அத்தியாயம் 93
"வேந்தா நான் முள்ளுக்காட்டுக்கிட்ட இருந்து பேசுறேன், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மதுரா குருந்தங்காட்டுக்குள்ள போறதை பார்த்தேன், அவங்களை பின் தொடர்ந்து போலான்னு நினைக்கும் போது, அமைச்சரும், அப்புறம் அந்த சாமியாரும் நிறைய ஆட்களோட மதுராவை தொடர்ந்து அந்த காட்டுக்குள்ள நுழையறதை பார்த்தேன், கொஞ்சம் கேப் விட்டு அவங்களைத்தான் நான் ஃபாலோ பண்ணி போயிட்டு இருந்தேன். ஆனா என்னால காட்டுக்குள்ளயே நுழைய முடியலே, திடீர்னு மர வரிசை எல்லாம் மாறின மாதிரி இருக்குது, சுத்தி சுத்தி ஒரே இடத்திலேயே வந்துகிட்டு இருக்கேன், நீ சீக்கிரமா இங்கே வா, தங்கச்சி கொற்றவை கோவிலை நோக்கி போற மாதிரி தான் எனக்கு தெரியுது."
வெற்றி கூறியதை கேட்ட போது, வேந்தனுக்கு கொற்றவை தேவியின் மூலவர் சன்னிதி தான் நினைவுக்கு வந்தது. அப்படியென்றால் மதுராவிற்க்கு முன் ஜென்ம நினைவுகள் ஞாபகத்திற்கு வந்துவிட்டதா?... அந்த அன்னையை மீறி யாராலும் அவளை நெருங்க முடியாது தான் ஆனால்,அந்த காலகோடனை பூஜிக்கும் அந்த சாமியாரும் அங்கு இருக்கின்றானே, அந்த நயவஞ்சகனால் மதுராவிற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விட்டால்?.... நினைக்கும் போதே வேந்தனுக்கு நெஞ்சம் பதறியது. வெற்றி போனில் பேசிய அனைத்தையும், அருகில் இருந்த ராகுல் மற்றும் மாறன் இருவருமே கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்.
"வேந்தா இன்னும் என்ன யோசனை? நீ உடனே போய் உன் பொண்டாட்டியை காப்பாத்து, நான் இப்பவே போலீசுக்கும் மீடியாக்கும் தகவல் கொடுக்கிறேன். அவங்க வந்தா மட்டும் தான் அந்த அமைச்சரையும், ப்ராடு சாமிஜியையும் கையும் களவுமா பிடிக்க முடியும். நீ எதுக்கும் கவலைப்படாம தைரியமா போ, நானும் இவரும் போய் ரஞ்சனியை கூட்டிட்டு வர்றோம்."
மாறனை ஒருமுறை அணைத்து விடுவித்த வேந்தன், அடுத்த நொடியே அவசரமாக தனது வண்டியை குருந்தங்காட்டை நோக்கி விரட்டினான்.
குகை நோக்கி வந்து கொண்டிருந்த மோகனாவின் ஆன்மா கைக்கெட்டிய தூரத்தில் மதுராயிருந்தும், அவளை அழிக்க முடியாது போன தனது ஒட்டு மொத்த கோபத்தையும், தன்னை அழைத்தவர்களின் மீது காட்ட உத்வேகத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
அவள் வந்து இறங்கியதும் தான், தான் தற்போது இருப்பது காலக்கோடனின் குகை கோயில் என்று புரிந்தது. அங்கே படுக்க வைக்கப்பட்டிருந்த நிரஞ்சனாவை கண்டு குதூகளித்தவள், அவளை நோக்கி செல்ல, நிரஞ்சனாவன் கைகளில் இருந்த கயிறு அவளை உள்ளே வரவிடாமல் தூக்கி வீசியது.
ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்தவள் இப்போது நிரஞ்சனாவையும் நெருங்க முடியாமல் போனதால் ஏற்பட்ட கோபத்தை எல்லாம், சுற்றி இருந்த குருஜியின் சிஸ்யர்களின் மீதும், அங்கிருந்த அமைச்சரின் அடியாட்களின் மீதும் காட்டினாள். அவர்களது ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக தூக்கிப்போட்டவள் மதுராவை வதைக்கும் வெறியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.
மதுரா குருந்தங்காட்டை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே, இயற்கை அன்னை வெகு காலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தமது பிள்ளையை, மெல்லிய தென்றலாக தீண்டி சென்றார்.
