Search This Blog

Followers

Powered By Blogger

Friday, July 18, 2025

மன்னவரே 64


 

             அத்தியாயம் 64


       இன்று அதிகாலையிலேயே ரகுநந்தனின் தாயார் அவனிடம், தன் அன்னைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை சென்று பார்த்து வருவதாக கூறி சென்றிருந்தார்.   


  இன்று அரண்மனையிலும் ரஞ்சனி எங்குமே தென்படாததால், தனது பாட்டிக்கு என்ன ஆனதோ என்ற கவலையுடன் ரஞ்சனியின் வீட்டிற்கு சென்றான் ரகுநந்தன்.


  தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தெய்வநாயகியை சுற்றி ரகுநந்தனின் அம்மாவும் அத்தையும் அமர்ந்திருந்தனர்.


  தனது கணவர் போரில் இறந்ததும் தன் இரு மக்களையும் நல்ல முறையில் வளர்த்து, தமது மகனை நாட்டை காக்கும்  போர் வீரனாக மாற்றிய அந்த வீரத்தாயை, ரகுநந்தனுக்கு மிகவும் பிடிக்கும்.


    தனது பாட்டியின் தைரியத்தை எண்ணி அவன் வியக்காத நாளே இல்லை! ஒரு தனி மனுசியாக தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவர். அவர் படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்று, அதற்கு கீழே அமர்ந்து கொண்டு அவர் கைகளை பற்றி கொண்டன் ரகுநந்தன்.


    "அன்பே எனது நாயகிக்கு என்ன ஆனது? எப்போதும் காணப்படும் அந்த கம்பீரமான சிரிப்பை காண ஓடி வந்த என்னை இவ்வாறு ஏமாற்றலாமா?"


  அவனது குரலை கேட்டு கண்களை மூடிய படியே சிரித்துக் கொண்டிருந்த நாயகி அம்மாள், கண்களை திறந்து அவனைப் பார்த்தார்.


    "இப்போதும் எனது கம்பீரம் அப்படியே தான் உள்ளது எனது அருமை பேராண்டி. உனக்கும் ரஞ்சனிக்கும் நடக்கும் திருமணத்தை காணாமல் எனது உயிர் போகாது."


    "இவ்வளவு கம்பீரமான வீரப் பெண்மணியை விட்டு விட்டு, உன் கோழை பேத்தியை போய் நான் திருமணம் செய்து கொள்வேனா? உன்னோடு என்றால் சரி, இல்லை என்றால் நான் சன்னியாசம் வாங்கிக் கொள்கிறேன்."


    இவன் கூறியதைக் கேட்டு சோகமாக அமர்ந்திருந்த அவனது தாயும் அத்தையும் கூட சிரித்து விட்டனர்.


    "பருவப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொன்னாள், இந்தப் பல்லு போன கிழவியை கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறாயே? உங்கள் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை கண்டு விட்டால், நான் நிம்மதியாக கண்களை மூடுவேன்."


      "யார் கூறினார்கள்? இந்த உலகத்தில் உள்ள அத்தனை ராஜகுமாரிகளும், உங்கள் மன உறுதிக்கு முன்பு வெறும் தூசு தான். எங்கள் திருமணத்தை மட்டும் பார்த்தால் போதுமா? பிறகு எங்கள் குழந்தைகளின் திருமணத்தை யார் முன் நின்று நடத்தி வைப்பது?  அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை முதன் முதலில் கையில் தாங்க போவதும் நீங்கள் தானே?"


    அவனுக்கு பின்னால் டம் என்ற சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான். அங்கு ரஞ்சனி கோபத்தோடு கைகளில் இருந்த செம்பு நீரை அவனுக்கு பக்கத்தில் வைத்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு அவன் அன்னையின் அருகில் போய் நின்று கொண்டாள்.


  ரகுநந்தன் தனது முகத்தில் குறும்பு புன்னகையை தவழ விட்டு, தனது பாட்டியை நோக்கி பேச ஆரம்பித்தான்.


    "நான் எவ்வாறு உனது பேத்தியை திருமணம் செய்து கொள்வேன்? அவளுக்குத்தான் சிறுவயதிலிருந்தே என்னை கண்டாலே ஆகாதே, முகத்தை திருப்பிக் கொண்டு செல்வாளே. இப்போது கூட நீங்கள் கண்டீர்கள் தானே, நீரினை கைகளில் கூட கொடுக்கவில்லை. இதனால் நான் குருகுலத்தில் இருக்கும்போதே ஒரு பெண்ணை நேசிக்க தொடங்கி விட்டேன்."


    ரகுநந்தன் தனது தாயையும் அத்தையையும் நோக்கி கண்களை சிமிட்டினான். ஆனால் அதிர்ந்து நின்ற ரஞ்சனி இவன் காட்டிய சைகையை கவனிக்கவில்லை.


    "பெண்கள் என்றால் கூச்சம் அதாவது நாணம் இருக்கும். இவர் என்னைப் பார்த்து சிரிக்கும் போதெல்லாம் ஈஈஈஈ என்று சிரித்து வைக்க முடியுமா, என்று கேளுங்கள் அத்தை."


  "அது எனக்கு எப்படி தெரியும் என்று நீங்களும் கூறுங்களேன் எனது அத்தையே."


    "மருமகனே உனது மனம் கவர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் என்ன? மிகவும் அழகானவளா? அவளின் குணம் எப்படி? நமது குடும்பத்திற்கு தகுந்தவள் தானே."


