அத்தியாயம் 73
ரஞ்சனியின் உடலில் இருந்த மோகனா, மகிழபுரியை சேர்ந்த படைகளும் மித்ரனும் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.
ரஞ்சனி முதலில் கட்டியிருந்தது போலவே, ஒரு மாய தாயத்தை தனது மந்திர சக்தியின் மூலம் உருவாக்கி, கைகளில் கட்டிக் கொண்டால். பிறகு அடுத்தடுத்து தமது ரத்தினபுரியைச் சேர்ந்த வீரர்களுக்கு கட்டளையிட, ஒரு பகுதியினர் அவளது தந்தையோடு ரகுநந்தனையும் அழைத்துக் கொண்டு நாடு திரும்பினர்.
இன்னொரு பகுதியினரோ அவளின் கை கால்களை கட்டி, ஒரு பல்லக்கில் ஏற்றி தூக்கி கொண்டனர். சரியாக மகிழபுரியை சேர்ந்த படைகள் அவர்களை நெருங்கும் போது அங்கிருந்து செல்வது போல நடித்தனர்.
முதலில் அவர்களை நெருங்கிய மித்ரனைக் கண்டு ரத்தினபுரியைச் சேர்ந்த படைகள் பல்லக்கை கீழே வைத்து விட்டு நாலா புறமும் சிதறி ஓட, மித்ரனுக்கு பின்னால் வந்த படைகள் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினர்.
மித்ரன் பல்லக்கினுள் மயங்கி கிடக்கும் ரஞ்சனியை கண்டு விட்டு, சத்தமாக ரகுநந்தனை அழைத்தான். ஆனால் அவனை எங்கும் காணாததால் ஒரு படை வீரனை ரஞ்சனிக்கு காவலாக வைத்து விட்டு அவனை தேடி ஓடினான்.
பிரதீபன் விஷயம் அறிந்ததும், மயக்கத்தில் இருந்த தனது அன்னையை பல்லக்கில் ஏற்றி, அரசர் மற்றும் மகாராணியாருடன் பாதுகாப்பாக அரண்மனைக்கு வந்து சேருமாறு பல்லக்கு தூக்குவோருக்கு கட்டளை இட்டு விட்டு, படைவீரர்களுடன் சென்று கொண்டிருந்தான்.
ரஞ்சனி தூக்கி வீசிய அந்த தாயத்தானது ஒரு மரத்தில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. சரியாக பிரதீபன் அந்த மரத்தடியினை நெருங்கிய போது, நேராக அது அவன் தலை மேலே வந்து விழுந்தது.
அந்த தாயத்தினை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு அவனின் உள் மனம் கூற, உடனே அதை தன் உடமையுடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்டான்.
அவன் வந்து பார்த்தபோது ஒரு படை வீரனின் காவலில் ரஞ்சனி பல்லக்கினுள் மயங்கி கிடந்தாள். ஆனால் அவனிடம் இருந்த தாயத்தின் மகிமையால், அவனுக்கு அங்கு இருப்பது ஏனோ மோகனாவின் உருவமாகத் தான் தெரிந்து. இது தனது மனபிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், மித்ரனையும் ரகுநந்தனையும் தேடி ஓடினான்.
மித்ரனும் பிரதீபனும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களால் ரகுநந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. மகிழபுரி வீரர்கள் துரத்திச் சென்ற ரத்தினபுரியைச் சேர்ந்த படைவீரர்களும் அவர்களுக்கு போக்குகாட்டி விட்டு திடீரென்று மாயமாக மறைந்து விட்டனர்.
வேறு வழி இல்லாமல் சில படைவீரர்களை சுற்றுவட்டாரத்தில், ரகுநந்தனை தேடி பார்க்கும்படி கட்டளையிட்டு விட்டு, அனைவரும் மகிழபுரியில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சமாளிக்க நாட்டினை நோக்கி விரைந்தனர்.
அமைச்சர் பெருமக்கள் அங்கிருந்த படைவீரர்களைக் கொண்டு ஓரளவுக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
மித்ரனும் பிரதீபனும் அங்கங்கு கலவரத்தில் ஈடுபட்ட எதிரிகளைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தனர். நிலைமையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
ரஞ்சனிக்கு மயக்கம் தெளிந்தது, தனது தாய் தந்தையை நினைத்து கதறி அழுவது போல் நடித்து கொண்டிருந்தாள், ரஞ்சனி உருவத்தில் இருந்த மோகனா.
