரும் சத்தத்தை அவர்களால் உணர முடிந்தது. காட்டு மிருகங்களை வழி நடத்தியபடி செம்பா ஆன்மா வடிவில் பிளிரிக் கொண்டே, அவர்களை அடித்து வீசும் முனைப்புடன் முன்னேறி வந்து கொண்டிருந்தது. 


  சாமியார் அமைச்சரை இழுத்துக் கொண்டு ஒரு மரத்தோடு ஒதுங்கி நின்று , அவர்களைப் பார்த்து மரத்தின் அருகே நிற்குமாறு கூறியும் கூட, அவர்கள் வந்து கொண்டிருக்கும் மிருகங்களை கண்டு அஞ்சி திசைக்கொருவராக சிதறி ஓடினர்.


    அதில் அவர்கள் கைகளில் வைத்திருந்த காலக்கோடரின் முத்திரை தவறி விழுந்தது, அடுத்த நிமிடமே அவர்கள் அனைவருமே அந்த காட்டிற்குள் தொலைந்து போயினர்.சாமியார் அவர்களை கவனித்து கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு அருகே வந்த செம்பாவின் ஆன்மாவை கண்ட அமைச்சர் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவரின் கைகளில் இருந்தும் அந்த முத்திரை நழுவி சென்றது.


  ரங்காவை தனதருகில் காணாமல் சுற்று முற்றும் தேடிய சாமியார், இனி அவரை தேடுவது வீண் என்பதை உணர்ந்து, எப்படியாவது மந்திர தகடுகளை கைப்பற்ற வேண்டும் என்று, மதுரா சென்ற வழியினை நோக்கி அவரும் நடக்கத் தொடங்கினார்.


  மதுரா மூலவர் சன்னிதியில் நெருங்கும்போது அந்த குகை பாழடைந்து கற்களால் மூடப்பட்டிருந்தது. முன் ஜென்மத்தில் எவ்வளவு போற்றி பாதுகாக்கப்பட்ட இந்த இடம், இப்படி இருப்பதை கண்டு அவள் கண்களில் நீர் கோர்த்தது. திடீரென்று ஒரு சூறாவளி காற்று போல ஒன்று அவளை நெருங்கி வர, அதை அவள் திரும்பி பார்த்த போது, செம்பா அவளை பார்த்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தது.


  செம்பாவை நோக்கி ஒடி சென்றவள் அதை அணைத்துக் கொள்ள எண்ணி கைகளை நீட்டிய போது, காற்றில் மட்டுமே கைகளை வீச முடிந்தது.


  "செம்பா என்னை மன்னித்துவிடு எனக்காகவே வாழ்ந்த உன்னை, அன்று  காக்க தவறிய பாவியாகி விட்டேன் நான்."


அது தலையை அங்கும் இங்கும் ஆட்டி, அவளையே சுற்றி சுற்றி வந்தது. தனது சக்தியால் குகையை அடைத்திருந்த பாறைகளை தள்ளி, மதுரா உள்ளே செல்ல அது பாதை அமைத்து கொடுத்தது. 


  தன்னலமற்ற அதன் செயலை கண்டு மெய் சிலிர்த்தவள், காற்றில் அதை கட்டிக்கொண்ட படியே ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.அவளது கண்ணீர் பட்ட அடுத்த நொடி, செம்பா தங்கமாக ஜொலிக்க தொடங்கியது, சிறிது நேரத்தில் தங்க துகள்களாக அப்படியே காற்றோடு காற்றாக கரைந்து போனது.


  செம்பா முக்தி அடைந்து விட்டதை உணர்ந்தவள், நிறைவாகவே குகையின் உள்ளே சென்றாள்.


    தான் தினமும் பூஜித்து வந்த தேவி, பூஜைகள் எதுவும் இன்றி பாழடைந்த குகைக்குள் நின்று கொண்டிருப்பதை கண்டு, குளத்தில் இருந்த நீரினை தனது சேலையில் நனைத்து அன்னையை சுத்தம் செய்தாள்.குகையில் அங்கங்கு பூத்துக்கிடந்த பூக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு இட்டவள், கண்களை மூடி கரங்களை கோர்த்து  வணங்கி நின்றாள்.


" தாயே உன் அருளை நாடி வந்துள்ளேன், கெட்டவைகளை அழித்து நல்லதை நிலை நாட்ட, உமது மந்திர தகடு வேண்டும் அன்னையே, அவற்றோடு உமது அருளாசியையும் எங்களுக்கு வழங்கி, இப்புவியை காத்தருள்வாய் தேவி."


    கொற்றவை தேவியின் கையில் இருந்த திரிசூலம் சிறிது கீழ் இறங்க, அன்னையின் சிலை லேசாக நகர்ந்தது, அதன் அடியில் ஒரு தங்க நிற பெட்டி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து அவள் திறந்து பார்த்த போது, அதில் மந்திர தகடுகளோடு அன்னையின் சிறிய சிலை ஒன்று  இருந்தது.


  அவள் கைகளில் இருந்த பெட்டியை சாமியார் தட்டிப் பறிக்க, திடீரென்று குகை ஆட்டம் கண்டது. பெட்டியின் உள்ளிருந்த தேவியின் சிலை செந்நிறமாக மின்னத் தொடங்க, சாமியார் தன் கைகளில் தீப்பற்றியது போல அலரத் தொடங்கினான். சூடு தாங்காமல் அவன் பெட்டியை தூக்கி வீச, அதை பத்திரமாக பிடித்துக் கொண்டால் மதுரா. கொற்றவை அன்னையின் சிலை கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையத்  தொடங்கியதும், குளத்தின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. குகையின் முன் பகுதியும் முற்றிலுமாக கற்களால் மூடப்பட்டது.