Search This Blog

Followers

Powered By Blogger

Wednesday, July 30, 2025

மன்னவரே 73


 

              அத்தியாயம் 73


  ரஞ்சனியின் உடலில் இருந்த மோகனா, மகிழபுரியை சேர்ந்த படைகளும் மித்ரனும் தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். 


  ரஞ்சனி முதலில் கட்டியிருந்தது போலவே, ஒரு மாய தாயத்தை தனது மந்திர சக்தியின் மூலம் உருவாக்கி, கைகளில் கட்டிக் கொண்டால். பிறகு அடுத்தடுத்து தமது ரத்தினபுரியைச் சேர்ந்த வீரர்களுக்கு கட்டளையிட, ஒரு பகுதியினர் அவளது தந்தையோடு ரகுநந்தனையும் அழைத்துக் கொண்டு நாடு திரும்பினர். 


      இன்னொரு பகுதியினரோ அவளின் கை கால்களை கட்டி, ஒரு பல்லக்கில் ஏற்றி தூக்கி கொண்டனர். சரியாக மகிழபுரியை சேர்ந்த படைகள் அவர்களை நெருங்கும் போது அங்கிருந்து செல்வது போல நடித்தனர்.


  முதலில் அவர்களை நெருங்கிய மித்ரனைக் கண்டு ரத்தினபுரியைச் சேர்ந்த படைகள் பல்லக்கை கீழே வைத்து விட்டு நாலா புறமும் சிதறி ஓட, மித்ரனுக்கு பின்னால் வந்த படைகள் அவர்களை துரத்திக் கொண்டு ஓடினர்.  


        மித்ரன் பல்லக்கினுள் மயங்கி கிடக்கும் ரஞ்சனியை கண்டு விட்டு, சத்தமாக ரகுநந்தனை அழைத்தான். ஆனால் அவனை எங்கும் காணாததால் ஒரு படை வீரனை ரஞ்சனிக்கு காவலாக வைத்து விட்டு அவனை தேடி ஓடினான்.


      பிரதீபன் விஷயம் அறிந்ததும், மயக்கத்தில் இருந்த தனது அன்னையை பல்லக்கில் ஏற்றி, அரசர் மற்றும் மகாராணியாருடன் பாதுகாப்பாக அரண்மனைக்கு வந்து சேருமாறு பல்லக்கு தூக்குவோருக்கு கட்டளை இட்டு விட்டு, படைவீரர்களுடன் சென்று  கொண்டிருந்தான்.


      ரஞ்சனி தூக்கி வீசிய அந்த தாயத்தானது ஒரு மரத்தில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்தது. சரியாக பிரதீபன் அந்த மரத்தடியினை நெருங்கிய போது, நேராக அது அவன் தலை மேலே வந்து விழுந்தது. 


    அந்த தாயத்தினை பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு அவனின் உள் மனம் கூற, உடனே அதை தன் உடமையுடன் சேர்த்து எடுத்து வைத்துக் கொண்டான். 


    அவன் வந்து பார்த்தபோது ஒரு படை வீரனின் காவலில் ரஞ்சனி பல்லக்கினுள் மயங்கி கிடந்தாள். ஆனால் அவனிடம் இருந்த தாயத்தின் மகிமையால், அவனுக்கு அங்கு இருப்பது ஏனோ மோகனாவின் உருவமாகத் தான் தெரிந்து. இது தனது மனபிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டவன், மித்ரனையும் ரகுநந்தனையும் தேடி ஓடினான்.

 

    மித்ரனும் பிரதீபனும் எவ்வளவு நேரம் தேடியும் அவர்களால் ரகுநந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை. மகிழபுரி வீரர்கள் துரத்திச் சென்ற ரத்தினபுரியைச் சேர்ந்த படைவீரர்களும் அவர்களுக்கு போக்குகாட்டி விட்டு திடீரென்று மாயமாக மறைந்து விட்டனர். 


    வேறு வழி இல்லாமல் சில படைவீரர்களை சுற்றுவட்டாரத்தில், ரகுநந்தனை தேடி பார்க்கும்படி கட்டளையிட்டு விட்டு, அனைவரும் மகிழபுரியில் ஏற்பட்டுள்ள நிலைமையினை சமாளிக்க நாட்டினை நோக்கி விரைந்தனர்.


    அமைச்சர் பெருமக்கள் அங்கிருந்த படைவீரர்களைக் கொண்டு ஓரளவுக்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.


    மித்ரனும் பிரதீபனும் அங்கங்கு கலவரத்தில் ஈடுபட்ட எதிரிகளைப் பிடித்து பந்தாடிக் கொண்டிருந்தனர். நிலைமையை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


    ரஞ்சனிக்கு மயக்கம் தெளிந்தது, தனது தாய் தந்தையை நினைத்து கதறி  அழுவது போல் நடித்து கொண்டிருந்தாள், ரஞ்சனி உருவத்தில் இருந்த மோகனா.


    அவளது உறவுகள் யாரும் இல்லாத காரணத்தால், அவளை மகாராணியார் அரண்மனையோடு வைத்துக் கொண்டார். மோகனா ரஞ்சனியின் உருவத்தில் தனது  அறையிலேயே தங்கி கொண்டாள்.


      பிரதீபன் ரஞ்சனியின் உறவுகளுக்கு மகன் என்ற பொறுப்பில் நின்று இறுதி காரியங்களை முடித்தான். ரகுநந்தனின் தாய் தந்தையருக்கு, அவன் தற்போது இல்லாத காரணத்தால், மித்ரனே மகனாக மாறி, அவர்களின் இறுதிச்சடங்கை நிறைவேற்றினான்.


  அரசர் நாடு திரும்பியபோது நாட்டு மக்கள் பல பேர் தனது உடமைகளையும் உறவுகளையும் இழந்து இருந்தனர். அதனைக் கண்டு கடும் கோபம் கொண்டவர், பிரதீபனின் தலைமையின் கீழ் ஒரு பெரும் படையை திரட்டி, ரத்னபுரியை நோக்கி போர் தொடுக்க  அனுப்பி வைத்தார்.


    மித்ரனும் அவனுக்கு உதவியாக உடன் சென்றான். இந்த சூழ்நிலையை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ரத்தினபுரி அரசன், ஒரு பெரும் படையுடன் அவர்களை சமாளிக்க காத்திருந்தான், இருந்தும் மகிழபுரியின் படைகளுக்கு முன்பு ரத்தினபுரியின் படைகள் போர்க்களத்தில் சிதறி ஓடின. 


    ஒரு கட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாமல் ரத்தபுரியின் அரசன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான். ரத்தினபுரி மகிழபுரி அரசின் ஆட்சியின் கீழ் வந்தது. ரத்தினபுரிக்கு புதிய மன்னனாக பிரதீபன் அறிவிக்கப்பட்டு அவனுக்கு முடி சூட்டப்பட்டது.


  மோகனா ரஞ்சனியின் உடலில் இருந்தாலும், அவள் ஒரு ஏவல் ஆன்மாவாக மாறியதால், அவளுக்கு ரத்த தாகம் ஏற்பட்டது. எவ்வளவு முயன்றும் அவளால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.


  இரவு நேரங்களில் ரஞ்சனியின் உடலில் இருந்து பிரிந்து, தனது ஆன்மாவோடு இரையை தேடி அலைய தொடங்கினாள்.


    நாட்டிலுள்ள கால்நடைகளின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து, தனது ரத்த தாகத்தை தீர்த்துக் கொண்டாள்


    நாட்டில் அங்கங்கு இரவு நேரங்களில், கால்நடைகள் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் இறந்த கிடந்ததை கண்ட பொதுமக்கள் அஞ்சி நடுங்கினர். இது குறித்து அரசரிடம் சென்று முறையிட்டனர்.


      கொற்றவை தேவியின் அருட்பார்வை இல்லாத காரணத்தால் தான், தீய சக்திகள் நாட்டின் உள்ளே நடமாடுவதாக உணர்ந்த அரசர், இந்த பிரச்சனையில் இருந்து மக்களை காக்க, பல ஊர்களில் இருந்து புரோகிதர்களையும் வேத வித்தகர்களையும் வரவழைத்து வேள்விகள் நடத்தி, ஊரினுள் கோயில்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.


    ஆனால் அடுத்த நாளே அந்த அடிக்கல்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டு, அதன் அருகே வேள்விகள் புரிந்த புரோகிதர்களும், வேத வித்தகர்களும் ரத்தம் உறிஞ்ச பட்ட நிலையில் சடலங்கலாக இறந்து கிடந்தனர். ஆம் இப்போது மோகனா மனித ரத்தம் குடிக்கும் பிசாசாகவே மாறிவிட்டாள்.


    லந்தங்காட்டுக்கு வெளியே ரஞ்சனியின் ஆன்மா, காட்டின் உள்ளே உள்ள குகைக்குச் செல்ல, துடித்து கொண்டிருந்தது.


    மயங்கிய நிலையில் இருந்த  ரகுநந்தனை, ரத்னபுரி வீரர்கள் தூக்கிக் கொண்டு வந்த போது, ரஞ்சனியின் ஆன்மாவும் அவர்களுடனேயே ரகுநந்தனை தொடர்ந்து வந்தது.


    அவர்கள் ரகுநந்தனை லந்தங்காட்டில் உள்ள குகைக்கு அழைத்துச் செல்ல, அவர்களை பின்தொடர்ந்து சென்ற ரஞ்சனியால் அங்குள்ள தீய சக்திகளை மீறி உள்ளே செல்ல முடியவில்லை. 


      அவள் உள்ளே செல்ல எவ்வளவு போராடியும், அங்குள்ள தீய சக்திகள் அவளின் ஆன்மாவை காட்டிற்கு வெளியே தூக்கி வீசியது.

Tuesday, July 29, 2025

மன்னவரே 72


 

             அத்தியாயம் 72


    குடிலுக்கு வெளியே ஒற்றர் தலைவன் அரசரிடம் மகிழபுரியில் தற்போது உள்ள நிலைமையினை பற்றி எடுத்து கூறிக் கொண்டிருக்க, குடிலின் உள்ளே மதுரா மித்ரனை கோபத்தோடு திட்டிக் கொண்டிருந்தாள்.


      மித்ரன் அவளிடம் தான் ஒரு போர்வீரரின் மகன் என்று கூறி இருந்தான். அவனின் தாய் தந்தை தற்போது இங்கு இல்லாத காரணத்தால் அரசரும் அரசியாரும் அந்த இடத்தில்  இருந்து தங்களின் திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால், சாந்தகுரு அடிகளார் மித்ரனை இளவரசே என்று அழைத்த போதுதான் அவனின் உண்மையான நிலையினை புரிந்து கொண்டால்.


சிவனடியார் அங்கிருந்து கிளம்பும்போது வாசல் வரை அனைவரும் சென்று அவரை வழி அனுப்பி வைக்க செல்ல, இதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி மதுராவிடம் பேசுவதற்காக குடிலின் உள்ளேயே மித்ரன் நின்று கொண்டான். ஆனால் அனைவரும் வெளியேறிய பிறகு, மதுரா அனல் பறக்க பார்வை ஒன்றை அவனை நோக்கி வீச, அவன் சிந்தனை ரேகையோடு குழப்பமாக அவளை பார்த்து நின்றான்.


      அவள் அரசரையும் மகாராணியையும் கண்களால் சுட்டிக்காட்டிய போதுதான் அவனுக்கு நினைவு வந்தது, அவளிடமிருந்து தப்பிக்க எண்ணி, அங்கிருந்து செல்லலாம் என்று அவன் திரும்ப முனைகையில் அவள் ஆரம்பித்து விட்டால்.


  "இளவரசருக்கு என்ன அவசரமோ?"


  "மதுரா நான் சொல்வதைக் கேள், நான் எதற்காக அப்படி கூறினேன் என்றால்..."


  "போதும், இதற்கு மேலும் தங்கள் கூறும் பொய்களை என்னை நம்பச் சொல்கிறீர்களா? இன்னும் எத்தனை பெண்களிடம் என்னிடம் கூறியது போலவே பொய்களை அடுக்கி உள்ளீர்கள்?"


  "போதும் மதுரா நிறுத்து, என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"


  "இருந்தது, சற்று நேரத்திற்கு முன்பு வரை, ஆனால் எப்போது தாங்கள் இத்தனை வருடங்களாக என்னிடம் உண்மையை மறைத்து பழகி வந்துள்ளீர்கள் என்று தெரிந்ததோ, அந்த நொடியில், தங்கள் மீது நான் கொண்ட நம்பிக்கை, பொடி பொடியாக போய்விட்டது."


    அதற்குள் குடிலுக்கு வெளியே ஏதோ சலசலப்பு கேட்க, இருவரும் குடிலுக்கு வெளியே வந்தனர். ரஞ்சனியும் ரகுநந்தனும் காட்டை விட்டு வெளியே சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் மித்ரன் வேகமாக அங்கிருந்து கிளம்பினான்.ஒருமுறை திரும்பி தனது மனையாளின் நீல நயனங்களை கண்டவன், ஒரு தலையசைப்போடு அவளிடம் விடை பெற்று கொண்டு, குதிரையை தட்டிவிட்டு வேகமெடுத்து விரைவாக செல்ல தொடங்கினான். படைவீரர்கள் மேனகா தேவியை பல்லக்கில் தூக்கிக் கொள்ள அரசரும் மகாராணியும் கூட ஏந்திழை அம்மையாரிடமும் மதுராவிடமும் விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர். 


  ரகுநந்தன் ரஞ்சனியுடன் குதிரையில் வேகமாக மகிழபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தான்.  தனது குடும்பத்தாரை நினைத்து ரஞ்சனி அழுது கொண்டே இருந்தாள்.ரகுநந்தனும் மனதில் உள்ள கவலையை அவளிடம் காட்டாமல், அவளுக்கு ஆறுதல் மொழி கூறியபடியே குதிரையை விரட்டிக் கொண்டிருந்தான். 


    அவர்கள் குருந்தங்காட்டை கடந்த சில மணி துளிகளில், குதிரையின் கால் இழுத்து கட்டப்பட்ட கயிறால் தட்டப்பட்டு, குதிரையின் மேலிருந்த இவர்கள் தலைக்குப்புற விழுந்தனர்.


  இருபதுக்கும் மேற்பட்ட போர் வீரர்கள் ரகுநந்தனை சூழ்ந்து கொள்ள, ரஞ்சனியை நோக்கி சென்ற மோகனா  அவளினுள் நுழைய முயல, ரஞ்சனியின் கைகளில் கட்டி இருந்த தாயத்தின் காரணமாக தூக்கி வீசப்பட்டால். மோகனா ரஞ்சனியின் உடலினுள் நுழைந்த பிறகு மட்டுமே, அவளது மாந்திரீக சத்திகள் அனைத்தும் அவளை வந்து அடையும். அதுவரை அவள் வெறும் ஏவல் ஆன்மா மட்டுமே, அதனால் எதையாவது செய்து ரஞ்சனியின் உடலினுள் நுழைய நினைத்தால்.


