அத்தியாயம் 61
ஆலோசனை மண்டபத்தில் அரசரும் அமைச்சர்களும் அமர்ந்திருக்க, மித்ரனும் ரகுநந்தனும் பிரதீபனும் அங்கு அவர்களின் முன்பு நின்று கொண்டிருந்தனர்.
பிரதீபன் கூறிய செய்தியை கேட்டு யோசனையில் இருந்த மன்னர், அமைச்சர் பெருமக்களுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு மித்திரனை பார்த்து,
"மித்ரா இதில் உன்னுடைய கருத்து என்ன?"
"அரசே கொற்றவை தேவியை, ரத்னபுரியை சேர்ந்தவர்கள் சென்று வணங்க வேண்டும் என்றால், அவர்கள் அனுமதி கேட்க வேண்டியது அங்கு வாழும் மக்களிடம் தான், இதில் நாம் அனுமதி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.
நிச்சயம் அவர்கள் மற்ற நாட்டினர் காட்டினுள் நுழைவதை, விரும்ப மாட்டார்கள். எதற்கும் ஒரு முறை தாங்கள் ஏந்திழை அம்மையாரிடம் இது பற்றி கேட்டு விடுங்கள்.
ஒருவேளை காட்டில் உள்ள மக்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. தாங்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளீர்கள் அரசே, அவர்களுக்கு காவலாக இருப்போமென்று."
"நீ கூறுவதும் சரி தான் மித்ரா. முதலில் ஏந்திழை அம்மையாரிடம் இதை பற்றி கூறி, அவர்களின் கருத்தை கேட்டறிந்த பின்பு, நாம் ரத்னபுரி அரசருக்கு பதில் மடல் அனுப்பலாம்.
மித்ரா, நீ நாளையே காட்டிற்கு சென்று, ஏந்திழை அம்மையாரிடம் இதை பற்றி எடுத்து கூறி, அவர்களின் கருத்தினை கேட்டு வா. மற்றவர்களை அனுப்புவதை விட, இந்த நாட்டின் வருங்கால அரசனான நீ சென்று கூறினால் தான் சரியாக இருக்கும், அதுதான் மரியாதையும் கூட"
மித்ரனால் தன் தலையை மட்டுமே சரி என்று அசைக்க முடிந்தது, பேச வார்த்தை வரவில்லை.
அரசரிடம் விடை பெற்று அந்த மண்டபத்தில் இருந்து வெளியேறியவன், எவ்வாறு நாளை மதுராவை சந்திக்காமல் தவிர்ப்பது என்று சிந்தனையிலேயே இருந்தான்.
மதுரா ஏரிக்கரைக்கு சென்று இருந்தால் தப்பித்தோம். இல்லையென்றால் என்ன செய்வது, என்று யோசனைகளிலேயே சென்று கொண்டிருந்தான்.
நீ செய்து வைத்து விட்டு வந்த வேலைக்கு, அவள் உனக்காக, ஆசையாக காத்துக் கொண்டு இருப்பாள் என்று வேறு நினைக்கின்றாயா? என்று அவன் மனசாட்சியே அவனைக் கேள்வி கேட்டது.
ஆசையாக இல்லை என்றாலும், என்னை அடிப்பதற்காகவாவது அவள் காத்துக் கொண்டிருப்பாள் என்று நினைக்கிறேன், என்று தனக்குத்தானே மனதிற்குள் பேசிக்கொண்டு, நடந்து சென்று கொண்டிருந்தான்.
அவனை அழைத்துக் கொண்டே வந்த பிரதீபனின் குரலும், ரகுநந்தனின் குரலும் அவன் செவிகளுக்குள் செல்லவே இல்லை.
"இவன் என்னடா மந்திரித்து விட்டது போல் தனக்குத்தானே தலையை ஆட்டிக் கொண்டு செல்கின்றான்?"
"நான்தான் கூறினேனே பிரதீபா, அவனின் நடவடிக்கைகள் ஒன்றும் சரியில்லை என்று. நாளை நாமும் அவனுடன் சென்று வரலாம், அன்று கூட காட்டில் தனியாக எங்கோ போய்க் கொண்டிருந்தான், நான் தான் அவனை திரும்ப கோயிலுக்கு இழுத்து வந்தேன்."
"சரி ரகு நந்தா, எதற்கும் நீ அவனுடனே இரு. நான் சென்று அன்னையைப் பார்த்து வருகிறேன். அதுதான் மோகனாவை அங்கு அனுப்புமாறு பெரிய தந்தை கூறியுள்ளாரே, அதைப்பற்றி அன்னையிடம் சென்று கேட்டு வருகிறேன்."
ரகுநந்தன் மித்ரன் பின்னே செல்ல, பிரதீபன் தன் அன்னையை தேடிச் சென்றான்.
மோகனா அவள் அன்னையுடன் தான் இருந்தாள். ரஞ்சனி தனது அப்பா வழி பாட்டிக்கு உடல் சுகம் இல்லை என்ற காரணத்தால், இன்று அரண்மனைக்கு வரவில்லை.
மோகனா, இன்று எப்படியும் ரத்னபுரியில் இருந்து செய்தி வந்திருக்கும் என்று தெரிந்து தான், தன் அன்னையுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.
