அத்தியாயம் – 1 :
நஞ்சு உடலைக் கொல்லும்...
வஞ்சம் மனதைக் கொல்லும்...
காதல் இரண்டையும் வெல்லும்..."
அரசன்
"சில மனிதர்கள் பதவியால் தலைவர்களாகிறார்கள்... சிலர் பணத்தால் பெரியவர்களாகிறார்கள்... ஆனால் மிகச் சிலர்தான் தங்கள் மனிதநேயத்தால் ஒரு சாம்ராஜ்யத்தின் இதயமாக மாறுகிறார்கள்."
அதிகாலை நான்கு மணி நாற்பத்தைந்து நிமிடம். தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையை ஒட்டியிருந்த திருவெண்ணைநல்லூர் கிராமம் இன்னும் முழுவதுமாக விழித்திருக்கவில்லை. கிழக்கே வானம் மெதுவாக வெளுக்க ஆரம்பித்திருந்தது.
வயல்வெளிகளில் படர்ந்திருந்த பனித்துளிகள், முதல் சூரிய ஒளிக்காக காத்திருந்தன. காற்று நெற்கதிர்களை வருடிச் செல்ல தொலைவிலோ கோயில் மணியோசை.
அந்த அமைதியை உடைக்காமல், ஒரு பிரம்மாண்டமான பாரம்பரிய மாளிகை கம்பீரமாக நின்றிருந்தது.
"அருணாச்சலம் இல்லம்."
நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது.
அந்த வீட்டின் முன் நின்றது இரண்டு பெரிய கல் சிங்கங்கள், அதைத் தாண்டி தேக்கு மரத்தில் செதுக்கப்பட்ட கதவு, நடுவில் பெரிய முற்றம், அதைச் சுற்றி நாற்புறமும் அறைகள், சுவர்களில் பழைய கருப்பு வெள்ளை புகைப்படங்கள்.
ஒவ்வொரு புகைப்படமும் அந்த குடும்பத்தின் வரலாற்றை பேசிக் கொண்டிருந்தது. இந்த வீடு வெறும் வீடு இல்லை.
அது ஒரு குடும்பத்தின் கௌரவம். ஒரு தொழில் சாம்ராஜ்யத்தின் அடையாளம்.
அருணாச்சலம் இல்லம் வெறும் பெரிய வீடு மட்டுமல்ல, அது ஒரு கூட்டுக் குடும்பம்.
அருணாச்சலம், அவரது தம்பி ராகவேந்திரன், அவர்களது குடும்பத்தினர் அதோடு அங்கு அடிக்கடி வந்து தங்கும் அருணாச்சலத்தின் தங்கை வள்ளியின் குடும்பம். இப்படி எப்போதும் சிரிப்பும், சலசலப்பும் நிறைந்த வீடு.
அதனால்தான் அந்த வீட்டில் குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் ஒரு நாளும் குறைந்ததே இல்லை.
அந்த வீட்டுக்குள் அனைவரும் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த நேரம், ஒரு அறையில் மட்டும் விளக்கு எரிந்தது.
அறையின் கதவை திறந்து மெதுவாக வெளியே வந்தான் அவன் வேந்தன் அருணாச்சலம்.
ஆறடி இரண்டு அங்குல உயரம், உடற்பயிற்சியால் செதுக்கப்பட்ட உடல்வாகு, மாநிறத் தோல், அடர்த்தியான தாடி, நெற்றியில் தெளிவாகப் பூசப்பட்ட திருநீறு, வெள்ளை வேட்டி, கருநீல நிற முழுக்கை சட்டை,கையில் பழைய மாடல் கைக்கடிகாரம் என பார்த்தவுடன், இவன் பேசுறத விட இவனுடைய அமைதியே அதிகமா பேசும் என்று தோன்றும் தோற்றம்.
அவன் கையில் ஒரு சிறிய வெண்கல விளக்கை எடுத்துக்கொண்டு நேராக பூஜை அறைக்குள் சென்றான்.
பூஜை அறையில் வரிசையாக இருந்த தெய்வங்களின் முன்பு விளக்கேற்றி கண்களை மூடினான். இரண்டு நிமிடங்கள் எந்த சத்தமும் இல்லை.
அவன் மனதில் மட்டும் இந்த வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது.
"என்னை நம்பி வேலை பார்க்கிற எந்தக் குடும்பமும் கஷ்டப்படக்கூடாது, என் குடும்பத்துக்கு எந்த அவமானமும் வரக்கூடாது."
