Search This Blog

Followers

Powered By Blogger

Friday, August 22, 2025

மன்னவரே 92


 

             அத்தியாயம் 92


  தீபன் தனது தந்தையை அழைத்துக் கொண்டு குருஜியின் கட்டளைப்படி சுந்தரமூர்த்தி தாத்தா மற்றும் வேலு தாத்தாவின் குடும்பத்தினரை காப்பாற்ற விரைந்து சென்றான்.


  "சுவாமி மோகனா இப்போது வெளியே வந்து விட்டாளே, இன்னும் சிறிது நேரத்தில் தனது ஆட்டத்தை தொடங்கி விடுவாள். இப்போது என்ன செய்வது? அவளை முழுவதுமாக அழிக்க வழி கூறுங்கள்?.. போன பிறவியில் எங்களது உயிரைக் கொடுத்து அவளை அடைத்து வைத்தோம், இப்பிறவியிலாவது என்னவரோடு உளமார வாழ ஆசைப்பட்டுகிறேன்,  என்னால் அவரோடு வாழவே முடியாதா?"


  "மதுரவாணி வருத்தம் கொள்ளாதே, இந்த பிறவியில் நீ இளவரசரோடு இணைந்து நூறு வருடங்களை கடந்து வாழத்தான் போகின்றாய், நீ இப்போதே கொற்றவை அன்னையின் மூலவர் சன்னிதியை நோக்கி செல், அங்கு அன்னையின் சிலைக்கு அடியில் இருக்கும் மந்திர தகடுகளை, அன்னையின் ஆசியோடு எடுத்து வா, அவற்றால் மட்டுமே அந்த மோகனாவின் ஆட்டத்தை அடக்க முடியும். பல வருடங்களாக அடைந்து கிடந்த அவளின் ஆன்மா மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அவளை தடுக்க வேண்டும் என்றால் அந்த மந்திர தகடுகளால் மட்டுமே முடியும், வெற்றி உனக்கே சென்று வா மகளே, நான் உனது வரவுக்காக  மோகினி பள்ளத்திற்கு அருகில் காத்திருக்கின்றேன். ஆனால் ஒன்று மகளே, நீ மந்திர தகடுகளை சிலைக்கு அடியில் இருந்து எடுத்த பிறகு, அந்த இடமே இருந்த இடம் தெரியாது மண்ணுக்குள் புதைந்து விடும்.  அதனால் கவனமாக இரு. இன்றோடு இந்த மோகனாவின் ஆன்மாவிற்கு ஒரு முடிவு கட்டி அந்த காலக்கோடனின் குகையை ஒரே அடியாடியாக மூட வேண்டும், சென்று வா மகளே வெற்றி நிச்சயம்."


  நிரஞ்சனாவை தேடி ராகுலுடன் கிளம்பிய வேந்தன், நேராகச் சென்றது மாறனுடைய கட்சி அலுவலகத்திற்கு தான், ஏனெனில் ராகுல் கூறியபடி நிரஞ்சனாவை அழைத்துச் சென்றவர்கள் அவனது அண்ணின் பெயரை கூறியதால் அவர்கள் நிச்சயம் கட்சியை சேர்ந்தவர்களாக தான் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தான், மாறனுடைய கட்சி ஆபீஸ்க்கு ராகுலுடன் சென்றான்.


      உள்ளே நுழைந்ததுமே ராகுல் அவர்களில் ஒருவனை கைக்காட்டி, இவனும் நிரஞ்சனாவை கூட்டிக்  சென்றவர்களில் ஒருவன் என்று கூறியதும், அவனை அந்த இடத்திலேயே அடிவெளுக்க ஆரம்பித்து விட்டான் வேந்தன்.


    தனது கட்சி ஆபீஸிக்குள் புகுந்து  தனது  கட்சியை சேர்ந்த ஒருவனை  வேந்தன் அடித்துக் கொண்டிருப்பதை கண்டு கோபம் கொண்ட மாறன்.