அவளது உறவுகள் யாரும் இல்லாத காரணத்தால், அவளை மகாராணியார் அரண்மனையோடு வைத்துக் கொண்டார். மோகனா ரஞ்சனியின் உருவத்தில் தனது அறையிலேயே தங்கி கொண்டாள்.
பிரதீபன் ரஞ்சனியின் உறவுகளுக்கு மகன் என்ற பொறுப்பில் நின்று இறுதி காரியங்களை முடித்தான். ரகுநந்தனின் தாய் தந்தையருக்கு, அவன் தற்போது இல்லாத காரணத்தால், மித்ரனே மகனாக மாறி, அவர்களின் இறுதிச்சடங்கை நிறைவேற்றினான்.
அரசர் நாடு திரும்பியபோது நாட்டு மக்கள் பல பேர் தனது உடமைகளையும் உறவுகளையும் இழந்து இருந்தனர். அதனைக் கண்டு கடும் கோபம் கொண்டவர், பிரதீபனின் தலைமையின் கீழ் ஒரு பெரும் படையை திரட்டி, ரத்னபுரியை நோக்கி போர் தொடுக்க அனுப்பி வைத்தார்.
மித்ரனும் அவனுக்கு உதவியாக உடன் சென்றான். இந்த சூழ்நிலையை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ரத்தினபுரி அரசன், ஒரு பெரும் படையுடன் அவர்களை சமாளிக்க காத்திருந்தான், இருந்தும் மகிழபுரியின் படைகளுக்கு முன்பு ரத்தினபுரியின் படைகள் போர்க்களத்தில் சிதறி ஓடின.
ஒரு கட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாமல் ரத்தபுரியின் அரசன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். ரத்தினபுரி மகிழபுரி அரசின் ஆட்சியின் கீழ் வந்தது. ரத்தினபுரிக்கு புதிய மன்னனாக பிரதீபன் அறிவிக்கப்பட்டு அவனுக்கு முடி சூட்டப்பட்டது.
மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்தாலும், அவள் ஒரு ஏவல் ஆன்மாவாக மாறியதால், அவளுக்கு ரத்த தாகம் ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அவளால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இரவு நேரங்களில் ரஞ்சனியின் உடலில் இருந்து பிரிந்து, தனது ஆன்மாவோடு இரையை தேடி அலைய தொடங்கினாள்.
நாட்டிலுள்ள கால்நடைகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து, தனது ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டாள்
நாட்டில் அங்கங்கு இரவு நேரங்களில், கால்நடைகள் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் இறந்த கிடந்ததை கண்ட பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர். இது குறித்து அரசரிடம் சென்று முறையிட்டனர்.
கொற்றவை தேவியின் அருட்பார்வை இல்லாத காரணத்தால் தான், தீய சக்திகள் நாட்டின் உள்ளே நடமாடுவதாக உணர்ந்த அரசர், இந்த பிரச்சனையில் இருந்து மக்களை காக்க, பல ஊர்களில் இருந்து புரோகிதர்களையும் வேத வித்தகர்களையும் வரவழைத்து வேள்விகள் நடத்தி, ஊரினுள் கோயில்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.
ஆனால் அடுத்த நாளே அந்த அடிக்கல்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு, அதன் அருகே வேள்விகள் புரிந்த புரோகிதர்களும், வேத வித்தகர்களும் ரத்தம் உறிஞ்ச பட்ட நிலையில் சடலங்கலாக இறந்து கிடந்தனர். ஆம் இப்போது மோகனா மனித ரத்தம் குடிக்கும் பிசாசாகவே மாறிவிட்டாள்.
லந்தங்காட்டுக்கு வெளியே ரஞ்சனியின் ஆன்மா, காட்டின் உள்ளே உள்ள குகைக்குச் செல்ல, துடித்து கொண்டிருந்தது.
மயங்கிய நிலையில் இருந்த ரகுநந்தனை, ரத்னபுரி வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த போது, ரஞ்சனியின் ஆன்மாவும் அவர்களுடனேயே ரகுநந்தனை தொடர்ந்து வந்தது.
அவர்கள் ரகுநந்தனை லந்தங்காட்டில் உள்ள குகைக்கு அழைத்துச் செல்ல, அவர்களை பின்தொடர்ந்து சென்ற ரஞ்சனியால் அங்குள்ள தீய சக்திகளை மீறி உள்ளே செல்ல முடியவில்லை.
அவள் உள்ளே செல்ல எவ்வளவு போராடியும், அங்குள்ள தீய சக்திகள் அவளின் ஆன்மாவை காட்டிற்கு வெளியே தூக்கி வீசியது.