  ரகுநந்தன் அங்கு படை வீரர்களிடம் போராடிக் கொண்டிருக்க, ரஞ்சனி தன்னை நோக்கி  வந்த கரும்புகையை கண்டு மிரண்டு போய் கத்த தொடங்கினாள்.


      "என் தோழியே என்னைக் கண்டு என்ன பயம் உனக்கு? நான் தான் உன் மோகனா வந்திருக்கிறேன், என் உயிரை அநியாயமாக பறித்து விட்டார்கள். என் சோகத்தை உன்னிடம் கூறி உன்னை கட்டிக்கொண்டு கதறி அழ எண்ணுகிறேன். உன் கையில் உள்ள தாயத்து அதை தடுக்கின்றது. அதை அவிழ்த்து எறிந்து விட்டு உன் தோழியை அரவணைத்து ஆறுதல் கூற மாட்டாயா? அதோ ரகு நந்தனிடம் போரிட்டு கொண்டிருப்பவர்கள் எதிரி நாட்டுப் படைகள். அவனால் சமாளிக்க முடியாமல் திணறுவதை பார், நீ என்னை கட்டிக் கொண்டாள் நான் உன் உடலினுள் புகுந்து, அவர்களை எதிர்த்து ரகுநந்தனை காப்பாற்றுவேன். உடனே அந்த தாயத்தை கழட்டி எறி தோழி."


  அங்கு சண்டையிட்டுக் கொண்டே இங்கு ரஞ்சனியையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்த ரகுநந்தன் சத்தமாக கத்தத் தொடங்கினான்.


      "ரஞ்சி வேண்டாம், அந்த தாயத்தை கழட்டி விடாதே, அவள் மாயாஜாலக்காரி உன் உடலினுள் புகுந்து கொள்ள தந்திரமாக பேசி, உன்னை மூளைச்சலவை செய்கிறாள். நம்பாதே அவளை, இவர்கள் எல்லாம் அவளின் ரத்னபுரியைச் சேர்ந்த படைகள் தான்."


  "ரஞ்சனி நான் அப்படியெல்லாம் செய்வேனா? என்னை பற்றி உனக்குத் தெரியாதா? நான் அப்படியெல்லாம் செய்யக் கூடியவளா? உனது தோழியின் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா?"


    "மோகனா அவர் சொல்வதும் உண்மைதான். நான்தான் என் காதுகளால் கேட்டேனே, அங்கு அந்த பெண்ணை பலி கொடுக்க, உனது ஆட்களின் மூலம் அவளை தூக்கி  சென்றதை தான் நான் பார்த்தேனே, ஏன் மோகனா? ஏன் இவ்வாறு மாறிவிட்டாய்? எதற்காக இதெல்லாம் செய்கிறாய் மோகனா? நீ செய்த தவறை உணர்ந்து, கொற்றவை தேவியின் பாதக்கமலங்களை சரணடைந்து விடு, அந்த அன்னை உன் ஆன்மாவிற்கு அமைதி கொடுப்பார்."


  ரஞ்சனி கூறியதைக் கேட்டு ஒரு கேலியான சிரிப்பை உதிர்த்த மோகனா, 


  "அந்தக் கொற்றவை என் ஆன்மாவிற்கு அமைதி கொடுக்கப் போகிறாளா?ஹா ஹா ஹா பைத்தியக்காரி, நான் செய்த வேலையால்தான் அந்த கொற்றவை மந்திர கட்டுப்பாட்டில் உள்ளாள் அது தெரியுமா உனக்கு? உன்னிடம் பேசி இனி பயனில்லை, அப்பா ம்ம்ம்."


  மோகனா உத்தரவிட்ட மறு நொடி ரகுநந்தனை தாக்கிக் கொண்டிருந்தவர்கள் அவன் மீது மூர்க்கமாக ஆயுதங்களை உபயோகிக்க தொடங்கினர். அருகில் உள்ள புதரினில் இருந்து வந்த பத்து பேர் கொண்ட குழு, அவனை சுற்றி வளைத்து கை கால்களை பிடித்துக் கொண்டு, அவனை சித்தரவதை செய்ய ஆரம்பித்தது. ரகுநந்தனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் போராட முடியவில்லை, அவன் உடலில் உள்ள சக்தி எல்லாம் வடிய தொடங்கியது. 


  "ரஞ்சனி இப்போது அந்த தாயத்தை கழட்டி எறிகின்றாயா? அல்லது உனது அத்தானின் கைகால்களை பிய்த்து எறியட்டுமா?"


  "ரஞ்சி வேண்டாம், எனக்காக அந்த தாயத்தை கழட்டி எறிந்து விடாதே, அவள் மீண்டும் வந்து விட்டால் இந்த நாட்டு மக்களை எல்லாம் அழித்து விடுவாள், என் ஒருவனுக்காக நீ இதை செய்தால் அவர்களின் எதிர்கால வாழ்வே நாசமாகிவிடும்."


  "இல்லை அத்தான், எனக்கு அவர்களை விட நீங்கள் தான் முக்கியம்."


  என்று கூறிக்கொண்டே தன் கையில் உள்ள தாயத்தை கழட்டி எறிந்தால் ரஞ்சனி. அவள் தூக்கி வீசிய அடுத்த நிமிடம், மோகனா அவள் உடலினுள் நுழைந்து கொண்டாள். ரஞ்சனியின் ஆன்மா அவளது உடலை விட்டு வெளியேறி விட்டது. ரஞ்சனியின் கண்கள் திறந்த போது அவளின் கருவிழிகள் சிவப்பு நிறமாக மின்னியது. அதைக் கண்டு ஓடி வந்த ரகுநந்தனை மோகனா ஒரு பார்வை பார்க்க, கை கால்கள் முறுக்கிக் கொள்ள மூர்ச்சையாகி மண்ணில் விழுந்து விட்டான்.


  "மகளே மோகனா, இவனை இங்கேயே கொன்று புதைத்து விடலாமா?"


  "இல்லை தந்தையே இவன் நமக்கு உபயோகப்படுவான். ஒருவேளை ரஞ்சனி இந்த உடலுக்குள் திரும்பவும் வந்துவிட்டாள், அவளை பயமுறுத்துவதற்காகவாவது, இவன் உயிரோடு இருக்க வேண்டும். இவனை நமது இடத்திற்க்கு இழுத்துச் செல்லுங்கள்."

Monday, July 28, 2025

மன்னவரே 71


 

             அத்தியாயம் 71


        மித்ரன் மதுராவின் கைகளை இறுக்கமாக பிடித்த படியே, அவளின் தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டு, அவளை எழுப்பியபடியே   இருந்தான். அவளிடம் எந்த ஒரு சிறிய அசைவும் இல்லாததால், பயந்து போனவன் கண்ணீர் சிந்த தொடங்கினான். 


  அவனது கண்ணீரானது அவள் முகத்தினில் பட்டுத் தெறிக்க, அவளின் கருவிழிகள் இமைகளுக்குள்ளே அலைமோதியது, சிறிது நேரத்தில் கண்களை திறந்தவளுக்கு தனது கண்ணான கணவனின் முக தரிசனம் கிடைத்தது. அவனைக் கண்டு புன்னகை சிந்தியவள், தனது திருவாய் மலர்ந்து,


   "தீரா..." என்று கூற


அடுத்த நிமிடமே மூச்சுக்காற்றுக்கு கூட இடம் கொடுக்காமல், அவளை இறுக அணைத்துக் கொண்டு கதறி விட்டான்.


"மதுரா உனக்கு ஒன்றும் இல்லையே? நலமாக இருக்கிறாயா? நீ என்னை ரொம்பவும் பயமுறுத்தி விட்டாய். இனி ஒரு நொடி கூட என்னால் உன்னை விட்டு பிரிந்து இருக்க முடியாது."


அவளின் கண்களிலும் நீர் கோர்த்தது, அது கண்கள் என்னும் அணையினை உடைத்து வெளியேற முயற்சிக்கையில் நிதர்சனத்தை உணர்ந்தவள், தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டாள்


  மித்ரனை விட்டு விலகி எழுந்து, செம்பாவை நோக்கி நடந்தால் மதுரா, அவளின் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்த முயன்ற மித்ரனது கைகளை விலக்கி விட்டு விட்டு, அவள் அன்னையை நோக்கி சென்றால், செம்பா மித்ரனை ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு மதுராவுடன் சேர்ந்து நடக்க தொடங்கியது.


  மதுரா அவள் அன்னையினை நெருங்கும் போது தான், சாந்தகுரு அடிகளார் அவளது திருமணத்தை பற்றி அவள் அன்னையிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.


  அவர் கூறியதை கேட்டபடியே வந்ததால், மதுரா பயத்துடன் தனது அன்னையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், ஆனால் ஏந்திழை அம்மையார்  இவளை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. மதுராவின் முகமானது வாடியதைக் கண்ட சிவனடியார் ஏந்திழை அம்மையாரிடம் இதைப் பற்றி சிறிது நேரம் கழித்து பேசுவோம் தேவி, இப்போது முக்கியமாக மோகனாவின் இறுதிச்சடங்குகளை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று கூறி பிரதீபனிடம் வந்தார்.


மகிழபுரியை சேர்ந்த படைவீரர்கள் மேகக்காடு வாழும் மனிதர்களை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டனர். அரசரை சுற்றி பாதுகாப்பு அரணாக சற்று தொலைவில் நின்று கொண்டனர்.


    ரகுநந்தன் தற்போது தான் ரஞ்சனியை குடிலில் உள்ள குருந்தங்காடு வாழ் மக்களிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு அவளை ஒப்படைத்துவிட்டு, மனதை அங்கு அவளிடம் விட்டுவிட்டு தனது நண்பனுக்கு துணை நிற்க பிரதீபனை காண இங்கு வந்தான்.


  நடந்தவைகளை பார்த்துக் கொண்டிருந்த அரசருக்கு, ஓரளவுக்கு தனது மகனின் மனது புரிந்து விட்டது. இதைபற்றி பிறகு விசாரித்து கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டு, படைவீரர்களின் உதவியோடு மேனகா தேவியை பல்லக்கில் ஏற்றி ஏந்திழை அம்மையாரிடம் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தவர், பிறகு அவரும் பிரதீபனை நோக்கி சென்றார்


  மதுரா அவள் அன்னையிடம் பேச முயன்ற போது, அவர் அங்கிருந்து குடிலை நோக்கி சென்று விட்டார். மகாராணி தாரகை தேவிக்கு புரிந்து விட்டது, தனது மகனின் மனம் கவர்ந்தவளும், அவனை மணந்து கொண்ட தனது மருமகளும், மதுரவாணி தான் என்று, ஆகவே மதுராவின் கண்ணீரை கண்டு கலங்கி நின்ற மகனுக்கு தான் பார்த்துக் கொள்வதாக அவனிடம் கண்காட்டி விட்டு, மதுராவை அழைத்து கொண்டு குடிலை நோக்கிச் சென்றார். மித்ரனும் ரகு நந்தனுடன் சேர்ந்து பிரதீபனை நோக்கி சென்றான்.


    பிரதீபனுக்கு இங்கு நடந்த எதுவுமே அவன் சிந்தனையில் விழவில்லை. அவனது முழு பார்வையும் மோகனாவை நோக்கித்தான் இருந்தது. இரத்த வெள்ளத்தில் கிடந்த, தனது முதல் குழந்தையாக எண்ணி கொண்டிருந்த  தனது அன்பு தங்கையை, அள்ளி அணைத்து கதறி அழக் கூட முடியாத சூழ்நிலையில் நிற்கின்றேனே என்று மனம் வெதும்பினான்.


  மித்ரனும் ரகுநந்தனும் பிரதீபனை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டனர். தனது நண்பர்களின் முன்பு சேயாகிப்போன பிரதீபன், மனதில் உள்ள கவலைகளை எல்லாம் தன் நண்பர்களிடம் கூறி கதறி அழுதான். நண்பர்கள் இருவரும் ஒரு வழியாக அவனை தேற்றினார்.


    சாந்தகுரு அடிகளார் கூறிய முறைப்படி, அவர் சொல்ல சொல்ல பிரதீபன், தனது தங்கைக்காண இறுதி காரியத்தை செய்து கொண்டிருந்தான்.


மோகனாவை சுற்றி கட்டைகள் அடுக்கப்பட்டன. தூரத்தில் இருந்தே அவளது உடலின் மீது எண்ணெயும் ஊற்றப்பட்டது, பிரதீபன் கதறி அழுதபடியே அவளது உடலுக்கு நெருப்பு வைத்தான்.

    இங்கு மோகனாவின் சிதைக்கு எரியூட்டப்பட்ட அதே நேரம், மகிழபுரியே பற்றி எரிந்து கொண்டிருந்தது.


    மோகனாவின் திட்டப்படி மகிழபுரியில் அங்கங்கு இருக்கும் ரத்தினபுரியை சேர்ந்த வீரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்


  அரசரும் இளவரசரும் முக்கிய அதிகாரிகளான ரகுநந்தனும் பிரதீபனும் கூட இப்போது நாட்டினுள் இல்லாத காரணத்தால், படை வீரர்களும், ஏன் முக்கிய அமைச்சர்களும் கூட கலவரத்தை கட்டுப்படுத்த திணறிப் போயினர்.


  மகிழபுரியில் இருந்த அப்பாவி பொதுமக்கள் பலர் இந்த கலவரத்தில் சிக்கி மாண்டு போயினர். இதில் ரகுநந்தனின் குடும்பமும் ரஞ்சனியின் குடும்பமும் கூட அடக்கம். அரண்மனையில் வீரர்கள் சூழ இருந்த காரணத்தால், இளவரசி கவிதாயினி மட்டும் உயிர் பிழைத்தார்.


  ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த அமைச்சர் பெருமக்கள் நம்பிக்கையான கை தேர்ந்த ஒற்றர்களின் மூலம் அரசருக்கு செய்தி அனுப்பினர்.


  மேனகா தேவியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஏந்திழை அம்மையாரிடம் இருந்து தகவல் வர, சிவனடியார் அனைவரையும் இங்கே காரியம் முடிந்த காரணத்தால் தீர்த்த குளத்தில் உள்ள நீரினை தலையில் ஊற்றிக் கொண்டு நாம் சென்று பார்க்கலாம் என்று கூறினார்.