      "வேந்தா நிறுத்து, இது ஒன்னும் உன் ஊர் கிடையாது, இது என்னோட கட்சி ஆபீஸ் என்ன தைரியம் இருந்தா என் ஆளை எங்க ஊருக்குள்ளேயே வந்து அடிப்பே? உன்னோட செல்வாக்கு எல்லாம் வேடந்தூரோட வச்சுக்கோ, இங்க வந்து அதை காட்டுற வேலை எல்லாம் வச்சுக்காதே, ஏற்கனவே உன்னால தான் என் தங்கச்சி இந்த ஊரை விட்டு போனா, அதுக்கே உன் மேல நான் கொலை வெறியோட இருக்கிறேன், வீணா பிரச்சினை பண்ணாம இங்கிருந்து கிளம்பு முதல்ல, அப்புறம் உன் மேல கை வச்சுட்டேன்கிற பழி எனக்கு ஒன்னும் வேண்டாம்."


    "உன் புத்தி எப்பவுமே இப்படித்தான் சிந்திக்குமா மாறா? கூட இருக்கிறவனே உன் தங்கச்சியை கடத்திட்டு போனது கூட தெரியாம, அவனுங்க கூடவே சேர்ந்து நீ அவளை தேடிட்டு இருந்தா, எப்படி டா உன் தங்கச்சி கிடைப்பா?"


  "என்ன புதுசா கதை விடறே? என்ன...... புது டிராமாவா? அதுதான் உனக்கு கல்யாணம் ஆகி அந்த பெட்டி எல்லாம் கை மாறிடுச்சே, அப்புறம் எதுக்காக டிராமா போட்டுட்டு இருக்க?"


    "நாடகம் போடறது எல்லாம் உன்னோட வேலை மாறா, எங்களுக்கு தெரியாதுன்னு நெனச்சியா? பாட்டியை கீழே தள்ளி விட நீயும் உன் தங்கச்சியும் பிளான் பண்ணது முதல் கொண்டு எல்லாமே எனக்கு தெரியும்."


    அடுத்து வார்த்தை பேச முடியாமல் மௌனமானான் மாறன்.


  " உன்னோட சேர்க்க சரியில்ல, அதனால தான் நீ இப்படி வளர்ந்து நிக்கிறே, இதோ இங்க நிக்கிறாரு பாரு இவரு தான் கடைசியா உன் தங்கச்சியை ஆபத்தில் இருந்து காப்பாத்தி, இந்த ஊருக்கு கூட்டிட்டு வந்து இருக்காரு, ஆனா இவரை அடிச்சு போட்டுட்டு, உன் தங்கச்சியை இதோ உன் கூட இருக்கிறான் பாரு, இவனும் இன்னும் சில ஆட்களும் அங்கிருந்து கடத்திட்டு போயிட்டாங்க."


"என்ன சொல்ற வேந்தா? நீ ....நீ பொய்  சொல்ற நான் நம்ப மாட்டேன்."


  "சார் என் பேர் ராகுல் நான் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறேன், நேத்து நைட் வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வரும்போது,  காட்டு வழியா ஒரு பொண்ணு ஓடி வர்றதை பார்த்தேன், அவங்களை யாரோ கடத்திட்டு வந்து பூஜை செஞ்சிட்டு இருக்கிறதாகவும், ஊர் திரும்புறதுக்கு அவங்களுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி கேட்டாங்க, நான் அவங்க சொன்ன ரூட் படி அங்கிருந்து இந்த ஊருக்கு வந்தேன், ஆனா வந்ததுமே உங்க தங்கச்சியை உங்களோட கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலர் தான், நாங்களே மாறன் அண்ணன் கிட்ட கூட்டிட்டு போறோமுன்னு சொல்லி எங்க வழியை மறச்சு நின்னாங்க,எனக்கு அவங்களை பார்க்க சந்தேகமா இருந்ததால, நானே அவங்க அண்ணன் கிட்ட விட்டுக்குறேன்னு சொன்னேன், ஆனா அவங்க என்னை அடிச்சு போட்டுட்டு உங்க தங்கச்சியை வலுக்கட்டாயமா இழுத்துட்டு போய்ட்டாங்க.


