banner image

பூ மழையே 20


 

அத்தியாயம் 20


   இரண்டு நாட்களாக தேவ்வை அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம், பின்னாலேயே சென்று கண்காணித்துக் கொண்டிருக்கிறாள் கண்மணி. 


  தனது தோழியோடு இரண்டு நாட்கள் ஊரை சுற்றி பார்க்கலாம் என்று விடுப்பு எடுத்திருந்த கவியும், கண்மணியோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள். தேவ்வை பற்றி கண்மணி சொன்னதற்கும், தற்போது தங்கள் கண் முன்னால் அவன் நடந்து கொள்வதற்கும், உள்ள வித்தியாசத்தை கண்டு அதிர்ந்து போயிருந்தாள் கவி. கைகளில் மதுக் கோப்பையோடு பெண்கள் கூட்டத்திற்கு இடையில், தள்ளாடிக் கொண்டிருக்கும் தேவ்வின் இந்த புதிய அவதாரத்தை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.


   அப்படி என்றால் கம்பெனியில் அனைவரின் முன்பும் நல்லவன் போல நடித்துக் கொண்டிருக்கின்றானா? தற்போது அவனை விட, அவளுக்கு இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும், கண்மணியை நினைத்து தான் பயமாக இருந்தது.


    இதுவரை கண்மணி, தேவ் தன்னை ஏமாற்றி விட்டதை நினைத்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லை, அதோடு எதற்காக என்னை ஏமாற்றினாய் என்று அவன் சட்டையை பிடித்து கேள்வி கேட்கவும் இல்லை, கண்மணியின் இந்த மௌனம் கவிக்கு சிறிது கிலியை ஊட்டியது. 


   தேவ்வின் பின்னே பப் ஹோட்டல் ரிசார்ட் என்று பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இவர்களை, ராம்சிங்கும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். சில இடங்களில் அவர்களிடம் அத்துமீற  நினைக்கும் ஆட்களிடம் இருந்து, அவர்களை காப்பாற்றி கோபமாக வெளியே அனுப்பி இருக்கிறான். ஒருமுறை மனம் பொறுக்காமல், 


    “உனக்கு என்ன பெரிய ரிவால்வர் ரீட்டான்னு நினைப்பா? எதுக்காக அவரை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கிட்டே இருக்க? ஏன் அவரை போட்டு தள்ள போறியா என்ன?”


    “லூசாயா நீ? நான் எங்க அவனை ஃபாலோ பண்றேன், நாங்க லீவு போட்டுட்டு ஜாலியா ஊரை சுத்திகிட்டு இருக்கோம். எங்களுக்கு முன்னாடியே நாங்க போகப் போற இடத்துக்கெல்லாம், உன் பாஸ் வந்து நின்னா, அதுக்கு நாங்களா பொறுப்பு? கம்பெனியை கவனிக்காம ஊரை சுத்தற அந்த வெட்டி பயலை, நாங்க எதுக்கு ஃபாலோ பண்ணப் போறோம்.”


    “ஓஹோ அப்படியா? அப்புறம் எதுக்கு வச்சக் கண்ணு வாங்காம, போற இடமெல்லாம் அவரையே உத்து உத்து பார்த்துகிட்டு இருக்க?”


  “ ம்ம் அந்த மாங்கா மடையன்  குடிச்சிட்டு கூத்தடிக்கிறதை தான் இந்த  ஊரே வேடிக்கை பார்க்குதே, என்னமோ நான் மட்டும் தான் அவனை பார்க்கற மாதிரி சொல்ற, அதோ அங்க பாரு தலையில பாட்டிலை வச்சுகிட்டு உன் பாஸ் கரகாட்டம் ஆடிகிட்டு இருக்கறதை.” 


   அவன் திரும்பி பார்த்தபோது அதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது. 


   “சரி அவர பார்க்க வரலன்னு சொல்லற ஓகே, ஆனா எதுக்காக இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் நீ வர்றே?”


   “ஹலோ அதை கேட்க நீங்க யாரு?”


    “ம்ம் உன் நலம் விரும்பி, அதோட உங்க பாட்டி என்னை நம்பி தான் உன்னை இங்க வேலை செய்ய அனுமதிச்சிருக்காங்க. உன்னை பாதுகாப்பா பார்த்துக்க சொல்லி இருக்காங்க, இனிமேல் இந்த மாதிரி சுத்திக்கிட்டு இருந்தேன்னா, எனக்கு அவங்களோட போன் நம்பர் குடுத்துட்டு தான் போயிருக்காங்க, உடனே ஊருக்கு கால் அடிச்சிடுவேன். அப்புறம் அவங்க வந்து உன்னை இங்கிருந்து ஒரேயடியா ஊருக்கு கூட்டிட்டு போயிடு வாங்க.”


    “நீ யாருக்கு வேணுமுன்னாலும் கால் பண்ணிக்கோ, அதை எப்படி மாத்தி பேசி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும், இப்போ நீ உன் வேலைய மட்டும் பார்த்துட்டு போ.”


   “இரு இரு முதலாளியை சைட் அடிக்க அவர் பின்னாடியே சுத்தறேன்னு உங்க பாட்டி கிட்ட சொல்லறேன்.”