காட்டிற்குள் அவள் கால் எடுத்து வைக்கும் போதே, மதுராவின் கண்கள் கலங்கிவிட்டது, வெகு நாட்களுக்கு பிறகு தாயை சென்று சேர்ந்த சேய் போல, மனமெங்கும் ஒரு பரவசம் உண்டானது.
அங்கங்கு வளர்ந்திருந்த முட்செடிகள் கூட தானாக விலகி நிற்க, பூ பாதை ஒன்று மதராவிற்காக தானாக உருவானது.
மதுரா கண்களை மூடி முன்ஜென்ம நினைவுகளில் மூழ்கி இருந்த போது, கயவர்களின் கூட்டம் தன்னை பின் தொடர்ந்து வருவதை மனக்கண்ணால் காண முடிந்தது. அவர்களின் பின்னே தன்னை பாதுகாப்பதற்க்காக ஒரு உயிர் அவர்களை பின் தொடர்ந்து வருவதையும் உணர முடிந்தது.ஒரு மர்மமான புன்னகையோடு அவள் திரும்பி பார்க்க, வெற்றி குருந்தங்காட்டினுள்ளே நுழைய முடியாத படி, அங்கேயே சிக்கி கொண்டான்.
குருந்தங்காட்டிற்குள் மதுராவை பின் தொடர்ந்து செல்வதற்கு முன்பாகவே, அமைச்சருக்கும் அவரது ஆட்களுக்கும், சாமியார் ஒரு முத்திரையை அவர்களின் கைகளில் கொடுத்தார்.
"இது எதுக்காக குருஜி?"
"இந்த காடு கொற்றவையோட சாம்ராஜ்யம், இதுக்குள்ள நாம போனா கண் கட்டுவித்தை காட்டி, நம்மள காட்டுக்குள்ள தொலைஞ்சு போக வெச்சிடுவா, அதனால தான் இன்னைக்கு வரைக்கும் உள்ள போன உன்னோட ஆட்களால, அந்த மூலவர் சன்னிதியை கண்டுபிடிக்கவே முடியல, இந்த காலகோடரோட முத்திரை உங்க கிட்ட இருக்கிற வரை, இந்த மரங்கள் ஆடுற கண்ணாமூச்சி ஆட்டம் உங்களை பாதிக்காது, நாம அந்த காட்டுவாசி பொண்ணை பின் தொடர்ந்து போனா, மூலவர் சன்னதியை கண்டுபிடிக்க முடியும். அதுக்காக தான் இந்த முத்திரையை எல்லாருக்கும் கொடுத்து இருக்கேன். இத கவனமா கீழே போடாம வெச்சுகுங்க, இது உங்க கையில இருக்கிற வரைக்கும் உங்களுக்கு எந்த ஆபத்தும் நெருங்காது.."
சிறிது தூரம் சென்றதுமே பூமி அதிரும் சத்தத்தை அவர்களால் உணர முடிந்தது. காட்டு மிருகங்களை வழி நடத்தியபடி செம்பா ஆன்மா வடிவில் பிளிரிக் கொண்டே, அவர்களை அடித்து வீசும் முனைப்புடன் முன்னேறி வந்து கொண்டிருந்தது.
சாமியார் அமைச்சரை இழுத்துக் கொண்டு ஒரு மரத்தோடு ஒதுங்கி நின்று , அவர்களைப் பார்த்து மரத்தின் அருகே நிற்குமாறு கூறியும் கூட, அவர்கள் வந்து கொண்டிருக்கும் மிருகங்களை கண்டு அஞ்சி திசைக்கொருவராக சிதறி ஓடினர்.
அதில் அவர்கள் கைகளில் வைத்திருந்த காலக்கோடரின் முத்திரை தவறி விழுந்தது, அடுத்த நிமிடமே அவர்கள் அனைவருமே அந்த காட்டிற்குள் தொலைந்து போயினர்.சாமியார் அவர்களை கவனித்து கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு அருகே வந்த செம்பாவின் ஆன்மாவை கண்ட அமைச்சர் அங்கிருந்து ஓட்டம் எடுக்க, அவரின் கைகளில் இருந்தும் அந்த முத்திரை நழுவி சென்றது.
ரங்காவை தனதருகில் காணாமல் சுற்று முற்றும் தேடிய சாமியார், இனி அவரை தேடுவது வீண் என்பதை உணர்ந்து, எப்படியாவது மந்திர தகடுகளை கைப்பற்ற வேண்டும் என்று, மதுரா சென்ற வழியினை நோக்கி அவரும் நடக்கத் தொடங்கினார்.
