அத்தியாயம் 54
"தாயே எதற்காக இந்த பிரச்சனை உண்டானது? எப்படி இங்கு கலகம் ஏற்பட்டது?"
"தெரியவில்லை வாணி. நானும் நம் மக்களிடம் கேட்டு விட்டேன். அவர்களில் யாருமே இந்த சண்டையை ஆரம்பிக்க வில்லையாம், பிறகு எப்படி இரு பிரிவினருக்கும் இடையே சச்சரவு தோன்றியது என்றே தெரியவில்லை?"
"நானும் நாட்டு மக்களிடம் கேட்டு விட்டேன், அவர்களும் இந்த சண்டையை ஆரம்பிக்கவில்லையாம். அத்தோடு எங்களை காவல் காத்து நின்ற காவல் வீரர்களே, எங்களை கொல்ல வந்தார்கள். அதுதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது."
"ராணியாரே, உங்களை சூழ்ந்து நின்றது நமது நாட்டு படை வீரர்கள் போல் தெரியவில்லை, அப்படி இருந்தால் உங்களை கொல்ல துணிந்திருக்க மாட்டார்கள். எனது யூகம் சரி என்றால், அவர்கள் எதிரி நாட்டைச் சேர்ந்த படைவீரர்களாகத்தான் இருக்கக்கூடும். இங்கு இரு பிரிவினர்களுக்கு இடையே சண்டையை ஏற்படுத்தி, அதை காரணமாக வைத்து தங்களை கொல்ல திட்டம் தீட்டு இருக்கிறார்கள்."
அங்கிருந்த மக்களுக்கும் அப்போதுதான் விளங்கியது தங்களிடையே வாக்குவாதங்களை ஏற்படுத்திவிட்டு, அதன் காரணமாக தமது மகாராணியாரை கொல்ல முயன்றிருக்கிறார்கள் என்று.
அழுது கொண்டிருந்த கவிதாயினி மதுரவாணியை நோக்கி வந்து அவளது காலை கட்டிக்கொண்டால்,
"அக்கா எனக்கும் அம்பு வீச கற்றுத் தருகிறீர்களா? இனி என் அன்னையை கொல்ல யார் முயன்றாலும், அவர்களுக்கு நான் நல்ல பாடம் புகட்ட வேண்டும்."
"அம்பு வீசவா? சரி கற்றுத் தருகிறேன். உன் பெயர் என்ன?"
"என் பெயர் கவிதாயினி? உங்களின் பெயர் என்ன அக்கா."
"என் பெயர் மதுரவாணி. ஆமாம்,கவி எதற்காக உன் முகம் இப்படி வாடி உள்ளது? அழுதாயா?"
"ஆமாம் அந்த படை வீரர்கள் எங்களை சூழ்ந்து கொண்டதால் பயந்துவிட்டேன்."
"நீ தைரியமான பெண்தானே கவி, இனி நீ எதை கண்டும் அஞ்ச கூடாது சரிதானே. நமது தேவி கொற்றவையின் அருள் உள்ளவரை, இந்த ராஜ்யத்தில் பெண்களை என்றுமே ஆபத்து நெருங்காது புரிந்ததா?"
"புரிந்தது அக்கா?"
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகாராணி தாரகை தேவியார் ஏந்திழை அம்மையாரை நோக்கி,
"ஏந்திழை இந்தப் பெண்...?"
"எனது அருமை வளர்ப்பு மகள் தான் மகாராணியாரே. நான் பெற்ற பிள்ளை போல் வளர்த்து வருகிறேன்."
"இவளை நான் இதுவரை இங்கு கண்டது இல்லையே? அன்று அரசவையில் கைக்குழந்தையாக இவளை கண்டது தான். எவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள்."
காட்டினில் நுழைவதற்கு சற்று முன்னாலேயே அரசரும் மற்றும் இளவரசரும் காட்டுவாசிகள் போல் வேடம் தரித்த வீரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ரதத்தையும் குதிரைகளையும் வழி மறித்து அவர்கள் தாக்கத் தொடங்கிட, நண்பர்கள் மூவரும் உடனே சுதாரித்து எதிரிகளுடன் சண்டையிடத் தொடங்கினர்.
அரசருக்கு எதற்காக இந்த மலைவாழ் மக்கள் தங்களை தாக்குகின்றனர் என்றே தெரியவில்லை. அதைவிட தமது குடும்பப் பெண்கள் அனைவரும் காட்டினுள் கொற்றவை தேவியின் கோயிலில் உள்ளனர் என்பது அவருக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.
வழியில் வந்த தங்களுக்கே இந்த நிலைமை என்றால், அங்கு அந்தக் கூட்டத்தின் இடையே மாட்டிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பெண்களின் நிலையை எண்ணி வருத்தம் கொண்டார்.
இளவரசரையும் அவரது நண்பர்களையும் அழைத்து, இங்கு தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் உடனே கொற்றவை தேவி கோவிலுக்கு சென்று அங்கு பெண்களின் நிலையை கண்டு வருமாறும் கூறினார்.