    அதன்படியே அனைவரும் நீராடி விட்டு ஏந்திழை அம்மையாரின் குடிலை நோக்கிச் சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக தன் சுயநினைவை இழந்து கொண்டிருந்த மேனகா தேவி மூச்சு விட சிரமப்பட்டு மூச்சை இழுத்து விட்டுக் கொண்டிருக்க, அவரை நெருங்கிய சிவனடியார் தமது கையில் உள்ள திருநீற்றை மேனகா தேவியின் தலையின் மீது சிவ மந்திரத்தை மனதினில் நினைத்து தூவினார்.


  அடுத்து சில நிமிடங்களில் அவரது முச்சு காற்று சீரானது, இருந்தும் அவரது மயக்கம் இன்னும் தெளியவில்லை.


    "நாளை அந்தி சாயும் முன் அவருக்கு நினைவு வந்துவிடும் பிரதீபா, பயம் கொள்ளாதே.


  அம்மா மதுரவாணி இங்கே வா, உன்னிடம் முக்கியமான பொறுப்பினை கொடுக்கப் போகிறேன். இனி இந்த குருந்தங்காட்டு மக்களின் எதிர்கால வாழ்வு மட்டுமல்ல, மகிழபுரியில் வாழும் மக்களின் எதிர்கால வாழ்வு கூட உன் கையில் தான் உள்ளது.


  நாளையிலிருந்து இன்னும் 48 நாட்களுக்கு நீ தொடர்ந்து மூலவர் சந்நிதியில் சுமங்கலி பூஜையினை செய்ய வேண்டும். காலநேரம் தவறாமல் குங்கும பூஜை செய்து அந்த அன்னையை குளிர்விக்க வேண்டும்.


  சரியாக பௌர்ணமி முடிந்து வரும் அமாவாசையோடு இந்த நாற்பத்தி எட்டாவது நாள் பூஜை நிறைவடையும். அன்று நான் இங்கு திரும்பி வருவேன், 48 நாட்களாக நீ செய்து வந்த பூஜையில் கிடைத்த, குங்கும பிரசாதத்தை அன்னையின் உடல் முழுவதும் பூசி ஹோம குண்டம் வளர்த்து அன்னையின்  மந்திர கட்டை நீக்கிவிடலாம்."


  "சுவாமி கண்டிப்பாக தாங்கள் இங்கிருந்து சென்றே ஆக வேண்டுமா?"


  "ஆம் பார்த்திபா முக்கியமான காரணத்திற்காக நான் இங்கிருந்து செல்லத்தான் வேண்டும். ஆனால் சரியாக அமாவாசை அன்று இங்கு வந்து விடுவேன்.


  அம்மா மதுரவாணி எக்காரணம் கொண்டும் இந்த பூஜையில் தடை வந்துவிடக் கூடாது. அது எந்தவிதமான சூழ்நிலையாக இருந்தாலும் சரி.


  இளவரசே இங்கு வாருங்கள், தங்களது மனைவிக்கு நெற்றிவகுட்டில் திலகம் இட்டு ஆசீர்வதியுங்கள்."


  மகாராணி குங்குமம் எடுத்துக் கொடுக்க, அரசர் மலர் தூவி அவர்களை ஆசீர்வதிக்க, மித்ரன் மதுராவின் நெற்றிவகுட்டில் குங்குமத்தை இட்டான். பார்த்துக் கொண்டிருந்த ஏந்திழை அம்மையாருக்கு மனம் நெகிழ்ந்து போனது.


  மகாராணி தாரகை தேவி தனது உடைமையுடன், பூஜை அறையில் பூஜித்து வந்த நீலநிற கற்கள் பதித்த தங்க வளையல்களையும் எடுத்து வந்திருந்தார். கொற்றவை தேவியின் காலடியில் வைத்து பூஜை செய்து, கொண்டு செல்லலாம் என்று, இப்போது அதனை எடுத்து மதுராவின் கைகளில் அணிவித்தார். 

   

  சிவனடியார் மதுராவிற்கு பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி எடுத்துக் கூறி, அவர்களை ஆசீர்வதித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.


  அதன்பிறகு தான் அரசரை பார்ப்பதற்காக வெகு நேரமாக குடிலுக்கு வெளியே காத்திருந்த ஒற்றர் தலைவன், அரசரை சந்தித்து மகிழபுரியின தற்போதைய  நிலைமையினை எடுத்து கூறினான்.


  அத்தோடு அரசரை சந்திக்க காத்திருந்த நேரத்தில் பக்கத்துக் குடிலில் இருந்த ரகுநந்தர் இங்குதான் நிற்பதை கண்டு விசாரித்ததால் விசயத்தை கூறியதாகவும், ரகுநந்தனும் அப்போதுதான் மயக்கம் தெளிந்து அமர்ந்திருந்த ரஞ்சனியும் செய்தியை கேள்விப்பட்டவுடன் மகிழபுரியை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவித்தான்.


  குருந்தங்காட்டிற்கு வெளியே தனது ஆருயிர் தோழி ரஞ்சனிக்காக மோகனா காத்துக் கொண்டிருந்தாள்.

Sunday, July 27, 2025

மன்னவரே 70


 

             அத்தியாயம் 70


    பறந்து சென்ற அந்தக் கருப்பு புகை லந்தக்காட்டில் உள்ள காலகோடரின் குகையை நோக்கித்தான் சென்றது, ஆக்ரோஷத்தோடு அங்கிருந்த பொருட்களை விலாசியபடியே காலக்கோடரின் சிலையின் முன்பு கோபமாக நின்றது.


  விஜயேந்திர பூபதி தனது மகளின் இந்த நிலையை கண்டு, தலையில் அடித்துக் கொண்டு கத்தி அழத் தொடங்கிவிட்டார்.


  தனது தந்தையின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டு தான், மோகனாவின் ஆன்மா சற்று நிதானத்திற்கு வந்தது.


  "தந்தையே எனது உடல் தான் அழிந்து விட்டது எனது ஆன்மா அதே திடத்தோடு தான் உள்ளது, நான் மீண்டும் எழுந்து வருவேன். அதற்கான வேலையை நான் ஏற்கனவே தொடங்கி விட்டேன். தயவு கூர்ந்து தங்கள் கவலை கொள்ள வேண்டாம், தங்களை இவ்வாறு காண என்னால் முடியவில்லை."


   "மோகனா என்ன கூறுகிறாய்? உனது உயிர் உன் உடலை விட்டு பிரிந்து விட்டதே, இதற்குப் பிறகு வேறு என்ன செய்ய முடியும்"


  "முடியாத காரியத்தை கூட, இந்த மோகனா நினைத்தால் முடித்து வைப்பாள் ராஜகுரு. என் உயிர் பிரிவதற்கு முன்பே கூடுவிட்டு கூடு பாயும் மந்திரத்தை ரஞ்சனியின் கண்களை பார்த்து கூறி முடித்து விட்டேன்."


  "எனது ரத்தமும் அவள் உடலின் மீது முழுவதுமாக படும்படி செய்து விட்டேன், கடைசியாக எனது ஆன்மா அவளின் உடலின் உள்ளே செல்வதற்கு முன்பு, அந்த முட்டாள் சிவனடியார் வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டான்.


  நாளைய விடியலுக்கு முன்பு நான் அவளது உடலில் சென்று சேர வேண்டும். இல்லை என்றால் எல்லாமே கெட்டுவிடும். எப்படியும் கொற்றவையின் சக்தி அந்த காட்டை விட்டு வெளியே வர முடியாது ஆகையால் ரஞ்சனியின் உடலை மகிழபுரியில் வைத்துத்தான் எனது வசமாக்க வேண்டும்."


  "நீ ரஞ்சனியின் உடலை கைப்பற்ற முயற்சி செய்வாய் என்று அந்த சிவனடியாருக்கு தெரிந்திருக்கும், அதை தடுப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை ஏற்கனவே அவன் செய்ய தொடங்கி இருப்பான். பிறகு எவ்வாறு நாம் ரஞ்சனியின் உடலை கைப்பற்றுவது."


"எனக்கும் தெரியும் ராஜகுரு, நான் கூறும் திட்டத்தை அப்படியே செயல்முறை படுத்துங்கள், பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்."


  பிரதீபனின் நிலையை கண்டு வருந்திய அரசர் பார்த்திபேந்திரர், அவனை தேற்ற முயன்றார்


"பிரதீபா நீயே இப்படி உடைந்து போனால் எப்படி? பிறகு எவ்வாறு உன் அன்னையை தேற்றுவாய்?"


"முடியவில்லை மாமா என் தங்கையின் இறப்பை நினைத்து வருந்துவதா? இல்லை என் அன்னையின் உடல்நிலையை எண்ணி வருந்துவதா? ஒரு குழந்தையைப் போல் தானே அவளை நாங்கள் பார்த்துக் கொண்டோம். என் தாய் வாழ்வதே எங்களுக்காக தானே, இவளுக்கு ஏன் இப்படி புத்தி வழி தவறிப் போனாது, இவளைப் பற்றிய உண்மை என் அன்னைக்கு தெரிந்து விட்டால், ஐயோ! அதற்குப் பிறகு அவர் உயிரோடு இருக்கவே மாட்டாரே."


  தன்னிலை மறந்து உடைந்து போய் அழ தொடங்கிய அவனை, தாய்மாமாவான அவர் தாயாக மாறி அரவணைத்துக் கொண்டார்.


  பிரதீபனின் கலக்கத்தை கண்ட சாந்தகுரு அடிகளார், அவனை தேற்ற முயன்றார்.


  "பிரதீபா, விதியின் செயலை யாரால் மாற்ற முடியும். மோகனா இப்படி ஆனதற்கு நீயோ உன் தாயோ பொறுப்பாக முடியாது. இதற்கு முழுக்க முழுக்க உங்கள் தந்தைதான் காரணகர்த்தா ஆவார்."


  பிரதீபன் அதிர்ந்து நின்றான்,


  "என்ன? என் தங்கை இப்படி ஆனதற்கு காரணம் என் தந்தையா?"


  "ஆம் பிரதீபா, சிவனடியார் கூறுவது உண்மைதான். அதற்கு சாட்சியம் உண்டு, இவ்வளவு நாள் அரண்மனைக்கு கீழே சுரங்க பாதையை உருவாக்கி உன் தந்தை அடிக்கடி உன் தங்கையை சந்தித்து வந்துள்ளார் அவள் மாந்திரீகத்தில் ஈடுபட்டதற்கும் அவர்தான் காரணம்.


    இன்று காலையில் தான் உன் தங்கையின் ரகசியங்களை அறிந்த அவளது அந்தரங்க வேலையாளான யோகினியை பிடித்தேன். அவள் ரத்னபுரியை சேர்ந்தவள், உன் தந்தையால் உன் தங்கைக்கு காவலாக அனுப்பி வைக்கப்பட்டவள்,அவள் மூலமாகத்தான், இங்கு இப்படி ஒரு போர் நடக்க இருப்பதை தெரிந்து கொண்டு தான், சிறு படையுடன் காட்டினுள் நுழைந்தேன்."


    ஆம் யோகினி நேற்று மாட்டிக்கொண்டது அரசரிடம் தான். அரசாங்க பொறுப்புக்களை இளவரசனிடம் அரசர் ஒப்படைத்து விட்டாலும், அங்கங்கு சில ரகசிய ஒற்றர்களை வைத்து, அவர்களின் மூலம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டிருந்தார், அப்படித்தான் யோகினியும் சிக்கினாள்.


    அரசருக்கு ரத்தினபுரியைச் சேர்ந்த ஒற்றர்கள் மகிழபுரியில் பணிபுரிந்து கொண்டே, ஒற்று வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களை அவர்களுக்கே தெரியாமல், வேறு உபயோகம் இல்லாத வேலைக்கு இளவரசரின் மூலம் பணிக்கு மாற்றப்படுவதும் தெரியும். ஆனால் அந்த ஒற்றர் குழுவுக்கு தலைவியாக இருந்து கொண்டு, மோகனா தான் இந்த கூட்டத்தையே வழி நடத்தி வருகிறாள் என்று, அவர் நினைத்து கூட பார்க்கவில்லை.


    ஒருவேளை, நாளை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்வதாக இருந்த முடிவை மாற்றினால், இவர்கள் வேறு ஏதாவது திட்டம் தீட்ட கூடும் என்று கோயிலுக்கு செல்லும் திட்டத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, குருதங்காட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதி படி அவர்களைக் காக்க ஒரு சிறு படையுடன் எதிரிகளை எதிர்க்க தயாரானார்.


  அவர் அறியாத ஒன்று என்றால் அது மித்ரன் மற்றும் மதுராவுக்கு இடையில் இருந்த உறவை பற்றிதான். அரசருக்கு இளவரசர் அடிக்கடி ஏரி பக்கம் செல்வதும் பிறகு தண்ணீரில் குதித்து காணாமல் போவதாக ஏற்கனவே ஒற்றர்கள் அவரிடம் கூறியிருந்தனர். இளவரசன் ஏதோ மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வதாகத்தான் அரசர் இதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனால் மித்ரன் தனது உயிர் மூச்சானவளை காணத்தான் அந்த ஏரிக்கு சென்று வருகிறான் என்று அவருக்கு எப்படி தெரியும் பாவம்!

 

  "பிரதீபா இனி இது பற்றி பேச ஒன்றுமில்லை, முதலில் ஒரு நல்ல தமையனாக உன் தங்கைக்கு செய்ய வேண்டிய ஈமக்காரியங்களை முதலில் செய்து முடி."


  "சுவாமி தாங்கள்தான் அவளை நெருங்கவே கூடாது என்று கூறி விட்டீர்களே, பிறகு எப்படி இவளை இங்கிருந்து எடுத்துச் செல்வது?"


    "இல்லை பிரதீபா மோகனவை இங்கே தான் தகனம் செய்ய வேண்டும்."


      அதைக் கேட்டு ஏந்திழை அம்மையார் தான் அதிர்ச்சியுடன் சிவனடியாரை பார்த்து பேச தொடங்கினார்.


  "சுவாமி கோயிலுக்கு அருகில் எவ்வாறு இந்த உடலை தகனம் செய்வது? அப்படி செய்தால் தீட்டாகி விடுமே? பிறகு கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போல் ஆகிவிடுமே?" 


  "தேவி இப்போது இங்கு நடந்த கன்னி பலியே கொற்றவை தேவிக்கு மந்திர கட்டு இட்டது போலத்தான். அந்த அன்னையால் இனி இந்த காட்டை விட்டு வெளியே வர முடியாத படி, மந்திர கட்டால் அவளை கட்டுப்படுத்தியது போலத்தான்."


  "சுவாமி என்ன சொல்கிறீர்கள்? அப்படி என்றால் கெட்ட சக்திகள் இனி சுதந்திரமாக நடமாடுமே? இப்படி ஒரு கெட்ட சம்பவம் ஏன் தான் நடந்தது?"