மதுரா மூலவர் சன்னிதியில் நெருங்கும்போது அந்த குகை பாழடைந்து கற்களால் மூடப்பட்டிருந்தது. முன் ஜென்மத்தில் எவ்வளவு போற்றி பாதுகாக்கப்பட்ட இந்த இடம், இப்படி இருப்பதை கண்டு அவள் கண்களில் நீர் கோர்த்தது. திடீரென்று ஒரு சூறாவளி காற்று போல ஒன்று அவளை நெருங்கி வர, அதை அவள் திரும்பி பார்த்த போது, செம்பா அவளை பார்த்தபடியே ஓடி வந்து கொண்டிருந்தது.
செம்பாவை நோக்கி ஒடி சென்றவள் அதை அணைத்துக் கொள்ள எண்ணி கைகளை நீட்டிய போது, காற்றில் மட்டுமே கைகளை வீச முடிந்தது.
"செம்பா என்னை மன்னித்துவிடு எனக்காகவே வாழ்ந்த உன்னை, அன்று காக்க தவறிய பாவியாகி விட்டேன் நான்."
அது தலையை அங்கும் இங்கும் ஆட்டி, அவளையே சுற்றி சுற்றி வந்தது. தனது சக்தியால் குகையை அடைத்திருந்த பாறைகளை தள்ளி, மதுரா உள்ளே செல்ல அது பாதை அமைத்து கொடுத்தது.
தன்னலமற்ற அதன் செயலை கண்டு மெய் சிலிர்த்தவள், காற்றில் அதை கட்டிக்கொண்ட படியே ஆனந்த கண்ணீர் சிந்தினாள்.அவளது கண்ணீர் பட்ட அடுத்த நொடி, செம்பா தங்கமாக ஜொலிக்க தொடங்கியது, சிறிது நேரத்தில் தங்க துகள்களாக அப்படியே காற்றோடு காற்றாக கரைந்து போனது.
செம்பா முக்தி அடைந்து விட்டதை உணர்ந்தவள், நிறைவாகவே குகையின் உள்ளே சென்றாள்.
தான் தினமும் பூஜித்து வந்த தேவி, பூஜைகள் எதுவும் இன்றி பாழடைந்த குகைக்குள் நின்று கொண்டிருப்பதை கண்டு, குளத்தில் இருந்த நீரினை தனது சேலையில் நனைத்து அன்னையை சுத்தம் செய்தாள்.குகையில் அங்கங்கு பூத்துக்கிடந்த பூக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு இட்டவள், கண்களை மூடி கரங்களை கோர்த்து வணங்கி நின்றாள்.
" தாயே உன் அருளை நாடி வந்துள்ளேன், கெட்டவைகளை அழித்து நல்லதை நிலை நாட்ட, உமது மந்திர தகடு வேண்டும் அன்னையே, அவற்றோடு உமது அருளாசியையும் எங்களுக்கு வழங்கி, இப்புவியை காத்தருள்வாய் தேவி."
கொற்றவை தேவியின் கையில் இருந்த திரிசூலம் சிறிது கீழ் இறங்க, அன்னையின் சிலை லேசாக நகர்ந்தது, அதன் அடியில் ஒரு தங்க நிற பெட்டி ஜொலித்துக் கொண்டிருந்தது. அதை எடுத்து அவள் திறந்து பார்த்த போது, அதில் மந்திர தகடுகளோடு அன்னையின் சிறிய சிலை ஒன்று இருந்தது.
அவள் கைகளில் இருந்த பெட்டியை சாமியார் தட்டிப் பறிக்க, திடீரென்று குகை ஆட்டம் கண்டது. பெட்டியின் உள்ளிருந்த தேவியின் சிலை செந்நிறமாக மின்னத் தொடங்க, சாமியார் தன் கைகளில் தீப்பற்றியது போல அலரத் தொடங்கினான். சூடு தாங்காமல் அவன் பெட்டியை தூக்கி வீச, அதை பத்திரமாக பிடித்துக் கொண்டால் மதுரா. கொற்றவை அன்னையின் சிலை கொஞ்சம் கொஞ்சமாக பூமிக்குள் புதையத் தொடங்கியதும், குளத்தின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. குகையின் முன் பகுதியும் முற்றிலுமாக கற்களால் மூடப்பட்டது.
No comments:
Post a Comment