நண்பர்கள் மூவரும் குதிரையை விரட்டி காட்டினை நோக்கி முன்னேறினர்.
அவர்கள் காட்டினை நெருங்கும் போது கொற்றவை தேவி கோயில் பூஜைகள் ஆரம்பமாகி கொண்டிருந்தது. இளவரசரைக் கண்டதும் மக்கள் அனைவரும் உற்சாகமாக வாழ்த்தொலி எழுப்பினர்
தன்னை அன்புடன் வரவேற்கும் மக்களை புன்னகை முகத்துடன் எதிர்கொண்ட இளவரசர், தமது வீட்டுப் பெண்கள் நலமாக உள்ளனரா என்று கண்களால் ஆராய்ந்தார்.
அப்போதுதான் மித்ரனுக்கு ஒன்று ஞாபகம் வந்தது, வரும் வழியில் தங்களுடன் சண்டையிட்ட காட்டுவாசிகள் போர் திறமையுடன் தமக்கு ஈடாக போர் புரிந்தது நினைவு வந்தது. காட்டில் வசிக்கும் மக்களால் எவ்வாறு படை வீரர்கள் போல் சண்டையிட முடியும்? அவர்கள் காட்டுவாசிகளை போல் வேஷம் போட்டு வந்த எதிரி நாட்டு படைவீரர்களாகதான் இருக்க கூடும் என்று சந்தேகித்தான்.
இளவரசர் வரும் வாழ்த்தொலி கேட்டதுமே ஏந்திழை அம்மையார் மதுர வாணியையை அழைத்துக்கொண்டு அவர்கள் குடியிருக்கும் குடிலுக்கு சென்று விட்டார்.
"வாணி, அரசு குடும்பத்தார் இந்த காட்டை விட்டு வெளியே செல்லும் வரை, நீ இந்த குடிலை விட்டு வெளியே வரக்கூடாது இது என் மீது ஆணை புரிந்ததா உனக்கு?"
அவள் சோகமாக தலையை மட்டும் ஆட்டி வைத்தால்,
மதுராவை ஏந்திழை அம்மையார் அழைத்துச் சென்றதும் செம்பாவும் அவளின் பின்னே, நாய் குட்டி போல வந்து குடிலுக்கு முன்பு அமர்ந்து விட்டது.
குடிலின் தட்டியை இழுத்து மூடி விட்டு, ஏந்திலை அம்மையார் கொற்றவை தேவி கோயிலை நோக்கி கிளம்ப எத்தனிக்க வாசலில் படுத்திருந்த செம்பாவை பார்த்து முறைத்தார்.
"உன்னால்தானடா அவள் என் பேச்சை கேட்காமல் இப்படி நடந்து கொள்கிறாள். உனக்கு தெரியும் தானே காட்டினுள் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் போது, வாணி குகை கோயிலில் தான் இருக்க வேண்டும் என்று. பிறகு எதற்காக அவளை இங்கு அழைத்து வந்தாய், நீங்கள் செய்த தவறுக்கு இன்று உங்கள் இருவருக்கும் சோறு தண்ணீர் கிடையாது."
ஏந்திழை அம்மையார் இருவரையும் திட்டி விட்டு கோயிலை நோக்கி சென்று விட்டார்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு கொற்றவை திருவிழாவின் போது, குகை கோயிலுக்கு அருகே தான், மதுரா முதன்முதலில் செம்பாவை கண்டால்.
குகைக்கு அருகே ஒரு பெண் யானை இறந்து கிடக்க, அது இறந்தது கூட தெரியாமல் அதன் குட்டி, அந்த தாய் யானையை எழுப்பி கொண்டிருந்தது.
மதுரா அந்த குட்டி யானையின் அருகில் சென்று அதை அணைத்துக் கொண்டாள். அன்றிலிருந்து செம்பாவை அவளுடனே வைத்து வளர்த்து வருகிறாள். அவள் செல்லும் இடங்களில் எல்லாம் செம்பாவும் பின் தொடர்வான். மதுராவின் வார்த்தையே செம்பாவிற்கு வேத வாக்கு.
ஏந்திழை அம்மையார் சென்றதும் மதுரா வீட்டினுள் இருந்த உணவினை ஜன்னல் வழியே செம்பாவை நோக்கி வீசினாள். செம்பாவும் தனது அருகே இருந்த மரத்திலிருந்து பழங்களை பறித்து அவளுக்கு ஜன்னலின் வழியே கொடுத்தது. சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த ஏந்திழை அம்மையார், இதனைக் கண்டு சிரித்துக் கொண்டே கோயிலை நோக்கிச் சென்றார்.
மகாராணியார் தமது மகன் வரும் செய்தி கேட்டு, மித்ரனை காண விரைந்ததால், ஏந்திழை அம்மையார் மதுராவை இழுத்து கொண்டு சென்றது பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை.
No comments:
Post a Comment