      "இந்த கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கின்றது தேவி, நல்ல வேலையாக இந்த பலி கோவிலினுள் நடக்கவில்லை, மோகனாவின் இந்த இறப்பானது கோவிலினுள் நடந்திருந்தால், அந்த அன்னை கர்ப்ப கிரகத்தை விட்டே வெளியே வர முடியாத படி மந்திர கட்டால் பிணைக்கப்பட்டு இருப்பாள்."


      "சுவாமி எப்படி அன்னையை மந்திர கட்டில் இருந்து விடுவிப்பது? அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்? தயை கூர்ந்து அதற்கான வழிமுறையை கூறுங்கள்? அன்னை மந்திர கட்டில் இருப்பது பெரும் அபத்தங்களை ஏற்படுத்தும்."


  "48 நாட்கள் விரதம் இருந்து அன்னைக்கு சுமங்கலி பூஜை செய்து, ஈரேழு தேசங்களில் இருந்து கொண்டு வரப்படும் தீர்த்த நீரினால், அபிஷேகம் செய்ய வேண்டும். நாள் தவறாமல் பூஜை புனஸ்காரங்களால் மூலவர் சன்னதியில் குங்கும பூஜை நடந்து கொண்டே இருக்க வேண்டும்."


  "சுமங்கலி பூஜையா? அதை திருமணம் ஆனவர்களால் தானே செய்ய முடியும். மூலவர் சன்னதிக்கு நானும் என் மகளும் மட்டுமே செல்ல முடியும், பிறகு எவ்வாறு இந்த பூஜைகளை செய்வது?"


  "உன்னால் செய்ய முடியாது ஆனால் உன் மகளால் இந்த பூஜையை செய்ய முடியும் அல்லவா?"


  "வாணிக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று கூற வருகிறீர்களா? அன்னை இப்படி மந்திர கட்டில் இருக்கும் வேளையில் எவ்வாறு நல்ல காரியம் செய்வது? அப்படியே செய்வதாயினும் திடீரென்று மணமகனுக்கு எங்கு செல்வது?"


"உனது மகள் உனக்கு அந்த வேலையையே வைக்காமல், ஏற்கனவே தனது மணமகனை தேர்ந்தெடுத்து, பத்து வருடங்களுக்கு முன்பே மாலையும் சூட்டிவிட்டால்."


  "என்ன கூறுகிறீர்கள் சுவாமி என் வாணிக்கு திருமணம் முடிந்து விட்டதா?"

Friday, July 25, 2025

மன்னவரே 69


 

              அத்தியாயம் 69


    ரத்தினபுரிக்கு அருகில் உள்ள லந்தங்காட்டில் உள்ள ஒரு குகையில், காலக்கோடரின் ராட்சச சிலைக்கு முன்பிருந்த மண்டை ஓடுகள் வெடித்துச் சிதறியது. இதை கண்டு அங்கு பூஜிக்கும் குருமார்கள் அதிர்ந்துபோய் ராஜகுருவிடம் சென்ற விஷயத்தை கூற, பதறி வருகிறார் குகையினை நோக்கி.


  மண்டை ஓடுகள் சிதறி கிடந்ததை கண்டு ஏதோ நடக்கக்கூடாத ஒரு விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தவர், தனது ஞான திருஷ்டியால் என்ன நடந்தது என்று பார்க்க தொடங்கினார்.


  தன் மன கண்களால் அங்கு நடந்தவற்றை அறிந்து கொண்டவர், அதிர்ந்து போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டார்.


  விஷயம் அறிந்து வந்த ரத்னபுரியின் அரசர் சிதறி கிடந்த மண்டையோடுகளை கண்டு கொண்டே, அதிர்ந்து போய் அமர்ந்திருக்கும் தமது ராஜகுருவை நோக்கி சென்றார்.


  தரையில் அமர்ந்திருந்த ராஜகுருவிடம் என்ன நடந்தது  என்று அரசர் விசாரிக்க, அவர் கூறிய செய்தியை கேட்டு திகைத்து நின்றார்.


      ராஜகுரு கூறியவற்றை கேட்டுக்கொண்டே குகையினுள் நுழைந்த விஜயந்திர பூபதி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார்.


  "ஐயோ! மகளே, மோகனா...என்னை விட்டு பிரிந்து விட்டாயா? மகாராணியாக உன்னை காண விரும்பினேனே? இப்படி உன்னை பிணக்கோலத்தில் காணவா நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்?"


  ஆம் மோகனா இறந்து விட்டாள். செம்பா அவளை தூக்கி வீசியபோது அந்த ஆயுதத்தோடு தரையில் உருண்டவளின் உடலில், அந்த ஆயுதம் ஏறியது. அதனோடு சேர்ந்தே உருண்டவள் ரஞ்சனிக்கு சற்று தொலைவில் தான் போய் விழுந்தாள். தனது முடிவு நெருங்கி விட்டது என்பதனை உணர்ந்தவள், ஒரு முடிவோடு மந்திரங்களை ரஞ்சனியின் கண்களை பார்த்தபடியே முணுமுணுக்க ஆரம்பித்தால்.


    அடுத்த நிமிடமே கண்களை திறந்தபடியே ரஞ்சனி தரையினில் விழுந்தால். மோகனாவின் உடலில் இருந்து வழியும் ரத்தம் ரஞ்சனியை நோக்கி பாய்ந்தது. தனது உடலில் சொருகி இருந்த ஆயுதத்தை இன்னும் பலமாக உள்ளே தள்ளினால் மோகனா, ரஞ்சனியின் கண்களை கண்டபடியே மந்திரங்களை கூறிக் கொண்டிருந்தாள்.


    மோகனாவின் ரத்தமானது ரஞ்சனியை முழுவதுமாக நனைத்திருந்தது. கை கெட்டும் தூரத்தில் இருந்த ரஞ்சனியை எட்டிப் பிடிக்க நினைத்த மோகனா கையை நீட்டிட, அந்நேரமே ரஞ்சனியை கண்களில் நிறைத்தபடியே அவளின் உயிர் பிரிந்து விட்டது.


  மதுராவை தேடி வந்த மித்ரன், இவர்கள் தரையில் கிடக்கும் நிலையினை கண்டு அதிர்ந்து நின்றான். இருவருக்கும் ஏதோ ஆபத்து என்று எண்ணி அவர்களை நெருங்க முனைந்த போது, மோகனாவின் உடலில் இருந்து வெளியேறிய கரும்புகை சூழ்ந்த ஒளிவட்டமானது, ரஞ்சனியை நோக்கி வந்தது.


    அதை கண்டு திகைத்தவன் பின்னோக்கி அடிகளை எடுத்து வைக்க, அந்த ஒளிவட்டம் ரஞ்சனியை நெருங்கும் முன்பே, ருத்ராட்ச மாலை பறந்து வந்து அந்த புகையின் மீது விழுந்தது.


சாந்த குரு அடிகளார்தான் அந்த கரும்புகையின் மீது ருத்ராட்ச மாலையை வீசி இருந்தார். ருத்ராட்சம் அந்த கரும்புகையின் மீது விழுந்த அடுத்த நொடி, மோகனாவின் அலறல் சத்தம் அந்த காட்டையே அதிரசெய்தது.


  அந்தக் கரும்புகையானது சட்டென்று உயிரே எழும்பி மேலே சென்று, காட்டை விட்டு பறந்து செல்ல, ருத்ராட்சம் தரையினில் விழுந்தது.


  அப்போதுதான் மித்ரன் கொற்றவை தேவி கோயிலின் மண்டபத்தில் செம்பாவையும் மதுராவையும் கண்டான். உடனே அவர்களை நோக்கி ஓடினான்.


      தம்மை நோக்கி யாரோ வருவதை உணர்ந்து கோபத்துடன் திரும்பிய செம்பா, மித்ரனை கண்டு அடங்கி நின்றது. செம்பாவை தாண்டி கொண்டு மதுரவே நோக்கி சென்றவன், படுத்திருந்த அவள் தலையினை தனது மடியினில் வைத்து அவளை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.


  ஏந்தழை அம்மையார் மயங்கி இருந்தோரில் ஒவ்வொருவராக அப்போதுதான் தெளிய வைத்து கொண்டிருந்தார். திடீரென்று இந்த அலறல் ஒலி கேட்க ரகுநந்தனும் பிரதீபனும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினர். மயக்கம் தெளிந்தவர்களும் அவசரமாக அவர்களை பின்தொடர்ந்தனர்.

 

  அங்கு பெண்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்து கிடப்பதை கண்டு நண்பர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர். இவர்கள் அவர்களை நோக்கி செல்ல அடி எடுத்து வைக்க, சாந்தகுரு அடிகளார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.


  "பிரதீபா நீ அவர்களை நெருங்காதே,ரகுநந்தா ரஞ்சனியை உடனே அந்த ரத்தத்தில் இருந்தும் மோகனாவின் பார்வையில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வை."

   

ரகுநந்தன் அவர் கூறியவாறே ரஞ்சனியை மோகனாவின் பார்வையில் இருந்தும் அவள் ரத்தம் தோய்ந்த இடத்தில் இருந்தும் சற்று தள்ளி படுக்க வைத்தான்.


  இவர்களைத் தொடர்ந்து வந்த மற்றவர்கள் மோகனாவின் நிலையை கண்டு திகைத்தனர். மேனகா தேவி இதை கண்ட உடனே மயங்கி விழுந்து விட்டார்.


    பிரதீபனும் மகாராணி தாரகை தேவியும் தான் மேனகா தேவியை இருபுறமும் தாங்கி பிடித்துக் கொண்டனர்.


  சிவனடியாரை கண்ட மன்னர் பார்த்திபேந்திரன் அவர் முன்பு தலைவணங்கி நின்றார்.


"பார்த்திபேந்திரா, உடனே உன் படை வீரர்களை அனுப்பி கொற்றவை தேவியின், தீர்த்த குளத்தில் இருந்து, இரண்டு குடம் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்."


    மன்னரும் சிவனடியாரின் சொல்படியே வீரர்களை அனுப்பி,தீர்த்த குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தார்.


    இப்போது அங்கு வந்த ஏந்திழை அம்மையாரை நோக்கி சிவன் அடிகளார்,


  "தேவி இந்த பெண்ணை எந்த  கெட்ட துர்சக்தியும் நெருங்க கூடாது, என்று மனதில் அந்த அன்னையை வேண்டி, இந்த தீர்த்த நீரை அவள் மீது ஊற்றி, இந்த தாயத்தை அவள் கைகளில் கட்டுங்கள்."


ஏந்திழை அம்மையாரும் சிவனடியாரை வணங்கி, அவர் சொன்னது போலவே செய்தார்.


  "அரசே எக்காரணம் கொண்டும் இந்த தாயத்தானது இந்த பெண்ணின் கைகளை விட்டு நீங்க கூடாது. அப்படி ஏதேனும் நடந்துவிட்டால் வரப்போகும் பேராபத்திலிருந்து மகிழபுரியை யாராலும் காப்பாற்ற முடியாது, உலகை ஆளும் எம் ஈசனாலும் முடியாது."


  பிரதீபனின் நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. தனது உயிருக்கும் மேலான தங்கை இறந்ததை எண்ணி வருந்தவதா? அல்லது என் தங்கையை பற்றி முழுவதுமாக உண்மை தெரிந்தால் அன்னையின் நிலை என்னவாகுமோ என்று அதனை எண்ணி வருந்துவதா? என்று மனதினுள் போராடிக் கொண்டு இருந்தான்.


    சிவனடியார் மோகனாவின் உடலை நெருங்க கூடாது என்று கூறியதால், தூரத்தில் இருந்தே தன் தங்கையின் நிலையைப் பார்த்து, கண்ணீர் மழை பொழிந்து கொண்டிருந்தான்.

Wednesday, July 23, 2025

மன்னவரே 68


 

             அத்தியாயம் 68


     ஏந்திழை அம்மையார் தங்களது குடில்களைச் சுற்றி காட்டுத்தீ பற்றி எரிவதோடு புகை மூட்டத்தால் சூழப்பட்டிருப்பதை கண்டார், அதில் மயக்க மூலிகை கலந்திருப்பது போன்று நெடி வர முந்தானையால் தன் மூக்கை சுற்றி மறைந்து கொண்டு, தீயை அணைக்க தொடங்கினார். 


  அவர் குடிலின் அருகில் வந்து இறங்கிய மறு நொடியே, செம்பா மதுரா இருக்கும் இடத்தை உணர்ந்து, அவளை நோக்கிச் சென்றது.


  ஏந்திழை அம்மையார், ஓரளவுக்கு தீயை கட்டுப்படுத்தி விட்டு, சில மூலிகைகளை பறித்து வந்து, மயங்கி இருந்தவர்களை தெளிய வைக்க தொடங்கினார்.


  சற்று தொலைவில் மேக காடு வாழும் மனிதர்களும் மகிழபுரியை சேர்ந்த படைவீரர்களும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருப்பதை கண்டு, இங்கு என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு உணர்ந்து கொண்டார்.


  தனது மகளுக்கு ஏதோ ஆபத்து என்று தாய் மனது உணர்த்திய போதிலும், கண் முன்னே இருக்கும் உயிர்களை காப்பாற்றுவதே தனது முதல் கடமை என்று, அவர்களை தெளிய வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தனது மனதில் அந்த கொற்றவை தாயிடம், தமது மகளை காத்தருளுமாறு உளமார வேண்டினார்.


  தன்னிடம் இருந்த மூலிகைகளை கைகளால் நசுக்கி, மயங்கி இருப்பவர்கள் மூக்கிற்கு அருகே வைத்து அவர்களை வாசம் பிடிக்க வைத்தார். 


மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடியதால் ஏற்பட்ட சோர்வினையும் புறந்தள்ளிவிட்டு, இங்கு இருக்கும் உயிர்களை காப்பாற்ற, தன்னால் முடிந்த அளவு வேகமாக மூலிகைகளை பறித்து, மயங்கி விழுந்தவர்களின் மூக்கிற்கு அருகில் வைத்தார்.


  பிரதீபனால் நம்பவே முடியவில்லை, தனது தங்கையின் இந்த மாற்றத்தை, அவனும் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்.


    மந்திரம் போட்டு தங்களை சுற்றியுள்ள மரங்களை, எரிய வைத்ததோடு அல்லாமல், அவளின் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு அந்த ராட்சச உருவம் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அவள் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கி நடந்து சென்றதை பார்த்து அதிர்ந்து போனான். 


      தன் நண்பர்கள் கூறியபோது அவர்களை நம்பாமல், கோபித்துக் கொண்டு வந்த தனது மடமையை எண்ணி வருந்தினான். 