    ரஞ்சனி தனது அன்னையை பார்த்து கத்தினாள்.


                "அம்மா என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? அவர் என்ன கூறுகிறார், நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?"


    "நமது வீட்டுக்கு வரப்போகும் பெண்ணைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் சரியாகத்தானே கூறுகிறேன் மருமகனே?"


    "ஆம் அத்தை நீங்கள் எப்போதுமே சரியாகத்தான் கூறுவீர்கள். விரைவிலேயே அவளை இங்கு அழைத்து வருகிறேன்."


    "வருவீர்கள் வருவீர்கள் என்னை பார்த்தால் எப்படி தெரிகின்றது? அப்படி யாரையாவது கூட்டி வந்தால் அவளையும் கொல்வேன் கூட்டி வந்த உங்களையும் கொல்வேன். சிறுவயதில் இருந்து தங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னை, மோசம் செய்து விட்டு வேறொருத்தியின் கழுத்தில் தாலியை கட்டி விடுவீர்களா? உங்கள் கைகளை முறித்துவிட்டு எனது கையாலேயே நான் தாலியை கட்டி கொள்வேனே ஒழிய, வேறொருத்தியின் மீது உங்கள் கண்கள் போக கூட நான் அனுமதிக்க மாட்டேன். மீறிப் போகுமேயானால், அப்படியே உங்கள்  இரண்டு கண்களையும் நோண்டி விடுவேன் ஜாக்கிரதை."


  ரஞ்சனி படபடவென்று பட்டாசாக பொரிந்து விட்டு, கொல்லைப்புறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்று விட்டாள்.


    ரஞ்சனி பேச ஆரம்பித்ததுமே அதிர்ந்து நின்ற ரகுநந்தன், சுயநினைவுக்கு வந்த பிறகு, சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டான். அவனது அன்னை அவன் முதுகில் இரண்டு அடி போட்டு விட்டு,


    "எதற்காகடா அவளை இப்படி வெறுப்பேற்றுகிறாய்? பார் பிள்ளை மனம் நொந்து போய் விட்டது. ஒழுங்காக நீயே சென்று அவளை சமாதானப்படுத்து."


      "விடுங்கள் அண்ணி, இவ்வாறு கூறியதால் தானே அவள் மனதில் உள்ளவைகள் அனைத்தும், இப்போது அவள் வாய் வழியாகவே வெளிவந்தது. எல்லாம் நல்லதற்கே."


      "நீ கொடுக்கும் செல்லத்தில் தான் அவன் இவ்வாறெல்லாம் ரஞ்சனிடம் நடந்து கொள்கிறான். இன்னும் இங்கு நின்றுகொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? போய் என் மருமகளை சமாதானப்படுத்து. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிவரக் கூடாது, ஜாக்கிரதை."


      "அத்தையும் மருமகளும் ஒன்று போலவே இருக்கிறீர்கள். எப்படித்தான் என் வாழ்நாள் எல்லாம் சமாளிக்க போகின்றேனோ?"


  ரகுநந்தன் புலம்பிக்கொண்டே கொல்லைபுறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்றான்.


    ரஞ்சனி அங்கிருந்த பூச்செடியின் இலைகளை பிய்த்து எறிந்து, தனது கோபத்தை அதனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.


  புன்னகை முகத்துடன் அவளை நோக்கி வந்த ரகுநந்தன்,


    "அடடா என் செல்ல குட்டி ரஞ்சிக்கு எவ்வளவு கோபம் வருகின்றதே?"


  "ஏன் வரக்கூடாதா? நீங்கள் பேசிய பேச்சு அப்படி."


  "நான் என்ன செய்ய என்னை கண்டாலே பயந்து ஓடும் பெண்ணிடம், துரத்திச் சென்று என் அன்பை தெரிவிக்க முடியுமா?"


    "அதற்கு வெட்கம் நாணம் என்று  இன்னொரு பெயரும் உண்டு."


  "அப்படியா! இப்போது மட்டும் அந்த நாணம் எங்கு போய்விட்டது?"


  அப்போதுதான் அவனுக்கு சரிசமமாக தான் வாயாடி கொண்டிருப்பதை உணர்ந்த ரஞ்சனி, அவனுக்கு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்


  "ரஞ்சி, என்னை பார். என்னை உனக்கு பிடித்து இருக்கின்றதா? என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாயா? குருகுலத்தில் இருந்தாலும், நான் தினந்தோறும் என் மனதில் நேசித்துக் கொண்டிருந்த பெண் யார் தெரியுமா?"


  அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, அருகில் இருந்த தாமரை குளத்திற்கு அவளை அழைத்துச் சென்று, குளத்தில் தெரியும் ரஞ்சனியின் உருவத்தை காட்டினான்.


    அந்த குளத்தில் தெரியும் தனது உருவத்துக்கு அருகில், நின்று கொண்டிருந்த தனது ஆசை அத்தானுடன் சேர்ந்து நின்றிருக்கும் தனது கோலத்தை கண்டு, ரஞ்சனியின் கண்களில் ஆனந்த கண்ணீர் மின்னியது.


  அப்போது திடீரென்று கேட்ட கொம்பின் ஒலியில் ரகுநந்தனின் முகம் தீவிரமானது. ரஞ்சனியின் கைகளை இறுக பிடித்தவன்


  "நான் இப்போது அவசரமாக செல்ல வேண்டும் ரஞ்சனி, நான் பிறகு  வந்து உன்னை சந்திக்கிறேன்."

No comments:

Post a Comment