தனக்காக ஒரு வார்த்தை கூட அந்த வேண்டுதலில் இல்லை. கண்களைத் திறந்து மெதுவாக கடவுளை வணங்கினான். பிறகு திரும்பி வெளியே வந்தான்.
"வேந்தா..."
என்ற மென்மையான குரலைக் கேட்டு திரும்பிப் பார்த்தான். அங்கே அவன் பாட்டி மீனாட்சி அம்மாள் எழுபத்தைந்து வயதை கடந்தாலும் முகத்தில் கம்பீரம் குறையாமல் நின்றிருந்தார்.
"இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டியா ராசா?"
வேந்தன் புன்னகைத்தான்.
"நீங்க தூங்கலையா பாட்டி?"
"எனக்கு வயசாச்சு. தூக்கம் சீக்கிரமே கலைஞ்சிடும்."
"சரி வாங்க..."
என்று அவரது கையைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் அமர வைத்தான்.
"காபி குடிச்சியா பாட்டி?"
"இல்ல ராசா."
" சரி ஒரு நிமிஷம்."
என்று அவன் சமையலறைக்குள் சென்றான். சில நிமிடங்களில் இரண்டு டம்ளர் ஃபில்டர் காபியுடன் திரும்பி வந்தான். ஒன்றை பாட்டியிடம் நீட்டினான்.
"நீயே போட்டியா ராசா?"
"ஆமாம் பாட்டி."
மீனாட்சி அம்மாள் ஒரு மிடறு விழுங்கினார்.
"உன் அம்மா போட்ட மாதிரியே இருக்கு."
வேந்தன் சிரித்தான்.
"அம்மாவே கத்துக்கொடுத்தாங்க."
"இந்த வீட்டுக்கு நீ மூத்த பேரன் மட்டும் இல்லடா ராசா..."
என்று அவன் கன்னத்தை வருடியவர்,
" நீ இந்த வீட்டோட தூண்."
வேந்தன் அமைதியாகவே இருந்தான், அந்த வார்த்தைகளுக்கு பதில் சொல்லவில்லை.
அதே நேரம் வீட்டின் பின்புற வாசலில் இருந்து ஒரு வயதான வேலைக்காரர் உள்ளே வந்தார்.
"தம்பி..."
"சொல்லுங்க சாமி தாத்தா."
"நம்ம பழைய டிரைவர் முருகன் இருக்கான்ல..."
"ஆமா."
"அவருக்கு நேத்து ராத்திரி ஹார்ட் அட்டாக்."
வேந்தனின் முகம் மாறியது.
"இப்ப எப்படி இருக்காரு?"
"ஆஸ்பத்திரில இருக்காரு."
"நான் போய்ப் பார்க்கிறேன்."
"தம்பி... நீங்க ஆபீஸ்..."
"ஆபீஸ் காத்திருக்கும் ஆனா மனுஷன் உயிர் காத்திருக்காது"
என்று அவன் உறுதியான குரலில் கூற, மீனாட்சி அம்மாள் கண்களில் பெருமையோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
காலை ஏழு மணி, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை.
முருகனின் மனைவி கண்கலங்கியபடி வெளியே நின்றிருந்தாள். வேந்தனை பார்த்ததும் பதறி எழுந்தாள்.
"தம்பி..."
"அண்ணன் எப்படி இருக்காரு?"
"டாக்டர் ஆபரேஷன் பண்ணணும்னு சொல்றாரு... ஆனா..."
அவள் தயங்கினாள்.
"பணம்..."
வேந்தன் உடனே தன் பர்ஸிலிருந்து ஒரு கார்டை எடுத்தான்.
"இதை வாங்கிக்கோங்க."
"வேண்டாம் தம்பி..."
"இது உதவி இல்லை."
அவன் மெதுவாக சிரித்தான்.
"முப்பது வருஷமா அவர் நம்ம குடும்பத்துக்காக வேலை பார்த்தாரு. இது அவரோட உரிமை."
அதை கேட்டு அந்தப் பெண் கதறி அழ ஆரம்பித்தாள்.
"தம்பி... நீ நல்லா இருக்கணும்."
வேந்தன் கைகளை கூப்பினான்.
"அவரு நல்லபடியா வீட்டுக்கு வரட்டும்... அதுவே போதும்."
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தவன், வானத்தை ஒரு நிமிடம் பார்த்தான்.
அவன் அறியவில்லை அதே வானத்தின் கீழ் அவனுடைய வாழ்க்கையை மட்டும் அல்ல, அருணாச்சலம் குடும்பத்தின் தலைவிதியையே மாற்றப் போகும் ஒரு பெண், மெல்ல அவனை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள் என்று.