      தந்தை இல்லாத குறை தெரிந்து விடக்கூடாது என்று, ஒரு குழந்தையைப் போல தானே அவளை வளர்த்து வந்தேன், ஏன் அவளது சிந்தனை இப்படி துர்த்திசையில் சென்றது? ஆண்டவா இது என்ன சோதனை? இவளின் சுயரூபம் அன்னைக்கு தெரிந்தால், அவர் தன் உயிரை அக்கணமே மாய்த்து கொள்வாரே? என்று உள்ளம் நொந்தான்.


    அவன் கீழே விழுந்து கிடந்ததை கண்டு ரகுநந்தன் அவசரமாக அவன் அருகினில் வந்து, அவனை எழுப்பி நிறுத்தினான்.


  அந்தப் புகையானது கண் எரிச்சலை ஏற்படுத்த ஒரு சில வினாடிகள் கண்களை இறுக மூடி திறந்த மித்ரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மதுராவை சுற்றி முற்றி தேடியன் அவளை காணாது கலங்கி நின்றான். தன்னால் முடிந்த மட்டும் அவளது பெயரை கூறி காடே அதிரும்படி கத்தினான்.


  "மதுரா..."


  அந்த சத்தத்தில் தன்னிலைக்கு திரும்பிய பிரதீபன், அவன் கைகளை மோகனா சென்ற திசையை நோக்கி நீட்டி,


  "மித்ரா...கொற்றவை தேவி கோவில்."


    அவனது குறிப்பை உணர்ந்து கொண்ட மித்ரன், வேகமாக கொற்றவை தேவி கோயிலை நோக்கி ஓடினான்.


  ஜோதிடரின் குருதேவரான சாந்தகுரு அடிகளார் சாரியாக அந்த நேரத்தில் தான் அங்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள நிலைமையை கண்டு அதிர்ந்தவர், விதியின் ஆட்டம் தொடங்கிவிட்டதை உணர்ந்து, இறைவனை வேண்டிகொண்டு கொற்றவை தேவி கோயிலை நோக்கி வேகமாக சென்றார்.


  அவர் அந்த இடத்தை அடைந்த போது ஒரு கன்னி பெண்ணின் உயிர் பிரிந்து, கன்னி பலி  நடந்து முடிந்திருந்தது.


    மதுராவை தூக்கிச் சென்ற அந்த ராட்சச உருவம், கொற்றவை தேவி கோயிலை நெருங்காமல், சற்று தூரத்திற்கு முன்பே நின்று விட்டது.


  "தேவி இதற்கு மேல் என்னால் அந்த கோயிலை நெருங்க முடியாது. இந்த பெண்ணுக்கும் நாம் கொடுத்த மந்திர மருந்து வேலை செய்வதை நிறுத்திவிடும். அவள் எழுந்து விட்டாள், நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறாது. இங்கேயே அவளை பலியிட்டு விட்டு சடலத்தை கோயிலின் உள்ளே சென்று போட்டு விடுவோம்"


  "ம்ம்ம் அவளை இங்கே படுக்க வை, நமது மாந்திரீக மையை அவளை வெட்டப் போகும் ஆயுதத்தில் பூசு."


  அவள் கூறியதை கேட்டு திடுக்கிட்டு போனவன்,


  "தேவி என்ன கூறுகிறீர்கள்? அப்படி செய்தால் இவளின் ஆன்மா..."


  "ஏவலுக்கு வேலை செய்யும் துர்சக்தியாக மாறிவிடும். அது தெரிந்து தான், மையை அந்த ஆயுதத்தில் பூசச் சொல்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் என் அத்தானை நெருங்குவாள், இனி இவள் என்றும், என் ஏவலுக்கு வேலை செய்யும் ஒரு அடிமை."


  மோகனாவிற்கு பின்னே அவளை தொடர்ந்து வந்த ரஞ்சனி, இவர்கள் பேசுவதை கேட்டு அதிர்ந்து, அப்படியே கால்களை மடக்கி கீழே அமர்ந்து விட்டாள்.


  அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த மோகனாவிற்கு, அப்போது தான் ரஞ்சனி தங்களுடன் வந்தது தெரிந்தது.


  தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா என்று கவனிக்காமல் விட்ட, தனது கவனக்குறைவை எண்ணி, தன்னையே திட்டிக் கொண்டால்.


  இவளிடம் விவரித்துக் கொண்டிருக்க இது நேரம் இல்லை என்பதை உணர்ந்தவள், தன் மடியில் இருந்து ஒரு பொடியை எடுத்து, ஒரு மந்திரத்தை முணுமுணுத்து ரஞ்சனியின் மீது வீசினால்.


    ரஞ்சனி அப்படியே அமர்ந்தவாக்கிலேயே, அந்த இடத்தினில் சிலையாகிப் போனாள்.


"என்னை மன்னித்துவிடு தோழி, சிறிது நேரத்திற்கு நீ இவ்வாறு இருப்பது தான் நல்லது. ம்ம்ம் ஆயுதம்?"


    அவள் கட்டளை போல் கேட்டதுமே, அந்த ராட்சச உருவம் மதுராவை தரையில் படுக்க வைத்து விட்டு, ஆயுதத்தில் மாந்திரீக மையை தடவி, மோகனாவின் கைகளில் கொடுத்தது.


      மோகனா காலகோடரை மனதில் நினைத்து வேண்டிக் கொண்டு, மதுராவை வெட்ட ஆயுதத்தை ஓங்கிய அடுத்த நொடி, அந்த ஆயுதத்தோடு சேர்த்து, ரஞ்சனி இருந்த இடத்தை நோக்கி தூக்கி வீசப்பட்டால்.


    செம்பா தான் மோகனாவை தூக்கி வீசி இருந்தது, தனது மதுராவை கொல்ல துணியும் அயோக்கியர்களை கண்டு, மூர்க்கமாக அவர்களை தாக்கியது. அங்கு நின்றிருந்த ராட்சச உருவத்தை தமது தும்பிக்கையால் தூக்கி வீசி, கால்களால் அவனை மிதித்து கொன்றது.


  கீழே தரையில் படுத்திருந்த மதுராவை மெதுவாக தனது தும்பிக்கையினால் ஏந்தி கொண்ட செம்பா, கொற்றவை தேவி கோயில் மண்டபத்திற்க்கு சென்று, அங்கு அவளை படுக்க வைத்தது.

Monday, July 21, 2025

மன்னவரே 67


 

             அத்தியாயம் 67


    மலையடிவாரத்தில் ஒரு பகுதியினர் ஏந்திழை அம்மையாரையும் பாதுகாப்பு வீரர்களையும் தாக்கிக் கொண்டிருக்க, காட்டுக்கு வெளியிலிருந்து இன்னொரு குழு காட்டினை நோக்கி ஆயுதங்களோடு, குருந்தங்காட்டினுள் அடி எடுத்து வைத்தது.


  அவர்கள் குருந்தங்காடு மக்கள் வாழும் குடில்களை நெருங்கும்போது, அவர்களைச் சுற்றி மரங்களின் இடையே பதுங்கி இருந்த  படைவீரர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்க ஆரம்பித்தனர்.


  படைவீரர்களை தாண்டிக் கொண்டு ஒரு சிலர் குடில்களை நோக்கி முன்னேற, அவர்களை தடுத்து நிறுத்தியபடி வந்து நின்றான் மித்ரன்.


      மேகக் காட்டை சேர்ந்த மனிதர்கள், ஆயுதங்களோடு காட்டிற்கு வெளியே பதுங்கி இருப்பதை அறிந்ததுமே, மித்ரன் தமது நம்பிக்கைகுரிய படைவீரர்களை கொண்டு, சிறு குழுவை உருவாக்கி, அவர்களோடு நேற்று இரவே மரங்களின் இடையே வந்து மறைந்து கொண்டான்.


  சத்தம் கேட்டு வெளியே வந்த மதுராவை பார்த்து உரக்க கத்தினான் மித்ரன்,


    "மதுரா இவர்கள் மேகக் காடு வாழும் மனிதர்கள், ஆயுதங்களோடு நம்மை தாக்க முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். விரைவாக  பெண்களையும் குழந்தைகளையும் இந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி  பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்."


    மதுரா விரைவாக அங்குள்ள முதியவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களையும் ஒரு குடிலின் உள்ளே அனுப்பி, வீரர்களை அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தினாள்.


    மலையடிவாரத்தில் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த ஏந்திழை அம்மையார், அவர்கள் நெருப்பு வளையத்தை வீசி யாருக்கோ ரகசிய தகவல் அனுப்ப, சுதாரித்துக் கொண்டார்.


      இதுவரை அவர்களை முன்னேற மட்டும் விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர், முழுமூச்சாக அவர்களுடன் போராடத் தொடங்கினார்.


    ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களை வீழ்த்தியவர், செம்பாவிடம் விரைவாக குடிலை நோக்கி போகுமாறு கட்டளையிட்டார். செம்பாவும் அவரின் குரலிலேயே அவசரத்தை புரிந்து கொண்டு, விரைவாக குடிலை நோக்கி நகரத் தொடங்கியது. 


  மதுரா, மித்ரனை நோக்கி வரும்போது, மேகக் காட்டை சேர்ந்த மனிதர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டிருந்தது. தனது அம்புகளையும் வாளினையும் எடுத்துக் கொண்டு அவர்களோடு போராட தொடங்கினாள்.


    மித்ரன் எதிரியின் மீது ஒரு கண்ணும் தன் மணவாட்டியின் மீது மற்றொரு கண்ணுமாகவே எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். 


    ஏந்திழை அம்மையார் அவளுக்கு கொடுத்த போர் பயிற்சிகள்,தற்போது அவளுக்கு உதவிகரமாக இருந்தது. எளிதாக வாளினை சுழற்றியும், தூரத்தில் முன்னேறி வரும் எதிரிகளை அம்பெய்தும் வீழ்த்திக் கொண்டிருந்தவளை கண்டு, முகத்தில் புன்னகை தவழ, ரசித்து கொண்டே சண்டையிட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.


    அந்த ராட்சச உருவங்கள் மதுராவை நெருங்கி சென்றாலும், அவளின் மீது தங்களின் ஆயுதம் படாதவாறே, அவளை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். 


    அதனை கண்ட மித்ரனுக்கு, நெற்றி சுருங்க அவனின் சிந்தனை ரேகைகள் விரிந்தது.


    அவர்கள் குடில்களை நோக்கி முன்னேறாமல் மதுராவை மட்டுமே தங்களது குறிக்கோளாக கொண்டு, அவளை சுற்றி வளைக்க முனைந்து கொண்டிருந்தனர். 


    அந்த கும்பல்களுக்கு இடையே புகுந்த மித்ரன், அவளுடன் சேர்ந்து நின்று, இருவருமாக அவர்களை எதிர்த்து போராட தொடங்கினர்.


          எதிர்த்து நின்ற மேகக்காடு மனிதர்களுடன் போராட, குருத்தங்காட்டு மக்களால் இயலவில்லை. அவர்களில் ரத்தினபுரியை சேர்ந்த போர் வீரர்களும் கலந்திருந்ததால், அவர்களின் போர் திறனை எதிர்த்து இவர்களால் போராட முடியவில்லை.


  ஒரு கட்டத்தில் தீரனும் மதுராவும் மட்டுமே தனித்து அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க, அப்போது சரியாக அரசருடன், சிறுபடையும் அங்கு வந்து சேர்ந்தது.


  தமது இளவரசருக்கு ஆபத்து என்று தெரிந்ததும், அப்படை வீரர்கள் அங்கிருந்த மேகக்காடு மனிதர்களை எதிர்த்து சண்டையிட்டனர்.


    அரசருக்கும், அவரோடு வந்த அனைவருக்கும், மித்ரனை அங்கு கண்டது ஆச்சரியமாக இருந்தது. அத்தோடு அவன் மதுராவோடு சேர்ந்து எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்தது, அவர்களின் புருவத்தை உயரச் செய்தது. 


  இருவரும் ஒருவருக்கொருவர் உதவி கொண்டே சுற்றி இருந்தவர்களை, அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தனர். 


    மதுராவை பின்னால் இருந்து தாக்க வந்தவர்களிடமிருந்து அவளை பாதுகாக்க, அவளின் இடுப்பை வளைத்து தூக்கி, மறுபுறம் விட்டுவிட்டு, அவர்களுடன் எதிர்த்து போராடிக் கொண்டிருந்தான் மித்ரன். 


      அவர்களின் இந்த அன்னியோன்யத்திலேயே, இது அவர்களது முதல் சந்திப்பு அல்ல என்பது தெளிவாகப் புரிந்தது.


    பெண்களிடம் எப்போதும் எட்டி நின்று பேசும் தமது மகன், கன்னி பெண்ணான மதுரவாணியோடு சேர்ந்து, எதிரிகளை பந்தாடிக் கொண்டிருந்ததை பார்த்து தாரகை தேவிக்கு சட்டென்று மூளையில் மின்னல் வெட்டியது. 


      ஒருவேளை தான் நினைப்பது போல இருக்குமோ? என்று அவர் முகத்தில் புன்னகை அரும்பியது. சட்டென்று தன்னுடன் மோகனாவும் வந்திருப்பது நினைவு வந்தவராக , அவளை நோக்கி திரும்பினார்.


    பிரதீபனும் இந்த காட்சியை கண்டுவிட்டு, தனது ஆருயிர் நண்பனான மித்ரனின் மனது புரிந்துவிட, எவ்வாறு தன் தங்கை இதை தாங்கிக் கொள்ளப் போகிறாளோ என்று எண்ணியவாறு, மோகனாவைத் தான் திரும்பிப் பார்த்தான்.


    அவளின் அகம் படும் பாடு, அவள் முகம் செந்தனலாய் சிவந்திருந்ததிலேயே தெரிந்தது. எப்போதும் அலங்காரத்தோடு திகழும் அவளின் அழகு வதனமது, அதிக கோபத்தாலும் ஆத்திரத்தாலும் விகாரமாக காட்சியளித்தது.


  சிறு நொடி பிரதீபனது சிந்தனை சிதற, எதிரி வீரன் தாக்கியதால், சுருண்டு மோகனாவின் காலடியிலேயே விழுந்தான்.


  எதிரியால் தாக்கப்பட்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் மோகனாவை தான் பார்த்துக் கொண்டிருந்தான்


அவள் கோப முகத்தோடு ஏதோ சில மந்திரங்களை உச்சரிப்பது, அவனுக்கு தெளிவாக கேட்டது.


    சட்டென்று அருகில் உள்ள மரங்கள் எல்லாம் தீப்பிடித்து எறிய, அவள் முகம் தற்போது ஒரு இகழ்ச்சி புன்னகையை சிந்தியது.

