அத்தியாயம் 81
மோகனா லந்தாங்காட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பே தனது சக்தியின் மூலம் மழையை உண்டாக்கி, வீரர்களின் நெற்றியில் இருந்த திருநீறை அழித்துவிட்டால்.
அதனால் விஜயேந்திர பூபதியை தேடி காட்டுக்குள் சென்றவர்களும், அவளோடு பல்லக்கை சுற்றி வந்து கொண்டிருக்கும் வீரர்களும் அவளது சக்திக்கு கட்டுப்பட்டனர்.
காட்டினுள் விஜயேந்திர பூபதியை தேடிச் சென்ற வீரர்கள், குகையில் பதுங்கு குழியில் இருந்த அனைவரையும், பத்திரமாக மேகக் காட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அவளோடு வந்தவர்கள் அவளின் கட்டளைக்கு அடிபணிந்து நடந்து கொண்டனர். ஆனால் அவள் எவ்வளவு முயற்சி செய்தும் ஜோசியர் ரகுநந்தன் மற்றும் பிரதீபன் இருக்கும் இடத்தினை அவளால் அறிந்து கொள்ளவே முடியவில்லை.
லந்தங்காட்டில் இருந்து வெளியேறும் போது, தன்னுடன் இருந்த போலி ஜோசியரோடும், தன் கட்டளைக்கு அடி பணியும் வீரர்களோடும் மகிழபுரியை நோக்கி தனது பயணத்தை தொடங்கினால் மோகனா.
குடிலில் படுத்திருந்த ஏந்திழை அம்மையாருக்கு செண்பாவின் பிளிறல் சத்தம் கேட்டது, அவர் எழுந்து பார்த்த போது, தனதருகே படுத்திருந்த மதுரவாணியை காணாததால், அவளை தேடி வெளியே வந்தார்.
அப்போதுதான் மதுரவாணி கொற்றவை தேவி கோயிலில் இருந்து இறங்கி, குருந்தங்காட்டிற்கு வெளியே செல்லும் வழித்தடத்தில் செம்பா பின் தொடர, அவள் நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்தார்.
அவளது பெயரை உரக்க கூறிக்கொண்டே, அவள் செல்லும் வழித்தடத்தில், அவள் பின்னே ஓடத் தொடங்கினார்.
கோபத்தோடு வேகமாக நடந்து கொண்டிருந்த மதுரா, குருந்தங்காட்டிற்கு வெளியே காலை எடுத்து வைக்க முனைந்த போது, அவளால் அந்தக் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. கொற்றவை தேவியை குருந்தங்காட்டில் தனது மந்திரத்தால் மோகனா கட்டி வைத்திருப்பதால், மதுராவின் உடலில் இருக்கும் கொற்றவை அன்னையாலும் அந்த காட்டிற்கு வெளியே செல்ல முடியவில்லை.
கண்களில் அனல் கக்கும் நெருப்போடு, கோபமாக மகிழபுரியை நோக்கி நின்று கொண்டிருந்த மதுராவின் அருகே வந்து, படுத்துக்கொண்டது செம்பா. அவர்களுக்கு பின்னே ஓடி வந்த ஏந்திழை அம்மையாரோ மூச்சிரைக்க அவள் முன்பு வந்து நின்றார்.
வந்தவர் மதுராவின் தோற்றத்தை கண்டு திகைத்து நின்று விட்டார் அவளின் கண்களில் உள்ள நீல பந்துகள், நெருப்பாக எரிந்து கொண்டிருந்து.
தன் மகளின் உருவத்தில் அந்த கொற்றவை தேவியை கண்டவர் கைகூப்பி அவளது கால்களில் விழுந்து விட்டார்.
"எழுந்திரு ஏந்திழை, பேசுவதற்கு நேரம் இல்லை. அங்கு என் மக்கள் தீய சக்தியினால் தாக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்."
மதுரா தன் கண்களை மூடி கைகளை வானை நோக்கி உயர்த்திய போது, கைகளில் பொன்னிறமாக மின்னும் அன்னையின் சூலாயுதம் தோன்றியது. அதை ஏந்திழையின் முன்பு நீட்டினார்.
"இந்த சூலாயுதத்தை வாங்கிக் கொள், இதை எடுத்துக் கொண்டு நேராக மகிழபுரியை நோக்கி செல். அங்கு தீய சக்திகள் மனித உடல்களின் மீது நின்று ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றது . எந்த இடத்தில் சூலாயுதம் ஒளிரத் தொடங்குகின்றது, அங்கு இதை நட்டு வைத்துவிட்டு நீ திரும்ப வந்துவிடு. நீ செல்லும் வழி எங்கும், காதுகளில் அலறல் கேட்பதையும் கண்களின் முன்பு வந்து பயமுறுத்துவதையும் கண்டு அஞ்சாதே. வெற்றியோடு திரும்பி வா."
ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியின் அறிவுரைப்படி, சூலாயுதத்தை தன் இரு கரங்களிலும் ஏந்திக் கொண்டு, மகிழபுரியை நோக்கி சென்றார். அவர் மகிழபுரியின் தெருக்களில் கால் வைத்ததுமே அவரைச் சுற்றி, ஆன்மாக்கள் ஓலமிட்டுக் கொண்டே வட்டமிட ஆரம்பித்தன. அவற்றைக் கண்டு அஞ்சாதவர் முன்னேறி சென்றார்.
சிறிது நேரத்தில் அவை அவரின் கண்களுக்கு முன்பு வந்து பயம் காட்ட, அதனைக் கண்டு அஞ்சாது நடந்து கொண்டே இருந்தார். ஒரு வேப்ப மரத்திற்கு பக்கத்தில் சென்றபோது, சூலாயுதம் ஒளிரத் தொடங்கியது, உடனே அங்கு சூலாயுதத்தை ஊன்றியவர், அதைத் தொட்டு வணங்கி விட்டு குருந்தங்காட்டிற்கு திரும்பினார்.
ஏந்திழை அம்மையார் சூலத்தை ஊன்றிய அடுத்த கனமே, குருந்தங்காட்டினுள் இருந்த மதுரா, மயங்கி விழுந்திருந்தால்.
மகிழபுரி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த கெட்ட ஆத்மாக்கள், அந்த சூலாயுதத்தின் சக்தியால் ஈர்க்கப்பட்டு, அதை நோக்கி வந்த போது, எரிந்து சாம்பலாயின.
சரியாக அந்த நேரத்தில் காவலர்களுடன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள் மோகனா.
கண்களை மூடி நடந்ததை அறிந்து கொண்ட மோகனா, முதலில் இந்த ஏந்திழையை எப்படியாவது விரட்டி அடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அவளால் அந்த தெருவின் உள்ளே கூட நுழைய முடியவில்லை, அந்த சூலாயுதத்தின் சக்தி அவளை உள்ளே அனுமதிக்க மறுத்தது.
அவளுடன் ஜோசியர் உருவத்தில் நின்று கொண்டிருந்த ரத்தமாறன் சூலாயுதத்தின் சக்தியை கண்டு அஞ்சி காற்றோடு காற்றாக அப்படியே மறைந்து போனான்.
சிறிது நேரத்திற்கு பிறகு, இரவு நேரத்தில் சூரியனைப் போன்ற ஒளி வீச, மக்கள் அனைவரும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தனர். அங்கு சூலாயுதத்திற்கு சற்று தள்ளி ரஞ்சனி நின்று கொண்டிருந்தாள். அவள் பௌர்ணமி பூஜைக்காக அண்டை நாட்டிற்கு சென்று இருப்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.
அவள் தான் இந்த கெட்ட சக்திகளை அழித்ததாக மக்கள் நினைத்தனர். அங்கு அன்னையின் சூலாயுதம் ஜொலித்துக் கொண்டிருந்தது, தங்களை காப்பாற்ற வந்த தேவியை நினைத்து கண்கலங்கிய மகிழபுரி மக்கள், பக்தியோடு அதனை கண்களில் ஒற்றிக்கொண்டனர்.
ஜெயகோஷத்துடன் ரஞ்சனியின் பல்லக்கை தூக்கிக்கொண்டு, மக்கள் அனைவரும் அரண்மனையை நோக்கி சென்றனர். ரஞ்சனி எதிர்பார்த்து வந்ததும் இதுதான். இங்கு மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்த ஆன்மாக்களை, தான் கட்டுப்படுத்தி அரசரிடம் நல்ல பெயர் பெற்று, இளவரசரை அதன் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த தெருவை விட்டு சற்று தூரம் சென்றதுமே, மீண்டும் அந்த ராட்சசன் ஜோசியரின் உருவத்தை தரித்துக் கொண்டு அந்தக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து, மோகனாவின் உத்தரவுப்படி மக்களை நோக்கி பேச ஆரம்பித்தான்.
"கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மையெல்லாம் காத்த இந்த தேவியே, நமக்கு வருங்கால மகாராணியாக வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? நீங்கள் என்ன கூறுகிறீர்கள் மக்களே?"
"ஆமாம் ஜோசியரே ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான், இந்த தேவி நமது மகாராணியாக வந்தால் இந்த நாட்டில் நடைபெறும் கெட்ட விஷயங்கள் எல்லாம் நின்று போய்விடும். அதுதான் நாட்டு மக்களுக்கும் நல்லது. வாழ்க ரஞ்சனி தேவி, வாழ்க வருங்கால மகாராணியார்!"
என்ற ஜெயகோஷங்கள் அரண்மனை வரை எதிரொலித்தது.
மக்களின் ஊர்வலம் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதையும், அங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கேள்விப்பட்டு, மகாராஜாவும் மகாராணியாரும் இளவரசருடன், அரண்மனை வாயிலில் ரஞ்சனிக்காக காத்திருந்தனர்.
No comments:
Post a Comment