   “ஆமா அந்த வெண்ணெய் பெரிய  ஆணழகன் பாரு, அந்த பரதேசியை சைட்டு வேற அடிக்கிறாங்க.”


    “ஏய் என்ன? நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன், பாஸை மரியாதை இல்லாம பேசிகிட்டே போற?”


  “அவன் நான் செய்யற வேலைக்கு தான் ஓனர் எனக்கு கிடையாது, பொது இடத்துல பொண்ணுங்க பின்னாடியே சுத்தறான், அவனுக்கு நான் மரியாதை வேற குடுக்கனுமோ, இந்தா குடுக்கறேன் பாரு அவனுக்கு மரியாதை.”


    என்று வண்டி வண்டியாக பச்சை தமிழில் தேவ்வின் புகழை அவள் பாடத் துவங்க, காதை பொத்திக் கொண்டான் ராம்சிங். ஆத்திரம் தீராமல் திட்டிக்  கொண்டிருந்தவளின் கைகளை பிடித்து, அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள் கவி. 


    இதோ இப்போது கூட பப்பில் பெண்களோடு கூத்தடித்துக் கொண்டிருக்கும் தேவ்வை, கண்காணித்தபடியே, சற்று தள்ளி அமர்ந்திருந்த தோழிகள் இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் ராம்சிங். 


     “கண்மணி ஏன்டி இப்படி இருக்க? தேவ் சாரை  இப்படி பார்க்கறதை விட, நீ இப்படி அமைதியா இருக்கறது தான் எனக்கு பயமா இருக்கு? மனுஷங்க எல்லாருக்கும் இரண்டு வகையான முகம் உண்டுன்னு சொல்றது உண்மை தான் போல. 


   வெளிய எல்லார்கிட்டயும் ஒரு முகத்தையும்,  தனக்குள்ள இன்னொரு முகத்தையும் வைச்சிருக்காங்க. அதுதான் அவரைப் பற்றி தெளிவா தெரிஞ்சிருச்சே, இனியும் எதுக்காக அவரையே சுத்திக்கிட்டு இருக்க? எனக்கு இந்த சூழ்நிலையே பிடிக்கல, தயவு செஞ்சு வா வெளியே போலாம். இன்னையோட அந்த தேவ்வை தலைமுழுகிடு, காலேஜ் டூர்ல நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் ஒரு கனவா நினைச்சு மறந்திரு.


    முதல்ல என் பக்கம் திரும்புடி, இப்ப நீ என்னோட வரல அப்புறம் இனிமேல் ஜென்மத்துக்கும் நான் உன் கூட பேச மாட்டேன்.”


   “ கவி ப்ளீஸ் ஒரு வாரம் மட்டும் எனக்காக பொருத்துக்கோ, அவ்ளோ நாள் கூட தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். எனக்கு தேவையானது கிடைக்கிறவரை அவனை ஃபாலோ பண்ணிகிட்டு தான் இருப்பேன்.”


    கண்மணியை புரியாமல் பார்த்தவள் அவள் கண்களில் வந்து போன ஆர்வத்தைக் கண்டு, திரும்பி தேவ்வை பார்த்தாள். 


   “கண்மணி நீ ராம்சிங் சொன்னபடி தேவ்வை போட்டுத் தள்ளப் போறியா?” 


   “ப்ச்சு, அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன் சொல்லறதை நம்பறியே.”


   “ஏன் அவருக்கு என்ன குறைச்சல்? நல்லா ஸ்மார்ட்டா, எயிட் பேக் வச்சுகிட்டு ஹேண்ட்சமா தானே டி இருக்காரு, அதோட ரொம்ப ரொம்ப நல்லவருன்னு அவர் முகத்தை பார்த்தாலே தெரியுதே .”


   “ ஆல்ரெடி டர்பனை நெத்திவரை இழுத்து போட்டிருக்கான், அவன் கன்னத்துல இருக்க அந்த டென்ஸ் பாரஸ்ட்டுக்குள்ள, எங்க உனக்கு முகம் தெரியுது? அதுல கண்ணும் மூக்கும் தானே லேசா தெரியிது. இதுல அவன் நல்லவன்னு மூஞ்சிலயே தெரியிதா உனக்கு?”


     அந்த நேரம் தேவ் தனது கைகளில் வைத்துக் கொண்டு, ஆடிக் கொண்டிருந்த பாட்டில்கள் கீழே விழுந்து நொறுங்க, அதிலிருந்த தெறித்த ஒரு கண்ணாடித் துண்டு, அவன் இடது கையை பதம் பார்த்ததால் அந்த இடமே கலவரமானது. 


   “கவி இதை வச்சுக்கோ, பயப்படாத டம்மி துப்பாக்கி தான், எவனாவது கிட்ட வந்தா இதை காட்டி மிரட்டி அனுப்பிடு. நான் இப்போ வந்திடறேன்.”


   என்று தனது கைப்பையோடு, அங்கிருந்த ப்ரைவேட் என்று பெயரிடப்பட்ட அறைக்குள் நுழைந்து, முகம் தெரியாதது போல மாஸ்க்கை அணிந்து கொண்டாள் கண்மணி.


Powered by Blogger.