 

    தீ பற்றிக் கொண்டதும், அந்த ராட்சச உருவங்கள் தங்கள் அங்கிகளில் மறைத்து வைத்திருந்த இலைகளை, அந்த தீயினை நோக்கி வீசினர். சட்டென்று அந்த இடமே புகை மண்டலமாக மாற தொடங்கியது.


    புகை வர ஆரம்பித்ததுமே, அதில் மயக்கம் வருவதற்கான இலைகள் உள்ளதை உணர்ந்து கொண்ட நண்பர்கள் மூவரும், தமது மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டனர். ஆனால் மற்றவர்கள் இவற்றை அறியாததால் புகை பரவ பரவ ஒவ்வொருவராக மயங்கி சரிந்தனர்.


      இந்த திடீர் மாற்றத்திலிருந்து அவர்கள் சுதாரிக்கும் முன்பே, மதுராவிற்கு பின்னால் நின்றிருந்த ராட்சச உருவம் ஒன்று, தன் கைகளில் ஒரு திரவத்தை தடவி, மதுராவின் மூக்கில் வைத்து அழுத்த, அடுத்த நொடியே அவள் மயங்கி சரிந்தாள்.

   

    மயங்கி சரிந்த மதுராவை தன் தோள்களில் தூக்கி போட்டுக் கொண்ட அந்த ராட்சச உருவம், மோகனாவின் கண்ணசைவில் அவளின் பின்னால், கொற்றவை தேவி கோயிலை நோக்கிச் சென்றது.


    காட்டினில் நுழைந்ததுமே இந்த யுத்த காட்சியை கண்டு, பயந்து போன ரஞ்சனி, அங்கிருந்து சற்று தள்ளி வந்து விட்டாள். 


  அதனால் அங்கிருந்த அந்த புகை மூட்டமானது அவளை எட்டவில்லை. சிறிது நேரத்தில் ஒரு ராட்சச உருவம் யாரோ ஒரு பெண்ணை தனது தோளில் போட்டுக் கொண்டும், மோகனாவை அழைத்துக் கொண்டும் செல்வது போல் தோன்ற, மோகனாவிற்கு ஏதோ ஆபத்து என்று பயந்து போனவள், அவர்களை பின்தொடர தொடங்கினாள்.

Sunday, July 20, 2025

மன்னவரே 66


 

             அத்தியாயம் 66


  தனது அறையில் சிந்தனையுடன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் மோகனா.


  "தேவி தற்போது என்ன செய்வது? தாங்கள் வரவில்லை என்றால், எப்படி பலி பூஜை நடக்கும்? எப்போதும் போல ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிவிட்டு அங்கு செல்வதை தவிர்த்து விடுங்கள்."


  "இல்லை யோகினி, நான் அவர்களுடன் செல்லவில்லை என்றால் என் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம் வழுப்படும். ஏற்கனவே அந்த ராணியாருக்கு என் மீது சந்தேகம் உருவாகியுள்ளது. தற்போது ஏந்திழைக்கும் அவளது மகளுக்கும் ஒரு பிரச்சனை என்றால், அவள் சந்தேக கண்ணை என் மீது தான் திருப்புவாள். நமது இடத்தில் அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுத்து அவளது பிரேதத்தை கொற்றவை கோயிலில் போடலாம் என்று இருந்தோம், இப்போது கொற்றவை கோவிலிலேயே வைத்து அவளை பலியிட்டு விடுவோம். யோகினி நமது திட்டத்தில் சிறு மாற்றம், இதைப் பற்றி அந்த மலைவாசிகளுக்கு தெரியப்படுத்தி விடு."


      என்று கூறி சில பல திட்டங்களை மோகனா, யோகினியிடம் உரைத்தாள்.


  "அரண்மனை முன் வாசல் வழியே செல்ல வேண்டாம். என் அண்ணன் கண்களிலோ அல்லது என் அத்தானின் கண்களிலோ விழுந்து விட்டால் தேவையில்லாத சந்தேகம் உண்டாக வாய்ப்புள்ளது. அதனால் நீ சுரங்கப்பாதை வழியே செல். முடிந்தால் திரும்பி வா, இல்லை என்றால் அவர்களுடனே இரு. நான் இங்கு அரண்மனையில் ஏதாவது கூறி சமாளித்துக் கொள்கிறேன்."


    யோகினி மோகனாவின் அறைக்குள் இருக்கும் சுரங்கப்பாதை வழியே சென்றாள். அவள் மலைவாசிகளிடம் மோகனா சொன்ன திட்டங்களை கூறிவிட்டு, அரண்மனைக்கு திரும்பும் போது, எதிர்பாராத ஒருவரிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டாள்.


  காட்டில் ஏந்திழை அம்மையாருக்கு ஏனோ மனது நெருடலாகவே இருந்தது. ஒருவித அவஸ்தையை உணர்ந்தவர், அந்த இரவு வேளையிலும் கொற்றவை தேவியின் கோயிலை நோக்கிச் சென்றார். அந்த தேவியின் முன்பு அவரை நோக்கியப்படியே அமர்ந்து விட்டார்.


  தன் அன்னையை குடிலினுள் காணாமல் அவரை தேடி வந்த மதுரா, கொற்றவை தேவி கோயிலில் தனது அன்னையைக் கண்டு, வழக்கம் போல தனது தோழனான செம்பா அவளை பின்தொடர, அவரை நோக்கிச் சென்றாள்.


  "தாயே என்னவானது? எதற்காக உறங்காமல் இந்த நேரத்தில், தேவியின் கோயிலில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள்?"


  "வாணி ஏதோ மனதிற்கு தப்பாக படுகின்றது. எதுவோ நடக்க கூடாத ஒன்று நடக்கப் போவதாக, உள்ளம் எச்சரிக்கை செய்கின்றது. என் மனம் ஒரு நிலையிலேயே இல்லை, அதுதான் இந்த தேவியை தேடி வந்தேன். இம்மக்களுக்கு ஏதோ தீங்கு நடைபெற போவதாக உள்ளம் உரைக்கின்றதே என்ன செய்வேன்."


  "தாயே இந்த அன்னையின் அருள் நமக்குள்ளவரை, யாரால் நம்மை என்ன செய்து விட முடியும். தங்களின் மனதின் பிரம்மையில் இருந்து வெளியே வாருங்கள். தற்போது உங்களுக்கு நல்ல உறக்கம் தான் தேவை, என்னோடு வாருங்கள் குடிலுக்கு செல்வோம்."


ஏந்திழை அம்மையார் கொற்றவை தேவியை நோக்கி மனதார வணங்கி விட்டு, குடிலை நோக்கி மதுராவுடன் சென்றார்.


        அரண்மனையில் அரசர் பார்த்திபேந்திரர் அனைவரையும் அதிகாலையிலேயே கொற்றவை கோயிலுக்கு செல்ல கிளப்பிக் கொண்டிருந்தார். அதிகாலை பூஜையில் அனைவரும் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், அவரும் உடன் வருவதாகவும் கூறினார்.


  மோகனா இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் காலம் தாழ்த்தி அங்கு சென்று சேர்வதற்குள் அனைத்தும் முடிந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இப்போது திடீரென்று உடனே கிளம்புமாறு கூற, என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தால். சரி வருவது வரட்டும் என்று அவளும் அவர்களுடன் தயாராகி வந்தாள்.


  இவர்களுடன் சேர்ந்து கோயிலுக்கு செல்ல, சிறுபடையே தயாராக இருந்தது. போன முறை போல ஏதும் தவறாக நடந்து விடக்கூடாது என்று அரசர் இந்த காவலர் படையை உருவாக்கி இருந்தார்.


  மேனகா தேவி, தாரகை தேவி, ரஞ்சனி, மோகனா, பார்த்திபேந்திரர், பிரதீபன் மற்றும் ரகுநந்தனுடன் சிறுபடையும் கோயிலை நோக்கி, அந்த அதிகாலை வேளையில் சென்றது. மித்ரனுக்கு அவசர வேலை ஒன்று வந்ததால், அவர்களுடன் பின்னர் வந்து இணைந்து கொள்வதாக நேற்று இரவே கூறி சென்றிருந்தான். 


  ஜோதிடர் அரசருக்கு, நடக்கப்போகும் ஆபத்தை எடுத்துரைக்கும் முன்பே, விதியானது தனது ஆட்டத்தை தொடங்கி விட்டது.


  காட்டினில் ஏந்திழை அம்மையாரின் குடிலின் கதவு அவசரமாக தட்டப்பட்டது.


  விவசாய நிலத்தில் காவல் காக்கும் வீரர்களில் ஒருவர், ரத்தக்காயங்களுடன் அவரின் முன்பு  நின்று கொண்டிருந்தார்.


  ஏந்திழை அம்மையார் அவரிடம் என்ன ஏது என்று கேள்வி கேட்கும் முன்பே, மடமடவென்று அங்கு நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.


  "தாயே மேகக் காடு வாழும் மக்கள் எங்களை தாக்க ஆரம்பித்து விட்டனர். நாங்கள் எவ்வளவு போராடியும் ஏதோ வினோதமான மந்திரங்களை முணுமுணுத்தும், கற்களை எங்களின் மீது தூக்கிப் போட்டும் விளைநிலங்களில்  முன்னேறிக் வந்து கொண்டுள்ளனர். நமது வீரர்கள் அவர்களுடன் போரிட முடியாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர்."


  "என்ன? ஆனால் எப்படி? நான் தான் மந்திர நடுகல்களை, எல்லையில் பாதுகாப்பிற்க்காக நட்டு வைத்திருக்கின்றேனே?"


  "ஆம் தேவி, ஆனால் அவர்கள் அதனை தூக்கி வீசிவிட்டு, நம் காட்டினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் உடனே அங்கு வந்து அவர்களை தடுக்க வேண்டும், இல்லையென்றால் நம் காட்டினுள் புகுந்து பல சேதாரத்தை ஏற்படுத்தி விடுவார்கள்."


  "தாயே இன்னும் எதற்கு தாமதம். உடனே மலை அடிவாரத்தை நோக்கி செல்லலாம் வாருங்கள்."


      "வாணி நீ இங்கேயே இரு. நான் அங்கு சென்று பார்த்து வருகிறேன்."


  "ஆனால் தாயே…"


  "நான் சொல்வதை புரிந்து கொள் வாணி. ஒருவேளை அங்கு எங்களால் தாக்கு பிடிக்க முடியாவிட்டால், இங்கு உள்ளவர்களை காப்பது உனது கடமையாகும்."


  "சரி தாயே, ஆனால் நீங்கள் செம்பாவையும் உடன் அழைத்துக் கொண்டு செல்லுங்கள்."


  "மகளே பத்திரம், நமது மக்களின் பாதுகாப்பு இப்போது உன் கையில். எங்களை மீறி ஓரிருவர் உட்புகுந்தாலும் அவர்கள் உயிரோடு இந்த காட்டை விட்டு செல்லக்கூடாது. நமது மக்களை பாதுகாப்பது உனது கடமையாகும்..."


    ஏந்திழை அம்மையார் செம்பாவின் மீது ஏறி, மலையடிவாரத்தை நோக்கி சென்றார்.


  அவர் மலையடிவாரத்தை நெருங்கும் போது, பாதுகாப்பு குழுவில் உள்ள பாதிப்பேர் மாண்டிருந்தனர். ஒரு சிலர் இரத்த காயங்களோடு அவர்களை முன்னேற விடாமல் எதிர்த்து போரிட்டுக் கொண்டிருந்தனர்.


    அவரும் பாதுகாப்பு வீரர்களோடு சேர்ந்து,மேக காடு வாழும் மக்களை எதிர்த்து போரிடத் தொடங்கினார். அவர் வருகை புரிந்த ஒரு சில நாழிகைக்கு பின்  மேக காட்டைச் சேர்ந்த ஒருவன், நெருப்பு வளையத்தை வானினை நோக்கி வீசினான். 


  அப்போதுதான் ஏந்திழை அம்மையார் ஒரு விஷயத்தை கவனித்தார். அவர்கள் எதிர்த்துப் போரிடுவதை விட தன்னை இங்கே நிறுத்தி வைப்பதற்காக போரிட்டு கொண்டிருப்பதாக தோன்றியது.  


    ஏனெனில் அவர்கள் காட்டினை நோக்கி முன்னேற, ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. அத்தோடு ரகசிய குறியீடு போல, ஒரு நெருப்பு வளையத்தை, வானினை நோக்கி வீசியது, அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது.


அதே நேரம் அந்த நெருப்பு வளையத்தை கண்ட காட்டிற்கு வெளியே இருந்த மேக காட்டினை சேர்ந்த மானிடர்களும், அவர்களை போலவே வேடம் பூண்ட ரத்தினபுரியை சேர்ந்த வீரர்களும் காட்டினை நோக்கி, தமது ஆயுதங்களுடன் முன்னேற தொடங்கினர்.


Saturday, July 19, 2025

மன்னவரே 65


 

             அத்தியாயம் 65


    கொம்பு என்பது ஒரு தூம்பு வகை   பழங்கால தமிழர்களின் இசை கருவி. இது ஒரு ஊது கருவி. கொம்பு பண்டைய காலத்தில் விலங்குகளின் கொம்புகளை பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும் தற்காலத்தில் உலோகங்களாலும் உருவாக்கப்படுகிறது.


    நாட்டுப்புற இசையிலும் கோயில்களிலும் இந்த கொம்பு வகை இசைக்கருவி பயன்படுத்தப்படுகிறது தற்காலத்தில் பித்தளை வெண்கலம் போன்ற உலோகங்களால் கொம்பு செய்யப்படுகிறது. பித்தளையால் செய்யப்பட்ட கொம்பை விட வெண்கலத்தால் வார்க்கப்பட்ட கொம்பில், ஒலி அதிர்வு கூடுதலாக இருக்கும்.


  இதை இசைப்பவர்கள், தமது முழு பலத்தையும் பயன்படுத்தி அடிவயிற்றில் இருந்து ஊதுவதன் மூலம், யானை பிளிறுவது போன்ற ஓசை கொம்பில் உருவாகின்றது.


  அத்தகைய ஓசையை கேட்டு தான், ரகுநந்தன் அவசரமாக தனது அத்தை வீட்டில் இருந்து வெளியேறினான்.


    நண்பர்கள் குருகுலத்தில் இருந்தபோது அவசரகால செய்தியை தங்களுக்குள் பரிமாறிக் கொள்ள, இந்த கொம்பு ஒலியை தான் உபயோகித்தனர். அதையே தான் வியாபாரியின் வீட்டில் வேலையாளாக இருக்கும் உளவாளியிடம் கொடுத்திருந்தான் மித்ரன்.