     அவங்களை தடுக்க நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன், என்னையும் அடிச்சு போட்டுட்டு, உங்க தங்கச்சி மூக்குல மயக்க மருந்து வச்சு, அவங்கள மயக்கி தூக்கிட்டு போயிட்டாங்க. இதோ இந்த வளையல் உங்க தங்கையோடது தானே, இவனும் இன்னும் சில ஆளுங்களும் அவங்கள இழுத்துட்டு போகும்போது, அவங்களோட மறுக்கையை நான் புடிச்சிருந்தேன், அப்போ இது என் கையோட வந்துடுச்சு. ப்ளீஸ் சார் நான் சொல்றதை நம்புங்க, உங்க தங்கச்சி இப்போ ஆபத்துல இருக்காங்க."


  ராகுல் கைகளில் வைத்திருந்த தனது தங்கையின் வளையல்களை அடையாளம் கண்டு கொண்ட மாறன், அடுத்த நிமிடமே  வேந்தனின் கைகளால் அடி வாங்கிக் கொண்டிருந்தவனை அடித்து வெளுக்கத் தொடங்கினான்.


    அவன் அடித்த அடியில் அவன் வெள்ளை சட்டை செந்நிறமாக ரத்தம் பூசி கலராக மாறி இருந்தது. அடி தாங்க முடியாமல் அவன் நடந்ததை கூற ஆரம்பித்தான்.


    "ஐயோ அண்ணே அண்ணே அடிக்காதீங்க நான் தலைவர் சொல்லி தான் இதெல்லாம் பண்ணுனேன். தலைவர் கூட ஒரு குருஜி இருப்பாரே, அவர்தான் உங்க தங்கச்சியை எப்படியாவது ஊருக்குள்ள போகாம தடுத்து, காட்டுக்குள்ள இருக்கிற அந்த குகை கிட்ட கொண்டு வர சொன்னாரு. அதனாலதான் அங்க கூட்டிட்டு போனோம். நாங்க இங்க வந்தது கூட மோகினி பள்ளத்துக்கு அந்த பக்கம் இருக்கற காட்டுக்குள்ள ஏதோ பொக்கிஷம் புதைந்து இருக்குதாம், அதை தேடுறதுக்காக தான் எங்களை  அமைச்சர் இங்கே அனுப்பி வச்சாரு, இங்கே திடீர்ன்னு கோயில்ல சாமி ஆடி காட்டுக்குள்ள போயி தீர்த்தம் எடுத்துகிட்டு வர சொன்னதால, எங்கே எங்களோட குட்டு வெளிப்பட்டு விடுமோன்னு தான், உங்களையும் கூட வச்சுட்டு அதை எப்படியாவது தடுக்கலாமுன்னு அமைச்சர் முடிவு பண்ணாரு, இப்ப கடைசியா உங்க தங்கச்சியை தூக்கிட்டு போனதும் அமைச்சர் சொல்லி தாண்ணே, இது எல்லாத்துக்கும் மூலக்காரணமே அவர் கூட இருக்க அந்த குருஜி தான்."


    அவன் அடி தாங்காமல்  தனக்கு தெரிந்த அத்தனை உண்மைகளையும் உளறிக் கொட்ட, கேட்டுக் கொண்டிருந்த மாறனுக்கு, தான் எப்படி முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்று அவமானமாக இருந்தது. அத்தோடு தன்னால் தன் தங்கையும் இப்படி ஒரு ஆபத்தில் மாட்டிக் கொண்டாளே என்று வருந்தியவன், இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று நினைத்து , தனது நம்பிக்கைக்குரிய விசுவாசிகளிடம் அவனைப் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, எக்காரணம் கொண்டும் அமைச்சரின் ஆட்கள் இந்த ஊருக்குள் இருக்கக்கூடாது அவர்களை அடித்து துரத்துங்கள் என்றும் உத்தரவிட்டு விட்டு, ராகுல் மற்றும் வேந்தனுடன் மேலூருக்கு அருகில் உள்ள காட்டில் இருக்கும் குகையை நோக்கி செல்ல முனைந்தான். அப்போது வேந்தனுக்கு அவனது நண்பன் வெற்றியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அதை ஏற்று பேசியவனது முகம் கலவரமானது.

No comments:

Post a Comment