அவள் எதிர்பார்த்தபடியே பிரதீபன், அவன் அன்னையிடம் வந்து விஷயத்தை கூற, மேனகா தேவி யோசனையில் ஆழ்ந்தார்.
விஜய பூபதிக்கு அன்று கிடைத்த தண்டனைக்கு பிறகு, அவர் தன் புகுந்த வீட்டிற்கு செல்லவே இல்லை. தன் அண்ணனுடனே, பெற்ற பிள்ளைகளுடன் பிறந்தகத்தில் தங்கி விட்டார்.
அன்று அரசரை சந்திக்க வந்த தன் கணவனின் அண்ணன், ரத்னாபுரியின் அரசராக வந்து பார்த்திபேந்திரரை சந்தித்து விட்டு அப்படியே சென்று விட்டார்.
இப்போது மோகனாவை பார்க்க வேண்டும் என்று கூறுவதால் புகுந்த வீட்டினரின் கோரிக்கையை ஏற்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் குழப்பத்தில் தவித்து நின்றார்.
"தாயே எதற்காக இந்த குழப்பம்? அழைப்பது நமது நாட்டிலிருந்து தானே? அங்கு செல்வதற்கு எதற்கு இந்த தயக்கம்? எனக்கும் நமது நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஆசையாக உள்ளது. சரி என்று சொல்லுங்களேன்."
"மோகனா ரத்னபுரியை நமது நாடு என்று சொல்லும் உரிமையை, என்றோ நாம் இழந்து விட்டோம். உன் தந்தையின் அத்தகைய செயலுக்குப்பின், எனக்கு ஏனோ அங்கு செல்லவே பிடிக்கவில்லை. அதனால் மகிழபுரியிலேயே நாம் இருந்து விட்டோம்.
இப்போது திடீரென்று புதிதாக அவர்கள் உன்னை அனுப்புமாறு கேட்கும் போது, என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை. வேண்டாம் என்று மறுத்து கூறவும் முடியவில்லை, ஏனென்றால் நீ அந்த குடும்பத்தின் ஒரே முதல் பெண் வாரிசு.
எதற்காக இவ்வளவு காலம் கழித்து மடல் அனுப்பி உள்ளனர் என்று தான் தெரியவில்லை?"
"தாயே ரத்தினபுரியில் இருந்து இந்த மடல் மட்டுமல்ல இன்னொன்றும் வந்திருந்தது. கொற்றவை தேவி திருவிழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி வேண்டி அரசருக்கு எழுதப்பட்டிருந்தது."
மேனகா தேவிக்கு பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் தான் ஞாபகத்திற்கு வந்தது. அன்று இதுபோலத்தான் தனது புகுந்து வீட்டில் இருந்து கொற்றவை தேவி திருவிழாவிற்காக வந்திருந்தார்.
ஆனால் நடந்தது என்ன? தனது கணவரின் மறுபக்கத்தை அல்லவா கண்டார். அதுவும் கொடூரமான மறுபக்கம்.
எப்படித்தான் அந்த பிஞ்சு குழந்தையின் கண்முன்னே, அதன் தாய் தந்தையரை கொன்று விட்டு, அக்குழந்தையையும் கொள்ள துணிந்தார், என்று நினைக்கும் போதே அவரின் மனம் வலித்தது.
அன்றுதான் தனது கணவரை அவர் கடைசியாக பார்த்தது. அரச தண்டனை நிறைவேறிக் கொண்டிருக்கும் போது யாரோ சிலர், அவரை அழைத்துச் சென்றுவிட்டதாக கேள்விப்பட்டார். அதன் பிறகு, இன்று வரை தன் கணவரை அவர் பார்க்கவே இல்லை.
"பிரதீபா திருவிழாவிற்கு அவர்கள் வருகிறார்கள் என்றால், அப்போதே வந்து மோகனாவை பார்த்து செல்லலாமே. எதற்காக இப்போது மோகனாவை வர சொல்கிறார்கள்?"
"தாயே அவர்களுக்கே தெரிந்து உள்ளது, எப்படியும் கொற்றவை தேவி திருவிழாவிற்கு அவர்கள் வருவதற்கு அனுமதி கிடைக்காது என்று. அதனால் தான் இந்த மடலையும் சேர்த்தே அனுப்பியுள்ளனர் என்று நினைக்கிறேன்."
"பிரதீபா அப்படி என்றால்?"
"காட்டினுள் செல்வதற்கு முதலில் அங்கு வாழும் மக்களிடம் அனுமதி பெற வேண்டுமே? எப்படியும் அவர்கள் அதற்கான அனுமதியை கொடுக்கப் போவதில்லை. இருந்தாலும் எதற்கும் கேட்டு வருவோம் என்று நாளை மித்ரன் அங்கு செல்ல உள்ளான்."
கேட்டுக் கொண்டிருந்த மோகனாவிற்கு ரத்தம் கொதித்தது, திமிர் பிடித்த காட்டுவாசிகள் பௌர்ணமி பூஜை மட்டும் நல்லபடியாக முடியட்டும், அந்த காட்டோடு சேர்த்து, அந்த காட்டுவாசிகளையும் எரித்து விடுகிறேன் என்று மனதில் சூளுரைத்துக் கொண்டால்.
No comments:
Post a Comment