  ரகுநந்தன் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியை விட்டு சற்று தள்ளி, குகை போன்ற அமைப்பில் இருந்த ஒரு இடத்திற்குள் நுழைந்தான்.


    அங்கு அவனுக்கு முன்பே மித்ரன், வியாபாரியிடம் வேலையாளாக இருந்த உளவாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.


  "என்ன ஆனது மித்ரா அப்படி என்ன அவசர செய்தி?"


  மித்ரன் சிந்தனையில் இருக்க, வேலையால் ரகுநந்தனுக்கு பதில் கூற ஆரம்பித்தான்.


    "ஏதோ சதி திட்டம் ஒன்று நாளை அரங்கேற உள்ளது. அந்த வியாபாரி தமது பெட்டிகளில் நிறைய ஆயுதங்களை பதுக்கி எங்கேயோ அந்த யோகினியுடன் புறப்பட்டு சென்றான். நாட்டில் அங்கங்கு அவனுக்கு உதவி செய்த பணியாளர்களை தங்கள் கண்டுபிடித்து அவர்களை வேலையில் இருந்து மாற்றி விட்டதால், அவன் தெருவை சுற்றிக்கொண்டு காட்டை ஒட்டிய பாதையில் சென்றான். நான் அவர்களுடன் செல்ல எவ்வளவோ முயற்சித்தேன் ஆனால் அவர்கள் இருவர் மட்டும் ஒரு வண்டியில், அந்த பொருட்களை வைத்து வியாபாரத்திற்கு செல்வது போல் சென்றனர். 


       நானும் அவர்கள் அறியாமல் அவர்களை பின்தொடர்ந்து தான் சென்றேன். சிறிது நேரத்தில் ராட்சச உருவம் கொண்ட இருவர் வந்து அந்த பெட்டிகளை எடுத்துக்கொண்டு சென்றனர். அந்த ராட்சச உருவம் கொண்ட மனிதர்களின் நெற்றியில் உள்ள குறிகள், அந்த மலை மீது வாழும் மேக காடு மக்கள் இட்டுக் கொள்ளும் குறியீடு போல இருந்தது."


    "மேக காட்டில் வாழும் மக்களுக்கும் மோகனாவிற்கும் என்ன சம்பந்தம்? சில காலமாக மேக காட்டு மக்கள் மாந்திரீகங்களில் ஈடுபட்டு வருவதாக கேள்விப்பட்டேன், நம் குருநாதர் கூட ஒரு சில ஊர்களில் மாந்திரீக வேலைக்காக அவர்கள் அப்பாவி பொதுமக்களை பலி கொடுக்க முனைந்த போது துரத்தி அடித்தாரே!"


  "மித்ரா மறந்து விட்டாயா? அன்று கூட காட்டில் அந்த யானையை மோகனா ஏதோ பொடியை தூவி, மந்திரங்களை முணுமுணுத்து மூர்ச்சை அடையச் செய்தாளே. அதுவும் மாந்திரீக வேலையாக இருக்குமோ"


  "என்ன?...என்ன கூறிக் கொண்டிருக்கிறாய் ரகுநந்தா? எனது தங்கை மந்திரங்களை கூறி யானையை மூர்ச்சை அடைய செய்தாளா?"


  அந்த இடத்தில் அந்த நேரத்தில் பிரதீபனை மித்திரனும் ரகுநந்தனும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இந்த கொம்பின் ஒலியை அவன் கேட்டாலும், தங்களது ஊரில் ஒலிப்பதால் இதை அவன் குறிப்பில் எடுத்துக் கொள்ள மாட்டான் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அவன் சரியாக அதை கண்டுபிடித்து, அவர்கள் வழக்கமாக கூடும் இடத்திற்கு வருவான் என்று நினைக்கவே இல்லை.


    "மித்ரா இங்கு என்னதான் நடக்கின்றது? எதற்காக மோகனாவை பற்றி இவ்வாறு கூறிக் கொண்டிருக்கிறீர்கள்?"


  பிரதீபனிடம் இதற்கு மேலும் உண்மையை மறைக்க விரும்பாமல், நடந்த அனைத்தையும் அவனிடம் கூறினார்.


    "மித்ரா என் தங்கை சற்று கண்டிப்போடு நடந்து கொள்பவள் தான். ஆனால் அதற்காக இப்படிப்பட்ட செயல்களில் எல்லாம் ஒரு நாளும் ஈடுபட மாட்டாள். ஒருவேளை அந்த யோகினியே என் தங்கையின் அனுமதி இல்லாமல் தனியாக இவ்வாறு செய்திருக்கலாம் அல்லவா?"


    "பிரதீபா, நாங்கள் இதைப் பற்றி தீர விசாரிக்காமல் முடிவுக்கு வந்திருப்போம் என்று நினைக்கின்றாயா?"


      "வாழ வேண்டிய பெண்ணின் மீது, இப்படிப்பட்ட பழி சொற்களை வீசுகிறீர்களே? உங்களுக்கு இரக்கமே இல்லையா? குழந்தையடா அவள். மித்ரா உனக்கு என் தங்கையை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், அதை நேரடியாக கூறிவிடு. அதற்காக இவ்வாறான பழிச் சொற்களை அள்ளி அவள் மீது வீசாதே."


  "பிரதீபா, உன் தங்கையின் மீது வைத்த பாசத்தின் காரணமாக, இந்த நண்பர்களின் மீது வைத்த நம்பிக்கையை இழந்து விட்டாயா? மித்ரனை பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் நீயா, அவனைப் பற்றி இப்படியெல்லாம் பேசுகின்றாய்?"


  "உனக்கு எங்கள் மீது சந்தேகம் என்றால், நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு உன் தங்கையையும் உடன் அழைத்து வா. அவளால் சில நாழிகைகள் கூட, தேவியின் கோயிலுக்குள் இருக்க முடியாது. பிறகு நீயே அறிந்து கொள்வாய், உண்மை எதுவென்று."


"ரகுநந்தா போதும் நிறுத்து, பிரதீபா அமைதி கொள், உன் நிதானத்தை இழக்காதே. நாங்கள் கூறியவை அனைத்தும் உண்மை, பொறுமையாக நாங்கள் கூற வருவதை சற்று புரிந்து கொள்ள முயற்சி செய் நண்பா."


  "வேண்டாம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை."


  பிரதீபன் அங்கிருந்து கோபமாக கிளம்பி விட்டான்.


"நாம் இந்த கொம்பின் ஒலியை ரகசிய குறியாக வைத்திருக்கக் கூடாது என்று, எனக்கு இப்போது தோன்றுகிறது  ரகுநந்தா."


  "விடு மித்ரா, பிரதீபனை பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம். இவன் கூறிய செய்தியை பற்றி முதலில் கவனிப்போம்."


"ம்ம்ம். அவர்களுக்குள் வேறு ஏதாவது சம்பாஷனை நடந்ததா? யோகினியும் அந்த வியாபாரியும் அவர்களிடம் அவற்றைக் கொடுத்துவிட்டு வேறு எங்கு சென்றனர்?"


    "யோகினி அவர்கள் மூவரிடமும் ஏதோ கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த ராட்சச உருவங்களுடன் வியாபாரியும் கிளம்பிவிட, யோகினி அவர்கள் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அரண்மனைக்கு திரும்பி விட்டாள்."


  மித்ரன் சிறிது நேரம் யோசித்து விட்டு, ரகுநந்தனிடம் திரும்பி, தனது திட்டங்களை விவரிக்க தொடங்கினான்.


  அதே நேரம் தன் தங்கையின் வீட்டுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, படுக்கையில் படுத்திருந்த அவரது அத்தையை பார்க்க சென்றிருந்த மேனகா தேவி, நாளை கொற்றவை தேவி கோவிலுக்கு அண்ணியாருடன் போவதாக கூறினார்.


    திருமணம் முடிவாக உள்ள நிலையில், ரஞ்சனியும் கொற்றவை தேவி கோயிலுக்கு சென்று, அந்த தேவியின் ஆசி பெற்று வந்தால், நன்றாக இருக்கும் என்று தெய்வநாயகி பாட்டி கூற, நாளை ரஞ்சனியையும் உடன் அழைத்துச் செல்வதாக கூறி சென்றார் மேனகா தேவி.


    அரண்மனைக்கு வந்த பிரதீபன், நாளை கொற்றவை தேவி கோவிலில் உனது திருமணத்திற்காகவும் பூ கேட்க போகிறோம். அதனால் எங்களோடு நீயும் வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை போல் மோகனாவிடம் கூறிச் சென்றான்.

Friday, July 18, 2025

மன்னவரே 64


 

             அத்தியாயம் 64


       இன்று அதிகாலையிலேயே ரகுநந்தனின் தாயார் அவனிடம், தன் அன்னைக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை சென்று பார்த்து வருவதாக கூறி சென்றிருந்தார்.   


  இன்று அரண்மனையிலும் ரஞ்சனி எங்குமே தென்படாததால், தனது பாட்டிக்கு என்ன ஆனதோ என்ற கவலையுடன் ரஞ்சனியின் வீட்டிற்கு சென்றான் ரகுநந்தன்.


  தளர்ந்து போய் சோர்வாக படுத்திருந்த தெய்வநாயகியை சுற்றி ரகுநந்தனின் அம்மாவும் அத்தையும் அமர்ந்திருந்தனர்.


  தனது கணவர் போரில் இறந்ததும் தன் இரு மக்களையும் நல்ல முறையில் வளர்த்து, தமது மகனை நாட்டை காக்கும்  போர் வீரனாக மாற்றிய அந்த வீரத்தாயை, ரகுநந்தனுக்கு மிகவும் பிடிக்கும்.


    தனது பாட்டியின் தைரியத்தை எண்ணி அவன் வியக்காத நாளே இல்லை! ஒரு தனி மனுசியாக தமது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தவர். அவர் படுத்திருந்த கட்டிலின் அருகில் சென்று, அதற்கு கீழே அமர்ந்து கொண்டு அவர் கைகளை பற்றி கொண்டன் ரகுநந்தன்.


    "அன்பே எனது நாயகிக்கு என்ன ஆனது? எப்போதும் காணப்படும் அந்த கம்பீரமான சிரிப்பை காண ஓடி வந்த என்னை இவ்வாறு ஏமாற்றலாமா?"


  அவனது குரலை கேட்டு கண்களை மூடிய படியே சிரித்துக் கொண்டிருந்த நாயகி அம்மாள், கண்களை திறந்து அவனைப் பார்த்தார்.


    "இப்போதும் எனது கம்பீரம் அப்படியே தான் உள்ளது எனது அருமை பேராண்டி. உனக்கும் ரஞ்சனிக்கும் நடக்கும் திருமணத்தை காணாமல் எனது உயிர் போகாது."


    "இவ்வளவு கம்பீரமான வீரப் பெண்மணியை விட்டு விட்டு, உன் கோழை பேத்தியை போய் நான் திருமணம் செய்து கொள்வேனா? உன்னோடு என்றால் சரி, இல்லை என்றால் நான் சன்னியாசம் வாங்கிக் கொள்கிறேன்."


    இவன் கூறியதைக் கேட்டு சோகமாக அமர்ந்திருந்த அவனது தாயும் அத்தையும் கூட சிரித்து விட்டனர்.


    "பருவப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சொன்னாள், இந்தப் பல்லு போன கிழவியை கட்டிக் கொள்கிறேன் என்று கூறுகிறாயே? உங்கள் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை கண்டு விட்டால், நான் நிம்மதியாக கண்களை மூடுவேன்."


      "யார் கூறினார்கள்? இந்த உலகத்தில் உள்ள அத்தனை ராஜகுமாரிகளும், உங்கள் மன உறுதிக்கு முன்பு வெறும் தூசு தான். எங்கள் திருமணத்தை மட்டும் பார்த்தால் போதுமா? பிறகு எங்கள் குழந்தைகளின் திருமணத்தை யார் முன் நின்று நடத்தி வைப்பது?  அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளை முதன் முதலில் கையில் தாங்க போவதும் நீங்கள் தானே?"


    அவனுக்கு பின்னால் டம் என்ற சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தான். அங்கு ரஞ்சனி கோபத்தோடு கைகளில் இருந்த செம்பு நீரை அவனுக்கு பக்கத்தில் வைத்து விட்டு, முகத்தை திருப்பிக் கொண்டு அவன் அன்னையின் அருகில் போய் நின்று கொண்டாள்.


  ரகுநந்தன் தனது முகத்தில் குறும்பு புன்னகையை தவழ விட்டு, தனது பாட்டியை நோக்கி பேச ஆரம்பித்தான்.


    "நான் எவ்வாறு உனது பேத்தியை திருமணம் செய்து கொள்வேன்? அவளுக்குத்தான் சிறுவயதிலிருந்தே என்னை கண்டாலே ஆகாதே, முகத்தை திருப்பிக் கொண்டு செல்வாளே. இப்போது கூட நீங்கள் கண்டீர்கள் தானே, நீரினை கைகளில் கூட கொடுக்கவில்லை. இதனால் நான் குருகுலத்தில் இருக்கும்போதே ஒரு பெண்ணை நேசிக்க தொடங்கி விட்டேன்."


    ரகுநந்தன் தனது தாயையும் அத்தையையும் நோக்கி கண்களை சிமிட்டினான். ஆனால் அதிர்ந்து நின்ற ரஞ்சனி இவன் காட்டிய சைகையை கவனிக்கவில்லை.


    "பெண்கள் என்றால் கூச்சம் அதாவது நாணம் இருக்கும். இவர் என்னைப் பார்த்து சிரிக்கும் போதெல்லாம் ஈஈஈஈ என்று சிரித்து வைக்க முடியுமா, என்று கேளுங்கள் அத்தை."


  "அது எனக்கு எப்படி தெரியும் என்று நீங்களும் கூறுங்களேன் எனது அத்தையே."


    "மருமகனே உனது மனம் கவர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் என்ன? மிகவும் அழகானவளா? அவளின் குணம் எப்படி? நமது குடும்பத்திற்கு தகுந்தவள் தானே."


    ரஞ்சனி தனது அன்னையை பார்த்து கத்தினாள்.


                "அம்மா என்ன கூறிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? அவர் என்ன கூறுகிறார், நீங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?"


    "நமது வீட்டுக்கு வரப்போகும் பெண்ணைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நான் சரியாகத்தானே கூறுகிறேன் மருமகனே?"


    "ஆம் அத்தை நீங்கள் எப்போதுமே சரியாகத்தான் கூறுவீர்கள். விரைவிலேயே அவளை இங்கு அழைத்து வருகிறேன்."


    "வருவீர்கள் வருவீர்கள் என்னை பார்த்தால் எப்படி தெரிகின்றது? அப்படி யாரையாவது கூட்டி வந்தால் அவளையும் கொல்வேன் கூட்டி வந்த உங்களையும் கொல்வேன். சிறுவயதில் இருந்து தங்களையே நினைத்துக் கொண்டிருக்கும் என்னை, மோசம் செய்து விட்டு வேறொருத்தியின் கழுத்தில் தாலியை கட்டி விடுவீர்களா? உங்கள் கைகளை முறித்துவிட்டு எனது கையாலேயே நான் தாலியை கட்டி கொள்வேனே ஒழிய, வேறொருத்தியின் மீது உங்கள் கண்கள் போக கூட நான் அனுமதிக்க மாட்டேன். மீறிப் போகுமேயானால், அப்படியே உங்கள்  இரண்டு கண்களையும் நோண்டி விடுவேன் ஜாக்கிரதை."


  ரஞ்சனி படபடவென்று பட்டாசாக பொரிந்து விட்டு, கொல்லைப்புறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்று விட்டாள்.


    ரஞ்சனி பேச ஆரம்பித்ததுமே அதிர்ந்து நின்ற ரகுநந்தன், சுயநினைவுக்கு வந்த பிறகு, சத்தமாக சிரிக்க தொடங்கி விட்டான். அவனது அன்னை அவன் முதுகில் இரண்டு அடி போட்டு விட்டு,


    "எதற்காகடா அவளை இப்படி வெறுப்பேற்றுகிறாய்? பார் பிள்ளை மனம் நொந்து போய் விட்டது. ஒழுங்காக நீயே சென்று அவளை சமாதானப்படுத்து."


      "விடுங்கள் அண்ணி, இவ்வாறு கூறியதால் தானே அவள் மனதில் உள்ளவைகள் அனைத்தும், இப்போது அவள் வாய் வழியாகவே வெளிவந்தது. எல்லாம் நல்லதற்கே."


      "நீ கொடுக்கும் செல்லத்தில் தான் அவன் இவ்வாறெல்லாம் ரஞ்சனிடம் நடந்து கொள்கிறான். இன்னும் இங்கு நின்றுகொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? போய் என் மருமகளை சமாதானப்படுத்து. அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிவரக் கூடாது, ஜாக்கிரதை."


      "அத்தையும் மருமகளும் ஒன்று போலவே இருக்கிறீர்கள். எப்படித்தான் என் வாழ்நாள் எல்லாம் சமாளிக்க போகின்றேனோ?"


  ரகுநந்தன் புலம்பிக்கொண்டே கொல்லைபுறத்தில் உள்ள தோட்டத்தை நோக்கி சென்றான்.


    ரஞ்சனி அங்கிருந்த பூச்செடியின் இலைகளை பிய்த்து எறிந்து, தனது கோபத்தை அதனிடம் காட்டிக் கொண்டிருந்தாள்.


  புன்னகை முகத்துடன் அவளை நோக்கி வந்த ரகுநந்தன்,


    "அடடா என் செல்ல குட்டி ரஞ்சிக்கு எவ்வளவு கோபம் வருகின்றதே?"


  "ஏன் வரக்கூடாதா? நீங்கள் பேசிய பேச்சு அப்படி."


  "நான் என்ன செய்ய என்னை கண்டாலே பயந்து ஓடும் பெண்ணிடம், துரத்திச் சென்று என் அன்பை தெரிவிக்க முடியுமா?"


    "அதற்கு வெட்கம் நாணம் என்று  இன்னொரு பெயரும் உண்டு."


  "அப்படியா! இப்போது மட்டும் அந்த நாணம் எங்கு போய்விட்டது?"


  அப்போதுதான் அவனுக்கு சரிசமமாக தான் வாயாடி கொண்டிருப்பதை உணர்ந்த ரஞ்சனி, அவனுக்கு மறுபுறம் திரும்பிக்கொண்டாள்


  "ரஞ்சி, என்னை பார். என்னை உனக்கு பிடித்து இருக்கின்றதா? என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பாயா? குருகுலத்தில் இருந்தாலும், நான் தினந்தோறும் என் மனதில் நேசித்துக் கொண்டிருந்த பெண் யார் தெரியுமா?"


  அவன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, அருகில் இருந்த தாமரை குளத்திற்கு அவளை அழைத்துச் சென்று, குளத்தில் தெரியும் ரஞ்சனியின் உருவத்தை காட்டினான்.


    அந்த குளத்தில் தெரியும் தனது உருவத்துக்கு அருகில், நின்று கொண்டிருந்த தனது ஆசை அத்தானுடன் சேர்ந்து நின்றிருக்கும் தனது கோலத்தை கண்டு, ரஞ்சனியின் கண்களில் ஆனந்த கண்ணீர் மின்னியது.


  அப்போது திடீரென்று கேட்ட கொம்பின் ஒலியில் ரகுநந்தனின் முகம் தீவிரமானது. ரஞ்சனியின் கைகளை இறுக பிடித்தவன்


  "நான் இப்போது அவசரமாக செல்ல வேண்டும் ரஞ்சனி, நான் பிறகு  வந்து உன்னை சந்திக்கிறேன்."

Thursday, July 17, 2025

மன்னவரே 63


 

             அத்தியாயம் 63 

  

        "எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இவர்களின் திருமணம் நடைபெறுவது உசிதம்."


  "ஏன் ஜோசியரே இவ்வாறு கூறுகிறீர்கள்? ஜாதகத்தில் ஏதேனும் குறை உள்ளதா?"


  "அப்படி இல்லை தளபதி, தங்களது அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறினீர்கள். அதனால் தான் இவ்வாறு கூறினேன்."


      "எப்படி இருந்தாலும் கொற்றவை தேவி திருவிழா முடியாமல் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க முடியாது. அதனால் சிறிது நாட்கள் பொறுத்திருப்போம். சரி நாங்கள் வருகிறோம் ஜோதிடரே."


    ஜோதிடர், அவர்கள் விடை பெற்றுச் சென்றதும் திரும்பவும் சோழிகளை உருட்டிப் பார்த்தார்.


    "தாயே இது என்ன சோதனை கன்னிப் பலி ஒன்று நடக்கப் போவதாக சோழி கூறுகின்றதே!  இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாயிற்றே."


  ஜோதிடர் தனது குருதேவரான சாந்தகுரு அடிகளாரை மனதில் நினைத்து வேண்டினார்.


  "குருதேவா இந்த பிரச்சினையில் இருந்து, இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். இது அழிவின் ஆரம்பம் தான் என்று எனக்கு தோன்றுகின்றது. கெட்ட சக்திகள் நாட்டுக்குள் ஊடுருவ இதுவே முதன்மையான காரணமாக அமையப்போகின்றது. வரப்போவது தெரிந்தும், அதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது புரியாமல் தவிக்கின்றேன். தயை கூர்ந்து எங்களுடன் இருந்து எங்களை காப்பாற்றி தாருங்கள்."


        நாளை காலையிலேயே அரண்மனைக்கு சென்று அரசரை சந்தித்து, நாட்டிற்கு வர போகும் ஆபத்தை பற்றி கூற வேண்டும் என்று அவர் முடிவு எடுத்துக் கொண்டார்.


அதே நேரம் அகத்தியர் மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த சாந்தகுரு அடிகளார், தமது கண்களை திறந்து, தமக்கு எதிரில் உள்ள சிவலிங்கத்தை நோக்கினார்.


  சிவலிங்கத்தின் மீது இருந்த மலர்கள் ருத்ராட்ச மாலையோடு கீழே விழ, அதை கண்டு புன்னகை புரிந்தவர், 


  "ஆண்டவா உமது கட்டளையை ஏற்று அங்கு செல்கிறேன். நான் அங்கு சென்று சேரும் முன் எந்த ஆபத்தும் அங்கு நெருங்காமல் இருக்க வேண்டும்."


    சிவலிங்கத்தின் பாதத்தில் இருந்த மலர்களையும் ருத்ராட்ச மாலையையும் கைகளில் எடுத்துக் கொண்டு, மகிழபுரியை நோக்கி, தமது பயணத்தை தொடங்கினார், சாந்தகுரு அடிகளார்.


  மேனகா தேவி தனது அண்ணியாரிடம் மடலில் வந்துள்ள சேதியையும், தனது மனதில் உள்ள குழப்பத்தையும் கூறி அதற்கான தீர்வு வேண்டி கொற்றவை தேவை கோவிலுக்கு செல்லலாமா, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.


  தாரகை தேவியார் அங்கிருந்த மித்ரனிடம் திரும்பி, நாங்களும் உடன் வரலாமா என்று அவனிடம் அனுமதி வேண்டினார்.


      ஏற்கனவே மதுராவை எவ்வாறு சமாளிக்க போகிறோம் என்ற சிந்தனையில் இருந்தவன், இப்போது குடும்பமாக கிளம்பளாம் என்ற தன் அன்னையின் கோரிக்கைக்கு, என்ன சொல்வதென்றே தெரியாமல் தலையை மட்டும் சரி என்று ஆட்டி வைத்தான்.


    தனது அறையில் மோகனா தன் சேவகியான யோகினிக்கு நாளை செயல்படுத்த வேண்டிய காரியங்களைப் பற்றி கட்டளையிட்டு கொண்டிருந்தாள்.


    "நாளை அரண்மனையில் இருந்து இவர்கள் எல்லோரும் வெளியேறும் முன்பே, அந்த காட்டினில் இருந்து தாயும் மகளும் வெளியேறி இருக்க வேண்டும்.


    அரண்மனையில் இருந்து இவர்கள் வெளியேறிய அடுத்த நிமிடம், நான் நமது இடத்திற்கு வந்து விடுவேன். அங்கு அந்த ஏந்திழையின் மகளை வசியப்படுத்தி, அவள் கையாலேயே, கொற்றவை தேவியின் அருள் பெற்ற அவளை, காலக்கோடருக்கு பலியாக்குகிறேன்."


    யோகினி தயங்கி தயங்கி மோகனாவிடம் தனது சந்தேகத்தை கேட்டாள்.


  "தேவி எனக்கு ஒரு சிறு குழப்பம், அதை தங்களிடம் கேட்கலாமா?"


  "கேள், குழப்பத்தோடு ஒரு காரியத்தில் ஈடுபட்டால், நிச்சயம் வெற்றிக்கனியை பறிக்க இயலாது, உனது சந்தேகத்தை கூறி தெளிவுபடுத்திக் கொண்டு காரியத்தில் இறங்கு."


    "நாம் இப்போது ஏந்திழையையும் அவளின் மகளையும் பலி கொடுத்து விட்டால், எவ்வாறு நமக்கு கொற்றவை தேவி திருவிழாவின் போது இங்கு வர அனுமதி கிடைக்கும்? இது தெரிந்தும் எதற்காக அனுமதி கேட்டு அரசருக்கு மடல் எழுதச் சொன்னீர்கள்?"


  மோகனா புன்னகைத்துக் கொண்டே அவளைப் பார்த்து கூற தொடங்கினாள்.


      "இப்போது காட்டுவாசி மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதை யார் செய்ததாக முதலில் எண்ணுவார்கள்?"


    "நமது ரத்னபுரியைத்தான் கூறுவார்கள்."


    "நாம் இங்கு கொற்றவை தேவி திருவிழாவிற்கு வருவதற்காக அனுமதி கேட்டு அரசரிடம் மடல் அனுப்பி உள்ளோம். எனவே, இப்போது சந்தேகம் யார் பக்கம் திரும்பும்?"


  "மடல் அனுப்பிவிட்டு பின்னாலேயே, இவர்களை நாம் கொல்ல துணிவோம் என்று அவர்கள் நினைப்பார்களா? அல்லது அரசர் தான் அவ்வாறு எண்ணுவாரா?"


      "இல்லை தேவி இப்போது புரிகிறது, நமது ராஜ்யத்தின் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகத்தான் முதலிலேயே மகிழபுரி அரசருக்கு நமது ரத்தினபுரி அரசரின் மூலம் மடல் அனுப்பி விட்டீர்கள். இப்போது அந்த ஏந்திழையின் மகளை பலி கொடுக்கப் போகிறீர்கள்."


    "ஆம் நடக்கப் போகும் இந்த நாடகத்தில், நமது ரத்னபுரி ராஜ்ஜியத்தின் பெயர் ஏதாவது ஒரு இடத்தில் வெளியே வந்து விட்டாலும், நான் இவ்வளவு நாள் இந்த ராஜ்ஜியத்தில் கட்டி காத்த எனது நற்பெயரும், என் அத்தானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் கனவாகவே கலைந்து போய்விடும்.


    சற்று நிதானமாகத்தான் மறைந்திருந்து எதிரிகளை நாம் வேட்டையாட வேண்டும். சரி யோகினி, பேச்சை விடுத்து நீ காரியத்தில் கண் வை."


    கொற்றவை தேவி கோவிலை சுற்றி வாழும் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் அனைவரும், தமது வாழ்வாதாரத்திற்காக மலையடிவாரத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர்.


  அந்த மலையின் உச்சியில், மேகங்கள் தொட்டுச் செல்லும் இடத்தில், சில மக்கள் வாழ்ந்து வந்தனர். அது மேக காடு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழும் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக அங்குள்ள பழங்களை உண்டும், தேன் எடுத்தும் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடியும் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.


      ஒரு சில சமயம் குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள் விளைவித்துள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்று விடுவர்.


      அவர்களிடமிருந்து தமது விளைநிலங்களை காப்பாற்ற குருந்தங்காட்டை சேர்ந்த மக்கள், அந்த மலை அடிவாரத்தில் ஒருவர் மாற்றி ஒருவராக, குழுவாக காவலுக்கு நிற்பர்.


    ஒரு சில சமயம் காவலுக்கு இருப்போரை தாக்கி விட்டும்,  அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி விட்டும், பாதி அவர்களின் தேவைக்கு என்று எடுத்துக் கொண்டு சென்று விடுவர்.


      இவர்களின் அட்டகாசம் எல்லை தாண்டும் போது, ஏந்திழை அம்மையார் வந்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை விரட்டி அடிப்பார்.


      அந்த மலை மீது வாழும் மக்கள் தங்களது வழித்தடங்களுக்கு, மலையின் மறுபக்கத்தை தான் உபயோகித்துக் கொண்டிருந்தனர்.


      அவர்கள் சில காலமாக மாந்திரீகங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருவதாக கேள்விப்பட்டதால், ஏந்திழை அம்மையார் மந்திர நடுகல்களை, மலையடிவாரத்தின் எல்லையில் நட்டு வைத்து, தமது மக்களை அவர்களிடமிருந்து காத்து வந்தார்.